April 29, 2009

உன்னிடத்தில்......சரணடைந்தேன்!!! - 3

பகுதி - 1

பகுதி - 2

சரஸ்வதி விஷமருந்திவிட்டாள் என்று அந்த முதியவர் கூறியதும், கண்ணீருடன் ஸ்தம்பித்து நின்ற டாக்டர் தீபா,
தன் கையிலுள்ள பிஸ்கட் பாக்கெட்டையும், தன்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைக்கும் சரஸ்வதியின் குழந்தையை பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைக்க.............அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.

அந்த வயதான பெண்மனி, தன் கண்களை துடைத்தபடியே உடைந்த குரலில் .......மீண்டும் பேச தொடங்கினாள்,

"அந்த புள்ள சரஸு மருந்து குடிச்சு இரண்டு நாள் ஆச்சுமா, பெரிய ஆஸ்பத்திரில தான்மா சேத்திருக்கு........உசிர காப்பாத்திட்டாக, ஆனா கொத்துயிரும் கொலையுருமா கிடைக்குதுமா ஆஸ்பத்திரில,அதான் அவ பையனை நான் பாத்துக்கிறேன்" என்றார்.

சரஸ்வதி உயிரோடு தான் இருக்கிறாள் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சினால் தீபாவின் நெஞ்சு ஏறி இறங்கியது. சரஸ்வதியின் பையனை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவரது கைகளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு,

"பையனுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கி கொடுங்க பாட்டி, நான் சரஸ்வதியை ஹாஸ்பிட்டல்ல போய் பார்க்கிறேன்" என்று கூறி, வேக வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள் தீபா.

அங்கு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பிரிவினை கண்டறிந்து,ட்யூட்டில் இருந்த டாக்டரிடம் சரஸ்வதியின் உடல் நிலையினை பற்றி கேட்டறிந்த தீபா, சரஸ்வதி இருந்த அறைக்கு சென்றாள்.

கழுத்துவரை போர்த்தப்பட்டு, தலை கலைந்து, முகம் கறுத்துப்போய்............பரிதாபமாக படுத்திருந்த சரஸ்வதியை பார்த்ததும், தான் ஒரு டாக்டர் என்பதையும் மீறி அழுகை வந்தது தீபாவிற்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், சரஸ்வதியின் படுக்கையின் அருகில் அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து கண்திறந்த சரஸு, டாக்டர் தீபாவை பார்த்ததும், விசும்பலுடன் அழ துவங்கினாள்.
தீபா படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, சரஸ்வதியின் கைகளை தடவியபடி ஆறுதல் கூறி,சரஸ்வதி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சென்றதின் காரணம் கேட்டாள்.


தான் மேற்கொண்டு படிப்பதையோ, வேலைக்கு செல்வதையோ விரும்பாத தன் கணவன், தன்னை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல், காப்பியில் விஷத்தை கலந்து குடிக்க வற்புறுத்தி,

மறுத்த சரஸ்வதியிடம் அவளது மூன்று வயது மகனுக்கு அவள் கண் எதிரிலேயே மண்ணென்னைய் ஊற்றி கொளுத்த போவதாக மிரட்டியதும்,குடி போதையில் தன் கணவன் ஏடாகூடாமாக ஏதும் செய்து விட கூடாது என்று, மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவனது மிரட்டலுக்கு பணிந்து போனதையும்.......அழுகையின் நடுவில் திக்கி தினறி அடிக்குரலில் சொல்லி முடித்தாள் சரஸ்வதி.

இத்தனை கொடூரகாரனா சரஸ்வதியின் கணவன்???? கோபத்தில் ரத்தம் கொதித்தது தீபாவிற்கு.

அங்கு ட்யூட்டில் இருந்த நர்ஸிடம் , சரஸ்வதியை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி கூறிவிட்டு, உடனடியாக கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள் தீபா. அவனை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டறிந்து விட்டு, கமீஷ்னர் அலுவலக வளாகத்திலிருந்த கார்த்திக்கின் அலுவலக அறைக்கு சென்றாள் தீபா.

வெளியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபளிடம் தன் வரவை தெரிவித்து, கார்த்திக்கின் அனுமதி பெற்று , அவனது அறையினுள் பட படப்புடன் நுழைந்தாள் தீபா,

"ஹாய் .....டாக்டர் மேடம் ...வாங்க வாங்க"

"கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"

"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"

"ச்சீ விளையாடதே கார்த்திக்...........ஐ அம் டாம்ன் சீரியஸ்"

"ஸாரி ஸாரி.........கூல் டவுன் தீபா........ஏன் இவ்வளவு டென்ஷன்.....இந்தா இந்த தண்ணி கொஞ்சம் குடி"

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தீபா, ஆஸ்பத்திரியில் சரஸ்வதி தன்னிடம் கூறியதை எல்லாம் அவனிடம் விரிவாக சொன்னாள்.

"டாமிட்.........சரியான ஆயோக்கியனா இருப்பான் போலிருக்குதே இந்த சரஸ்வதியோட புருஷன், சரஸ்வதி கொடுக்கிற வாக்குமூலத்தை வைச்சு அவனை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிடலாம்............கம் தீபா..........லெட்ஸ் ஹரி அப்"

இருவரும் விரைந்து , சரஸ்வதியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்றனர்.

சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருந்த சலைன் பாக்கட்டை பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள்.

டாக்டர் தீபாவுடன் போலீஸ் சீருடையில் வந்திருந்த கார்த்திக்கை கண்டதும், ஏதும் புரியாமல் விழித்தாள் சரஸ்வதி.

"சரஸ்வதி......நான் சொன்னேன்ல உன் படிப்புக்காக உதவி பண்ற என்னோட நண்பன்னு......அது இவர்தான், அஸிஸ்டண்ட் கமிஷனர் கார்த்திக், ............என்கிட்ட சொன்னதையெல்லாம் இப்போ......வாக்குமூலமா இவர்கிட்ட சொல்லு, மத்ததை இவர் பார்த்துப்பார்"

"................."

"பயப்படாம......நடந்தது என்னன்னு என்கிட்ட சொல்லுங்கமா" என்று கூறிய கார்த்திக், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபளிடம் வாக்குமூலம் எழுதி கொள்ளுமாறு சைகை காட்டினான்.

மிரண்டு போயிருந்த சரஸ்வதி, தன் நாவை ஈரப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினாள்,

"எனக்கு..........ரொம்ப நாளாவே வயித்து வலி இருந்துச்சு, தாங்கிக்க முடியாமத்தான்........விஷத்தை குடிச்சுட்டேன்........வயித்துல இருந்த புள்ள செத்துப்போச்சு........என்னைய மட்டும் காப்பாத்திட்டாங்களே" என்று ஓ வென அழுதாள் சரஸ்வதி.

சரஸ்வதியின் இந்த பேச்சு மாற்றம்,..... அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தர, வெறுப்போடு ஒரு பார்வை சரஸ்வதியை பார்த்துவிட்டு, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் தீபா.

வராண்டா தூணில் சாய்ந்தபடி நின்றிருந்த தீபாவிடம் வந்த கார்த்திக்,

"இது.......இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா..........."

"ச்சே..........எப்படி ........எப்படி கார்த்திக்.....அப்படியே ப்ளேட்டை மாத்தி போட்டுட்டா அந்த பொண்ணு??"

"நோ டென்ஷன் ப்ளீஸ்...........போலீஸ்னதும் சரஸ்வதி பயந்துட்டா......"

"ஏன் இப்படி இருக்காங்க..........."

"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"

"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.

"தீபா.........காம் டவுண் ..........இதை வேற மாதிரிதான் டீல் பண்ணனும்......ஸோ டோண்ட் வொர்ரி"

"வேற மாதிரின்னா.............என்ன பண்ணப்போறே கார்த்திக்?"

"பொறுத்திருந்து பாருங்க டாக்டரம்மா......."

அந்த டென்ஷனிலும், கார்த்திக்கின் கண்சிமிட்டல் தீபாவின் முகத்தில் லேசான புன்னகையை படர்வித்தது!

அவளது மெல்லிய புன்னகையை தன் அடிமனதில் படம் பிடித்து பதித்துக் கொண்டிருந்த கார்த்திக்............அவனும் தீபாவும் நின்றிருந்த வராண்டாவின் மறுமுனையில் ஒரு உருவம் தூணின் பின்புறமாக மறைந்திருந்து இவர்களை கவனிப்பதை கண்டு சுதாரித்துக்கொண்டான்,

உடனடியாக கார்த்திக்............

[தொடரும்]

பகுதி - 4

April 23, 2009

உன்னிடத்தில்........சரணடைந்தேன்!!! - 2

உன்னிடத்தில்...சரணடைந்தேன்!!!- 1

ரோட்டில் சரஸ்வதி குழந்தையுடன் ஓடுவதை கண்ட டாக்டர் தீபா காரிலிருந்து இறங்க முற்படுவதை கவனித்த அவளது கார் ட்ரைவர்,

"அம்மா.........நீங்க இறங்காதீங்க........இந்த ஊர்ல இப்படி தெரு சண்டை எல்லாம் சாதாரணம்......அதுவும் இந்த ஏரியா ஒருமாதிரிமா, நீங்க ஒரு டாக்டர்.......தெரு சண்டையை எல்லாம் சமரசம் பண்ண இறங்கனுமாமா......."

ட்ரைவர் இப்படி சொன்னதும், ஒரு நிமிடம் தயங்கினாள் தீபா,காரிலிருந்து அவள் இறங்குமுன், அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்த சிலர், சரஸ்வதியின் கணவரை பிடித்து நிறுத்த முயன்று கொண்டிருந்தனர்.அப்போது, அவனை பின் தொடர்ந்து அங்கு வந்த சேர்ந்த அவனது நண்பன், முரண்டுக்கொண்டிருந்த அவனிடம்,

"ஏம்ல உன் புத்தி இப்படி போவுது.........அந்த புள்ள என் தங்கச்சி மாதிரிடா........அத போய் இப்படி அசிங்கமா பேசுதியே......."

இப்போது சரஸ்வதியின் கணவனின் கோபம் முழுவதும், அந்த நண்பனின் மேல் திரும்ப, அவனை தாக்க முற்பட்டான்.உடனே கூடியிருந்த ஆண்கள் சிலர் அவனை தடுத்து, சண்டையை விலக்கி,சரஸ்வதியை அங்கிருந்த பெண்களின் பாதுகாப்பில் வீட்டிற்கு அனுப்பினர்.

அனைத்தையும் காரிலிருந்தபடி கவனித்துக்கொண்டிருந்த தீபா.............வீட்டிற்கு வந்ததும், மனதில் ஏதோ அழுத்துவதாகவே உணர்ந்தாள்.

'என் கண் முன்னாடியே அந்த பொண்ணு தலைதெறிக்க ரோட்ல ஓடினாளே.......அவளை காப்பாத்த நான் ஏன் காரில் இருந்து இறங்கல??........படிச்சவன்ற பெருமையா??.....டாக்டர்ன்ற அந்தஸ்தா?? .........எது தடுத்தது என்னை???'

மனசுக்குள்ளே யோசித்து யோசித்து குற்ற உணர்வோடு புழுங்கிக் கொண்டிருந்தாள் தீபா.

அந்த நேரம் அவளது செல்ஃபோன் அழைக்க..........கார்த்திக்கின் நம்பர் பளிச்சிட்டது,

கார்த்திக்கிடம் ஃபோனில் பேசியபோது, அன்று ரோட்டில் அவள் பார்த்த சம்பவத்தை கூறி, தன் மனநிலையையும் கூறினாள். அவளுக்கு ஆறுதல் கூறிய கார்த்திக், அந்த பெண் சரஸ்வதியின் பத்தாம் வகுப்பு சான்றிதழை தன்னிடம் தந்தால், கல்வி அதிகாரிகளிடன் பேசி, எந்த முறையில் மேற்கொண்டு அவள் படிப்பை தொடரலாம் என்பதை கேட்டறிந்து சொல்வதாக கூறினான்.

கார்த்திக்கிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, தீபாவிற்கு இதமாக இருந்தது.

அவன் சொன்னதுபோலவே, அவனிடம் சரஸ்வதியின் சான்றிதழ்களை கொடுத்து உதவி கோரினாள் தீபா. அவனும் அதற்கான முயற்சியில் இறங்கினான்.
சரஸ்வதி ஆஸ்பத்ரிக்கு வந்த போது, தனது நண்பன் கார்த்திக், சரஸ்வதியின் படிப்பிற்கு உதவி செய்யவிருப்பதை அவளிடம் தெரிவித்தாள் தீபா.இருவரும் தனது மேற்படிப்பிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்றரிந்த சரஸ்வதி, தன் கணவனின் கொடுமைகளுக்கு நடுவிலும், தைரியமாக , உறுதியுடன் இருந்தாள்.

அன்று ரோட்டில் சரஸ்வதியை அந்த நிலையில் பார்த்தும், தான் உதவி செய்ய முடியாமல் போனதே என்ற குற்ற உணர்வினால்.........தீபா சரஸ்வதியின் எதிர்காலத்திற்கு எப்படியும் ஏதாவது ஒருவகையில் உதவி செய்தே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.அடிக்கடி ஃபோனிலும், வாரயிறுதிகளில் நேரிலும் , கார்த்திக்கும் தீபாவும் சந்தித்து நிறைய பேசிக்கொண்டார்கள். பள்ளி படிப்பிற்கு பின், கார்த்திக்கின் அப்பாவிற்கு வேலை இடமாற்றமானதால், தாங்கள் சென்னையை விட்டு திருச்சி சென்றுவிட்ட பிறகு, ஸ்கூல் டேய்ஸ் நண்பர்களுடன் தொடர்பே அற்று போனது என்றும் கூறினான் கார்த்திக்.

நீண்ட நாட்களுக்கு பின் , ஒரு நல்ல நட்பு கிடைத்தது போன்ற உணர்வு தீபாவிற்கு உற்சாகமளித்தது.

ஒரு நாள் தீபாவின் வீட்டிற்கு டின்னருக்கு கார்த்திக் வந்திருந்தபோது, பேச்சின் நடுவே, கார்த்திக் தீபாவிடம்.........

"தீபா..........கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே...........நீ ஸ்கூல் படிக்கிறப்போவே நம்ம காலனில பாப்புளர் ஃபிகர், நான் நீன்னு அவனவன் உனக்கு லெட்டர் கொடுக்கவே போட்டி போட்டுவாங்க..........இன்ஃபாக்ட் நானே உனக்கு லெட்டரெல்லாம் கொடுத்திருக்கிறேன்......ஞாபகமிருக்கா??"

"ம்ம்.........ஞாபகமிருக்கு கார்த்தி......."

"அப்பேர்பட்ட அழகு தேவதை நீ.........அழகு மட்டுமில்ல......அறிவு, அமைதி, அந்தஸ்துன்னு எல்லாமே உனக்கு இருந்தும், ஏன் இன்னும் கல்யாணம் ஆகல............இல்ல கல்யாணம் பண்ணிக்கல??"

"............."

"அச்சோ..........ஸாரி தீபா........உன் பெர்ஸனல் விஷயத்துல தலையிட்டுட்டேன்ல.........ஸாரி......."

"ச்ச ச்ச.......அதெல்லாம் ஒன்னுமில்ல கார்த்தி......."

சிறிது நேர மெளனத்திற்கு பின்.........

மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது தனது ஸீனியரை அவள் காதலித்ததையும், அவனது படிப்பிற்கு பின் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் நிச்சயமானதையும், வெளிநாட்டிற்கு அவன் மேற்படிப்பிற்கு சென்று திரும்பியதும் நடக்க இருந்த திருமணம்........வெளிநாட்டு மோகம் மற்றும் அங்குள்ள தோழியோடு ஏற்பட்ட காதல் காரணமாக அவளது காதலனாலயே நிறுத்தப்பட்டதையும், சுருக்கமாக கூறி முடித்து தன் விழியோரம் பூத்த நீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள் தீபா.

அவளது மனநிலையை உணர்ந்து கொண்ட கார்த்திக், பேச்சை திசை திருப்பி..........கிண்டலும் கேலியுமாக பேசி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.

பின் தீபாவின் பாட்டி தயார் செய்திருந்த டின்னரை சிரித்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, கார்த்திக் தன் வீடு திரும்ப தனது காருக்கு சென்றான், அவனை வாசல் வரை வந்து வழியனுப்ப தீபாவும் வெளியில் வந்தாள்.

கார்த்திக் காரில் ஏறும் முன் தீபாவிடம்..........



"தீபா.............ஒரு விஷயம் சொல்லனும் உன்கிட்ட..........இப்ப சொல்லவா?"

"சொல்லு கார்த்தி........."

"தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"

"கார்த்தி...........நீ .........."

"யெஸ் தீபா.........ஐ லைக் டூ மேரி யூ.........வில் யூ??"

"............."

"யோசிச்சு பதில் சொல்லு............பதில் எதுவா இருந்தாலும் இந்த நண்பனோட நட்பு மட்டும் மாறாது தீபா"

பதிலளிக்காது வியப்புடன் விழித்துக்கொண்டிருந்த தீபாவிற்கு கையசைத்துவிட்டு,தனது காரில் சென்றான் கார்த்திக்.

அதன்பின் வந்த நாட்களில்,அம்பாசமுத்திரத்தில் நடந்த மெடிக்கல் காம்பிற்கு ஒருவார காலம் சென்றுவிட்டதால் , தீபா மிகவும் பிஸியாக இருந்தாள். மெடிக்கல் காம்ப் முடிந்து தனது அறைக்கு வந்ததும், நர்ஸிடம் தன்னை தேடி சரஸ்வதி வந்தாளா என விசாரித்தாள். அவள் வரவில்லை என அறிந்ததும், தானே சென்று சரஸ்வதியை அவளது வீட்டில் சந்திப்பது என்ற முடிவுடன், நர்ஸிடம் அவளது விலாசத்தை பெற்றுக்கொண்டு சரஸ்வதி குடியிருக்கும் பகுதிக்கு சென்றாள் தீபா.

ட்ரைவரிடம் காரை மெயின் ரோட்டில் நிறுத்த சொல்லிவிட்டு, சரஸ்வதியின் வீடு இருக்கும் குறுகிய சந்துக்குள் நுழைந்த தீபா, சிறிது தூரம் சென்றதும், ஒரு வீட்டின் முன்வாசலில் உட்கார்ந்திருந்த வயதான பாட்டியின் மடியில் சரஸ்வதியின் மகன் உட்கார்ந்திருப்பதை கண்டதும்,

"ஹே குட்டி........எப்படிடா இருக்க??" என்று குழந்தையின் கன்னம் வருடினாள்.

குழந்தை தீபாவை அடையாளம் கண்டுக்கொண்டு , சிரித்தது.

முடமுடக்கும் காட்டன் புடவையில், தீர்க்கமான அழகுடன், இந்த தெருவிற்கு வந்திருக்கும் இளம்பெண் யார்?? என்று தீபாவை பார்த்து வியந்தபடி நெற்றியை சுருக்கிய அந்த பாட்டியிடம் தீபா....


"பாட்டி இது சரஸ்வதி பையன் தானே.........நான் அவளைதான் பார்க்க வந்திருக்கிறேன்.......அவ வீடு எது??"

"ஐயோ.........." என்று கதறிய அந்த மூதாட்டி,

"அந்த புள்ள சரஸ்வதி மருந்து குடிச்சுடுச்சுமா..........இந்த பச்ச புள்ளைய கூட நினைக்காம........பாவி மவ.........இப்படி பண்ணிட்டா......."

அதிர்ச்சியில் முகம் இரத்த சிவப்பானது தீபாவிற்கு,
அடிவயிறு புரட்டி கொண்டு வந்தது,
ஏதோ ஒருவித திகிலும் கலவரமும் ஒருசேர
தீபா பேச்சற்று விக்கித்து நின்றாள்......!

'ஐய்யோ........கடவுளே..........கருவை கலைக்க வந்த பொண்ணுக்கிட்ட , படிக்க வைக்கிறேன்னு ஆசை காட்டி, நானே அவளை கொன்னுட்டேனே'

தீபாவின் கண்களில் நீர் கசிந்தது.......

[தொடரும்]

பகுதி - 3

April 20, 2009

உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 1



சென்னையிலுள்ள பிரபல மருத்துவரின் ஒரே மகளான டாக்டர் தீபா, அரசாங்க மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சியாகி, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவதற்கான அனுமதிப் பெற்றாள்.

தனது க்ளினிக்கில் பணிபுரியாமல், வெளியூரில் சென்று மகள் பணிபுரிய விரும்புவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மகள் தீபாவிற்கு இந்த இடமாறுதல் மன ஆறுதலை தரும் என்ற நம்பிக்கையில், தீபாவின் அப்பா மகளின் முடிவிற்கு சம்மதித்தார்.

திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்.

நெல்லை ஹைகிரவுண்ட் ஜி.ஹெச்சில் தன் முதல் நாள் பணியினை தொடங்கினாள் தீபா.

காலை பத்து மணியளவில், மகப்பேறு பிரிவில் அவுட் பேஷண்ட்ஸை ஒவ்வொருவராக அவள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, 20 வயதிற்குள் மதிக்க தக்க ஓர் இளம்பெண் தனது மூன்று வயது மகனுடன் அறையினுள் வந்தாள். தீபா அவளிடம்.......

"சொல்லுங்கம்மா.......உங்க பேர் என்ன?"

"ச....சரஸ்வதி"

"உடம்புக்கு என்ன???"

"எனக்கு.........அபார்ஷன் பண்ணனும் டாக்டர்....."

"எத்தனை மாசம் இப்போ....."

"இரண்டு...."

"ஏன்மா........இந்த குழந்தை வேணாம்னு கலைக்க சொல்ற"

பதில் சொல்லவில்லை சரஸ்வதி, மாறாக சிறு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள்.

"ஆழாதேமா.........என்ன காரணம்னு சொல்லு என்கிட்ட"

"டாக்டரம்மா......இந்த குழந்தை வேணாம்......கலைச்சிருங்க....."

"அதான் ஏன்னு கேட்கிறேன்.......உன் முத குழந்தைக்கு ரெண்டு அல்லது மூணு வயசு இருக்குமா இப்போ?......அப்புறம் ஏன் இரண்டாவது குழந்தை வேணாம்னு சொல்ற"

"என்....என் வீட்டுக்காரர் இந்த குழந்தையை அவரோடதில்லைன்னு சந்தேகப்படுறார்"

"சந்தேகப்படுறாரா???...............இது அவர் குழந்தைதானே?"

"அய்யோ......டாக்ட்டரம்மா......சத்தியமா இது அவர் குழந்தைதாம்மா, ஆனா அந்த மனுஷன் தான் என்னையும் அவரோட கூட்டாளியையும் சேர்த்து வைச்சு அசிங்கமா பேசி..........தினத்திக்கும் அடிக்கிறார்மா"

இப்போது சரஸ்வதியின் அழுகை அதிகரித்தது.

அவளை கூர்ந்து நோக்கினாள் தீபா.......நல்ல படித்த , வசதியான குடும்பத்து பெண்ணிற்கு, ஏழை பெண்ணாக மாறுவேஷம் போட்டது போன்று ஒரு தோற்றம் அவளிடம்.

சரஸ்வதியின் முகத்தில் ஒரு வெகுளித்தனம்,
அழகான வட்ட முக அமைப்பு,
மினுமினுப்பான தங்க நிறம்...ஏழ்மையினால் மங்கியிருந்தது,
அவளது நூல் புடவையையும், வெற்று கழுத்தையும் மீறி அவளது அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வண்ணமிருந்தது.

"உன் புருஷன் அடிக்கிறார்னா........நீ உன் அப்பா அம்மாகிட்ட சொல்லு, அவங்க சொல்லியும் கேட்கலீனா......குழந்தை பிறக்கிற வரைக்கும் உன் அப்பா அம்மா வீட்ல இரு, இப்படி அவசரப்பட்டு கர்பத்தை கலைக்க கூடாதுமா"

டாக்டர் தீபா ............அப்பா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை கூறவும், "ஓ!!" வென தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் சரஸ்வதி....

பதற்றதுடன் தீபா அவளிடம் என்னவென்று விசாரிக்க, அழுகையினுடனே பேச ஆரம்பித்தாள் சரஸ்வதி.....


"அப்பா அம்மா பேச்சை கேட்காம......பதினொன்னாங் க்ளாஸ் படிக்கிறப்போ, இந்த ஆட்டோகாரரோட ஓடி வந்துட்டேன்......எல்லாம் வயசு கோளாறுமா........என்னைய என் வீட்ல தலைமூழ்கிட்டாங்க......இப்போ நாதி அத்து போய் இந்த குடிகார பயலோட கொச்சையான பேச்சையும்,ஏச்சையும் கேட்டுக்கிட்டு, அடியும் வாங்கிக்கிட்டு..........நான் பெத்த இந்த பையனுக்காக உசிரோட இருக்கேன்"

அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்திய தீபா, அவளுக்கு ஆறுதல் கூறியதோடு நிறுத்தாமல், அவளது பத்தாம் வகுப்பு சான்றிதளை தன்னிடம் தந்தால், சரஸ்வதி பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்ச்சை எழுத உதவி செய்வதாகவும்,பின் தட்டச்சு படித்து ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம், புருஷனுக்கும் உறுதுணையாக இருந்து, இருவரும் நல்ல நிலைமைக்கு வரலாம் என்று அறிவுரை கூறினாள்.

தன் கரம் கூப்பி தீபாவுக்கு நன்றி கூறிய சரஸ்வதி, முகத்தில் ஒரு தெளிவுடன் அவ்வறையைவிட்டு வெளியேறினாள்.

இரண்டு நாள் கழித்து , முகத்திலும் கையிலும் சிறு சிறு காயங்களுடன் தீபாவை சந்திக்க வந்தாள் சரஸ்வதி.

தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை தேடியபோது, தான் தொடர்ந்து படிக்க போவது அறிந்து, தன்னை தன் கணவன் அடித்ததாகவும், எப்படியோ அவனுக்கு தெரியாமல் பரணிலிருந்த சான்றிதழை எடுத்து வந்ததாகவும் கூறி, தன் சான்றிதழ்களை தீபாவிடம் கொடுத்தாள் சரஸ்வதி.

சரஸ்வதியின் கண்களில் , எப்படியும் மேற்கொண்டு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் இருப்பதை தீபாவால் உணர முடிந்தது.

இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.

அதன்பின் டாக்டர் தீபா, ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு பெண்ணிற்கு சிசேரியன் முறையில் டெலிவரி செய்துவிட்டு, தனது அறைக்கு திரும்பியபோது...........எதேச்சையாக வராண்டாவில் தன் எதிரில் வந்த நபர் மீது மோதிக்கொண்டாள்.
தலை நிமிர்ந்த தீபா, தான் மோதியது ஒரு காவல் துறை அதிகாரியின் மேல் என்பதை அவரது சீருடையின் மூலம் அறிந்துக்கொண்டு,

"ஸாரி........ஸாரி சார்" என்றாள்.

"இட்ஸ் ஓகே...." என்று அவர் பதலளித்ததும், தீபா அவரை கடந்து சென்றாள்.

இரண்டு அடிதான் அவள் எடுத்து வைத்திருப்பாள், திடீரென "தீபா........" என்று ஒருமையில் தன் பெயரை யாரோ மிக அருகாமையில் அழைத்ததும், நின்று திரும்பிய தீபா, அவள் மோதிய் அந்த போலீஸ்காரர், தன் போலீஸ் தொப்பியை கழற்றிவிட்டு சிரித்த முகத்துடன் தன்னை நோக்கி வருவதை குழப்பத்துடன் பார்த்தாள்.

"தீபா............என்னை யார்ன்னு தெரியுதா??"

"............"

" தீபா............நான் கார்த்திக்.............கார்த்திக் குமார், +2 படிக்கிறப்போ உன் கூட கெமிஸ்ட்ரி டியூஷன் படிச்சேனே.........ஞாபகமிருக்கா??"

"ஏ..........கார்த்தி............நீ.........நீயா...........சட்டுன்னு இந்த கெட்டப்ல உன்னை அடையாளமே தெரில"

"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.

"ஹையோ.........ஸோ ஸாரி..........ஐ.பி.எஸ் சார்............தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க" என்று பதிலுக்கு அவளும் சிரிப்புடன் பதிலளித்தாள்.

"ச்சே.....ச்சே......எதுக்கு ஸாரி எல்லாம் கேட்கிறீங்க டாக்டர் மேடம்" என்று கண்சிமிட்டியவன்,

"நாம மீட் பண்ணி ஒரு 6 அல்லது 7 வருஷம் இருக்குமா??......ஸ்கூல் டேய்ஸ்ல ரோட் ஸைட் ரோமியோ கெட்டப்ல பார்த்த ஒருத்தனை, போலீஸ் யூனிஃபார்மல இப்போ பார்த்தா நிச்சயம் அடையாளம் தெரியாது............"

"ஐ.பி.எஸ்...........படிச்சிருந்தாலும்........இன்னும் உன்னோட அந்த குறும்பு பேச்சும், சிரிப்பும் மாறவே இல்ல கார்த்தி"

பின் இருவரது பேச்சும் தங்கள் தொழில் சம்பந்தமாக சென்றது, ஒரு கொலை கேஸ் விஷயமாக, இன்வெஸ்டிகேஷனுக்காக தான் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினான் கார்த்திக்.

இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.

அன்று சாயந்திரம் ஹாஸ்ப்பிட்டல் ட்யூட்டி முடிந்து தனது காரில் டாக்டர் தீபா வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்..........ஒரு வளைவில் கார் திரும்பும் போது, எதிரில் கையில் சிறு குழந்தையுடன் ஒரு பெண் கதறிக்கொண்டு ரோட்டை வேகமாக க்ராஸ் செய்ய, தீபாவின் கார் ட்ரைவர் சடன் ப்ரேக் போட்டார், தீபா அதிர்ச்சியுடன் அந்த பெண்ணை கூர்ந்து நோக்கினாள்,

'இது........இது.........சரஸ்வதிதானே' இவ ஏன் இப்படி ஓடுறா ரோட்ல............தீபா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளை துரத்திக்கொண்டு கையில் ஒரு பெரிய கட்டையுடன் ஒரு ஆள் சந்திலிருந்து பின்னால் ஓடி வந்தான், அது அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று நொடியில் யூகித்துக்கொண்டாள் தீபா.

"ஓ..........மை காட்...!"

சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்று தீபா தன் காரிலிருந்து இறங்குவதற்குள்...........

[தொடரும்]

பகுதி - 2

April 15, 2009

டீன் ஏஜ் Vs பெற்றோர்




டீன் ஏஜில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது 'காதல்'.
நல்லது கெட்டது என்ன என்று உணர்ந்து கொள்ள இயலாத இந்த பருவத்தில், இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் உணர்வை 'காதல்' என்று அர்த்தம் கொண்டு, தங்களது படிப்பு, எதிர்காலம் என அனைத்தையும் சிதைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், இந்த பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு இது புரிவதும் இல்லை, அறியுரை கூறினாலும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் இந்த காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள்.

எதிர்த்த வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுத்து பையன் மாட்டிக்குவான் வீட்ல, அல்லது டீன் ஏஜ் பெண்ணிற்கு அடிக்கடி குறிப்பிட்ட நேரத்தில் ஃபோன் கால் வந்து வீட்டில் மாட்டிக்கொள்வாள், அந்நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் அவர்களை எப்படி கையாள வேண்டும்??

டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் உயிர்கொல்லியான இந்த பதின்ம வயது காதலில் சிக்கிவிடாமல் டீன் ஏஜ்ஜில் இருப்பவர்களை எப்படி தடுப்பது??


பெற்றோருடன் சில வார்த்தைகள்.........!

* மகன் - மகளின் காதல் விவகாரம் தெரிந்து விட்டால், விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்காமல், பக்குவமாக எடுத்துக்கூறுங்கள். வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து 'காதல்' போன்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல், படிப்பில் கவனம் செலுத்த அன்போடு அறிவுரை கூறுங்கள்.

*அறிவுரை கூறுகிறேன் பேர்விழி என்று, நண்பர்கள் உறவினர்களிடம் விஷயத்தை கூறி அறிவுரை கூற வைக்காதீர்கள். அவ்விதம் நீங்கள் விஷயத்தை பரப்பினால், குற்றயுணர்வினால் கூனி குறுகி போய்விடுவார்கள் உங்கள் பிள்ளைகள்.

*வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் செய்த தவறினை மிகப்பெரிய விஷயமாக்கி, அவர்களை தனிமை படுத்திவிடாதிருங்கள்.

* பதின்ம வயது காதலினால் எடுத்த அவசர முடிவுகள் சிலரது வாழ்க்கையை எப்படி தடம்புரள செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, நடைமுறை வாழ்க்கையின் எதார்த்ததை எடுத்து கூறலாம்.

* கண்கொத்தி பாம்பாக எப்போதும் அவர்களை பின் தொடர்ந்து கண்கானிப்பதை தவிர்த்து விடுங்கள். சந்தேக கண்ணோட தன்னை இன்னமும் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதிலுள்ள குற்றயுணர்வை அதிகப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்க செய்துவிடும்.
சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்

* அவர்களுக்கு அதிகம் பிடித்த பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த உற்சாகப்படுத்துங்கள். குடும்பமாக சுற்றுலா செல்லலாம், அது அவர்களது மன இறுக்கத்தை மாற்றும்.

*ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்திருக்கும், அதனை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.அவர்களது திறமையை மனதார பாட்டுங்கள்.

* செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி, காயப்படுத்தாதிருங்கள்!


டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில வார்த்தைகள்........!

*டீன் ஏஜ் பருவம், உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது.வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான்.

*வாழ வேண்டிய எதிர்காலம் காத்திருக்க......டீன் ஏஜ் காதலால் கல்லறை பயணம் மேற்கொண்டு விடாதிருங்கள்.

*இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள்ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட்/கேர்ள்ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம்.

*'டீன் ஏஜ்'என்பது வசந்தகாலம் போன்றது. உடல் வளர்ச்சியடையும் அதே காலகட்டத்தில், எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அந்த இனக் கவர்ச்சி காதல் என்று பெயர் சூட்டுவதும், தேவையற்ற நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் அறியாமை.

"டீன் ஏஜ் காதல் தொடருமா? தொடராதா??".....நிச்சயமான பதிலளிக்க இயலாது.
ஆனால் பெரும்பாலும் அனைவரையும் இந்த வயதில் காதல் தொட்டு விட்டாவது போய்விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது.
எனவே திருமணம் போன்ற முக்கியமாக முடிவெடுக்க மனதளவிலும், உடலளிவிலும், பொருளாத ரீதியிலும் தயாராக இல்லாத இந்த தருணத்தில், பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம்.

* பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கூறுங்கள்.

* பெற்றோருக்கும் உங்களுக்கும் நடுவில் திரை விழாமல், நட்புறவு இருந்தால்.......வெளியுலகில் எதிர்பால் நட்பு கிடைக்கும்போது, அது பாசமா? வேஷமா? என்று தெரியாமல், அதில் மூழ்கி உங்களை இழந்து விடாமல், தடுமாறாமல் இருக்க உதவும்.



உடன்பிறந்தவர்கள்/நண்பர்களிடம் சில வார்த்தைகள்.........!

*உங்கள் நண்பன் உடன் படிக்கும் பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுத்து, அதை அந்த பெண் வகுப்பு ஆசிரியரிடமோ, அல்லது தன் அண்ணன்/அப்பாவிடமோ கொடுத்து, அந்த பையனை மாட்டிவிட்டால், அவனிடம்.....

"என்ன மச்சி அட்டு ஃபிகருக்கு கூட உன்னை பிடிக்கல.........இப்படி மாட்டி விட்டு டின் கட்டிடுச்சு" அப்படின்னு கிண்டல் அடிக்காமல்,

"இந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலையா, விட்டு தள்ளு...........ஆத்துல வேற மீனா இல்ல??? ஆனா வலை விரிக்க இது நேரமில்லடா மாப்பி, டீன் ஏஜ் ல ஜாலியா ஃப்ரண்ட்ஸோட கிரிக்கட் விளையாடினோமா, அரட்டை அடிச்சோமா, மீதி இருக்கிற டைம்ல கொஞ்சம் படிச்சோமான்னு இருக்கிறதை விட்டுட்டு , இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, லவ்ஸ் பண்றதெல்லாம் வேஸ்ட்டா"

என்று சகஜமாக பேசி உற்சாகமூட்டுங்கள்.

*வீட்டில் உங்கள் தம்பியோ தங்கையோ காதல் விஷயத்தில் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டு டோஸ் வாங்கினால், நீங்களும் கூட சேர்ந்து தூபம் போட்டு ஏத்தி விடாமல், அவர்களை கொலை குற்றவாளியை பார்ப்பது போல் பார்க்காமல்...........எப்போதும் போல் சகஜமாக பேசி, படிப்பிலோ விளையாட்டிலோ ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.


பி.கு: நண்பர் இ-மெயிலில் பகிர்ந்துக்கொண்ட கட்டுரையின் தழுவலில் எழுதப்பட்டது.

April 05, 2009

சந்தித்தவேளை - 2 [பகுதி 2]



பகுதி - 1

சத்யா காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான், அவன் எதிர்பார்த்தபடி 'அவள்' தான் கதவை திறந்தாள்......

அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு, அவளிடம்....

"இந்த பில்டிங்ல மிஸ்டர் ராம்குமாரோட வீடு எதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??" என்றான் சத்யா.

".............." அவள் பதலளிக்காமல் புருவமுயர்த்தி அவனை கூர்ந்து பார்த்தாள்.

"என்னங்க உங்களைத்தான் கேட்கிறேன்........மிஸ்டர் ராம்குமாரோட....."

"என்ன.......மிஸ்டர் சத்யா........... உங்க அண்ணா வீட்டுக்கே ....என்கிட்ட வழி கேட்கிறீங்களா????......வீட்டு சாவி வாங்க வந்துட்டு, இதுல லொள்ளு வேற" என்று கேலி புன்னகை சிந்தினாள் அவள்!

'தான் யார் என்பது இவளுக்கு எப்படி தெரியும்' என்று அவன் விழித்துக்கொண்டிருக்க, கிட்ச்சனில் வேலையாக இருந்த அவளது அம்மா....

"வாசல்ல ........யாருமா வைஷு" என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தவர், சத்யாவை அங்கு கண்டதும்,

"வாங்க தம்பி.......வாங்க......உள்ள வாங்க" என்று முகம் மலர உபசரித்தார்.

"இல்ல..........சாவி வேணும்.............நான் யார்னு உங்களுக்கு........எப்படி?"

"நீங்க விடிய காலையில கிரிஜா வீட்டுக்காரர் கூட ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து கார்ல வந்து இறங்கினதை, நானும் வைஷுவும் எங்க வீட்டு பால்கனியில இருந்து பார்த்தோம்............கிரிஜா ஏற்கெனவே நீங்க பெங்களுர்ல இருந்து இங்க ஒரு கல்யாணத்துக்கு வர்ரதா சொல்லியிருந்தாப்ல"

" ஓ.......அப்படீங்களா"


'அடப்பாவி........நான் யார்ன்னு உனக்கு முன்னமே தெரியுமா??........தெரிஞ்சுட்டுத்தான் இவ்ளோ பேச்சு பேசினியா???'
யோசித்தபடியே சத்யா.......தன் அம்மாவிற்கு பின் மறைவாக நின்றிருந்த வைஷு என்ற வைஷ்ணவியை பார்த்தான்,

தலையை லேசாக சாய்த்து, அதே நமட்டு சிரிப்பு அவளிடமிருந்து!!

"அண்ணி சாவி கொடுத்தாங்களா.........சாவி தர்ரீங்களா??"

"கிரிஜா இப்போ ஆஸ்பத்திரில இருந்து ஃபோன் பண்ணாப்ல........ஆஸ்பத்திரில ரொம்ப கூட்டமா இருக்குதாம், வீட்டுக்கு வர்ரதுக்கு லேட்டாகும்னு சொன்னாப்டி.......நீங்க உள்ளாற வாங்க தம்பி.......பத்து நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும், எங்க வீட்ல சாப்பிடலாம்"

"இல்ல..........இல்லீங்க ப்ரவாயில்ல......நான் கிளம்ப்றேன்.....சாவி....." என்று சத்யா மறுத்துக்கொண்டிருக்க, கழுவிய முகத்தை மேல் துண்டால் துடைத்தபடி வைஷுவின் அப்பா உள்ளிருந்து வாசலுக்கு வந்தார்,

"உள்ள வாங்க.........உங்களுக்காகத்தான் வெயிட் ப்ண்ணிட்டு இருந்தோம்....நம்ம வீட்ல டின்னர் சாப்பிட்டுட்டு போலாம் வாங்க" என்று அவரும் சிரித்த முகத்துடன் வரவேற்க, மேலும் மறுக்க இயலாமல் அவருடன் உள்ளே சென்று ஸோஃபாவில் அமர்ந்தான் சத்யா.

சமையல் அறையில் உதவி செய்கிறேன் பேர்விழி என்று அம்மாவின் பின்னாடியே ஒட்டிக்கொண்டு உள்ளே சென்று மறைந்துக்கொண்டாள் வைஷ்ணவி!

அரசியல் , நாட்டு நடப்பு, பொருளாதாரம் என்று கலகலப்பாக தோழமையுடன் வைஷ்ணவியின் அப்பா பேசிக்கொண்டு இருந்தது, அவரிடம் நீண்ட நாட்கள் பழகிய ஒரு உணர்வையும் , மதிப்பையும் ஏற்படுத்தியது சத்யாவின் மனதில்.

இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, கிட்சனிலிருந்து வெளிவந்து,
"இன்னும் ரெண்டே நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும் தம்பி" என்று பாசத்துடன் தம்பி......தம்பி என்று வைஷுவின் அம்மா அழைத்தது, அவனுக்குள்ளும் ஒரு பாசயுணர்வை உண்டாக்கியது.

டின்னர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்த வேளையில், டியூஷன் சென்றிருந்த வைஷ்ணவியின் தம்பி வீட்டிற்கு வந்தான், அவனும் 'நான் என் அப்பாவிற்கு சலைத்தவன் இல்லை' என்று நிரூபிக்கும் வன்னம் க்ரிக்கட், சினிமா என்று கலகலத்துக்கொண்டிருந்தான்.

முழு குடும்பத்தையும் சத்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது!!

டின்னர் நேரத்தில், அவ்வப்போது சாப்பாடு பரிமாற டைனிங் டேபிள் வந்தாளே தவிர, அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை வைஷ்ணவி!

'என்கிட்ட மாட்டமலா போய்டுவா.......கள்ளி!' என்று நினைத்துக்கொண்டான் சத்யா.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் வைஷுவின் அப்பாவிற்கு ஃபோன் வந்துவிட, அவளது தம்பி ட்ரஸ் சேஞ்ச் என்று அவனது அறைக்கு சென்றுவிட, அவளது அம்மா வைஷுவிடம்..........சத்யா கை கழுவ பாத்ரூம் எங்கு இருக்கிறது என்று காண்பிக்கும்படி கூறினார்.

சத்யா கைகழுவுவதற்காக பாத்ரூம்க்கு அருகிலிருந்த வாஷ்பேசினை காட்டிவிட்டு , அவ்விடம் விட்டு நகர எத்தனித்தாள் வைஷு......

"என்ன அம்மனி நைஸா நழுவுறீங்க......வெயிட் வெயிட்...உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"


அவன் வெயிட் பண்ண சொன்னதும், சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் வைஷு,
கைகழுவி விட்டு அங்கிருந்த டவலில் கைகளை துடைத்தபடி சத்யா அவளருகில் வந்து...

"ஸோ.......நான் யார்னு தெரிஞ்சுட்டேதான் இத்தனை கலாட்டாவும் பண்ணிருக்க...அப்படித்தானே???"

"அதான் இப்ப தெரிஞ்சுடுச்சில......தனியா வேற சொல்லனுமாக்கும்" என்று மெதுவான குரலில் முனுமுனுத்தாள் வைஷு. பண்ணின லூட்டி அப்பா அம்மாவிற்கு கேட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு.

"என்ன வாய்க்குள்ளே முனங்குற........பேரர் கெட்சப்ன்னு கேட்கிறப்போ மட்டும் ஃபுல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் கேட்கிற மாதிரி குரல் கொடுத்தே......."

"..........."

"சரி....ஏன் அப்படி வம்பு பண்ணின?"

"அது.......அது வந்து....."

"ஹ்ம் வந்து........."

"..........."

"என்ன பேச்சே காணோம்...........சொல்லு.........."

தொண்டையை செறுமிக்கொண்டு குரலை சரி செய்து கொண்ட வைஷு, அவனிடம்....

"அது வந்து......போன வாரம் உங்க அண்ணி......அதான் கிரிஜா அக்கா, அவங்களும் என் அம்மாவும் பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்....."

"ம்ம்ம்........என்ன பேசிக்கிட்டாங்க?"

"வருணோட சித்தப்பா சத்யா பெங்களூர்ல இருந்து இங்க வர்ராங்க, நீங்க பையனை பாருங்க, பிடிச்சிருந்தா சொல்லுங்க......நானும் என் வீட்டுக்காரரும் அவர்கிட்ட நம்ம வைஷுவை பத்தி பேசுறோம், அவருக்கும் பிடிச்சிருந்தா........மேற்கொண்டு என் மாமனர் மாமியார்கிட்ட பேசி முடிச்சுடலாம்.........அப்படின்னு......"

"ஹா ஹா...!!! அடடா என் அண்ணி எனக்கு பொண்ணு பார்க்கிற வேலையை எனக்கே தெரியாம பண்றாங்களா, இது தெரியாம போச்சே"

"................'

"சரி.........மாப்பிள்ளை பையன்னு தெரிஞ்சுமா .......என்கிட்ட லொள்ளு பண்ணின?"

"ம்ம்.........ஆமா...."

"நீ பண்ணின வாலுத்தனம் பார்த்து ஒருவேளை எனக்கு உன்னைய பிடிக்காம போயிருந்துச்சுன்னா.......??"

"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....

" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.



அவனது அருகாமை,
காதல் மொழி பேசும் அவனது பார்வை.......
அனைத்தும் அவளது ரத்த நாளங்களுடன் விளையாட,
செவ்வானமாக சிவந்தது வைஷ்னவியின் முகம்!!

அவளது வெட்கி சிவந்த முகத்தை ரசிப்புடன் பார்த்த சத்யாவை....மீண்டும் உணர்வு தென்றல் வியாபித்தது!!

நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?


இதற்கு மேல் தாங்காது என்று அவள் சட்டென்று அங்கிருந்து நகர, அவளை போகவிடாமல் சுவற்றில் கைவைத்து மறித்தபடி சத்யா.....

"ஹே வைஷு..........ஒன் மினிட் வெயிட்.......நமக்குள்ளே இன்னொரு கணக்கு முடிக்க வேண்டியிருக்கு"

"எ......என்னது?"

"பேரர்ன்னு கூப்பிட்டதுக்கு ........இன்னும் நீ ஸாரி கேட்கலியே"

தலையை லேசாக சாய்த்து , அவனை கூர்ந்து பார்த்த வைஷு.....

"சாதா ஸாரி வேணுமா.........ஸ்பேஷல் ஸாரி வேணுமா?" என்றாள்.

"அதென்ன ஸ்பெஷல் ஸாரி......"

"முகத்தை பாவமா வைச்சுட்டு........'ஐ அம் ஸாரி' அப்படின்னு சொன்னா, அது சாதா ஸாரி..........அதுவே ஜெயம் ரவி கிட்ட அசின் கேட்ட மாதிரி ஸாரி கேட்டா.........அது ஸ்பெஷல் ஸாரி"

"ஆஹா...........அப்போ எனக்கு சூப்பர் ஸ்பெஷல் ஸாரிதான் வேணும்"

"அய்யே.......ஆசைதான்"

"யாரும் வர்ரதுக்கு முன்னாடி ஸ்பேஷல் ஸாரி கேளு...கமான் க்விக், க்விக்!"

"அட அவசரபடாதீங்க சார்............எங்க அம்மா செய்த சப்பாத்தி& குருமாவை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தீங்க இல்ல..........அதே ஸ்பீடோட கல்யாண சாப்பாடு ரெடி பண்ண ஏற்பாடு பண்ணுங்க.........அப்புறம் ஸ்பேஷல் ஸாரி மட்டுமில்ல...........அதோட சேர்த்து போனஸும் தரேன்"

அவள் குறும்புடன் கண்சிமிட்ட..........அவன் அவளது நாடியை பிடித்து நிமிர்த்தி, கண்ணோடு கண் பார்த்து.........

"ஷ்யுர் வைஷு.........சீக்கிரம் கட்டிக்கலாம்" என்று கிறங்கடிக்கும் குரலில் கூறியதும், மீண்டும் வைஷுவின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.



பெரியவர்களின் சம்மதத்துடன், சத்யா-வைஷு வின் திருமணம் விரைவிலே நடைபெற்றது.

முற்றும்.