September 01, 2008

மனைவி மார்க் போட்டால்.......???




ஆங்கிலத்தில படித்த ஒரு article யை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு........


செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!!



ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......:(

அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு தெரியுமா??? டே டு டே லைஃப்ல உங்க ஒவ்வொரு செயலுக்கும், அசைவுக்கும் உங்க மனைவி போடும் மார்க்!!!

மனைவி மார்க் போடுவாங்களா?????

மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா??

தொடர்ந்து பதிவை படிங்க...!!

நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா? ஃபெயிலா ன்னு தெரிஞ்சுக்கலாம்!

நீங்க திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!

இதோ சில சாம்பிள்......



1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....

அ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, 'ஏன் மார்க் பூஜ்ஜியம்னு முழிக்கிறீங்களா??.........காரணம் அப்படி வெளியே போய் பார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது']

. "அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது......." அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]

.சவுண்டு விட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு தட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது பட்டால்......[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க']



2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....

. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 ' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ!']

. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க [மார்க்:10]

இ: அவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க பியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம் அடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 'மைனஸ் நூறு']



3.உங்கள் உடலமைப்பு எப்படி????

அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']

. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']

இ. தொந்தி பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!! என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ]

ஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு? உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !! என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்']



4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....

அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]

. உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]

இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்']



5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....

அ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]

ஆ."ஆமாம்...கொஞ்சம்....இல்ல.........இல்லடா........ரொம்ப இல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க" ஆமாம் ன்னு ஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு சப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 ' மைனஸ் 25']

இ. அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்.[மார்க்: -100 ' இந்த நக்கலுக்கெல்லாம் மைனஸ் மார்க் தானுங்க!!']



6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…

அ. அவர் பேசி முடிக்கும்வரை வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற பாவத்தை உங்கள் முகத்தில் மெயிண்டேன் பண்றீங்க[மார்க்: 0 ' இதுதாங்க நீங்க செய்தே ஆகவேண்டிய முக்கிய கடமை , அதுக்கெல்லாம் மார்க் போட முடியாது']


ஆ. உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']


இ. உங்க மனைவி பேசி முடிப்பதற்குள் நீங்க அப்படியே தூங்கிட்டீங்கன்னு பேச்சின் முடிவில் தெரிஞ்சுக்கிறாங்க[ மார்க்: -1000 ' மைனஸ் ஆயிரம் ஏன்னு பார்க்கிறீங்களா??.............பின்ன எவ்வளவு 'தில்' இருந்தா, பேசிட்டு இருக்கும்போது பேச்சை கவனிக்காம இப்படி தூங்கி வழிவீங்க??]


மனைவியரின் மார்க் போடும் இரகசியம் புரிஞ்சுடுச்சா? பாஸாக வாழ்த்துக்கள்!!!


[இந்த பதிவை படித்துவிட்டு,
மனைவியை மார்கே போடவிடாமல் எப்படி சதி பண்ணுவது?? என்று தன் அனுபவபூர்வமான ஆலோசனைகளை பதிவாக எழுதியுள்ளார் நண்பர் விஜய் - இங்கே]

August 24, 2008

தம்பி....



படித்ததில் மனதில் பதிந்த கதை, என் கற்பனை கலந்து, சில மாற்றங்களுடன் இங்கு என் எழுத்துருவில் பதிவாக........ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்.......!!!




St.Joseph's International School, ஹாஸ்டலில் தன் படுக்கைக்கு அருகில் இருந்த அலாரம் காலை 6 மணிக்கு அடிக்க விழித்துக்கொண்ட பன்னிரண்டு வயது டெய்ஸி, காலை கடன்களை முடித்துவிட்டு, அவசரம் அவசரமாக ஹார்லிக்ஸ் மட்டும் அருந்திவிட்டு, ஆண்கள் விடுதி நோக்கி நடந்தாள் தன் தம்பி டேனியலை சந்திக்க,

வழியில் ஸ்கூல் சேப்பலில் ஜெபம் செய்ய செல்கையில், ஜூலியா மிஸ்சை சந்தித்தாள்.
இவளது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர் மிஸ் ஜூலியா.அவர் மேல் டெய்ஸிக்கு அலாதி ப்ரியமும் , மரியாதையும்.

பெண்கள் விடுதியின் வார்டனாக இருந்த ஜுலியா மிஸ், புனித மேரி இல்லத்திற்கு வார்டனாக போனதும், டெய்ஸி மிகவும் ஏங்கிப் போனாள்.
புனித மேரி இல்லமும் டெய்ஸி படிக்கும் ஸ்தாபனம் நடத்துவதுதான், ஆனால் அது அனாதை குழந்தைகள் படிக்கும் விடுதி.
ஜூலியா மிஸ்சும் ஒரு அனாததான் என்பதும், அதுவே அவர்கள் அவ்வில்லத்திற்கு வார்டனாக சென்றதிற்கான காரணம் என்றும் இவளது தோழிகள் மூலம் அறிந்துக்கொண்டாள் டெய்ஸி.


டெய்ஸிக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும்.
ஜூலியா மிஸ் அன்போடும் அரவனைப்போடும் டெய்ஸியையும் அவளது தம்பியையும் கவனித்துக்கொள்ளும் போது, இவர்கள் எங்களின் அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வாள் டெய்ஸி,
ஆனால்....ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரி, கல்யாணமே செய்து கொள்ள போவதில்லை என்பதும் அவளுக்கு புரிந்தது.

ஆண்கள் விடுதியை அடைந்தாள் டெய்ஸி, அங்கு அழுவதற்கு தயாராக இருந்தான் டேனியல், சில்வியா ஆயா அவனை சமாதனப்படுத்தி, "இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு" என்று டெய்ஸியிடம் அவனை ஒப்படைத்தாள்.
அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் டெய்ஸி.

"டேனி.....இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து கார் வந்திடும்,நாம வீட்டுக்கு போறோம் டா.....செல்லம், கார் வரைக்கும் நானே உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன், சரியா"

"ஓ......சரிக்கா" என்றான் உற்சாகமாய்.

டெய்ஸி-டேனியலின் அம்மா ஒரு முன்னனி கைனக்காலிஜிஸ்ட், இரவிலும் ஹாஸ்பிடல் கால் வந்து டியூட்டி பார்க்க சென்றுவிடுவார்.
அப்பா கோயம்பத்தூர் விவசாயக்கல்லூரியில் தாவிர இயல் விஞ்ஞானி. எப்போதும் செடி கொடிகளுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள், அதனால்தான் பிள்ளைகள் ரெஸ்டென்ஷியல் ஸ்கூலில்.

சிறிது நேரத்தில் இவர்கள் இருவரையும் அழைத்துச்செல்ல வழக்கமாக வரும் ட்ரைவர் காருடன் வர, வார்டன் இருவரையும் கார் வரை வந்து அமர்த்திவிட்டு, கையசைத்து வழியனுப்பினார்.

கோயம்பத்தூரில் தாங்கள் சந்திக்க இருக்கும் அதிர்ச்சியை அறியாமல் இரு பிஞ்சு உள்ளங்களும் குதூகலத்தோடு பிரயாணப்பட்டன.

வீட்டிற்கு போனபோது அங்கு ஹாலில் அம்மாவோடு டாக்டர் தனபாலன் அங்கிளும் இருந்தார். அம்மாவுடன் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர், இப்போது அம்மாவுடன் ஒன்றாக வேலை செய்பவர் என்ற அளவில் மட்டுமே டெய்ஸிக்கு அவரை தெரியும்.
ஆனால்.....இன்று ஹாலில் தன் அம்மாவின் மிக அருகில் நெருக்கமாக அவர் அமர்ந்திருப்பது 12 வயது டெய்ஸிக்கு ஏனோ, அருவருப்பாக தோன்றியது.

ஏற்கெனவே அப்பாவும் அம்மாவும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்வதும், இருவரும் டைவர்ஸ் ஆகி பிரிந்தே வாழ போகவதாகவும், வீட்டில் வேலை செய்யும் ஆயா சொல்லி அறிந்திருந்தாள் டெய்ஸி.

தனபால் அங்கிள் கொடுத்து காட்ப்ரீஸை கண்டதும் டேனியல் அவரின் அருகில் அமர்ந்துக்கொண்டான், டெய்ஸி தர்மச்சங்கடத்தோடு அங்கு நிற்க, அவளது அம்மா அவளை தனியே அழைத்துச்சென்று இன்று குடும்ப நல கோர்ட்டில் அவளது அப்பா-அம்மா வின் விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காகவே ஹாஸ்டலில் இருந்து இவர்கள் இருவரையும் அழைத்ததாகவும் கூறினாள்.

சிறிது நேரத்தில், தனபால் அங்கிள் காரிலேயே கோர்டிற்கு சென்றனர்,
அங்கு வாயிலில் அப்பாவை கண்டதும் , "அப்பா" என்ற அலறலுடன் இரு குழந்தைகளும் அருகில் ஓட,
அப்பாவிற்கு பின்னாலிருந்து , அவரிடம் டாக்ட்ரேடிற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளும் நித்யா ஆண்டி, "ஹாய் குட்டீஸ்' என்றார்.
அவளது அப்பாவின் கரத்தோடு நித்யா ஆண்டி கை கோர்த்திருந்த விதம்.......டெய்ஸிக்கு அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்தது.
தன் தலையை வருடம் அப்பாவின் ஸ்பரிசம் முதல் முறையாக,கம்பிளி பூச்சு ஊறுவது போன்று தோன்றியது.

கோர்ட்டில் தீர்ப்பு வழங்கினார்கள்,
டெய்ஸியின் அப்பா அம்மாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, டெய்ஸி அவளது அப்பாவின் பாதுகாப்பிலும்,
தம்பி டேனியல் அம்மாவின் பாதுகாப்பிலும் வளர்வது என்று தீர்ப்பானது.

வீட்டிற்கு வரும் வழியில்தான் , அம்மாவும் தனபால் அங்கிளும் பேசிக்கொண்டதில், அவளது அம்மாவும் தனபால் அங்கிளும் லண்டனுக்கு செல்ல போவதாகவும், தம்பியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வதும் டெய்ஸிக்கு புரிந்தது.
இவள் ஹாஸ்டலிலோ, அப்பாவுடன் 'Tamil Nadu Agricultural University' கேம்பஸில் அப்பாவின் குவார்டஸிலோ இருக்கப்போகிறாள்.

யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்?
இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா?
அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம்,
அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமல் இருக்கலாம்,
இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால்..........எனக்கு.........என் தம்பி வேண்டும்!!

என்னை விட்டு ஒருகணம் கூட இருக்க மாட்டானே என் தம்பி.......அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்?

டெய்ஸியின் மனதில் ஆயிரம் கேள்விகள்,
உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வீட்டிற்குள் வந்ததும் வேகமாக தன் அறைக்குள் சென்று , கட்டிலில் குப்புறப்ப்டுத்து குலுங்கி அழுதாள்.

இவள் பின்னாலேயே மாடி ஏறி வந்த அவள் அம்மா," டெய்ஸி.......ஒன்னும் அவசரமில்லைமா, உன்னை தயார்படுத்திக்கோ,.......இரண்டு நாள் கழிச்சு கூட நீ உன் அப்பாகிட்ட போகலாம், டேக் யுவர் டைம்" என்று சமாதனப்படுத்தி விட்டுப் போனாள்.

இரவு முழுவதும் அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது டெய்ஸிக்கு. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து டேனியலும் அழுதான்.

இவனை எப்படி பிரிய முடியும்.......தம்பியின் முகத்தை கையில் ஏந்தி தேம்பினாள் டெய்ஸி.

லண்டனுக்கு கூட்டிட்டு போய் கூட அம்மாவா இவனை கவனிக்க போகிறாள், அங்கயும் ஆயாவிடம் தான் விடப்போகிறாள்.
"அக்கா"ன்னு இவன் அழுதா எனக்கு இங்கே கேட்குமா??? முடியாது.......
இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்.......எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம், என் தம்பிதான் வேண்டும்.

கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள், மணி காலை ஐந்து, வீட்டில் அம்மா அயர்ந்த தூக்கத்தில் அவளது அறையில்,
அவசரமாக எழுந்தாள் டெய்ஸி,
தம்பியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள்,
செலவிற்காக அப்பா கொடுத்திருந்த 300 ரூபாய் பணம் இவளது கைப்பையிலிருந்தது, அதனையும் எடுத்துக்கொண்டாள்,

வீட்டைவிட்டு கவனமாக எவருக்கும் தெரியாமல் வெளியேறினாள், கோவை மத்திய பஸ் நிலையம் இவளது வீட்டிலிருந்து 3 கீலோ மீட்டர் தூரம், பாதி தூரத்திற்கு மேல் நடக்க மாட்டேன் என அடம்பிடித்த தம்பியை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து பஸ் நிலையம் சென்றாள், ஊட்டி பஸ் பார்த்து ஏறிக்கொண்டாள்.

மூன்று மணி நேரத்தில் பஸ் ஊட்டியை சென்று அடைந்தது.

ஒருவாரம் விடுமுறைக்காக போன ஆறாம் வகுப்பு டெய்ஸி, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் காலையிலேயே வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் ஜோசஃப்.

அந்த சிறு பெண்ணின் உருண்ட விழிகள் அழுது சிவந்து, இரட்டை ஜடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷு இல்லை, ரப்பர் செருப்புடன்.....தம்பி டேனியலின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி......அந்த சிறுவனும் புரியாமல் அழுதுகொண்டே இருந்தான்.

பணக்கார களையோட இத்தனை நாட்கள் பார்த்திருந்த ஃபாதருக்கு, குழந்தைகளின் இந்நிலை மனதை கணமாக்கியது,

"என்னமா டெய்ஸி.......என்னாச்சு??" என்று படபடப்பாகக் கேட்டார்.

"ஃபா .........ஃபாதர்"

"அப்பா.........அம்மா கூட வரலியா.....உங்க கார்ல வரலியா?"

"ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"

ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
குழந்தைகளை குளிப்பாட்டி உணவு கொடுக்க சொல்லி சிஸ்டர் ஜூலியாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஃபாதர் ஜோசஃப் டெய்ஸியின் பெற்றோரை வரவழைத்தார்.

அவர்களிடமும் டெய்ஸி பிடிவாதமாக தாங்கள் இருவரும் இல்லத்திலேயே இருக்க விரும்புவதாக கூற......பெற்றோரும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், தங்கள் வழி திரும்பிச் சென்றனர்.

தன் தம்பியின் மேல் பாசத்தை கொட்டி பார்த்துக்கொண்டாள் டெய்ஸி, ஆங்கில மொழியில் பி.ஏ பட்டபடிப்பும், ஆசிரியர் பயிற்சியும் புனித மேரி இல்லத்தின் உதவியோடே படித்து முடித்து, அங்கே அவளும் டீச்சராக பதிவியேற்றாள்.......கன்னியாஸ்திரி டீச்சராக.


டேனியல் படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியாக வளர்ந்தான் அக்காவின் அரவணைப்பில், இன்று அமெரிக்காவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான்..........அதுவும் அவனது பிறந்தநாளான இன்று அவன் இந்தியா வருவது இரட்டிப்பு சந்தோஷம் சிஸ்டர் டெய்ஸிக்கு!!

விமான நிலையத்தின் வரவேற்பு வாயிலில் , பழைய நினைவுகளை அசைப்போட்டபடி......தம்பியின் வரவிற்காக காத்திருந்த சிஸ்டர் டெய்ஸியின் சிந்தனையை,

"அக்கா"

என்ற குரல் கலைக்க, திரும்பிய டெய்ஸி சிஸ்டர்.......சேயைக் கண்ட தாயாய் உவகையுடன் தன் தம்பியை நோக்க, கண்ணில் ஆனந்த கண்ணீர்,

"அக்கா" என்று குதூகலத்துடன் டேனியல் அவரை நோக்கி தன் கரங்களை அகல விரிக்க........

"த......ம்.........பி......."

உண்மையான நேசத்தின் தேவையும்
நெஞ்சம் தேடும்
பாசத்தின் தவிப்பும்
உன்னாலும் என்னாலும் மட்டுமே
உண்மையாய் உணர முடியும்!

ம்…!
உன் தலை சாய்த்துக் கொள்ள
தக்க தருணங்களில்
அன்புத் தாயாய் நான்
என் சேயாய் நீ!

என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!

ஒற்றை விரல் கோர்த்து
பற்றிப் படர்ந்து
எனக்காக நீயும்
உனக்காக நானும்
நிறைவான அன்பினில்…


நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..






இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி!!

August 21, 2008

A for Apple....[tag post]




பிரியமானவள் ப்ரியா மற்றும் திவ்யப்ரியா அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

A - http://abclocal.go.com/mediakit/index.html - local news பார்க்க

B - http://www.biblegateway.com/passage/?search=1corinthians:1&version=31 - பைபிள் படிக்க


C - http://www.careerbuilder.com/ - For Job search


D - http://dictionary.reference.com/ - ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துக்கொள்ள........


E - http://www.elise.com/ - சிம்பிள் அமெரிக்க உணவுகளின் ரெஸிபீஸ் பார்க்க


F -http://food.sulekha.com/ - இந்திய சமையல் குறிப்புகளுக்கு

G - http://www.geekinterview.com/ - இன்டெர்வியுவிற்கு தயாராக டிப்ஸ் இங்கே....


http://www.hinduonnet.com/ - Hindu News paper



I - http://www.indiacc.org//AM/Template.cfm?Section=Home&WebsiteKey=ce5eddd2-6742-4f8a-a2e4-73bee14b8bcc - இந்திய கம்யூனிட்டி சென்டர்


J - http://job-abroad.blogspot.com/

K - http://www.kumudam.com/

L - http://www.linkedin.com/


M - http://www.mapquest.com/ - ட்ரைவிங் directions பார்க்க


N - http://www.nilacharal.com/


O - http://www.olivegarden.com/default_f.asp - என் favourite Italian Resnt.....


P -http://picasaweb.google.com/


R - https://www.relianceindiacall.com/Web/GlobalHome.aspx - இந்தியாவிற்கு ஃபோன் கால் பண்ண காலிங் கார்ட் வாங்க


S - http://www.sjlibrary.org/ - என் படிப்பிற்குதவிய நூலகம்


T - http://www.thuthifm.com/ - 24 மணி நேர கிறிஸ்துவ பாடல்கள் ஒளிபரப்பும் தளம்.


U -http://www.usertube.com/ - விஜய் டீவி பார்க்க


V - http://www.videojug.com/tag/indian-recipes


W - http://wwwb.way2sms.com//content/index.html? - இந்தியா மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப

http://www.webindia123.com/home.html


Y -http://www.yahoo.com/



நான் விரும்பி அழைக்க விரும்புவது...






Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

August 14, 2008

காதல் எனப்படுவது ....யாதெனில்!!




காதல் எனப்படுவது யாதெனில்....என்ற தலைப்பில் தொடர் பதிவோட்டத்தில் என்னை[யும்] இணைத்த பதிவர் 'ஜோசஃப் பால்ராஜ்' க்கு என் நன்றி.

கற்பனை கதைகளில் காதலை மையமாக வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குவதை விட, 'காதலை' பற்றி தனிப்பதிவு எழுதுவது..........எத்தனை கடினமென்பதை இத்தொடர் ஓட்டத்தில் இணைத்தப்பின் தான் தெரிந்தது:((

காதலை பற்றிய என் கண்ணோட்டத்தை ஒரே வரியில் கூறவேண்டுமானால்,
காதல் எனப்படுவது.........

காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!

காதல் குறித்து யோசித்தால், மனதில் எழும் கேள்விகள்....

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா?
அல்லது
கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா??

இந்த முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால் அது பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' தான் மூலக்காரணமாக இருக்கும்.

சரி.......தீடிரென ஏற்பட்ட இந்த ' வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும்' உணர்வு காதலா?? Infactuation எனப்படும் இனக்கவர்ச்சியா??

வித்தியாசம் தெரிஞ்சுக்கனுமா.........??

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு இனக்கவர்ச்சியா இருந்தா......

* உங்கள் மனதில் ஒரு தற்காலிக விருப்பத்தை மட்டுமே உருவாக்கும்.
* ஒருவித குற்றயுணர்வும் 'ஈர்ப்புடன்' சேர்ந்தே வரும்.
* அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்.
* பார்வை பரிமாறுதலில், சந்திப்பில்.........பதற்றமான மனநிலையே அதிகம் இருக்கும்.

ஒ.கே infactuation னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சாச்சா..........அடுத்து கொஞ்ச நாள் நட்புடன் பழகிய ஒருவர் மீது உண்டாகும் நேசம் .........காதலா??.......அது காதல்னா எவ்விதமாக உணர்வீங்க.......??

*குணநலன்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒருவித புரிதல் இருவருக்குள்ளும் இருக்கும்.
*காதல், காமம், ஆசை விட..........ஆழமான நட்புணர்வே முதன்மையானதாக மேலோங்கி நிற்கும்.
*உங்களவர் உங்களுக்கே உங்களுக்குதான் என்ற வலிமையான உள் உணர்வு எப்போதும் இருக்கும்.
*பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கும்.
*பண்பட்ட நட்புணர்வும், ஒருவர் மேல் இருவருக்கு மரியாதையும் இருக்கும்.
*அதீத மேக்கப், வெளித்தோற்றத்திற்கான முக்கியத்துவம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமூடி என எதுவும் இன்றி.......தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்.
*சந்திக்கும் வேளைகளில் படப்படப்பின்றி......மனதில் ஒருவித இதமான தென்றல் வீசும்.

இப்போ உண்மையான காதல் உணர்வுதான் உங்களது என அறிந்து, இருவரும் காதலை பரிமாறிக்கொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் .........இனி........???

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு, அனுசரித்துப் போவது காதல் வெற்றி பெற மிக மிக அசசியம்!

தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?
நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??
ம்ம்ம்....
இல்லை
இல்லவே இல்லை...
அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!


இத்தொடர் ஓட்டத்திற்கு நான் விரும்பி அழைப்பது
என் அன்பு தோழி......
'கவி'இளவரசி தமிழ்மாங்கனி காயத்ரி.

August 12, 2008

நீ வேண்டும்.....நீ வேண்டும்.......என்றென்றும் நீ வேண்டும்!! - 6

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

பகுதி - 5


நந்தினியின் சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள் இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....



திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!


நந்தினியின் சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின் வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர் வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும் திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின் அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள ........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள ......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார் அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

" மாப்ள........என்.......புள்ள...........வலியில துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும் சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என் நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின் முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான் நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில் நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம் அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன் மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள் கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின் மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக் கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின் மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக் கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........" என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர் ........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்' என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் ' வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக் கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

அவர்களின் கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான் கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர் இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான் கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......


அவளது நெற்றியில் பூத்திருந்த முத்து முத்தான வேர்வைத்துளிகளை துடைத்து 'அப்பா'வான பெருமிதத்துடன் பார்த்தான் கார்த்திக்.

தங்கள் குழந்தையின் ஸ்பரிசம் உடலில் சில்லிட......
இருவரின் கண்களிலும்
ஆனந்த கண்ணீர் துளிகள்!
அது வார்த்தைகளால் விவரிக்க
முடியா மணி துளிகள்!!

தன் குடும்பம் தழைத்தோங்க உதித்த 'பேரனை' கண்ணாரக் கண்டு களித்தார் காத்திக்கின் அன்னை......

தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!



இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!


முற்றும்.

July 29, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 5

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4


ஹாஸ்பிட்டல் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிந்துக்கொள்ள தங்கள் அறைக்கு வந்த கார்த்திக், அங்கு.....


அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னைகைத்தது!




நந்தினியின் கிறங்கடிக்கும் அழகில் தன்னை ஒரு கணம் மறந்து ரசித்துப்பார்த்தான் கார்த்திக்.

"ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!"

தன் செவ்விதழ் சுளித்து, குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள் நந்தினி.

கார்த்திக் தன் ரசிப்பை மறைத்துவிட்டு, அவள் முகம் பார்க்கும் தெம்பில்லாமல்,

"டைம் ஆச்சு.......வா.....ஹாஸ்பிட்டல் போலாம்" என்று கூறிவிட்டு

அவள் பதிலுக்கு காத்திராமல் காரில் போய் உட்கார்ந்துக்கொண்டான்.

காரில் இருவரும் ஹஸ்பிடல் செல்லும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

மருத்துவ பரிசோதனையில் கார்த்திக் பயந்த மாதிரி 'எந்தவித' பாதிப்பும் நந்தினிக்கோ, வயிற்றிலுள்ள குழந்தைக்கோ ஏற்படவில்லை. இதனை அறிந்து மனதிற்கு ஒரு வித திருப்தியாக இருந்தாலும், தான் இல்லாமல் நந்தினி எப்படி குழந்தையுடன் வாழ்வை தொடர்வாள் என்று நினைக்கையில் ' திக்' கென்று இருந்தது கார்த்திக்கிற்கு.

இவனது மன ஓட்டங்களை உணராத நந்தினி, நாளுக்கு நாள் சோர்வடைந்து வரும் கார்த்திக்கிடம்,

"என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....."

"....."

" நீங்க ஜிம்முக்கு போயே 1 மாசம் ஆச்சு.........எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, அப்புறம்........கல்யாணம் ஆனதும்......'mission accomplished' அப்படினு ......exercise யே பண்ணாம 'தொப்பையும்' 'தொந்தியுமா'.......சோம்பேறி ஆகிட வேண்டியது"

"....."


"என்னங்க இது.....நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன்.........ஒரு வார்த்தை பதில் பேசுறீங்களா???........எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரியே ஒரு லுக்கு..........ஏங்க இப்படி இருக்கிறீங்க"

"இப்ப உனக்கு என்ன வேணும்..........'muscled body' ஆ ..........நானா??"

"ச்சீ.........ஏங்க இப்படி....... தப்பா அர்த்தம் பண்ணிக்கிறீங்க"

வார்த்தைகள் உடைந்தன நந்தினிக்கு.
கார்த்திக்கா இப்படி பேசுவது.......என்ற அதிர்ச்சி அவளுக்கு.

"என்னமா நந்தினி..........எதுக்கு கத்துறான் கார்த்தி".என்று கேட்டுக்கொண்டே நந்தினியின் மாமியார் அங்கு வர,

"ஒன்னு....மில்ல.....அத்தை" என்று சமாளித்தாள் நந்தினி.

கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.

நந்தினி தன்னிடம் மறைத்தாலும், தன் மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.

மகனிடம் தனிமையில் அறியுரை கூறிக்கொண்டுதானிருந்தாள். ஆனால் கார்த்திக்கின் போக்கில் எந்த ஒரு மாற்றமுமில்லை, மாறாக நாளுக்கு நாள் விட்டத்தியான பார்வையும், சோர்வான நடையுமாக கார்த்திக்கின் உடலும் மனமும் தளர்ந்துக்கொண்டே போனது.

அம்மாவின் அன்பும் அக்கறையும் கலந்த அறிவுரைகள் ஒருபுறம்.........அன்பு மனைவியின் கள்ளமில்லா குழந்தை முகம் ஒருபுறமென கார்த்திக்கை மேலும் மனபலவீனமடைய செய்தது.


சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..

உனக்கு செய்த
முதல் துரோகம்
என் முடிவையும்
தேடிக் கொடுத்திருக்கிறது...

உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!


தன் மறைவிற்கு பின் நந்தினியும் தன் தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.
எல்லா விதத்திலும் அவளை தயார் படுத்தும் நோக்குடன் அவன் செயல்பட்டது, நந்தினிக்கு ஏன் என்று புரியவில்லை.

"இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"

"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"

"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"

"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"

வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது.

அவளது கண்ணீருக்கு முன் கார்த்திக் என்றுமே ஒரு கோழைதான், அவளது கண்ணீரை தாங்கும் சக்தி அவனுக்கோ........அவன் காதலுக்கோ இல்லை!!!

"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"

சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

கண்ணீர் திரையாக கண்களை மறைக்க........கார்த்திக் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

தன்னை விட்டு கார்த்திக் விலகி விலகி போவதின் அர்த்தம் உணர முடியாமல், அந்த நிராகரிப்பின் வலியை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் நந்தினி தவித்தாள்.


என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...



கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள்..........சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.

'முதல் பிரசவம் எங்கள் வீட்டில்தான்' என நந்தினியின் பெற்றோரும் உறவினரும் அவளுக்கு சிறப்பாக வளைகாப்பு செய்து ஊருக்கு அழைத்துச்சென்றனர்.
ஊருக்குச் சென்றபின்பும், தனியாக இருக்கும் தன் மாமியாருக்கும், ஃபோனில் பேசும்போதும் கடுகடுப்பாக பேசும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி ஃபோன் செய்தாள் நந்தினி.

"அத்தை சாப்பிட்டீங்களா??"
"அத்தை.......ஒரு ஸ்ட்ராங் காஃபி குடிக்கலாமா"
"அத்தை கோயிலுக்கு போலாமா??".......
இப்படி வார்த்தைக்கு முன்னூறு அத்தை போட்டு பாசமுடன் வலம் வந்த மருமகள் இல்லாமல், முகம் கொடுத்து கூட பேசாத மகனுடன் இருப்பது கார்த்திக்கின் அம்மாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதனால் சம்மந்தார் வீட்டில் 'டேரா' என்று ஊரும் உறவும் சிரித்தாலும் ப்ரவாயில்லை என்று மருமகளைக் காண சென்றுவிட்டார் காத்திக்கின் அம்மா.

அப்பா இல்லாமல் வளர்ந்த கர்த்திக், இதுவரை 1 வாரத்திற்கு மேல் தன் அம்மாவை பிரிந்திருந்ததில்லை, இந்த முறை அம்மாவின் பிரிவும்.......மனைவியின் பிரிவும் சேர்ந்து அவனை தனிமை சிறையில் தள்ளியது.

மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...



ஆனாலும்..........தன் அம்மாவிற்கும் நந்தினிக்கும் இடையிலான இந்த பாசப்பிணைப்பு மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

தனிமையுணர்வில் ....தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கார்த்திக், ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டான்.

கண்விழித்த போது, தலையில் கட்டுடன் தான் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருப்பதை உணர்ந்தான். கார்த்திக் கண்விழித்ததை டாக்டரிடம் நர்ஸ் தெரிவிக்க, டாக்டர் அவனது அறைக்குள் வந்தார்,

"ஹலோ மிஸ்டர் கார்த்திக்.."

"எனக்கு........என்னாச்சு.....டாக்டர்"

"பைக் கார் மேல மோதி நீங்க கீழே விழுந்ததில், தலையில் அடிப்பட்டிருந்தது.........தையல் போட்டிருக்கிறேன்.....இரண்டு நாள்ல சரியாகிடும், உங்க பர்ஸ்ல இருந்த உங்க நண்பர் ஒருவரின் விசிட்டிங் கார்ட் மூலம் அவரை மட்டும் தான் தொடர்பு கொள்ள முடிந்தது.......வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணனுமா??"

"என்னை........எதுக்கு.......டாக்டர் காப்பாத்தினீங்க........"

"என்ன சொல்றீங்க மிஸ்டர் கார்த்திக்......உங்களை காப்பாத்த வேண்டியது எங்க டுயுட்டி......ஆர் யு ஒகே??"

கார்த்திக்கின் கண்களில் நீரைக்கண்டதும், டாக்டர் திகைப்புடன்,

"மிஸ்டர் கார்த்திக்.........உங்களுக்கு லேசாகத்தான் அடிபட்டிருக்கு, பயப்படும்படியா பெரிய காயம் எதுவுமில்லை.......ஏன் நீங்க இப்போ எமோஷனல் ஆகிறீங்க"

டாக்டரிடம் தன் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டின் விபரங்களை கார்த்திக் கூற, அவரோ......."உங்கள் இரத்தம் நாங்கள் பரிசோதித்த போது எந்தவித HIV அறிகுறியும் இல்லை' என்றும், இன்னொருமுறை வேண்டுமானால் பரிசோதனை செய்துவிடலாம் என மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.

அதே சமயத்தில் கார்த்திக்கை பார்ப்பதற்கு , விசிட்டிங் கார்ட் மூலம் டாக்டர் தொடர்பு கொண்டிருந்த கார்த்திக்குடன் வேலைப் பார்க்கும் ஹரி அறைக்குள் வர, கார்த்திக் தன் குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவனிடம் பேசினான்.

ஹரி தாழ்ந்த குரலில் , கார்த்திக்கிடம்.....

"ஸாரி கார்த்திக்.......டாக்டர் ஃபோன் பண்ணின உடனே என்னால வரமுடியல"

"ப்ரவாயில்லை ஹரி"

"ஒரே சமயத்தில்..........இரண்டு பேரைப்பற்றிய அதிர்ச்சியான செய்தி...அதுவும் இரண்டு பேரின் பெயரும் ஒரே பேர்.....அரண்டுப்போய்டேன் கார்த்திக்"

"என்ன சொல்ற.....ஹரி???"

"கார்த்திக்.......I am not sure......if it is the good time to convey this news to you......நம்ம டீம் கார்த்திக் இறந்துட்டான்"

"யா......ரு......கார்த்திக் குமாரா"

"அவனே தான்..,.....பார்ட்டி அனிமெல்"

"என்ன சொல்ற......ஹரி.....எப்படி??"

ஹரி தன் குரலை மிகவும் தாழ்த்தி......

"எய்ட்ஸ்...ரீசண்டாதான் கண்டுபிடிச்சிருக்காங்க.....அதுக்குள்ள....."

"......."

"பின்ன அவன் பண்ணின லீலைக்கெல்லாம்........சே....ஆளே போய்ட்டான்.......அவனைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது"

"....."

"உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருக்குனு ஃபோன் வந்து சில நிமிஷத்துல இந்த தகவலும் வந்தது......அதான் நான் இங்க வர்ரதுக்கு லேட்......ஸாரி கார்த்திக்"

அதற்கு மேல் ஹரி பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை!

கார்த்திக்கின் நெற்றியில் 'பொட்'டென தட்டினார் போன்ற உணர்வு, ஹைதிராபாத்தில் இரத்தம் கொடுக்க முன் வந்தவர்களில் அவன் குழுவில் இருந்த அந்த கார்த்திக் குமாரும் ஒருவன், இப்போது விளங்கியது கார்த்திக்கிற்கு..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.


உடனே கண்முன், தன் கடுமையான பேச்சினாலும், கசப்பான வார்த்தைகளாலும் காயப்படுத்தி, ரணப்படுத்திய நந்தினியின் அழுது சிவந்த முகம் தோன்றியது.

"ஹரி......ப்ளீஸ்......எனக்கு சென்னை-தூத்துக்குடி ஃப்ளைட்டுக்கு உடனே ஒரு டிக்கட் புக் பண்ணித்தர முடியுமா??"

"இந்த நிலைமையில்.........எப்படி.....கார்த்திக்"

நண்பன் மருத்துவர் என்று யார் தடுத்தும் கேளாமல் , தலையில் கட்டுடன்...........கார்த்திக் நந்தினையை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அவளுக்கு ஃபோன் கூட பண்ணாமல் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் தரையிறங்கினான்.

விபத்தில் காயப்பட்டபோது தன் செல்ஃபோன் சிதறிப்போனது அப்போது தான் நினைவிற்கும் வந்தது.

நந்தினியை உடனே பார்த்தே ஆக வேண்டும்........செய்த தப்பை சொல்லி........மன்னிப்பு கேட்டு......அவள் மடியில் முகம் புதைத்து கதற வேண்டும் என்று மட்டுமே மனசு துடித்தது!!

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் நந்தினியின் ஊருக்குச் சென்றான்.

நந்தினியின் வீடு இருக்கும் தெருவில் , அவர்களது வீடுதான் சற்று பெரிதான வீடு, தெருமுனையில் கார் திரும்பியது ஒரு குலுக்கலுடன் கார் நின்றது, டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்ய கீழே இறங்க எத்தனிக்க.......

"பக்கத்துல தான் வீடு........நானே போய்கிறேன்.....இந்தாப்பா பணம்" என்று டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்துவிடுகிறேன் வெயிட் பண்ணுங்க சார் என்று கூறியும் கேளாமல், அவன் கையில் பணத்தை தினித்துவிட்டு, நந்தினியின் வீடு நோக்கி நடந்தான்.

சற்று தொலைவிலேயே......நந்தினியின் வீட்டின் முன் கூட்டமாக ஆட்களிருப்பது தெரிந்தது.
இந்நேரத்தில்........ஏன் இத்தனை கூட்டம் அவள் வீட்டுமுன்...

வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.

வீட்டின் முகப்பில் நின்ற அவளது உறவுக்கார ஆண்கள், ஊர் காரர்கள் அனைவரின் முகத்திலும் ......சோகம் நிரம்பிருப்பதைக் கண்டதும்......கார்த்திக்கின் படபடப்பு அதிகரித்தது.
இவனைக் கண்டதும் அனைவரும் இவனை.....இரக்க பார்வை பார்த்தார்களே தவிர, யாரும் விபரம் எதுவும் கூறவில்லை.

நந்தினியின் சித்தப்பா கார்த்திக்கை கண்டதும், இவனது கரங்களை பதற்றத்துடன் பற்றிக்கொண்டு....

"மாப்பிள........மாப்ள......எங்கே போய்ட்டீங்க....உங்களுக்கு தகவல் சொல்ல எத்தனை தடவ.....நாங்க ஃபோன் பண்ணினோம்........"

"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.

"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"

கண் இருண்டது கார்த்திக்கிற்கு....

[தொடரும்]

பகுதி- 6

July 23, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 4

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

அலுவலக விஷயமாக ஹைதிராபாத் சென்ற கார்த்திக், நான்கு நாட்கள் தன் குழுவிலுள்ள நண்பர்களுடன் முக்கியமான ப்ராஜக்ட் வேலையில் மூழ்கியிருந்தான், கடின உழைப்பிற்கு பிரதிபலனாக இவர்களது வேலையும் வெற்றிகரமாக முடிந்தது.

அதனை கொண்டாட இவனது குழுவினர் தீர்மானித்தனர். கார்த்திக்கும் அவர்களுடன் இரவு பார்ட்டிக்குச் சென்றான். வெற்றி களிப்பு, நண்பர்களின் தூண்டுதல், தன் அடிமனதிலுள்ள தனிமையின் தவிப்பு எல்லாமுமாக சேர்ந்து சற்று அளவுக்கு அதிகமாகவே மது அருந்தினான் கார்த்திக்.

Occasional alcohol taker ஆன கார்த்திக்கிற்கு இந்த திடீர் போதை தன் தனிமை உணர்விற்கு ஒரு வடிகாலாக தோன்றியது.

அருந்திய மது அவன் மதியை மந்தமாக்க, நண்பர்களின் உந்துதலினால் 'மாது'வையும் தேட வைத்தது.

மறுநாள் தன் ஹோட்டல் அறையில் சுயபுத்திக்கு வந்த கார்த்திக், நந்தினிக்கு தான் செய்த துரோகத்தை உணர்ந்து , குற்ற உணர்வில் குறுகிப்போனான்.

நந்தினியிடம் உண்மையை கூறவா, வேணடாமா என்று மனதில் தடுமாற்றம்,
'நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனுக்கு வந்த நிலைமையை நினைத்துக்கொண்டான்.


சென்னைக்கு திரும்பிய பின்பும், செய்த தவறு கார்த்தின் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது,
நந்தினியிடம் பக்குவமாக , சந்தர்ப்பம் பார்த்து மனம்விட்டு சொல்லிவிட வேண்டும் என முடிவு பண்ணினான் கார்த்திக்.

மூன்று வாரங்களில் நந்தினியும் சென்னைக்குத் திரும்பி வந்தாள்.

குறு குறுக்கும் மனதுடன் நந்தினியிடம் முன்பு போல் பழக முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான் கார்த்திக்.


தன் தந்தையின் திடீர் மாரடைப்பு, தாய்மை அடைய தடையாக தன் உடல்நிலை என கவலைகள் சூழ்ந்துக்கொள்ள நந்தினியும் சோர்வாகவே காணப்பட்டாள். எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் மனதில் வெறுமை, இறுக்கமான முகத்தோடு வலம்வந்தாள்.

கணவன் மனைவிக்குள் முன்பிருந்த ஒட்டுதல் இல்லை என புரிந்துக் கொண்ட கார்த்திக்கின் அம்மா, அவர்கள் இருவரையும் ஒரு வாரம் ஊட்டிக்கு சென்றுவர வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

புதிய சூழல், இதமான குளிர்ந்த சீதோஷன நிலை, இருவருக்குமேயான நீடிய தனிமை தருணங்கள் கணவன் மனைவிக்குள் மீண்டும் நேச அனலை புதுப்பித்தது.


கணவனின் அன்பான அரவணைப்பால் நந்தினியின் முகத்தில் புன்னகை பரவ ஆரம்பித்திருந்தாலும், அவளது அடிமனதில்....

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு
இரண்டாச்சு...!!

எப்போ நீ பிறப்பாய்
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!


இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் -
உன் வரவைச் சொல்லலையே...!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய்
என்உயிரே தவிக்குதிங்கே...!!


நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!


நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'

'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!


பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???


மாதங்களும் கடந்தன....நந்தினியின் மனதிலிருந்த வேண்டுதல் நிறைவேறியது.

நந்தினி கர்ப்பமாக இருக்கிறாள் என மருத்துவர் உறுதி செய்ததும் குடும்பமே சந்தோஷ களிப்பில் திளைத்தது.


நீண்ட பயணம் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் கருவுற்றிருக்கும் தன் ஆசை மகளைக் காண நந்தினியின் அப்பா சென்னை வந்தது நந்தினிக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.

புதிய உறவு உதித்த மகிழ்ச்சியில் கார்த்திக் முழுவதுமாய் தன் ஹைதிரபாத் 'நிகழ்வை' மறந்தே போயிருந்தான்.

கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார் கார்த்திக்கின் அம்மா.

இப்படியாக நாட்கள் உருண்டோட , கார்த்திக் மீண்டும் அலுவலக விஷயமாக ஹைதிரபாத் செல்ல நேர்ந்தது.

ஒரு நாள் அலுவல் முடிந்து கார்த்திக்கும் அவனது குழுவினரும் டாக்ஸியில் தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், வழியில் சாலை விபத்தொன்றில் அடிபட்டு உயிருக்கு போராடும் முதியவரை தங்கள் டாக்ஸியில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அம்முதியவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட, கார்த்திக்கும் அவனது குழுவிலிருந்த இருவரும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

இரத்த பரிசோதனை நிலையத்திலிருந்து ரிப்போர்ட் வந்ததும், மருத்துவர் கார்த்திக்கை மட்டும் தனியாக தன் அறைக்கு அழைத்தார்.

பேச தொடங்கவே தயங்கிய மருத்துவரிடம் கார்த்திக்,

"Whats the matter Doctor.......please open up"

"Mr.Karthik.....I am very sorry to say ....that......you are infected with HIV"

அதிர்ச்சியில் கார்த்திக்கின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போனது,
மார்பு வெகு வேகமாக அடித்துக் கொள்ள,
யோசனைத் திறன் சற்று நேரத்திற்கு விலகிக் கொண்டது,
தன்னை சமாளித்துக் கொள்ள கார்த்திக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன.

கார்த்திக் அதிர்விலிருந்து தன்னை சுதாரித்துக் கொள்ள தடுமாறிய அதே வேளையில், மருத்துவரின் அறைக்குள் வந்த நர்ஸ் , விபத்தில் அடிபட்டு அனுமதிக்கபட்ட முதியவர் ரத்தம் கொடுப்பதற்கு முன்பே, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

நிலையற்ற மனித வாழ்க்கையில் யதார்த்தம்,
சாவை நோக்கி பயணிக்கும் தன் நிலைமை,
என அனைத்தும் ஒரே தருணத்தில் தாக்க
ஸ்தம்பித்து போனான் கார்த்திக்.

ஹோட்டல் அறைக்கு வந்து மறுநாள் அதிகாலை விமானத்தில் சென்னைக்கு திரும்புவதற்காக தன் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த போதுதான், தன்னை தாக்கியுள்ள உயிர்கொல்லி தன் மனைவி...........வயிற்றில் உள்ள குழந்தை இருவரையும் தாக்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.


ஊருக்குச் சென்றதும் நந்தினியை கைனக்காலஜிஸ்டிடம் அழைத்துச் சென்று, மருத்துவரிடம் ஏதாவது ஒரு காரணம் கூறி, நந்தினிக்கு முழுவதுமாய் ரத்த பரிசோதனை செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன், உடனே ஃபோனில் அப்பாயின்மெண்டும் வாங்கிவிட்டான்.


நினைவுகளிலிருந்து வெளிவந்த கார்த்திக், தன்னருகில் படுத்திருக்கும் தன் அன்பு மனைவியை மீண்டும் நோக்கினான்.
அவன் கண்களில் நீர் ததும்பி கசிய காத்திருந்தது.


இறப்பு யாருக்கோ என்ற
கேள்வி படுகையில்
செய்தியாக தோன்றுகிறது
அது தன்னையே நெருங்கும் போது
பயமும் வேதனையும்
முட்டி மோதுகின்றது;

கார்த்திக் படுக்கையிலிருந்து எழுந்து, அருகிலிருந்த மேஜையின் மேலிருந்த விளக்கை ஏற்றிவிட்டு, தன் டைரியில் எழுத ஆரம்பித்தான்...


ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய என்னால்
உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னையும் தான்...

டைரியை பீரோவில் பத்திரப்படுத்திவிட்டு கார்த்திக் படுக்கச் சென்றான்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....



[தொடரும்]

பகுதி - 5

பகுதி-6

July 15, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 3

பகுதி - 1

பகுதி - 2

கார்த்திக் தன் மேஜை மீதிருந்த கவரை மெதுவாக பிரித்தான்.

அதே சமயம் தனக்கு பின்னாலிருந்து
'க்ஹும்.."
என தொண்டையை செருமும் குரல் கேட்டு திரும்பினான்.

அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!!

ஒரு வாரம் கழித்து அவளை பாப்பதின் பரவசத்தையும், அவள் பிரிவு ஏற்படுத்திய தவிப்பையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், சிடு சிடு முகத்துடன்....

தன் கையிலிருந்த கவரை பிரித்தபடியே,

" என்ன இது?...." என்றான்.

இப்போது ஒரு வெட்க புன்னகை நந்தினியின் முகத்தில்,
நொடிக்கொருமுறை மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால்,

கவரினுள் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்தான் கார்த்திக்,

" என்ன பேப்பர் இது?"

"பிரிச்சுப் பாருங்க"

மெதுவாக பிரித்துப் பார்த்தான் கார்த்திக்.

உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
க.குமரேசன்
முன்னாள் பேரூராட்சி தலைவர்,
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.
என்ற முகவரியும், அதன் கீழ் பஸ் ரூட், ரெயில் ரூட், கார் ரூட் என எல்லா வழிதளங்களிலும் எவ்வாறு அந்த முகவரிக்கு சென்றடையலாம் என்று விளக்கமாக எழுதியிருந்தது.
' யார் அட்ரஸ் இது......எதுக்கு என்கிட்ட கொடுக்கிறா' என்ற குழப்பத்துடன்.......

"இது.....யார் அட்ரஸ்?" என்றான் கார்த்திக்.

" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"

" மாமனாரா???"

இப்போது நந்தினியின் முகம் முழுவதுமாக சிவந்தது.........கார்த்திக்கிற்கு எல்லாம் புரிந்தது.
ஆயிரம் காதல் அர்த்தங்கள் கொண்ட புன்னகையை மட்டுமே இருவராலும் அப்போது பரிமாற கொள்ள முடிந்தது.

மகள் ஆசைப்பட்ட கல்லூரி படிப்பை படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பிய நந்தினியின் அப்பா, காதலை வெளிப்படுத்தியவரின் விபரங்களை தன் மகள் மறைக்காமல் தன்னிடம் கூறியதும், 'காதல்' என்ற ஒற்றைச் சொல்லிற்கே எதிரி என்ற தொணியில் எதிர்க்காமல், மகள் கூறிய விபரங்களுடன் பையனை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தன் சம்மதத்தை மகளிடம் கூறி, முறைப்படி பெண்கேட்டு வரச்சொல்லியிருந்தார்.

இருவீட்டாரின் முழு விருப்பத்துடன் கார்த்திக் - நந்தினி திருமணம் விமரிசையாக நடந்தேறியது.
தன்னை விரும்பியவர், தனக்கும் பிடித்திருந்தவரையே தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த தன் அப்பாவின் பாசமழையில் திளைத்துப் போனாள் நந்தினி.


கண்ணுக்குள் வைத்து காக்கும் கணவன்,
கையில் வைத்து தாங்கும் மாமியார்
என நந்தினியின் மணவாழ்க்கை இனிதே தொடர்ந்தது.

ஆஃபீஸிலிருந்து கார்த்திக்கும் நந்தினியும் வீட்டுக்கு வந்ததும், நாள் முழுவதும் அலுவலகத்தில் நடந்ததை அபிநயத்துடன் நந்தினி தன் மாமியாரிடம் கூறுவாள், அவரும் தான் நாள் முழுக்க பார்த்த டீவி சீரியலிலிருந்து, பக்கத்து வீட்டு கதை வரைக்கும் அடுக்கடுக்காக மருமகளிடம் ஓப்பிப்பார்,இருவரும கலகலப்புடன் பேசிக்கொண்டே அடுப்படியில் இரவு உணவு தயாரிப்பதை மன நிறைவுடன் ரசித்தபடியே ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருப்பான் கார்த்திக்.


இந்த மாமியார் மருமகள் அரட்டை சில சமயங்களில் இரவு வெகுநேரம் வரை நீளும், முக்கியமாக சனிக்கிழமை இரவுகளில், மறுநாள் விடுமுறை என்ற காரணத்தால் வெகு நேரம் இரவில் ஊர் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்,

"அம்மா, நைட் ரொம்ப லேட் ஆச்சும்மா......இவ்வளவு நேரம் முழிச்சுட்டு இருந்தா உங்க உடம்புக்கு என்ன ஆகிறது, சீக்கிரம் படுத்துக்கோங்கமா" என்று கார்த்திக் அவர்களின் அரட்டையை முடிக்க தருணம் பார்ப்பான்.

" ப்ரவாயில்லபா கார்த்தி....நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே.........லேட்டா எழுந்திருச்சா போகுது.....!" என்பார் அவன் அம்மா.

இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.

"நந்தினி நீ தான் வாயைத் திறந்து அம்மாக்கு எடுத்து சொல்லக் கூடாதா? ராத்திரி பதினொரு மணி வரைக்கும் முழிச்சிட்டிருந்தா உடம்புக்கு ஆகாதுன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா?"

"நான் என்னங்க சொல்றது.......நாளிக்கு லீவுன்னுதானே நாங்க பேசிட்டிருக்கிறோம்...அதான் அத்தையே சொல்லிட்டாங்களே, லேட்டா எழுந்தா போகுதுன்னு.....அத்தை நீங்க சொல்லிடிருந்த கதையை சொல்லுங்க , அப்புறம் என்னாச்சு??"


வேண்டுமென்றே நந்தினி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள்.தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.

" சீக்கிரம் படுத்தா வயசான காலத்துல உடம்புக்கு நல்லதுன்னு சொன்னா.....உங்களுக்கு விளையாட்டா இருக்கா?" உள் தகிப்பில் கார்த்திக்கின் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

இப்படி குறும்பும் கறும்புமாக கார்த்திக்- நந்தினியின் இல்வாழ்க்கை இனிதே நகர்ந்தது.
தன் அன்னையை தாயைப் போல் நேசிக்கும் மனைவி, தன் விளையாட்டுத்தனமான வெகுளிப் பேச்சால் மனதை குளிர்விக்க, கார்த்திக் தன் வாழ்வே பூரணமானதாக உணர்ந்தான்.

நாட்கள் வேகமாக நகர
மாதங்கள் புரண்டோட
வருடமும் விரைந்து......
கார்த்திக்-நந்தினி தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியது.


இந்த இரண்டு வருட மணவாழ்க்கை கார்த்திக்கை பொதுவாழ்விலும் பெரிதும் மாற்றி இருந்தது.
தனக்கென ஒரு வட்டம் அமைத்து மற்றவரிடம் சகஜமாக பேசிப் பழக மறுக்கும் கார்த்திக்கிற்கு இப்போது நட்பு வட்டாரங்கள் அதிகமாயின.

திருப்திகரமான இல்லறம் கொடுக்கும் உத்வேகம் அவனது வேலை செய்யும் திறனையும் மேம்பட வைத்தது, பதவியில் பல உயர்வுகள், உயர்மட்ட நட்புகள், அடிக்கடி கம்பெனி விஷயமாக வெளியூர் பிரயாணங்கள், என்று கார்த்திக்கின் வாழ்க்கை புதிய கோணத்தில் பயணித்தது.
பொருளாதார நிலையிலும் பெரிதான முன்னேற்றம் அவன் வாழ்வில்.

"எல்லாம் என் மருமகள் வந்த நேரம்தான் என் புள்ள இவ்வளவும் சாதிச்சிருக்கிறான்" என்று நந்தினியின் மாமியார் தன் மருமகளை உச்சி முகர்ந்தார்.

எல்லாம் சீராக சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் வாழ்வில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை கார்த்திக்-நந்தினி உணர ஆரம்பித்தனர்.

வீட்டிலும், உறவுக்காரர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதுதான், மருத்துவரை அணுகி பரசோதத்தில், நந்தினி தாய்மை அடைய சில பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

நந்தினியால் இந்த குறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் , தன்னுள் சுக்கு நூறாக உடைந்துப்போனாள்.

மாமியாரும், கணவனும் எவ்வளவோ ஆறுதலும், உற்சாகமும் கொடுத்தும் , தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மருத்துவ சிகிச்சையை மனமுடைந்த நிலையில் தான் மேற்கொண்டாள் நந்தினி.

இந்த சமயத்தில் நந்தினியின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் சீரியஸான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட, ஊருக்குச் சென்ற நந்தினி, அப்பாவின் உடல் நிலை சிறிது சிறிதாக தேறின பின்பும், தன் அம்மாவிற்கு துணையாக அங்கேயே சிறிது காலம் தங்கிவிட ஆசைபட்டாள்.
அவளது மனநிலைக்கு இந்த இடமாறுதலும் நல்லது என கார்த்திக்கின் அம்மாவும் மருமகளுக்கு சப்போர்ட் செய்தாலும், கார்த்திக்கிற்கு ஏனோ சம்மதிக்க மனமேயில்லை.

உயிர் மீண்டு வந்திருக்கும் தன் அப்பாவுடன் இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்க கார்த்திக்கிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த நந்தினியின் மனம் தவித்தது.... .


மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?

உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?

உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?

அவரோ,
உயிர் தந்தார்,
உடல் தந்தார்,
கண் என காத்தார்,
கலைகள் பல தந்தார்,
கடமையில் சிறந்தார்-உறவானார்!

அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.

உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?


தன் அம்மாவின் வற்புறுத்தல், ஆசை மனைவியின் முகத்தில் கவலைகளின் ரேகை........கார்த்திக் அரைமனதாக நந்தினி அங்கு தங்கிட சம்மதித்தான்.

நந்தினியின் பிரிவு ஒருவித தனிமையுணர்வை கார்த்திக்கிடம் அதிகரித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வெறுமை அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த புதுவித மனநிலை அவனுள் செல்லரித்துக்கொண்டிருக்க, அலுவலக விஷயமாக கார்த்திக் ஹைதிரபாத் செல்ல வேண்டியிருந்தது.

ஹைதிரபாத்தில்..............கார்த்திக்..........


[தொடரும்]

பகுதி - 4

பகுதி - 5

பகுதி - 6

July 07, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்!!! - 2


மனதில் கொள்ளை ப்ரியம் நந்தினியின் மேல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்த தெரியாத கார்த்திக், தனது வழக்கமான சிடு மூஞ்சியுடன் அவளிடம்...

"நந்தினி, ஐ திங் ஐ அம் இன் லவ்......"

"அப்..படிங்...களா"

"ஆமாம்"

"வாழ்த்துக்களுங்க"

அப்பாவித்தனமாக அவள் தமிழில் ' வாழ்த்துக்கள்' என கூறியதும், உதட்டோரம் கார்த்திக்கிற்கு சிரிப்பொன்று மலர்ந்தது.

"தாங்க்ஸ்..."

"...."

" யாரை லவ் பண்றேன்னு கேட்க மாட்டியா?"

"யா........யாருங்க?"

"நீங்க.......தாங்க"

"...."

" ஐ லவ் யூ நந்தினி"

'ஐயோ.....' என முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள் நந்தினி.

இந்த ரியாக்ஷனை கார்த்திக் சற்றும் எதிர்பார்க்காததால் கொஞ்சம் பயந்துதான் போனான்.

பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,
இந்த பொண்ணு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகுறா??


"நந்தினி.....இப்ப எதுக்கு இப்படி அழுற"

"நீங்க.......இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல"

" கெட்ட வார்த்தையா??............எது.........எது கெட்ட வார்த்தை........நான் எப்போ சொன்னேன்?"

"இப்ப..........இப்ப........கொஞ்சம் முந்தி சொன்னீங்க"

"ஐ லவ் யூ ........கெட்ட வார்த்தையா??"

அந்த வார்த்தையை கேட்டதும் மறுபடியும், 'ஓ' வென அழுதாள் நந்தினி.

'என்னடா இது வம்பா போச்சு, பொண்ணு அழகாவும் இருக்கா, நல்ல பொண்ணாவும் இருக்கான்னு காதலைச் சொன்னா.......இப்படி அசடா இருப்பான்னு நினைக்கவே இல்லையே' என யோசித்த கார்த்திக்கால் 'ஜகா' வாங்கவும் அவனுள் ஆழமாக பதிந்த காதல் இடம் கொடுக்கவில்லை.

" எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில்.

பள்ளி படிப்பு முடித்து நாலு வருஷம் ஆச்சு,
பட்டணத்தில் கல்லூரி படிப்பும் படிச்சாச்சு,
பெரிய கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தாச்சு.....

இன்னுமா இந்த பொண்ணு இதை கெட்ட வார்த்தைன்னு சொல்லிட்டு இருக்கா??

இவ நடிக்கிறாளா...............இல்ல நிஜம்மாவே வெகுளியான்னு கார்த்திக்கால் புரிந்துக்கொள்ள முடியவிலலை.

எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!

"இங்க பாரு நந்தினி......எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..........ரொம்ப பிடிச்சிருக்கு......உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"

சற்று அதிகார தொனியில் கார்த்திக் பேசவும் நந்தினி தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு தெளிவாக பேச முயன்றாள்,

" நீங்க இப்படி எல்லாம் பொண்ணுங்க கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு ஆபீஸ்ல எல்லாரும் சொல்லிக்கிட்டாங்க, நானும் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன் உங்க மேல.........நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல"

"ம்ம்...........இது நாள் வரை என் மனசுல ......உன்னை போல யாரும் இப்படி பதிந்ததில்ல நந்தினி. எந்த பொண்ணுகிட்டவும் வலியப்போய் நான் பேசினதுமில்ல..........ஆனா உன்னை மட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு , அவ்வளவு தான்"

மீண்டும் அழ தொடங்கினாள் நந்தினி.

"இப்போ எதுக்கு அழுகிற??.......நான் தான் அந்த கெட்ட வார்த்தைய மறுபடியும் சொல்லலியே"

"இந்த காதல் கீதல் ன்னு........ஏதாவது என் அப்பாவுக்கு தெரிஞ்சா........என்னை வெட்டிப்போடக் கூடத் தயங்க மாட்டார். நான் எப்போவும் அப்பா பிள்ளை............என் அப்பா சொல்லை தட்டி நடக்க மாட்டேன்.....நான் பட்டணத்துல போய் படிக்க சொந்தக்காரக எல்லாம் தடுத்தபோ கூட என் அப்பா என் மேல நம்பிக்கையோட படிக்க அனுபிச்சாங்க, கம்பியூட்டர் கம்பெனில வேலைக்கு போற பொம்பளை பிள்ளைக அங்கே பக்கத்து பக்கதுல ஆம்பிளைங்க கூட ராத்திரி பகல் னு நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் வேலை செய்யறப்போ, காதலிச்சு தானே தன் வாழ்க்கைய தீர்மாணிச்சுருமாம்ண்ணே, அதனால நம்ம நந்தினிய படிக்க வைச்சதோட நிறுத்திடுங்கண்ணே...........வேலைக்கெல்லாம் அனுப்பாதீகன்னு எங்க சித்தப்பா எவ்வளவோ சொல்லியும், இப்போ 1 வருஷம் வேலைக்கும் போமா உன் இஷ்டபடின்னு அனுமதிச்சிருக்காங்க.......லவ்வு ஜவ்வுன்னு டாவு பண்ற ஆளு இல்ல நீங்கன்னு எல்லாரும் சொன்னதால தான் உங்க கிட்ட மட்டும் பேசினேன், நீங்க ..........இப்படி சொல்லிட்டீங்களே"

மீண்டும் விசும்பல்,


பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????
கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு கார்த்திக் பேச தொடங்கினான்,

"நந்தினி......நான் உன்னை மனசார விரும்புறேன், உனக்கா என் மேல எப்போ காதல் வருதோ அப்போ என்கிட்ட சொல்லு, அதுவரைக்கும் நான் காத்திட்டிருப்பேன்"
என்று தெளிவாக கூறினான் கார்த்திக்.

நந்தினிக்கு தன் குடும்பத்தின் மேல் தான் பயம்.........தன் மீது வெறுப்பு இல்லை என அவன் மனதில் உறுதியாக உணர்ந்தான்.

நந்தினி பதில் ஏதும் சொல்லாது சிலைத்துப் போய் நின்றாள்.........சில நிமிடங்கள் ஆகியும் நந்தினியின் மெளனம் கலையவில்லை.

அந்த மெளனத்தின் அர்த்தம்??

அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!

எதுவும் பேசாமல் நந்தினி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதன்பின் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் அலுவலகத்தில் முடிந்தவரை கார்த்திக்கை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தாள் நந்தினி.


சிடுமூஞ்சி சொன்ன காதலில்
சின்ன பொண்ணு குழம்பி போயிருக்கு
சீக்கிரம் சரி என்று தலையாட்டுவது கஷ்டம் தான்
சிறிது சிறிதாக சரி ஆகிடுவா
என்ற நம்பிக்கையில் கார்த்திக்கும் அவளை கண்டுக்கொள்ளாமல் இருந்தான்.

சனி ஞாயிறு வார விடுமுறை முடிந்து திங்கள் கிழமை அலுவலகம் வந்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சி.......நந்தினி அலுவலகம் வரவில்லை..

நந்தினி ஏன் வேலைக்கு வரல........??? டீமில் விசாரித்ததில், வாரயிறுதிக்காக சொந்த ஊருக்குச் சென்ற நந்தினி இன்னும் சென்னைக்குத் திரும்பவில்லை என் தெரிந்துக்கொண்டான் கார்த்திக்.

நந்தினி இல்லாத ஒவ்வொருநாளும் ஒரு யுகமாக தெரிந்தது கார்த்திக்கிற்கு,



அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேனோ தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!




நந்தினியின் வீட்டு தொலைபேசி எண் அவள் டீம்மேட் பெண்களிடம் கேட்டு அவளை தொடர்பு கொள்வது ஒன்றும் பெரிய காரியமல்ல, எனினும், அவளது குடும்ப சூழ்நிலை தெரியாமல் அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை சங்கடபடுத்த வேண்டாம் என ஒரு வாரம் அவளுக்காக தவிப்புடன் காத்திருந்தான் கார்த்திக்.

இனிமேலும் அவளிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க முடியாது என உணர்ந்தவனாய், எப்படியும் அவளுக்கு ஃபோன் பண்ணியே தீர்வது என்ற முடிவுடன் தன் இருக்கைக்கு வந்தவன், மேஜையின் மீதிருந்த கவரைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துப்போனான்.........

[தொடரும்]

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6

June 30, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 1

" என்னங்க உங்க பையன் ' கிக் பாஸிங்' ஆரம்பிச்சுட்டான், இனிமே நான் தூங்கினாப்ல தான்!
என் தூக்கத்தை திருடுறதுல உங்களுக்கு போட்டியா இப்போ உங்க பையன், என் வயித்துக்குள்ள இருக்கிறப்போவே இப்படி ஆட்டம் போடுறானே....வெளியில வந்ததும் என்னை ஒருவழி பண்ணிடுவான் போலிருக்குங்க"

ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில் படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின் மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.

சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்ட கார்த்திக் மறுபக்கமாக திரும்பி படுத்துக்கொண்டான்.

வழக்கமாக தன் மடிமீது தலை வைத்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் உரையாடுவதும், கொஞ்சுவதுமாக சில்மிஷம் செய்யும் கார்த்திக் இன்று இப்படி நடந்துக்கொண்டது நந்தினிக்கு வியப்பாகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்....

"என்னடா செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??" என கேட்டுக்கொண்டே தன் பக்கமாக கார்த்திக்கை திருப்ப முயன்று தோற்றாள் நந்தினி.

திருமணமான இந்த மூன்று வருடத்தில் ஒருநாள் கூட இப்படி அவன் முகம் திருப்பியது கிடையாது.

'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??

குழம்பிப்போன நந்தினிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ஆனாலும் கணவனிடம் தன் அழுமூஞ்சியை காட்டி அந்த அழகிய இரவை வீணாக்க விரும்பவில்லை நந்தினி.

"ஏங்க உடம்பு சரியில்லையா???.........ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா????"

"இல்ல...."

"பின்ன ஏங்க ஒருமாதிரி இருக்கிறீங்க? ஹைதிரபாத்க்கு போய்ட்டு நாலு நாள் கழிச்சு இன்னிக்கு காலையில வந்ததிலிருந்து நீங்க சரியாவே இல்ல, அத்தை முன்னாடி வைச்சு கேட்க வேணாம், ஆஃபீஸ் போய்ட்டு வந்ததும் கேட்டுக்கலாம்னு இருந்தேன்..........இப்போ சொல்லுடா கார்த்தி........என்னடா கண்ணா உனக்கு ஆச்சு?"

மற்றவர்களுக்கு முன்பும், மாமியாருக்கு முன்பும் மட்டும்தான் 'ஏங்க......வாங்க....போங்க' அப்படினு கார்த்திக்கு மரியாதை எல்லாம்,
தனிமை நேரத்தில் 'கார்த்தி' என பேர் சொல்ல்வதும்,
நெருக்கமான தருணத்தில் 'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும் நந்தினியின் பழக்கம்.



கார்த்திக்கிடமிருந்து பதில் ஏதும் வராததால் கொஞ்சம் கோபமும் வந்தது நந்தினிக்கு இப்போது,

"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன்டா திருடா"

"ஒன்னுமில்லைன்னு சொல்றேன் இல்ல..........சீக்கிரம் தூங்கு, நாளிக்கு காலையில உன் கைனக்காலிஜிஸ்ட் கிட்ட போகனும்"

'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக் இன்று எந்த சலனமும் இல்லாததிருந்தது நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது!!

"போன வாரம் தானே நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போனோம்..........அடுத்த விசிட் க்கு இன்னும் இரண்டு வாரம் இருக்குதே , இப்போ எதுகுங்க டாக்டர் பார்க்கனும்??"

"பார்க்கனும்னா பார்க்கனும் அவ்ளோதான்............சும்மா தொண தொணக்காம தூங்கு"

கார்த்திக்கின் சுரீரென்ற பதிலில் தெரிந்த எரிச்சல் நந்தினிக்கு புதிய பயத்தை அளித்தாலும், ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சனை போலிருக்கு, நாமும் ஏதாவது கேள்வி கேட்டு கஷ்டபடுத்த வேண்டாம் என நினைத்தவளாய், தனக்குள் வளரும் சிசுவின் அசைவுகளின் ஸ்பரிசத்தில் லயித்தவளாய் , மறுபுறம் திரும்பி படுத்து உறங்கிப்போனாள்.


சிறிது நேரத்தில் நேராக திரும்பிப் படுத்த கார்த்திக், தன் தேவதை அருகில் உறங்கும் அழகை ஒரு கணம் ரசித்தவன்.........மனதின் இறுக்கம் அதிகமாக, மேலே விட்டத்தை வெறித்துப் பார்த்தான்.
மின் விசிறி சுழல........கார்த்திக்கின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.




பொறுப்புடன் படித்து முடித்து நல்ல ஒரு பதவியில் வேலையில் அமர்ந்து, உழைப்பால் முன்னேறி, கைநிறைய சம்பாதிக்கும் 27 வயது இளைஞனுக்கே உரிய மனநிறைவும், கர்வமும் கொடுக்கும் மிடுக்குடன் கலையான முகத்துடன், பெரும்பாலான பெண்கள் விரும்பும் உயரமும், handsome ஆன உடல் தோற்றமும், காந்த பார்வையும் என அத்தனை அம்சங்களுடன் இருக்கும் கார்த்திக்,

ஏனோ பெண்களிடம் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது கிடையாது.
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த தனக்கு தந்தையும் தாயுமாய் இருந்து வளர்த்த தன் அம்மாவிடம் தனக்குள்ள பாசத்தை பறித்து விடுவாளோ தன்னுடன் வாழ்வை பகிர்ந்துக்கொள்ளும் பெண் என்ற ஒருவித பயமே கார்த்திக்கை பெண்களிடமிருந்து தன்னை தனிமைபடுத்திக்கொள்ள செய்தது.

அதனாலேயே தன்னுடன் வேலை செய்யும் பெண்களிடம் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட அதிகம் பேசாமல் தனக்கென ஒரு வேலியமைத்துக் கட்டுப்பாட்டுடன் இருந்தான் கார்த்திக்.
இதனால் அவன் வேலை செய்யும் அந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் மத்தியில் ஒரு வெறுப்பும்,
சில சமயங்களில் கடுமையுடன் பதிலளிக்கும் இவன் தன்மை ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சமயத்தில் தான் நந்தினி இவனது குழுவில் ' trainee' ஆக சேர்ந்தாள்.

நந்தினி திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பெண். +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து , வீட்டிலும் மற்றும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் இருந்து வந்த எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியில் கணனிதுறையில் பட்டப்படிப்பு முடித்து, இறுதி ஆண்டு ' campus interview' வில், கூட்டத்தோடு கூட்டமாக கார்த்திக் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களில் ஒருத்தி.

இன்று கார்த்திக்கிடம் trainee ஆக பணியில் சேர்ந்திருந்தாள்.

நகர்புறத்து நவநாகரீக பெண்களின் நுனிநாக்கு ஆங்கிலமும்,
சிறிது அலட்டலும்,
சகஜமாக ஆண்களுடன் நட்புடனும் தைரியத்துடனும் பேசும்
பெண்களையே பார்த்து பழகியிருந்த கார்த்திக்கிற்கு......


மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்,
அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும்,
பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக தெரிந்தாள் நந்தினி!!!

தன் மனம் அவள்மேல் ஈர்க்கப்படுவதையும், அலைபாயுவதையும் தடுப்பதாக நினைத்துக்கொண்டு, தேவையின்றி அவளிடம் வேலை நேரங்களில் கடுகடுப்புடன் கடுமையாக நடந்துக்கொண்டான் கார்த்திக்.

வெளித்தோற்றத்தில் அமைதியான நந்தினி, வேலையில் புத்திசாலியும் சுட்டியுமாக இருந்தது இன்னும் வெகுவாக கார்த்திக்கை கவர்ந்தது.

Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள விருப்பத்தை நந்தினியிடம் கூறிவிட முடிவு செய்தான் கார்த்திக்,

தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........

[தொடரும்]

பகுதி - 2

பகுதி - 3

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6