March 25, 2008

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க!!!

காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே தெரியாது........அப்படின்னு டயலாக் விடாமல், நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....

பள்ளிப்பருவம்:

இந்த பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும் அடிப்படையாக கொண்டு வருவதாக இருக்கும்.
பஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன் படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.
அநேகமாக சைட் அடிச்சு அடிச்சு ......பின் ஒரு காலக் கட்டத்துல தான் காதலாக மாறி, தத்தக்க பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.
இந்த 16, 17 வயசுல வருகிற காதல் நிலைத்திருந்து கல்யாணத்துல போய் முடியுறது ரொம்ப கஷ்டம்.
காலப்போக்கில் படிப்பு, வேலை, ஊர் மாற்றம், ரசனை மாற்றம் இப்படி பலபல தடைகள் எல்லாம் தாண்டி தான் வரனும்.........அதுக்குள்ள தாவு தீந்திடும்!!

கல்லூரி பருவம்:
இந்தக் கல்லூரி காலத்துல காதல் வர்ரதுக்கு சான்ஸ் ஜாஸ்தி.
கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.
இதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.

அத விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க, இந்த பொண்ணு அந்த பையன்கிட்ட,

"எங்க வீட்ல வந்து பொண்ணு கேளுங்க"

"உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லிட்டீங்களா?"

"எப்போ நாம கல்யாணம் கட்டிக்கலாம்?"

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பா.

இந்த பையனுக்கு அப்போதான் வேலை கிடைச்சும் கிடைக்காமலும் வாழ்க்கையில் ஒரு நிலமைக்கு வர முயற்சி பண்ணிட்டு இருப்பான், மீசையும் அப்போதான் பாதி பேருக்கு கொஞ்சமாச்சும் ஒரு சீரா வளர ஆரம்பிச்சிருக்கும்,
வீட்டுல அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க மாட்டான்......

ஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,

கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!


பணிபுரியும் இடத்தில்:

தக்கி முக்கி, படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,
'நமக்கு இந்த பொண்ணு சரி வருமா?'
'அந்த பொண்ணு ஒகே வா?'.....அப்படின்னு மனசு அலை பாய ஆரம்பிக்கும்.


இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க, ஸோ......பேசி பழக நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
விருப்பு , வெறுப்புகள்..
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள்...
இப்படி பல விஷயங்களை பேசி புரிந்துக் கொள்ளலாம்.
அப்படி புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காதல் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு புடிச்சுக்கனும்.

ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.

'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
அப்படின்னு.........புலம்பல் ஒலி கேட்கும்..........

காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.......!!!

March 18, 2008

மாமாவின் மனசுல....பகுதி-4

பகுதி -1

பகுதி -2

பகுதி -3

கணேசன் மாமாவிற்கு மூச்சு திணறல் அதிகமாகி மீண்டும் ICU வில் அனுமதிக்கப்பட்டார். ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.

ராஜிக்கு மாமாவின் உடல் நிலை மோசமடைவதுப்பார்த்து மிகவும் கவலையாக இருந்தது. மாமா கடைசியாக பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.


'மாமா எவ்வளவு பெருந்தன்மையா தன் விருப்பத்தைவிட்டுட்டு, எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொனார், இவரைப் போய் எவ்வளவு எதிர்த்து பேசியிருக்கிறேன்'

"சாமி, என் மாமா பாவம், நான் நிறைய சண்டை போட்டிருக்கேன் மாமாகிட்ட, ஆனா மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மாமாவுக்கு உயிர் பிச்சை கொடுங்க ப்ளீஸ்" ராஜி கண்ணிரோடு இறைவனிடம் மன்றாடினாள்.

ரவிக்கு உறுதுணையாக அவனது உறவுக்கார நண்பன் வரதன் உடன் இருந்தான். கடவுளின் அருளால் மாமாவின் உடல்நிலை முன்னேற்றமடைந்தது. நாலு தினங்களில் மாமா ரூமிற்கு கொண்டு வரப்பட்டார். மெதுமெதுவாக அவரது உடல் நிலை முற்றிலும் குணமானது. இனி கவலையில்லை , வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என டாக்டர் கூறிவிட, மாமாவை ஆலந்துறைக்கு அழைத்துச் செல்ல சந்தோஷத்துடன் முழுக்குடும்பமும் தயாரனது.

ஆலந்துறைக்கு போவதற்கு முன், ஆஸ்பத்திரியிலிருந்து நேராக ராஜியின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுவிட்டு, அதன்பின் ஆலந்துறைக்கு செல்வதாக முடிவெடுத்தனர்.

ரவியின் முகத்தில் ஒரு வித குழப்பத்தையும், சோகத்தையும் கவனிக்க தவறவில்லை வரதன்.



"ஏண்டா மாப்ள, இரண்டு நாளா உன் மூஞ்சி ஒரு தினுசா இருக்கு, என்னாச்சுடா?"

"ஒன்னுமில்லடா வரதா"

"இத நான் நம்பனுமாக்கும், நேரா மேட்டருக்கு வாடே"

ரவி சுருக்கமாக 'பெங்களுர் பைங்கிளி' பற்றியும், ராஜியின் மேல் உருவான 'பனி மலை' பற்றியும் வரதனிடம் கூறினான்.

"அடங்கொக்கா மக்கா! இப்படியாடே ஒரு சொம்பு கஞ்சிக்கு கவுறுவீங்க??? அந்த புள்ள ராஜி அவ தங்கச்சி கூட சேர்ந்துட்டு என்னைய எம்புட்டு பாடுபடுத்துச்சு , அப்போவெல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணினேயேடா மச்சான், இப்போ...............இப்படி கவுந்துட்டியேடா"

"அதான்டா எனக்கும் புரியல.................இதுக்கு பேருதான்........"

"அய்ய.......ஹே நிறுத்துடா, சும்மா ஃபீலீங்க்ஸ் வுட்டுகிட்டு, 'இதன் பேரு தான் காதலா? அதன் பேரு தான் காதலோ" அப்படின்னு டயலாக் பேசினேன்னு வை.....மவனே கடிச்சே கொன்னுடுவேன்டா உன்ன"

"டேய் மச்சி, டென்ஷன் ஆகாதேடா.....எப்படி ராஜிகிட்ட என் மனசுல இருக்கிறதை சொல்றதுன்னு ஒரு ஐடியா கொடுடா ப்ளீஸ்"

"என்னய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??...........உன் டப்பா காதலே வேணாம்னு நான் கத்திட்டு இருக்கிறேன், நீ என்கிட்டவே ஐடியா கேக்கிறியா??, இங்க பாரு மாப்ளே, எல்லாரும் லவ் பண்ணிட்டு தான் வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்குவாங்க கல்யாணம் கட்டிக்க, ஆனா.........உனக்கு மச்சம்டி மாப்ளே, வீட்டு பெர்மிஷனோட பொண்ணு தேடி லவ் பண்ணபோற, சோக்கா ஒரு புள்ளைய பெங்களுர்ல லவ் பண்ணி, என் அண்ணிய ஆலந்துறைக்கு கூட்டிட்டு வர்ர வழிய பாருடே"

"என்னடா நீயும் கால வாருர, சரி நடக்கிறது நட்க்கட்டும், ஃபிரியா விடுடா"

"இப்படி சோக மூஞ்சி வைச்சுட்டு பேசினாலும் வேலைக்கு ஆகாதுடி"

அதன் பின் ரவி வரதனிடம் தன் காதலை பற்றி பேசவில்லை.

கணேசன் மாமாவை டிஸ்சார்ஜ் செய்து காரில் ராஜியின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ராஜியின் அம்மா மரகதம், ஆரத்தி எடுத்து உயிர் பிழைத்து வந்த தன் அண்ணனை ஆனந்த கண்ணீரோடு வரவேற்றார்.

மாமாவின் குடும்பத்தாரையும், மற்ற உறவினர்களையும் ராஜியும் அவள் குடும்பமும் அன்புடன் உபசரித்தனர்.

ராஜியிடம் தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை ரவிக்கு. நேரம் செல்ல செல்ல ரவிக்கு டென்ஷன் அதிகமானது. ராஜியிடம் தன் மனதில் உள்ளதை சொல்லிவிட துடித்தான்.

'வாயாடி தன் புரோபோசலை கிண்டலடித்து ஏதும் பதிலடி கொடுத்து விடுவாளோ' என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியது ரவிக்கு.

'எத்தனைதான் துடுக்கத்தனமும் குறும்பும் உள்ளவளாக இருந்தாலும், தனக்கு காதலில் சம்மதமில்லை என்றாலும் கூட , நிச்சயம் கிண்டலுடன் மனதை புண்படுத்தும் வண்ணம்' ராஜி பதில் சொல்ல மாட்டாள் என நம்பினான் ரவி.

மதிய உணவும் முடிந்து ரவியின் குடும்பம் ஆலந்துறைக்கு புறப்பட ஆயத்தமானது.

அனைவரும் காரில் ஏறிவிட, ரவியின் கண்கள் ராஜியை தேடின...........வாசலுக்கு வெளியே ராஜியின் அப்பா அம்மா மட்டுமே நின்றிருந்தனர், 'எங்கே போய்ட்டா இவ..............அப்போ.......இப்போ.......வீட்ல அவ மட்டும் தான்............நைசா இப்போ உள்ள போய் பேசி பார்த்துரலாமா' என யோசித்தவனாய்,

தன் செல் ஃபோன் யை ஹாலில் மறந்து வைத்துவிட்டதாக கூறி , ரவி மட்டும் ராஜியின் வீட்டிற்குள் சென்றான்.

வீட்டிற்குள் டேபிளில் உணவு பரிமாறிய பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள் ராஜி.

"ராஜி........."

"என்ன சார்! வாங்க.........எதை மறந்து வைச்சுட்டு போய்ட்டீங்க"

"இல்ல..........எதையும் மறக்கல......"

"நிஜம்மாவா????"

"ஹும்...."

"அப்போ........தண்ணி குடிக்க வந்தீங்களா??"

[டைம்மிங் தெரியாம 'லொட லொட'க்கிறாளே!!]

"இல்ல ராஜி..............உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"

"அப்படியா.??"

"ஆமாம்"

"பேசுங்க..."

"அந்த பெங்களுர் பைங்கிளி............உண்மையில்ல........அப்படி யாரும் இல்ல"

"ஓ.........அதான் தெரியுமே"

"தெரி...யு......மா............எப்படி ..........எப்படி"

"ஹா ஹா.........லவ் பண்ற மூஞ்சிய பார்த்தாலே தெரியாதா எங்களுக்கு"

"ஹே........எப்படி கண்டுபிடிச்ச??"

"அதெல்லாம் டாப் சீக்ரெட்......சரி அத சொல்லத்தான் இப்ப வந்தீங்களா??'

"அது மட்டுமில்ல.............எனக்கு ராஜி ன்னு ஒரு பைங்கிளியை பிடிச்சிறுக்கு"

ராஜியின் பதிலுக்காக ரவி காத்திருக்க, கரெக்ட்டாக அந்த நேரம், ரவியின் அக்கா ருக்மணியின் மகள் அஞ்சலி வீட்டிற்குள் ஓடி வந்தாள்.

"ராஜி அத்த.........நீங்க எனக்கு வாங்கி கொடுத்தா barbie பொம்மைய மறந்துட்டேன், எடுத்துக் கொடுங்க"

பொம்மையை அஞ்சலியிடம் ராஜி கொடுக்க, அஞ்சலி " நீங்க தான் குட் அத்தை, நான் கேட்டதும் Barbie பொம்மை எல்லாம் வாங்கி கொடுத்தீங்க, என் அம்மாகிட்ட தம்பி பாப்பா கேட்டுட்டே இருக்கிறேன், தரவேயில்ல"

"அஞ்சலி செல்லம், டோண்ட் வொர்ரிடா, உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு"

அஞ்சலிக்கு அர்த்தம் புரியாமல் தன் Barbie பொம்மை கிடைத்த சந்தோஷத்தில் மறுபடியும் காருக்கு ஓடிவிட்டாள்.

அர்த்தம் புரிந்தவனாய் ரவி குறும்புடன் ராஜியை பார்க்க,


"ராஜி.....'

"ஹும்.."

"எனக்கு ட்ரீபிள் ஓகே"

"........"

"என்ன பேச்சே காணோம்........"

"சீ........"

வீட்டிற்கு வெளியிலுருந்து வரதன் ரவியை அழைக்க,

"எல்லாரும் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றாங்க, கிளம்புங்க"

" என்ன அதுக்குள்ள விரட்டுற, ........இப்போதானே லவ் ஸ்டார்ட்டே ஆகிருக்கு"

"அய்யோ ரவி............கிளம்புங்க, போய் நம்ம கல்யாண வேலையை ஆரம்பிங்க"

"உன்னைவிட்டு எனக்கு.......போகவே மனசில்ல ராஜி"

"ஆஹா.........விட்டா வீட்டோட மாப்பிள்ளையா இப்போவே டேரா போட்டுறீவீங்க போலிருக்கு"

ரவி-ராஜியின் காதல் டூயட்.........கவிதையாக!!!



என்னவளே
இதழ் அசைத்து
முத்தம் தரவேண்டாம்
என்னை நேசிப்பதாய்
சப்தம் செய் போதும்
எந்தன் ஆயுள் நீளும்!!!

என்னவனே
விழி அசைவில்
அன்பை தெரிவித்தேன்
இத்தனை நாளாய்
உணராதது
உன் தவறா?
சப்தம் செய்யாதது
என் தவறா??

என்னவளே
மொழியில்லா காதல்
புரிய வைக்க
என்
இதயம் தொட்டு செல்ல
தயக்கமென்ன
தடுமாற்றமென்ன??

என்னவனே
என் மொழி கேட்காத
உன் இதய்த்தை
என் விழி
நினைக்காத நாட்கள்
இல்லை...

என்னவளே
எந்தன் இதயம்
தொட்ட
உந்தன் விழிகள்
என்னைக் கேட்காமலே
எப்பொழுது
களவாடின...?
என் கோபத்தையும்...
என் இதயத்தையும்...?
நானும் உன்னைத்
திருடிக்கொள்ளவா...?

என்னவனே
என்னைத் திருடிய
திருட்டிற்கு
என் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையுடன்
ஆயிரம் முத்த அடிகள்..
சம்மதமா????

என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!

March 14, 2008

மாமாவின் மனசுல.....பகுதி-3

பகுதி - 1
பகுதி - 2

சோஃபாவில் அமர்ந்தான் ரவி,

"என்ன சாப்பிடுறீங்க, காஃபி, டீ, ஜூஸ்"

"இல்ல.... எதுவும் வேணாம்"

"ரொம்ப பிகு பண்ணிக்காதீங்க, ஜில்லுனு ஜூஸ் குடிங்க"

பதிலுக்கு காத்திராமல் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவன் ஜூஸ் குடித்து முடிக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


"எப்படி இருக்கா உங்க பெங்களூர் பைங்கிளி??"

"என்ன.........என்னது?'

"ஹலோ, Oscar Nominee ன்னு நினைப்பா?....எங்களுக்கு எல்லாம் தெரியும்"

"என்ன.....தெரியும்"

" நீங்க பெங்களுர்ல ஒரு பொண்ணை லவ்ஸ் பண்ற மேட்டர் தெரியும்னு சொன்னேன்"

"அது......அது ...வந்து"

"லவ் மேட்டரை எப்படி வீட்ல சொல்றதுன்னு கூட தெரியாதா? இப்படியா டக்குனு போட்டு உடைப்பாங்க மேட்டரை, உங்களால மாமா இப்படி ஆகிட்டாரு"

"ஏய்..என்ன...அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை"

"என்ன புண்ணாக்கு சம்பந்தமில்லை, லவ் மேட்டருதான் பக்குவமா சொல்ல தெரில, நீங்க 'அலைபாயுதே ' ஸ்டைல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்ட கதையாச்சும் ஒழுங்க சொல்லிடுங்க இப்போவே, அதிர்ச்சியோட அதிர்ச்சியா போகட்டும்"

"ஹே......என்ன ஓவரா பேசுறே"

"மாமா வை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது நீங்க, இப்ப எதுக்கு என்கிட்ட கத்துறீங்க"

"எதுக்கு வீட்டுக்குள்ள கூப்பிட்டு வம்பிழுக்கிற நீ"

"உங்க கிட்ட வம்பிழுக்க இங்க யாருக்கும் ஆசையில்ல"

"சே...நீ மாறவே இல்ல, ருக்குவை கூப்பிடு, நான் கிளம்பனும்"

"அக்கா அப்போவே ஆட்டோல ஹாஸ்பிடலுக்கு போயாச்சு, அஞ்சலி பாப்பா தூங்குறா, அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, நீங்க வந்ததும் சாப்பாடு கூடை கொடுத்தனுப்ப சொன்னாங்க"

"பின்ன எதுக்குடி வேணும்னே பொய் சொல்லி வீட்டுக்குள்ள வரவைச்சே"

"எங்க வீட்டுக்குள்ளே வரவேமாட்டேன்னு 2 வருஷத்துக்கு முன்னாடி சவால் விட்டீங்க இல்ல, அதை தோக்கடிக்கதான் உள்ளே கூப்பிட்டேன்..........வெவ்வே, வெவ்வே!!"

கிண்டலுடன், முகபாவம் மாற்றி வேடிக்கை காட்ட, ரவிக்கு அவளை 'பளாரென' அறைய வேண்டும்போல் இருந்தது. அப்படி அரைஞ்சாலும் திருந்தாத ஜென்மம் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே சாப்பாடு பையை மட்டும் அவளிடம் வாங்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு தன் பைக்கை ஓட்டினான்.

ஹாஸ்பிடலில் ரவியின் அப்பா இருந்த ரூமிற்கு அருகில் ரவி வந்ததும், திறந்திருந்த கதவின் வழியாக அறையினுள் அவனது அம்மாவும், அக்காவும் பேசிக்கொள்வது நன்றாக கேட்டது ரவிக்கு...

"ஏன்டி ருக்கு, இந்த புள்ள ராஜி நம்ம அஞ்சலி பாப்பாவை நல்லா பாத்துகிறா, நேரத்துக்கு நல்ல சமைச்சு கொடுத்து விடுறா, நல்ல புள்ளையாத்தாண்டி இருக்கிறா"

"ஆமாம்மா, என்னையும் அத்தை வீட்ல அவளும் அத்தையும் நல்லா கவனிச்சுக்கிறாங்கமா"

" ஆனா கொஞ்சம் வாய் கொழுப்புதாண்டி அவளுக்கு ஜாஸ்தி"

"யாரு தான்மா வாயாடல, நான் என் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம வீட்ல எவ்வளவு வாயாடுவேன், அப்போ எல்லாம் நீ ரசிக்கதானேமா செய்த, இப்போ பாரு, கல்யணமாகி ஒரு புள்ள பிறந்ததும் எப்படி பக்குவமாகிட்டேன். அது அது அந்தந்த வயசுல பொண்ணுங்க கொஞ்சம் லொட லொட, துறு துறு வாயாடித்தனம் பண்ணத்தான் செய்வாங்க, அதெல்லாமா தப்பா நினைப்பாங்க?"

"ஆமாம்டி ருக்கு, நான் தான் அவ மேல கொஞ்சம் வெறுப்பா இருந்துட்டேன், நல்ல பொண்ணுதாண்டி இந்த ராஜி"

"என்னம்மா பண்றது, நம்ம ரவிதான் வேற பொண்ணை லவ் பண்றானே, யாருக்கு யாருன்னு அந்த கடவுள் தான்மா முடிவு பண்ணனும்"

'அடப்பாவமே! என் அம்மாவையே மாத்தி மயக்கிட்டாளா இந்த பாதகத்தி!! இவ போடுற வெளிவேஷம் எல்லாம் புரியாம அக்காவும் அம்மாவும் அவளுக்கு ஜால்ரா அடிக்கிறாங்களே. எனக்கு இருந்த ஒரே சப்போர்ட் என் அம்மா......அவங்களே 'அந்தர் பல்டி' அடிச்சுட்டாங்களே!!

நல்ல வேளை Bangalore ல ஒருத்திய லவ் பண்றேன்னு சொல்லி வைச்சேன், இல்லினா என் அம்மாவே இவள என் தலைல கட்டிவிட்டிருவாங்க போலிருக்கு, ' என யோசனையுடன் நின்றுகொண்டிருந்த ரவியின் முகத்துக்கு முன் அழகிய விரல் சொடுக்கு போட்டு அவன் சிந்தனையை கலைக்க,

தன் நிலைக்கு வந்தவனாய் திரும்பிப் பார்த்தான் ரவி, அங்கு அஞ்சலி பாப்பாவுடன் ராஜி,

"அஞ்சலி தூங்கி எழுந்ததும் அவ அம்மாக்கிட்ட போகனும்னு அழுதா, அதான் என் வண்டியில கூட்டிட்டு வந்தேன். எப்போவே சாப்பாடு கூடை வாங்கிட்டு வந்தீங்க, இன்னும் ரூம் வாசல்ல நின்னு ' பெங்களுர்ல' டூயட் பாடிட்டு இருக்கிறீங்களா?? , மாமாவுக்கு கரெக்ட் டைம்க்கு சாப்பாடு கொடுக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கார்ல, இப்படி பகல் கணவு கண்டுக்கிட்டு நின்னா என்ன அர்த்தம், சாப்பாடு கூடைய இப்படி என்கிட்ட கொடுங்க, நான் ரூம்குள்ள போய் சாப்பாடு கொடுக்கிறேன் எல்லாருக்கும், நீங்க அஞ்சலியை பார்த்துக்கோங்க"

ராஜி பேசிக்கொண்டே போனாள்,

'இவ்வளவு நேரம் இவளை 'பளார்'ன்னு இரண்டு அறைவிடனும்னு துடிச்சுட்டு இருந்தேன், இப்ப 'படபட'ன்னு பொரிஞ்சுத்தள்ளுரா, நானும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்கிறேன்,
எப்போ சாப்பாடு கூடை அவ கைல போச்சு??
அஞ்சலி பாப்பா என் கைல எப்போ வந்தா???'

குழப்பத்துடன் ரவி நிற்க, சிறிது நேரத்தில் அவனது அம்மாவும், அக்காவும் அஞ்சலி பாப்பாவிற்கு பிஸ்கட் வாங்கி கொடுக்க கடைக்கு அவளை அழைத்துச் செல்ல, ரவியை ரூமுக்குள் போய் லஞ்ச் சாப்பிட சொன்னார்கள்.

ரவி அப்பாவின் ரூமிற்குள் செல்ல, அங்கு......ராஜி கணேசன் மாமாவிற்கு கஞ்சி ஊட்டிக்கொண்டிருந்தாள்.

' உங்க மகனை கட்டிக்கிட்டு உங்க வீட்டு மருமகளா நான் ஆனா, உங்களுக்கு கஞ்சி தான் ஊட்டுவேன்' என்று தான் மாமாவிடம் சொன்னது ஞாபகம் வந்தது ராஜிக்கு,

மாமாவுக்கும் அது ஞாபகம் வரவே, இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

தன் அப்பாவுக்கு ராஜி கஞ்சி ஊட்டி விடுவதும், வாயிலிருந்து வழியும் கஞ்சியை பக்குவமாக துடைத்து விடுவதும், இருவரும் அர்த்த புன்னகை புரிந்துக் கொள்வதும் கண்ட ரவியின் மனதில், எரிந்து கொண்டிருந்த 'எரிமலை' ......'பனிமலையாக' உருமாறியதை உணர்ந்தான் ரவி.

'கண்டதும் காதல்' ஒருவகை என்றால்,
'இந்த பெண் என்னோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தோடும் அன்பில் ஒன்றிப்போனால் வாழ்க்கை எப்படி இனிக்கும்' என்ற உணர்வு ஏற்படுத்தும் உணர்வு மற்றொரு வகை.

மகன் ரவி தங்களையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த கணேசன், கை அசைத்து சைகையினால் அவனை அருகில் அழைத்தார்.

ராஜியையும் ரவியையும் மாறி மாறி பார்த்த கணேசன் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

strain பண்ணிக்க வேண்டாம் என்று ராஜி கூறியும் கேட்காமல் பேசினார் கணேசன்,

"ரவி............ராஜி........மன்னிச்சிடுங்க என்னை, நான் தான் உறவு விட்டு போககூடாதுன்னு உங்க கல்யாணத்துக்கு ரொம்ப வற்புறுத்திட்டேன். வாழ போறவங்க நீங்க, இந்த காலத்து புள்ளைங்க நீங்க...உங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பம் எதிர்ப்பார்ப்பு இருக்கும், சொந்தம்ன்ற ஒரே காரணத்துக்காக கட்டி வைக்க நினைக்கிறது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

ரவி, நீ அந்த பெங்களுர் பொண்ணு விபரம் கொடுப்பா, எனக்கு உடம்பு சரியானதும், நானே பேசி முடிக்கிறேன்,

ராஜிம்மா.....உன்னைத்தான் மாமா ரொம்ப கஷ்டபடுத்திட்டேன், உனக்கு மாமாதான்டா மாப்பிள்ளை பார்ப்பேன், எப்படி பையன் வேணும்னு மட்டும் சொல்லு, மாமா அப்படி ஒரு பையனை உன் முன்னால கொண்டுவந்து நிறுத்துறேன்"

அப்பா பேச பேச ரவியின் ' பனி மலை' உருகியது....

'ஐய்யோ, யாரு எப்போ கட்சி மாறுவாங்கன்னெ தெரிலியே?
சரி இந்த கள்ளி மூஞ்சில என்ன 'ரேகை' தெரியுதுன்னு பார்க்கலாம்,' என்று ரவி அவளை ஓரக்கண்ணால் பார்த்தால்.....

'உனக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்' என்று தன் மாமா சொன்ன போது சிவந்த முகம் வெட்கத்தோடு இன்னும் ஜொலித்துக்கொண்டிருந்தது ராஜியிடம்!!

இது வேலைக்கு ஆகாது, சொன்ன பொய்யை காப்பாத்த பெங்களுர் போனதும் 'பைங்கிளி' வேட்டை ஆரம்பித்து விட வேண்டியதுதான் என முடிவெடுத்தான் ரவி.


முடிவுடன் ரவி தன் அப்பாவை பார்க்க, அவ்வளவு நேரம் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பெருமூச்சு விட ஆரம்பித்தார்,

"மாமா........மாமா...........என்னாச்சு மாமா"

"அப்பா......அப்பா........."

"சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க ரவி......."

[தொடரும்]

பகுதி - 4

March 11, 2008

தொடரும் நட்பு......



பள்ளி, கல்லூரி கால நட்புகள், படிப்பிற்கு பின் சில வருடங்களில் மங்கி , மறைந்து/ மறந்து போய்விடுகிறது. தற்போது ஆர்குட், ஆன் லைன் சாட், இ-மெயில் லில் அவ்வப்போது 'ஹாய்' ஆவது சொல்லிக்கொள்ள முடிகிறது.

இத்தகைய தொடர்பு கூட இல்லாமல், சில வருடங்கள் தொடர்பு அற்று போன நட்பினை ஏதேச்சையாக சந்திக்க நேரிடும் போது, ஆண்கள் தன் சக ஆண் நண்பனிடம் முன்பு நட்பு நெருக்கதிலிருந்த காலத்தில் பழகியது போல் ஒரளவுக்காவது பேசி பழகிக்கொள்ள முடியும். ஆனால், பெண் நட்பினை அவ்வாறு சந்திக்கும் தருணங்களில் பெரும்பாலும் அப்பெண்கள் திருமணமாகி, கணவன் - குழந்தை என குடும்ப பெண்ணாகியிருப்பர், அப்போதும் அவரிடம் அதே நட்போடு பேச முடியுமா? சந்திப்பில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்னென்ன பேசலாம், எவற்றை பேசாமல் தவிர்ப்பது நல்லது என்பதை பற்றி என் கருத்துக்கள்...

*.எவ்வளவுதான் கலகலப்பாக பேசிப்பழகும் பெண்ணாக இருந்தாலும், திருமணத்திற்கு பின் பெண்கள் தங்களுக்கென்று ஒரு வரைமுறையை நட்பு வட்டாரத்தில் வைத்திருப்பர். அது அவரது குடும்ப சூழ்நிலை, மற்றும் அவளது கணவரின் இயல்பை பொறுத்து அமையும். இந்த புது கோட்பாட்டுடன் இருக்கும் உங்கள் தோழியின் நிலையை உணராமல், முன்பு பேசிப்பழகிய அதே குறும்பு கேலிகளுடன் பேச முனைவது நல்லதல்ல.
அதிலும் முக்கியமாக அவரது கணவரின் தன்மை தெரியாமல் அவருக்கு முன்பாகவே கல்லூரி கலாட்டாக்களை பேசி உங்கள் தோழியை வம்பில் மாட்டி விடாதிருங்கள்.

*.உங்கள் தோழிக்கு குழந்தைகள் இருப்பின், அவர்களைப் பற்றிய வாலுதனம்,குறும்புகள் போன்ற விசாரிப்புகளில் உரையாடலை வளர்க்கலாம்.

*.அவரது கணவரையும் உரையாடலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன் கணவனிடம் தன் நண்பன் அதிகம் பேசவேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புவர்.

*.தோழியின் கணவர் உங்களிடம் எத்தனைதான் சகஜமாக பேசினாலும், உங்கள் நட்பு காலத்து கல்லூரி லூட்டிகள், வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள், வகுப்பில் சக மாணவர்களின் காதல் கதைகள் பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்.

*.கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.

*.அதே சமயம், உங்கள் தோழியின் அருமை பெருமைகளையும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து தள்ளி அவரது கணவருக்கு புகைச்சல் உண்டு பண்ணிடாதீங்க.

*.நட்பில் தொடர்பு விட்டுப்போன இடைப்பட்டக் காலத்தில் எப்படி எல்லாம் 'மிஸ்' பண்ணினீங்க உங்கள் தோழியை என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

*.நீண்ட நாட்கள் கழித்து சந்தித்தபின் அவளின் தொலைபேசி எண் கிடைத்தாலும் கூட, அவளே கூப்பிட்டால் ஒழிய நீங்களாக ஃபோன் செய்யாமல் இருப்பது சால சிறந்தது.

*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே!!

*. உங்கள் தோழியின் மணவாழ்வில் விரிசல் இருப்பின், அதை உங்களிடம் தனிமையில் அவர் தெரிவித்தால், ஆலோசனை கூறுங்கள், எந்த உதவி செய்வதாயினும் அவரது கணவரின் கவனத்திற்கு கொண்டு வருவது சிறந்தது.
அவரது கணவன் மேல் தவறு இருப்பினும் , அதை மிகைப்படுத்தி பேசாமல், பொதுவான குடும்ப நண்பர்கள் மூலம் பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.
உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.


\பதிவிற்கு ஆலோசனையும், ஊக்கமுமளித்து உதவிய நண்பர் 'வினையூக்கி' செல்வாவிற்கு மனமார்ந்த நன்றி!/

March 06, 2008

மாமாவின் மனசுல ..... பகுதி -2



மாமாவின் மனசுல - பகுதி 1

கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கே.ஜி ஹாஸ்பிட்டலில் ICU வில் அனுமதிக்கப்பட்டார். Bypass surgery செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஹாஸ்பிடல் வராண்டாவில் கண்ணீருடன் ரவியின் தாய் கல்யாணி ஒரு புறம், விசும்பலுடன் ராஜியின் தாய் மரகத்ம் ஒரு பக்கம். குழப்பமும் கவலையுமாய் நின்ற ரவியை ராஜியின் அப்பா ஆறுதல் படுத்தி, அடுத்து என்ன செய்வது, தன் நெருங்கிய நண்பன் சிறந்த Cardiologist, அவருக்கு தகவல் அனுப்பி வரவழைக்கிறேன் என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மதியம் கணேசன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதிலிருந்து அங்கு யாரும் எதுவும் சாப்பிடாமல் இருந்தனர், அனைவருக்கும் ஹாஸ்பிடல் கேன்டினில் டீயும் டிபனும் வாங்கி வந்தாள் ராஜி,
டீ கூட குடிக்க மறுத்த ரவியிடம்,

"இப்படி எவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க போறீங்க, டீயாச்சும் குடிங்க ப்ளீஸ்.....டீ கரெக்ட் சூடுலதான் இருக்கு.......நிஜம்மா!"

"ஹும்.....ப்ரவாயில்லை, எனக்கு வேணாம்"

"சும்மா முறுக்கிக்காதீங்க, டீ யை குடிங்க இப்போ"

அவளது வற்புறுத்தலை தட்ட முடியாமல் ரவி டீ பருகினான்.

ராஜி டீ குடிக்கச் சொல்லி தன் மகனை கட்டாயப்படுத்துவதையும், அவனும் பேச்சை மறுக்காமல் டீ குடித்ததையும், தன் கண்ணீருக்கு நடுவிலும் ஓரக்கண்ணால் பார்க்க தவறவில்லை கல்யாணி.

சென்னையிலிருக்கும் ரவியின் அக்கா ருக்மணிக்கு தகவல் சொன்னதால், அவளும் கணவன், குழந்தை அஞ்சலியுடன் காரில் நேராக கேஜி ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தாள்.

மகளை கண்டதும் ரவியின் அம்மா, மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.

'இரவில் குழந்தை அஞ்சலி என்னுடன் இருக்கட்டும்' என சொல்லி ராஜி குழந்தையை எடுத்துக்கொண்டு தன் அப்பாவுடன் , அருகில் இருக்கும் தன் வீட்டீற்கு சென்றாள்.

Surgery க்கு முன் மாமாவை ICU வில் பார்த்த ராஜிக்கு ஏனோ மனம் மிகவும் பாரமாக இருந்தது.

மாமாவிடம் தான் எதிர்த்து பேசியதால்தான், அவருக்கு இப்படி ஆகிவிட்டது என கலங்கினாள்.

'தன் மகள் ராஜிக்கு, ரவிக்கும் திருமணம் முடிக்க ரொம்ப ஆசைப்பட்டாரே அண்ணன், ஏங்கி ஏங்கியே இப்படி ஆகிட்டாரே' என்று தன் மனதுக்குள் புலம்பித் தள்ளினாள் ராஜியின் தாய் மரகதம்.

'நான் சும்மா இருந்திருக்க கூடாதா? இவனை Bangalore லிருந்து வரவைச்சது தப்பா போச்சே, இவன் இப்படி ஒரு அதிர்ச்சி கொடுப்பான்னு நினைக்கவேயில்லையே, நான் கொஞ்சம் பொறுமையாயிருந்து பக்குவமா எடுத்து சொல்லியிருக்கலாமோ' என தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள் ரவியின் தாய் கல்யாணி.

'எல்லாம் என்னால தான், ராஜியுடன் கலயாணம் வேணாம்னு மறுத்துச் சொல்ல இப்படி ஒரு புருடா விட்டா , அது வினையா போச்சே, அப்பா இப்படி ஆகிட்டாரே' என குற்றவுணர்வில் கூனிகுறுகி போயிருந்தான் ரவி.

Surgery முடிந்து டாக்டர் இன்னும் 24 மணிநேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என சொல்லிவிட, ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.

அழுதுகதறும் மரகதத்தையும்,கல்யாணியையும், ராஜியும் ருக்மணியும் ராஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ரவிக்கு உறுதுணையாக ராஜியின் தந்தையும் , அவனது நண்பன் வரதனும் ஹாஸ்பிடலில் இருந்தனர்.

வீட்டில் நான்கு பெண்களும் தெய்வத்தை வேண்டியபடி டாக்டரின் பதிலுக்காக காத்திருந்தனர், அப்போழுது ரவியின் அக்கா ருக்மணி தன் தாயிடம்,

"ஏன்மா அப்பா நல்லாத்தானே இருந்தார், திடீருன்னு அவருக்கு என்னாச்சும்மா,தோட்டத்துல வேலை பார்க்குறவங்ககிட்ட ஏதும் கோபப்பட்டாரா, எதுக்கும் டென்ஷன் ஆனாராம்மா?"

ருக்கு காரணம் கேட்க, ராஜியும் மரகதமும் கல்யாணியின் முகத்தை நோக்க, கல்யாணி பேந்த பேந்த விழித்தாள்,

" சொல்லும்மா, என்னம்மா நடந்துச்சு?"

"ஆமாம் அண்ணி சொல்லுங்க, எங்க வீட்டுல இருந்து போறப்போ அண்ணன் நல்லாத்தானே புறப்பட்டுப் போனார், தீடிருன்னு என்ன ஆச்சு அண்ணி" மரகதம் தன் அண்ணனின் மனைவி கல்யாணியை நோக்கினாள்.

கல்யாணி அத்தையின் பார்வையே சரியில்லை, அவளது பார்வை தன் மீது பட்டு பட்டு திரும்புவதும் குழப்பமாக இருக்கவே, ராஜி ' இதில் ஏதோ மேட்டர் இருக்கு, நாம சம்பந்த பட்டதா இருக்குமோ' என சுதாரித்துக் கொண்டு அத்தையின் மேலிருந்து கண்களை விலக்கி, வேறு எங்கோ பார்ப்பது போல் திரும்பிக்கொண்டாள்.

மகள் ருக்கு மறுபடியும் வற்புறுத்தி கேட்க, கல்யாணி பேச ஆரம்பித்தாள்,

" அவன்.....நம்ம........ரவி Bangalore ல ஒரு பொண்ணை காதலிக்கிறானாம், அவன் இதை சொன்னதும்தான் அப்பா அதிர்ச்சியில் நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்துட்டாரு ருக்கு" விசும்பினாள் அத்தை.

' ஆஹா! பையன் ' பெங்களுர் பைங்கிளி'யை டாவடிக்கிறானா? ஹப்பாட, ஒரு வழியா நான் தப்பிச்சேன், இந்த நெட்டையன்கிட்ட இருந்து !!
ஆனா அத்தை தான் பாவம், பையனுக்கு H1 விசா கிடைச்சிடுச்சு, சீக்கிரம் US க்கு போய்டுவான், பொண்ணு வீட்டுக்காரங்க கியூ ல நிப்பாங்கன்னு கனவு கண்டாங்க. அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு. கல்யாணமாகி அமெரிக்கா போய் சமையல் வேலையிலிருந்து பாத்ரூம் கழுவுற வேலை வரைக்கும் நாமளே தான் பண்ணனும், அதே இந்தியாவில இருந்தா, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வேலை ஆளு வைச்சுட்டு, சோஃபாவில் கால் நீட்டிட்டு ஹாயா டிவி பார்க்கலாம், இத விட்டுப்புட்டு எவளாச்சும் அமெரிக்கா போய் கஷ்டபடுவாளா'
எப்படியோ ' பெங்களுர்காரிக்கு' ஒரு பெரிய தாங்க்ஸ் என்னைய காப்பாத்திட்டா'
என மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் ராஜி!!

ராஜியின் அம்மா முகம் ஏமாற்றத்தில் வாடியதை ருக்குவும், கல்யாணியும் கவனிக்க தவறவில்லை.

Surgery successfull ஆக நடந்திருந்தது,இரண்டு நாட்களில் மாமா சகஜநிலைக்கு வர ஆரம்பித்தார்.

ஹாஸ்பிடலில் இருக்கும் மாமா குடும்பத்துக்கு ராஜி தன் வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்து வந்தாள் தினமும், அஞ்சலி பாப்பாவையும் பார்த்துக்கொண்டாள்.

ஒரு நாள், ராஜியின் வீட்டிலிருந்த தன் அக்கா ருக்குவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச்செல்ல தன் பைக்கில் ராஜியின் வீட்டிற்கு வந்தான் ரவி.

'நான் உன் வீட்டுக்கு இனிமே வரமாட்டேன், நீயும் எங்க வீட்டுக்கு இனிமே வரவே வராதே' என ராஜியுடன் 2 வருஷத்துக்கு முன் சவால் விட்ட ரோஷத்தால் , ராஜியின் வீட்டிற்குள் செல்லாமல் பைக்கிலிருந்த படியே ' ஹார்ன்' அடித்தான் ரவி.


ஹார்ன் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியில் வந்த ராஜி, புன்னகையுடன் ,

"உள்ளே வாங்க" என்றாள்.

"இல்ல..........அக்காவை கூப்பிட்டுட்டு போகனும்"

"அக்கா குளிச்சுட்டு இருக்காங்க, இப்ப கிளம்பிருவாங்க, நீங்க உள்ளே வாங்க"

"ப்ரவாயில்ல.......நான் இங்கேயே வெயிட் பண்றேன்"

"எவ்வளவு நேரம் இப்படி வெயில்ல வெயிட் பண்ணுவீங்க, ப்ளீஸ் வீட்டுக்குள்ள வாங்க"

கெஞ்சலுடன் ராஜி வற்புறுத்த, அவளது வெகுளிதனமான பார்வையும், அவளது குடும்பம் இவனது குடும்பத்துக்கு செய்து வரும் உதவிகளும் அவனுக்குள் ஒரு நன்றிவுணர்வை ஏற்படுத்த, தன் பிடிவாதத்தை தளரவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

ஹாலில் ராஜியும்..........ரவியும் மட்டும்......அப்போது,


[தொடரும்]

பகுதி - 3

March 03, 2008

எனக்கொரு 'boy friend' வேணுமடா....!!!



இப்பெல்லாம் 'Do you have BF(boy friend)?' அப்படின்னு கேட்குறது ரொம்ப சாதாரனமா போச்சுங்க,
'No , I dont' ன்னு பதில் சொன்னா, அவங்க நம்மல இளப்பாம ஒரு லுக் விடுவாங்க பாருங்க,
அது 'student status symbol'யே உன்கிட்ட இல்ல, நீயெல்லாம் என்னத்த படிச்சு......அப்படின்னு சொல்லும் அந்த லுக்கு!!

என்னடா இது வம்பா போச்சுன்னு, அடுத்த தடவை அப்படி கேள்வி கேட்டப்போ, ரொம்ப விபரமா" I have lots of friends and many of them are boys, so I do have lots of boy friendS' அப்படின்னு பெரிய பிஸ்துவாட்டம் பதில் சொல்லி, படு கேவலமா லுக்கு விட்டுட்டு போய்டாங்க,

சரி , அப்படி என்னதான் அவசியம் student life ல் 'Boy Friend' வைச்சுக்கன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணினா......பல தகவல்கள் கிடைச்சது,

காலம் கலி காலங்க, பாருங்க ரெண்டு பொண்ணுங்க எப்படி விளக்கம் கொடுக்கிறாங்கன்னு, அதிலிருந்து தகவல் அறிஞ்சுகோங்க......



ப்ரியா:ஹாய் வித்யா, என்ன dull அடிக்கிற? என்ன மேட்டர்?

வித்யா:யா ப்ரியா, இந்த வீக்கெண்ட் நான் ஊருக்கு போகல. ஹாஸ்டல்ல போர் அடிக்குது..

ப்ரியா:எங்க உன் கூடவே சுத்திட்டு இருப்பாளே உன் தோழி ஐஷ்வர்யா?

வித்யா:ஆங்... அவளா, அவ ஆளோட movieக்கு போய் இருக்கா. ஆமாம் ப்ரியா நீ பொதுவா வீக்கெண்ட்ஸ் ரூம்ல இருக்க மாட்டியே, உன் பாய் ப்ரண்ட் கூட ஊர் சுத்த போய்டுவியே, என்ன இந்த வீக்கெண்ட் அம்மணி ரூம்ல இருக்கீங்க?

ப்ரியா:அதுவா, அவனுக்கு உடம்பு சரி இல்லை விது. டைபாய்ட் fever, பாவம் பையன் ரெஸ்ட் எடுக்கிறான்.ஐஷ்வர்யா அவ பாய்ப்ரெண்ட் கூட படத்துக்கு போனும்னு உன்னை கழட்டி விட்டுடாளா, உனக்கும் ஒரு BF இருந்தா இப்படி வீக்கெண்ட் ஹாஸ்டல் ரூம் சுவற்றை வெறிச்சு பார்த்துட்டு இருக்காம ஜாலியா ஊரு சுத்தலாம் இல்ல?

வித்யா:வீக்கெண்ட் போர் அடிக்காம ஊரு சுத்துவதற்கெல்லாம் BF வைத்துக்க முடியுமா?

ப்ரியா:ஹேய் விது, என்ன இப்படி கேட்டுட்ட? BF இருக்கிறது எவ்வளவு useful தெரியுமா?

வித்யா:என்ன பெரிய useful? ஓசில Burger, Pizza கிடைக்கும், அதுக்காக எல்லாம் ஒருத்தனை BF ஆ வைச்சுக்கனுமா?

ப்ரியா:ஹையோ விது, இப்போ பசங்க எல்லாம் ரொம்ப விபரம், பர்கர்க்கும் Pizzaக்கும் பில் அவனுங்க கட்ட மாட்டானுங்க, சரியா பில் கட்டற நேரத்துல ,செல்போன்ல சிக்னல் கிடைக்கலனு பொய் புழுகிட்டு phoneல பேசுராப்ல escape ஆகிடுவானுங்க. அவனுக்கும் சேர்த்து நாம தான் தண்டம் அழனும

வித்யா:அடப்பாவமே, அப்புறம் எதுக்கு ப்ரியா BF வைச்சுகிட்டா usefulனு சொன்ன?


ப்ரியா:'சொத்தையோ, லொட்டையோ', 'கஞ்சனோ, நோஞ்சானோ', ஒருத்தன BFனு சொல்லிகிட்டோம்னு வை, மத்த பசங்க தள்ளி நின்னு சைட் அடிப்பானே தவிற, ஜொள்ளு விட்டுகிட்டு பின்னாடி வர மாட்டான், அதுனாம இந்த இம்சைல இருந்து தப்பிச்சுகலாம். அப்பிறம் ஒரு கார் அல்லது ஒரு பைக் வைச்சிருப்பான், நமக்கு ட்ரைவர் வேலை பார்ப்பான், நம்ம ஆட்டோ சார்ஜ் மிச்சம்... அதுனால அவனுங்க பர்ஜர்க்கும் pizzaக்கும் pay பன்ன வைச்சு அட்ஜஸ்ட் செய்துபாங்க விபரமா! சரி பொழைச்சு போனு கண்டுகாம இருந்துவிடுவது தான்!

வித்யா:எவனோ நாலு பேரு ஜொள்ளு ஊத்தறதுல இருந்து தப்பிச்சுக்க ஒரு சொத்தை பையனை லவ் செய்து கட்டிகனுமா? இதென்ன லாஜிக்?

ப்ரியா:அட அசடே! BF ஐ யாரு கல்யாணம் பன்னிப்பா?

வித்யா:ஐய்யோ, அப்போ இந்த BF வந்து லவ்வர் இல்லையா, இவனை கல்யாணம் கட்டிக்க மாட்டியா?

ப்ரியா:ஹாஹாஹா! என்ன வித்யா இப்படி பழமா இருக்க? BFக்கும், லவ்வர்க்கும் 'definition and difference' தெரியாம, எப்படி B.E Final year வரைக்கும் வந்த நீ? தத்தி பெண்ணே!

வித்யா:ஹேய், அதென்ன definition & difference?

ப்ரியா:BF னா ஜஸ்ட் நண்பனான அவன் பாய்.... முஸ்லீம் பாய் இல்ல.. BOY Boy..ஒகே வா! லவ்வர்னா ஒருத்தனை மனசார விரும்பி, இவன் கூட காலம் முழுசா வாழனும்னு தோணும், அப்படி ஒருத்தனை லவ் பன்னினாதான் அவனுக்கு லவ்வர்னு பேரு. இந்த பாய் ப்ரெண்ட் எல்லாம் சும்மா ஊர் சுத்த, movie கு கூட துணைக்கு வர, Student life ல status ல ஒரு பந்தாவுக்காக மட்டும் தான்!

வித்யா:அப்போ இந்த BF ஐ காலேஜ் லைப் முடிஞ்சதும் கழட்டி விட்டுடுவியா? அவன் சண்டைக்கு வர மாட்டானா?

ப்ரியா:ஹாஹாஹா... அவனுங்களுக்கும் தெரியும், இந்த பொண்ணு GF மட்டும் தான், கொஞ்ச நாள் pizza வாங்கி தந்துட்டு அப்புறம் கழண்டுக்கும் அப்படினு. அவனும் prepared ஆ தான் இருப்பான், "good bye" சொல்லிகிட்டு கழண்டுகிட்டா ரொம்ப எல்லாம் அலட்டிக்க மாட்டான்! அதனால் லவ்வர விட BF தான் ரொம்ப Safe.

வித்யா:அடிபாவிகளா... சரி 5 நிமிஷம் வெயிட் பண்ணு,. ரெடி ஆயிட்டு வந்துடறேன்.. நாம ரெண்டு பேரும் இப்போ spencers போலாம்..

ப்ரியா:என்ன மேடம்.... திடீர்னு spencer.........??

வித்யா:எனக்கொரு boy friend வேணுமடா ப்ரியா... அதுக்குதான் spencer visit. அங்கே போய் BF hunting முடிச்சிட்டு வந்துடலாம் ஒகேவா?

ப்ரியா:அப்படி முன்னேறும் வழிய பாரு! Will wait for you! get ready soon Vidhu!
---------------- *--------------------
Hi Friends,

ஆண்-பெண் நட்பில் தன்னலமே மேலோங்கி இருப்பது பற்றியும், அதனை இத்தலைமுறை இளைஞர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது பற்றி நான் படித்த ஒரு ஆங்கில பதிப்பை அப்படியே தமிழாக்கம் செய்யாமல், இயல்பான உரையாடலோட பதித்திட நினைத்துதான் இப்பதிவு!

மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்குதலில் ஆண்-பெண் நட்பிலும் எவ்வாறு சுயநலம் காணப்படுகிறது என்பதை, 'நண்பர்களுக்கு' விளக்கி உஷார் படுத்தும் எண்ணத்தில் தான் பதிவிட்டேன்.இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை!!!