July 29, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 5

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4


ஹாஸ்பிட்டல் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிந்துக்கொள்ள தங்கள் அறைக்கு வந்த கார்த்திக், அங்கு.....


அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னைகைத்தது!




நந்தினியின் கிறங்கடிக்கும் அழகில் தன்னை ஒரு கணம் மறந்து ரசித்துப்பார்த்தான் கார்த்திக்.

"ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!"

தன் செவ்விதழ் சுளித்து, குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள் நந்தினி.

கார்த்திக் தன் ரசிப்பை மறைத்துவிட்டு, அவள் முகம் பார்க்கும் தெம்பில்லாமல்,

"டைம் ஆச்சு.......வா.....ஹாஸ்பிட்டல் போலாம்" என்று கூறிவிட்டு

அவள் பதிலுக்கு காத்திராமல் காரில் போய் உட்கார்ந்துக்கொண்டான்.

காரில் இருவரும் ஹஸ்பிடல் செல்லும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

மருத்துவ பரிசோதனையில் கார்த்திக் பயந்த மாதிரி 'எந்தவித' பாதிப்பும் நந்தினிக்கோ, வயிற்றிலுள்ள குழந்தைக்கோ ஏற்படவில்லை. இதனை அறிந்து மனதிற்கு ஒரு வித திருப்தியாக இருந்தாலும், தான் இல்லாமல் நந்தினி எப்படி குழந்தையுடன் வாழ்வை தொடர்வாள் என்று நினைக்கையில் ' திக்' கென்று இருந்தது கார்த்திக்கிற்கு.

இவனது மன ஓட்டங்களை உணராத நந்தினி, நாளுக்கு நாள் சோர்வடைந்து வரும் கார்த்திக்கிடம்,

"என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....."

"....."

" நீங்க ஜிம்முக்கு போயே 1 மாசம் ஆச்சு.........எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, அப்புறம்........கல்யாணம் ஆனதும்......'mission accomplished' அப்படினு ......exercise யே பண்ணாம 'தொப்பையும்' 'தொந்தியுமா'.......சோம்பேறி ஆகிட வேண்டியது"

"....."


"என்னங்க இது.....நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன்.........ஒரு வார்த்தை பதில் பேசுறீங்களா???........எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரியே ஒரு லுக்கு..........ஏங்க இப்படி இருக்கிறீங்க"

"இப்ப உனக்கு என்ன வேணும்..........'muscled body' ஆ ..........நானா??"

"ச்சீ.........ஏங்க இப்படி....... தப்பா அர்த்தம் பண்ணிக்கிறீங்க"

வார்த்தைகள் உடைந்தன நந்தினிக்கு.
கார்த்திக்கா இப்படி பேசுவது.......என்ற அதிர்ச்சி அவளுக்கு.

"என்னமா நந்தினி..........எதுக்கு கத்துறான் கார்த்தி".என்று கேட்டுக்கொண்டே நந்தினியின் மாமியார் அங்கு வர,

"ஒன்னு....மில்ல.....அத்தை" என்று சமாளித்தாள் நந்தினி.

கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.

நந்தினி தன்னிடம் மறைத்தாலும், தன் மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.

மகனிடம் தனிமையில் அறியுரை கூறிக்கொண்டுதானிருந்தாள். ஆனால் கார்த்திக்கின் போக்கில் எந்த ஒரு மாற்றமுமில்லை, மாறாக நாளுக்கு நாள் விட்டத்தியான பார்வையும், சோர்வான நடையுமாக கார்த்திக்கின் உடலும் மனமும் தளர்ந்துக்கொண்டே போனது.

அம்மாவின் அன்பும் அக்கறையும் கலந்த அறிவுரைகள் ஒருபுறம்.........அன்பு மனைவியின் கள்ளமில்லா குழந்தை முகம் ஒருபுறமென கார்த்திக்கை மேலும் மனபலவீனமடைய செய்தது.


சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..

உனக்கு செய்த
முதல் துரோகம்
என் முடிவையும்
தேடிக் கொடுத்திருக்கிறது...

உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!


தன் மறைவிற்கு பின் நந்தினியும் தன் தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.
எல்லா விதத்திலும் அவளை தயார் படுத்தும் நோக்குடன் அவன் செயல்பட்டது, நந்தினிக்கு ஏன் என்று புரியவில்லை.

"இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"

"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"

"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"

"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"

வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது.

அவளது கண்ணீருக்கு முன் கார்த்திக் என்றுமே ஒரு கோழைதான், அவளது கண்ணீரை தாங்கும் சக்தி அவனுக்கோ........அவன் காதலுக்கோ இல்லை!!!

"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"

சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

கண்ணீர் திரையாக கண்களை மறைக்க........கார்த்திக் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

தன்னை விட்டு கார்த்திக் விலகி விலகி போவதின் அர்த்தம் உணர முடியாமல், அந்த நிராகரிப்பின் வலியை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் நந்தினி தவித்தாள்.


என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...



கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள்..........சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.

'முதல் பிரசவம் எங்கள் வீட்டில்தான்' என நந்தினியின் பெற்றோரும் உறவினரும் அவளுக்கு சிறப்பாக வளைகாப்பு செய்து ஊருக்கு அழைத்துச்சென்றனர்.
ஊருக்குச் சென்றபின்பும், தனியாக இருக்கும் தன் மாமியாருக்கும், ஃபோனில் பேசும்போதும் கடுகடுப்பாக பேசும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி ஃபோன் செய்தாள் நந்தினி.

"அத்தை சாப்பிட்டீங்களா??"
"அத்தை.......ஒரு ஸ்ட்ராங் காஃபி குடிக்கலாமா"
"அத்தை கோயிலுக்கு போலாமா??".......
இப்படி வார்த்தைக்கு முன்னூறு அத்தை போட்டு பாசமுடன் வலம் வந்த மருமகள் இல்லாமல், முகம் கொடுத்து கூட பேசாத மகனுடன் இருப்பது கார்த்திக்கின் அம்மாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதனால் சம்மந்தார் வீட்டில் 'டேரா' என்று ஊரும் உறவும் சிரித்தாலும் ப்ரவாயில்லை என்று மருமகளைக் காண சென்றுவிட்டார் காத்திக்கின் அம்மா.

அப்பா இல்லாமல் வளர்ந்த கர்த்திக், இதுவரை 1 வாரத்திற்கு மேல் தன் அம்மாவை பிரிந்திருந்ததில்லை, இந்த முறை அம்மாவின் பிரிவும்.......மனைவியின் பிரிவும் சேர்ந்து அவனை தனிமை சிறையில் தள்ளியது.

மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...



ஆனாலும்..........தன் அம்மாவிற்கும் நந்தினிக்கும் இடையிலான இந்த பாசப்பிணைப்பு மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

தனிமையுணர்வில் ....தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கார்த்திக், ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டான்.

கண்விழித்த போது, தலையில் கட்டுடன் தான் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருப்பதை உணர்ந்தான். கார்த்திக் கண்விழித்ததை டாக்டரிடம் நர்ஸ் தெரிவிக்க, டாக்டர் அவனது அறைக்குள் வந்தார்,

"ஹலோ மிஸ்டர் கார்த்திக்.."

"எனக்கு........என்னாச்சு.....டாக்டர்"

"பைக் கார் மேல மோதி நீங்க கீழே விழுந்ததில், தலையில் அடிப்பட்டிருந்தது.........தையல் போட்டிருக்கிறேன்.....இரண்டு நாள்ல சரியாகிடும், உங்க பர்ஸ்ல இருந்த உங்க நண்பர் ஒருவரின் விசிட்டிங் கார்ட் மூலம் அவரை மட்டும் தான் தொடர்பு கொள்ள முடிந்தது.......வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணனுமா??"

"என்னை........எதுக்கு.......டாக்டர் காப்பாத்தினீங்க........"

"என்ன சொல்றீங்க மிஸ்டர் கார்த்திக்......உங்களை காப்பாத்த வேண்டியது எங்க டுயுட்டி......ஆர் யு ஒகே??"

கார்த்திக்கின் கண்களில் நீரைக்கண்டதும், டாக்டர் திகைப்புடன்,

"மிஸ்டர் கார்த்திக்.........உங்களுக்கு லேசாகத்தான் அடிபட்டிருக்கு, பயப்படும்படியா பெரிய காயம் எதுவுமில்லை.......ஏன் நீங்க இப்போ எமோஷனல் ஆகிறீங்க"

டாக்டரிடம் தன் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டின் விபரங்களை கார்த்திக் கூற, அவரோ......."உங்கள் இரத்தம் நாங்கள் பரிசோதித்த போது எந்தவித HIV அறிகுறியும் இல்லை' என்றும், இன்னொருமுறை வேண்டுமானால் பரிசோதனை செய்துவிடலாம் என மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.

அதே சமயத்தில் கார்த்திக்கை பார்ப்பதற்கு , விசிட்டிங் கார்ட் மூலம் டாக்டர் தொடர்பு கொண்டிருந்த கார்த்திக்குடன் வேலைப் பார்க்கும் ஹரி அறைக்குள் வர, கார்த்திக் தன் குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவனிடம் பேசினான்.

ஹரி தாழ்ந்த குரலில் , கார்த்திக்கிடம்.....

"ஸாரி கார்த்திக்.......டாக்டர் ஃபோன் பண்ணின உடனே என்னால வரமுடியல"

"ப்ரவாயில்லை ஹரி"

"ஒரே சமயத்தில்..........இரண்டு பேரைப்பற்றிய அதிர்ச்சியான செய்தி...அதுவும் இரண்டு பேரின் பெயரும் ஒரே பேர்.....அரண்டுப்போய்டேன் கார்த்திக்"

"என்ன சொல்ற.....ஹரி???"

"கார்த்திக்.......I am not sure......if it is the good time to convey this news to you......நம்ம டீம் கார்த்திக் இறந்துட்டான்"

"யா......ரு......கார்த்திக் குமாரா"

"அவனே தான்..,.....பார்ட்டி அனிமெல்"

"என்ன சொல்ற......ஹரி.....எப்படி??"

ஹரி தன் குரலை மிகவும் தாழ்த்தி......

"எய்ட்ஸ்...ரீசண்டாதான் கண்டுபிடிச்சிருக்காங்க.....அதுக்குள்ள....."

"......."

"பின்ன அவன் பண்ணின லீலைக்கெல்லாம்........சே....ஆளே போய்ட்டான்.......அவனைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது"

"....."

"உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருக்குனு ஃபோன் வந்து சில நிமிஷத்துல இந்த தகவலும் வந்தது......அதான் நான் இங்க வர்ரதுக்கு லேட்......ஸாரி கார்த்திக்"

அதற்கு மேல் ஹரி பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை!

கார்த்திக்கின் நெற்றியில் 'பொட்'டென தட்டினார் போன்ற உணர்வு, ஹைதிராபாத்தில் இரத்தம் கொடுக்க முன் வந்தவர்களில் அவன் குழுவில் இருந்த அந்த கார்த்திக் குமாரும் ஒருவன், இப்போது விளங்கியது கார்த்திக்கிற்கு..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.


உடனே கண்முன், தன் கடுமையான பேச்சினாலும், கசப்பான வார்த்தைகளாலும் காயப்படுத்தி, ரணப்படுத்திய நந்தினியின் அழுது சிவந்த முகம் தோன்றியது.

"ஹரி......ப்ளீஸ்......எனக்கு சென்னை-தூத்துக்குடி ஃப்ளைட்டுக்கு உடனே ஒரு டிக்கட் புக் பண்ணித்தர முடியுமா??"

"இந்த நிலைமையில்.........எப்படி.....கார்த்திக்"

நண்பன் மருத்துவர் என்று யார் தடுத்தும் கேளாமல் , தலையில் கட்டுடன்...........கார்த்திக் நந்தினையை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அவளுக்கு ஃபோன் கூட பண்ணாமல் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் தரையிறங்கினான்.

விபத்தில் காயப்பட்டபோது தன் செல்ஃபோன் சிதறிப்போனது அப்போது தான் நினைவிற்கும் வந்தது.

நந்தினியை உடனே பார்த்தே ஆக வேண்டும்........செய்த தப்பை சொல்லி........மன்னிப்பு கேட்டு......அவள் மடியில் முகம் புதைத்து கதற வேண்டும் என்று மட்டுமே மனசு துடித்தது!!

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் நந்தினியின் ஊருக்குச் சென்றான்.

நந்தினியின் வீடு இருக்கும் தெருவில் , அவர்களது வீடுதான் சற்று பெரிதான வீடு, தெருமுனையில் கார் திரும்பியது ஒரு குலுக்கலுடன் கார் நின்றது, டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்ய கீழே இறங்க எத்தனிக்க.......

"பக்கத்துல தான் வீடு........நானே போய்கிறேன்.....இந்தாப்பா பணம்" என்று டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்துவிடுகிறேன் வெயிட் பண்ணுங்க சார் என்று கூறியும் கேளாமல், அவன் கையில் பணத்தை தினித்துவிட்டு, நந்தினியின் வீடு நோக்கி நடந்தான்.

சற்று தொலைவிலேயே......நந்தினியின் வீட்டின் முன் கூட்டமாக ஆட்களிருப்பது தெரிந்தது.
இந்நேரத்தில்........ஏன் இத்தனை கூட்டம் அவள் வீட்டுமுன்...

வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.

வீட்டின் முகப்பில் நின்ற அவளது உறவுக்கார ஆண்கள், ஊர் காரர்கள் அனைவரின் முகத்திலும் ......சோகம் நிரம்பிருப்பதைக் கண்டதும்......கார்த்திக்கின் படபடப்பு அதிகரித்தது.
இவனைக் கண்டதும் அனைவரும் இவனை.....இரக்க பார்வை பார்த்தார்களே தவிர, யாரும் விபரம் எதுவும் கூறவில்லை.

நந்தினியின் சித்தப்பா கார்த்திக்கை கண்டதும், இவனது கரங்களை பதற்றத்துடன் பற்றிக்கொண்டு....

"மாப்பிள........மாப்ள......எங்கே போய்ட்டீங்க....உங்களுக்கு தகவல் சொல்ல எத்தனை தடவ.....நாங்க ஃபோன் பண்ணினோம்........"

"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.

"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"

கண் இருண்டது கார்த்திக்கிற்கு....

[தொடரும்]

பகுதி- 6

July 23, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 4

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

அலுவலக விஷயமாக ஹைதிராபாத் சென்ற கார்த்திக், நான்கு நாட்கள் தன் குழுவிலுள்ள நண்பர்களுடன் முக்கியமான ப்ராஜக்ட் வேலையில் மூழ்கியிருந்தான், கடின உழைப்பிற்கு பிரதிபலனாக இவர்களது வேலையும் வெற்றிகரமாக முடிந்தது.

அதனை கொண்டாட இவனது குழுவினர் தீர்மானித்தனர். கார்த்திக்கும் அவர்களுடன் இரவு பார்ட்டிக்குச் சென்றான். வெற்றி களிப்பு, நண்பர்களின் தூண்டுதல், தன் அடிமனதிலுள்ள தனிமையின் தவிப்பு எல்லாமுமாக சேர்ந்து சற்று அளவுக்கு அதிகமாகவே மது அருந்தினான் கார்த்திக்.

Occasional alcohol taker ஆன கார்த்திக்கிற்கு இந்த திடீர் போதை தன் தனிமை உணர்விற்கு ஒரு வடிகாலாக தோன்றியது.

அருந்திய மது அவன் மதியை மந்தமாக்க, நண்பர்களின் உந்துதலினால் 'மாது'வையும் தேட வைத்தது.

மறுநாள் தன் ஹோட்டல் அறையில் சுயபுத்திக்கு வந்த கார்த்திக், நந்தினிக்கு தான் செய்த துரோகத்தை உணர்ந்து , குற்ற உணர்வில் குறுகிப்போனான்.

நந்தினியிடம் உண்மையை கூறவா, வேணடாமா என்று மனதில் தடுமாற்றம்,
'நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனுக்கு வந்த நிலைமையை நினைத்துக்கொண்டான்.


சென்னைக்கு திரும்பிய பின்பும், செய்த தவறு கார்த்தின் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது,
நந்தினியிடம் பக்குவமாக , சந்தர்ப்பம் பார்த்து மனம்விட்டு சொல்லிவிட வேண்டும் என முடிவு பண்ணினான் கார்த்திக்.

மூன்று வாரங்களில் நந்தினியும் சென்னைக்குத் திரும்பி வந்தாள்.

குறு குறுக்கும் மனதுடன் நந்தினியிடம் முன்பு போல் பழக முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான் கார்த்திக்.


தன் தந்தையின் திடீர் மாரடைப்பு, தாய்மை அடைய தடையாக தன் உடல்நிலை என கவலைகள் சூழ்ந்துக்கொள்ள நந்தினியும் சோர்வாகவே காணப்பட்டாள். எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் மனதில் வெறுமை, இறுக்கமான முகத்தோடு வலம்வந்தாள்.

கணவன் மனைவிக்குள் முன்பிருந்த ஒட்டுதல் இல்லை என புரிந்துக் கொண்ட கார்த்திக்கின் அம்மா, அவர்கள் இருவரையும் ஒரு வாரம் ஊட்டிக்கு சென்றுவர வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

புதிய சூழல், இதமான குளிர்ந்த சீதோஷன நிலை, இருவருக்குமேயான நீடிய தனிமை தருணங்கள் கணவன் மனைவிக்குள் மீண்டும் நேச அனலை புதுப்பித்தது.


கணவனின் அன்பான அரவணைப்பால் நந்தினியின் முகத்தில் புன்னகை பரவ ஆரம்பித்திருந்தாலும், அவளது அடிமனதில்....

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு
இரண்டாச்சு...!!

எப்போ நீ பிறப்பாய்
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!


இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் -
உன் வரவைச் சொல்லலையே...!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய்
என்உயிரே தவிக்குதிங்கே...!!


நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!


நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'

'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!


பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???


மாதங்களும் கடந்தன....நந்தினியின் மனதிலிருந்த வேண்டுதல் நிறைவேறியது.

நந்தினி கர்ப்பமாக இருக்கிறாள் என மருத்துவர் உறுதி செய்ததும் குடும்பமே சந்தோஷ களிப்பில் திளைத்தது.


நீண்ட பயணம் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் கருவுற்றிருக்கும் தன் ஆசை மகளைக் காண நந்தினியின் அப்பா சென்னை வந்தது நந்தினிக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.

புதிய உறவு உதித்த மகிழ்ச்சியில் கார்த்திக் முழுவதுமாய் தன் ஹைதிரபாத் 'நிகழ்வை' மறந்தே போயிருந்தான்.

கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார் கார்த்திக்கின் அம்மா.

இப்படியாக நாட்கள் உருண்டோட , கார்த்திக் மீண்டும் அலுவலக விஷயமாக ஹைதிரபாத் செல்ல நேர்ந்தது.

ஒரு நாள் அலுவல் முடிந்து கார்த்திக்கும் அவனது குழுவினரும் டாக்ஸியில் தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், வழியில் சாலை விபத்தொன்றில் அடிபட்டு உயிருக்கு போராடும் முதியவரை தங்கள் டாக்ஸியில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அம்முதியவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட, கார்த்திக்கும் அவனது குழுவிலிருந்த இருவரும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

இரத்த பரிசோதனை நிலையத்திலிருந்து ரிப்போர்ட் வந்ததும், மருத்துவர் கார்த்திக்கை மட்டும் தனியாக தன் அறைக்கு அழைத்தார்.

பேச தொடங்கவே தயங்கிய மருத்துவரிடம் கார்த்திக்,

"Whats the matter Doctor.......please open up"

"Mr.Karthik.....I am very sorry to say ....that......you are infected with HIV"

அதிர்ச்சியில் கார்த்திக்கின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போனது,
மார்பு வெகு வேகமாக அடித்துக் கொள்ள,
யோசனைத் திறன் சற்று நேரத்திற்கு விலகிக் கொண்டது,
தன்னை சமாளித்துக் கொள்ள கார்த்திக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன.

கார்த்திக் அதிர்விலிருந்து தன்னை சுதாரித்துக் கொள்ள தடுமாறிய அதே வேளையில், மருத்துவரின் அறைக்குள் வந்த நர்ஸ் , விபத்தில் அடிபட்டு அனுமதிக்கபட்ட முதியவர் ரத்தம் கொடுப்பதற்கு முன்பே, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

நிலையற்ற மனித வாழ்க்கையில் யதார்த்தம்,
சாவை நோக்கி பயணிக்கும் தன் நிலைமை,
என அனைத்தும் ஒரே தருணத்தில் தாக்க
ஸ்தம்பித்து போனான் கார்த்திக்.

ஹோட்டல் அறைக்கு வந்து மறுநாள் அதிகாலை விமானத்தில் சென்னைக்கு திரும்புவதற்காக தன் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த போதுதான், தன்னை தாக்கியுள்ள உயிர்கொல்லி தன் மனைவி...........வயிற்றில் உள்ள குழந்தை இருவரையும் தாக்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.


ஊருக்குச் சென்றதும் நந்தினியை கைனக்காலஜிஸ்டிடம் அழைத்துச் சென்று, மருத்துவரிடம் ஏதாவது ஒரு காரணம் கூறி, நந்தினிக்கு முழுவதுமாய் ரத்த பரிசோதனை செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன், உடனே ஃபோனில் அப்பாயின்மெண்டும் வாங்கிவிட்டான்.


நினைவுகளிலிருந்து வெளிவந்த கார்த்திக், தன்னருகில் படுத்திருக்கும் தன் அன்பு மனைவியை மீண்டும் நோக்கினான்.
அவன் கண்களில் நீர் ததும்பி கசிய காத்திருந்தது.


இறப்பு யாருக்கோ என்ற
கேள்வி படுகையில்
செய்தியாக தோன்றுகிறது
அது தன்னையே நெருங்கும் போது
பயமும் வேதனையும்
முட்டி மோதுகின்றது;

கார்த்திக் படுக்கையிலிருந்து எழுந்து, அருகிலிருந்த மேஜையின் மேலிருந்த விளக்கை ஏற்றிவிட்டு, தன் டைரியில் எழுத ஆரம்பித்தான்...


ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய என்னால்
உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னையும் தான்...

டைரியை பீரோவில் பத்திரப்படுத்திவிட்டு கார்த்திக் படுக்கச் சென்றான்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....



[தொடரும்]

பகுதி - 5

பகுதி-6

July 15, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 3

பகுதி - 1

பகுதி - 2

கார்த்திக் தன் மேஜை மீதிருந்த கவரை மெதுவாக பிரித்தான்.

அதே சமயம் தனக்கு பின்னாலிருந்து
'க்ஹும்.."
என தொண்டையை செருமும் குரல் கேட்டு திரும்பினான்.

அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!!

ஒரு வாரம் கழித்து அவளை பாப்பதின் பரவசத்தையும், அவள் பிரிவு ஏற்படுத்திய தவிப்பையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், சிடு சிடு முகத்துடன்....

தன் கையிலிருந்த கவரை பிரித்தபடியே,

" என்ன இது?...." என்றான்.

இப்போது ஒரு வெட்க புன்னகை நந்தினியின் முகத்தில்,
நொடிக்கொருமுறை மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால்,

கவரினுள் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்தான் கார்த்திக்,

" என்ன பேப்பர் இது?"

"பிரிச்சுப் பாருங்க"

மெதுவாக பிரித்துப் பார்த்தான் கார்த்திக்.

உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
க.குமரேசன்
முன்னாள் பேரூராட்சி தலைவர்,
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.
என்ற முகவரியும், அதன் கீழ் பஸ் ரூட், ரெயில் ரூட், கார் ரூட் என எல்லா வழிதளங்களிலும் எவ்வாறு அந்த முகவரிக்கு சென்றடையலாம் என்று விளக்கமாக எழுதியிருந்தது.
' யார் அட்ரஸ் இது......எதுக்கு என்கிட்ட கொடுக்கிறா' என்ற குழப்பத்துடன்.......

"இது.....யார் அட்ரஸ்?" என்றான் கார்த்திக்.

" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"

" மாமனாரா???"

இப்போது நந்தினியின் முகம் முழுவதுமாக சிவந்தது.........கார்த்திக்கிற்கு எல்லாம் புரிந்தது.
ஆயிரம் காதல் அர்த்தங்கள் கொண்ட புன்னகையை மட்டுமே இருவராலும் அப்போது பரிமாற கொள்ள முடிந்தது.

மகள் ஆசைப்பட்ட கல்லூரி படிப்பை படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பிய நந்தினியின் அப்பா, காதலை வெளிப்படுத்தியவரின் விபரங்களை தன் மகள் மறைக்காமல் தன்னிடம் கூறியதும், 'காதல்' என்ற ஒற்றைச் சொல்லிற்கே எதிரி என்ற தொணியில் எதிர்க்காமல், மகள் கூறிய விபரங்களுடன் பையனை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தன் சம்மதத்தை மகளிடம் கூறி, முறைப்படி பெண்கேட்டு வரச்சொல்லியிருந்தார்.

இருவீட்டாரின் முழு விருப்பத்துடன் கார்த்திக் - நந்தினி திருமணம் விமரிசையாக நடந்தேறியது.
தன்னை விரும்பியவர், தனக்கும் பிடித்திருந்தவரையே தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த தன் அப்பாவின் பாசமழையில் திளைத்துப் போனாள் நந்தினி.


கண்ணுக்குள் வைத்து காக்கும் கணவன்,
கையில் வைத்து தாங்கும் மாமியார்
என நந்தினியின் மணவாழ்க்கை இனிதே தொடர்ந்தது.

ஆஃபீஸிலிருந்து கார்த்திக்கும் நந்தினியும் வீட்டுக்கு வந்ததும், நாள் முழுவதும் அலுவலகத்தில் நடந்ததை அபிநயத்துடன் நந்தினி தன் மாமியாரிடம் கூறுவாள், அவரும் தான் நாள் முழுக்க பார்த்த டீவி சீரியலிலிருந்து, பக்கத்து வீட்டு கதை வரைக்கும் அடுக்கடுக்காக மருமகளிடம் ஓப்பிப்பார்,இருவரும கலகலப்புடன் பேசிக்கொண்டே அடுப்படியில் இரவு உணவு தயாரிப்பதை மன நிறைவுடன் ரசித்தபடியே ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருப்பான் கார்த்திக்.


இந்த மாமியார் மருமகள் அரட்டை சில சமயங்களில் இரவு வெகுநேரம் வரை நீளும், முக்கியமாக சனிக்கிழமை இரவுகளில், மறுநாள் விடுமுறை என்ற காரணத்தால் வெகு நேரம் இரவில் ஊர் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்,

"அம்மா, நைட் ரொம்ப லேட் ஆச்சும்மா......இவ்வளவு நேரம் முழிச்சுட்டு இருந்தா உங்க உடம்புக்கு என்ன ஆகிறது, சீக்கிரம் படுத்துக்கோங்கமா" என்று கார்த்திக் அவர்களின் அரட்டையை முடிக்க தருணம் பார்ப்பான்.

" ப்ரவாயில்லபா கார்த்தி....நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே.........லேட்டா எழுந்திருச்சா போகுது.....!" என்பார் அவன் அம்மா.

இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.

"நந்தினி நீ தான் வாயைத் திறந்து அம்மாக்கு எடுத்து சொல்லக் கூடாதா? ராத்திரி பதினொரு மணி வரைக்கும் முழிச்சிட்டிருந்தா உடம்புக்கு ஆகாதுன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா?"

"நான் என்னங்க சொல்றது.......நாளிக்கு லீவுன்னுதானே நாங்க பேசிட்டிருக்கிறோம்...அதான் அத்தையே சொல்லிட்டாங்களே, லேட்டா எழுந்தா போகுதுன்னு.....அத்தை நீங்க சொல்லிடிருந்த கதையை சொல்லுங்க , அப்புறம் என்னாச்சு??"


வேண்டுமென்றே நந்தினி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள்.தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.

" சீக்கிரம் படுத்தா வயசான காலத்துல உடம்புக்கு நல்லதுன்னு சொன்னா.....உங்களுக்கு விளையாட்டா இருக்கா?" உள் தகிப்பில் கார்த்திக்கின் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

இப்படி குறும்பும் கறும்புமாக கார்த்திக்- நந்தினியின் இல்வாழ்க்கை இனிதே நகர்ந்தது.
தன் அன்னையை தாயைப் போல் நேசிக்கும் மனைவி, தன் விளையாட்டுத்தனமான வெகுளிப் பேச்சால் மனதை குளிர்விக்க, கார்த்திக் தன் வாழ்வே பூரணமானதாக உணர்ந்தான்.

நாட்கள் வேகமாக நகர
மாதங்கள் புரண்டோட
வருடமும் விரைந்து......
கார்த்திக்-நந்தினி தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியது.


இந்த இரண்டு வருட மணவாழ்க்கை கார்த்திக்கை பொதுவாழ்விலும் பெரிதும் மாற்றி இருந்தது.
தனக்கென ஒரு வட்டம் அமைத்து மற்றவரிடம் சகஜமாக பேசிப் பழக மறுக்கும் கார்த்திக்கிற்கு இப்போது நட்பு வட்டாரங்கள் அதிகமாயின.

திருப்திகரமான இல்லறம் கொடுக்கும் உத்வேகம் அவனது வேலை செய்யும் திறனையும் மேம்பட வைத்தது, பதவியில் பல உயர்வுகள், உயர்மட்ட நட்புகள், அடிக்கடி கம்பெனி விஷயமாக வெளியூர் பிரயாணங்கள், என்று கார்த்திக்கின் வாழ்க்கை புதிய கோணத்தில் பயணித்தது.
பொருளாதார நிலையிலும் பெரிதான முன்னேற்றம் அவன் வாழ்வில்.

"எல்லாம் என் மருமகள் வந்த நேரம்தான் என் புள்ள இவ்வளவும் சாதிச்சிருக்கிறான்" என்று நந்தினியின் மாமியார் தன் மருமகளை உச்சி முகர்ந்தார்.

எல்லாம் சீராக சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் வாழ்வில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை கார்த்திக்-நந்தினி உணர ஆரம்பித்தனர்.

வீட்டிலும், உறவுக்காரர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதுதான், மருத்துவரை அணுகி பரசோதத்தில், நந்தினி தாய்மை அடைய சில பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

நந்தினியால் இந்த குறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் , தன்னுள் சுக்கு நூறாக உடைந்துப்போனாள்.

மாமியாரும், கணவனும் எவ்வளவோ ஆறுதலும், உற்சாகமும் கொடுத்தும் , தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மருத்துவ சிகிச்சையை மனமுடைந்த நிலையில் தான் மேற்கொண்டாள் நந்தினி.

இந்த சமயத்தில் நந்தினியின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் சீரியஸான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட, ஊருக்குச் சென்ற நந்தினி, அப்பாவின் உடல் நிலை சிறிது சிறிதாக தேறின பின்பும், தன் அம்மாவிற்கு துணையாக அங்கேயே சிறிது காலம் தங்கிவிட ஆசைபட்டாள்.
அவளது மனநிலைக்கு இந்த இடமாறுதலும் நல்லது என கார்த்திக்கின் அம்மாவும் மருமகளுக்கு சப்போர்ட் செய்தாலும், கார்த்திக்கிற்கு ஏனோ சம்மதிக்க மனமேயில்லை.

உயிர் மீண்டு வந்திருக்கும் தன் அப்பாவுடன் இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்க கார்த்திக்கிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த நந்தினியின் மனம் தவித்தது.... .


மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?

உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?

உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?

அவரோ,
உயிர் தந்தார்,
உடல் தந்தார்,
கண் என காத்தார்,
கலைகள் பல தந்தார்,
கடமையில் சிறந்தார்-உறவானார்!

அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.

உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?


தன் அம்மாவின் வற்புறுத்தல், ஆசை மனைவியின் முகத்தில் கவலைகளின் ரேகை........கார்த்திக் அரைமனதாக நந்தினி அங்கு தங்கிட சம்மதித்தான்.

நந்தினியின் பிரிவு ஒருவித தனிமையுணர்வை கார்த்திக்கிடம் அதிகரித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வெறுமை அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த புதுவித மனநிலை அவனுள் செல்லரித்துக்கொண்டிருக்க, அலுவலக விஷயமாக கார்த்திக் ஹைதிரபாத் செல்ல வேண்டியிருந்தது.

ஹைதிரபாத்தில்..............கார்த்திக்..........


[தொடரும்]

பகுதி - 4

பகுதி - 5

பகுதி - 6

July 07, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்!!! - 2


மனதில் கொள்ளை ப்ரியம் நந்தினியின் மேல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்த தெரியாத கார்த்திக், தனது வழக்கமான சிடு மூஞ்சியுடன் அவளிடம்...

"நந்தினி, ஐ திங் ஐ அம் இன் லவ்......"

"அப்..படிங்...களா"

"ஆமாம்"

"வாழ்த்துக்களுங்க"

அப்பாவித்தனமாக அவள் தமிழில் ' வாழ்த்துக்கள்' என கூறியதும், உதட்டோரம் கார்த்திக்கிற்கு சிரிப்பொன்று மலர்ந்தது.

"தாங்க்ஸ்..."

"...."

" யாரை லவ் பண்றேன்னு கேட்க மாட்டியா?"

"யா........யாருங்க?"

"நீங்க.......தாங்க"

"...."

" ஐ லவ் யூ நந்தினி"

'ஐயோ.....' என முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள் நந்தினி.

இந்த ரியாக்ஷனை கார்த்திக் சற்றும் எதிர்பார்க்காததால் கொஞ்சம் பயந்துதான் போனான்.

பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,
இந்த பொண்ணு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகுறா??


"நந்தினி.....இப்ப எதுக்கு இப்படி அழுற"

"நீங்க.......இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல"

" கெட்ட வார்த்தையா??............எது.........எது கெட்ட வார்த்தை........நான் எப்போ சொன்னேன்?"

"இப்ப..........இப்ப........கொஞ்சம் முந்தி சொன்னீங்க"

"ஐ லவ் யூ ........கெட்ட வார்த்தையா??"

அந்த வார்த்தையை கேட்டதும் மறுபடியும், 'ஓ' வென அழுதாள் நந்தினி.

'என்னடா இது வம்பா போச்சு, பொண்ணு அழகாவும் இருக்கா, நல்ல பொண்ணாவும் இருக்கான்னு காதலைச் சொன்னா.......இப்படி அசடா இருப்பான்னு நினைக்கவே இல்லையே' என யோசித்த கார்த்திக்கால் 'ஜகா' வாங்கவும் அவனுள் ஆழமாக பதிந்த காதல் இடம் கொடுக்கவில்லை.

" எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில்.

பள்ளி படிப்பு முடித்து நாலு வருஷம் ஆச்சு,
பட்டணத்தில் கல்லூரி படிப்பும் படிச்சாச்சு,
பெரிய கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தாச்சு.....

இன்னுமா இந்த பொண்ணு இதை கெட்ட வார்த்தைன்னு சொல்லிட்டு இருக்கா??

இவ நடிக்கிறாளா...............இல்ல நிஜம்மாவே வெகுளியான்னு கார்த்திக்கால் புரிந்துக்கொள்ள முடியவிலலை.

எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!

"இங்க பாரு நந்தினி......எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..........ரொம்ப பிடிச்சிருக்கு......உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"

சற்று அதிகார தொனியில் கார்த்திக் பேசவும் நந்தினி தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு தெளிவாக பேச முயன்றாள்,

" நீங்க இப்படி எல்லாம் பொண்ணுங்க கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு ஆபீஸ்ல எல்லாரும் சொல்லிக்கிட்டாங்க, நானும் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன் உங்க மேல.........நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல"

"ம்ம்...........இது நாள் வரை என் மனசுல ......உன்னை போல யாரும் இப்படி பதிந்ததில்ல நந்தினி. எந்த பொண்ணுகிட்டவும் வலியப்போய் நான் பேசினதுமில்ல..........ஆனா உன்னை மட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு , அவ்வளவு தான்"

மீண்டும் அழ தொடங்கினாள் நந்தினி.

"இப்போ எதுக்கு அழுகிற??.......நான் தான் அந்த கெட்ட வார்த்தைய மறுபடியும் சொல்லலியே"

"இந்த காதல் கீதல் ன்னு........ஏதாவது என் அப்பாவுக்கு தெரிஞ்சா........என்னை வெட்டிப்போடக் கூடத் தயங்க மாட்டார். நான் எப்போவும் அப்பா பிள்ளை............என் அப்பா சொல்லை தட்டி நடக்க மாட்டேன்.....நான் பட்டணத்துல போய் படிக்க சொந்தக்காரக எல்லாம் தடுத்தபோ கூட என் அப்பா என் மேல நம்பிக்கையோட படிக்க அனுபிச்சாங்க, கம்பியூட்டர் கம்பெனில வேலைக்கு போற பொம்பளை பிள்ளைக அங்கே பக்கத்து பக்கதுல ஆம்பிளைங்க கூட ராத்திரி பகல் னு நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் வேலை செய்யறப்போ, காதலிச்சு தானே தன் வாழ்க்கைய தீர்மாணிச்சுருமாம்ண்ணே, அதனால நம்ம நந்தினிய படிக்க வைச்சதோட நிறுத்திடுங்கண்ணே...........வேலைக்கெல்லாம் அனுப்பாதீகன்னு எங்க சித்தப்பா எவ்வளவோ சொல்லியும், இப்போ 1 வருஷம் வேலைக்கும் போமா உன் இஷ்டபடின்னு அனுமதிச்சிருக்காங்க.......லவ்வு ஜவ்வுன்னு டாவு பண்ற ஆளு இல்ல நீங்கன்னு எல்லாரும் சொன்னதால தான் உங்க கிட்ட மட்டும் பேசினேன், நீங்க ..........இப்படி சொல்லிட்டீங்களே"

மீண்டும் விசும்பல்,


பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????
கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு கார்த்திக் பேச தொடங்கினான்,

"நந்தினி......நான் உன்னை மனசார விரும்புறேன், உனக்கா என் மேல எப்போ காதல் வருதோ அப்போ என்கிட்ட சொல்லு, அதுவரைக்கும் நான் காத்திட்டிருப்பேன்"
என்று தெளிவாக கூறினான் கார்த்திக்.

நந்தினிக்கு தன் குடும்பத்தின் மேல் தான் பயம்.........தன் மீது வெறுப்பு இல்லை என அவன் மனதில் உறுதியாக உணர்ந்தான்.

நந்தினி பதில் ஏதும் சொல்லாது சிலைத்துப் போய் நின்றாள்.........சில நிமிடங்கள் ஆகியும் நந்தினியின் மெளனம் கலையவில்லை.

அந்த மெளனத்தின் அர்த்தம்??

அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!

எதுவும் பேசாமல் நந்தினி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதன்பின் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் அலுவலகத்தில் முடிந்தவரை கார்த்திக்கை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தாள் நந்தினி.


சிடுமூஞ்சி சொன்ன காதலில்
சின்ன பொண்ணு குழம்பி போயிருக்கு
சீக்கிரம் சரி என்று தலையாட்டுவது கஷ்டம் தான்
சிறிது சிறிதாக சரி ஆகிடுவா
என்ற நம்பிக்கையில் கார்த்திக்கும் அவளை கண்டுக்கொள்ளாமல் இருந்தான்.

சனி ஞாயிறு வார விடுமுறை முடிந்து திங்கள் கிழமை அலுவலகம் வந்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சி.......நந்தினி அலுவலகம் வரவில்லை..

நந்தினி ஏன் வேலைக்கு வரல........??? டீமில் விசாரித்ததில், வாரயிறுதிக்காக சொந்த ஊருக்குச் சென்ற நந்தினி இன்னும் சென்னைக்குத் திரும்பவில்லை என் தெரிந்துக்கொண்டான் கார்த்திக்.

நந்தினி இல்லாத ஒவ்வொருநாளும் ஒரு யுகமாக தெரிந்தது கார்த்திக்கிற்கு,



அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேனோ தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!




நந்தினியின் வீட்டு தொலைபேசி எண் அவள் டீம்மேட் பெண்களிடம் கேட்டு அவளை தொடர்பு கொள்வது ஒன்றும் பெரிய காரியமல்ல, எனினும், அவளது குடும்ப சூழ்நிலை தெரியாமல் அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை சங்கடபடுத்த வேண்டாம் என ஒரு வாரம் அவளுக்காக தவிப்புடன் காத்திருந்தான் கார்த்திக்.

இனிமேலும் அவளிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க முடியாது என உணர்ந்தவனாய், எப்படியும் அவளுக்கு ஃபோன் பண்ணியே தீர்வது என்ற முடிவுடன் தன் இருக்கைக்கு வந்தவன், மேஜையின் மீதிருந்த கவரைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துப்போனான்.........

[தொடரும்]

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6