January 30, 2008

படிதாண்டும் பத்தினி....

சமீபத்தில் என் உறவுக்கார தம்பதியருக்கு நடுவே நடந்த பிரிவு [ டைவர்ஸ்] என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவு ஏற்பட காரணமாயிருந்தது அந்த மனைவிக்கு தன் சக அலுவலக நண்பருடனான நட்புறவு.

நான் பள்ளிப்பருவத்திலிருந்த போது அந்த தம்பதியருக்கு திருமணமான புதிது, எங்கள் வீட்டிற்கு 'விருந்திற்கு' வந்திருந்தபோது அவர்களிடம் காணப்பட்ட காதல் கலந்த தாம்பத்திய வாழ்க்கையில் எங்கு, எப்படி விரிசல் ஏற்பட்டது?
திருமணமாகி 8 வருடங்களான பின்பு, 2 ஆழகான குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணிற்கு ஏன் இந்த திருமணத்திற்கு வெளியிலான தகாத நட்பும், உறவும்?



ஆண்களும் இத்தகைய உறவுகளுக்கு ஆளாவது விதிவிலக்கல்ல என்றாலும், பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ? என்று சிந்திக்க வைத்தது.

என் குடும்ப நண்பரான மனோத்தத்துவ மருத்துவரிடம் இது குறித்து நான் கேட்டபோது, அவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்ட கருத்துக்களை இங்கே பதிவிடுகிறென்.

கேள்வி: மனைவியான ஒரு பெண் ஏன் இத்தகைய தவறான நட்பு வலையில் சிக்குகிறாள்? அதற்கான காரணங்கள் என்ன?

மருத்துவர்:பெண்ணின் மனதில் ஏற்படும் தனிமை மற்றும் வெறுமை உணர்வு ஒரு முக்கிய காரணம்.
காதலித்த தருணங்களில், திருமணமான புதிதில் தன்னிடம் அதிக அக்கரை காட்டிய தன் வாழ்க்கை துணை, வருடங்கள் ஓட ஓட, தன்னிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது என்பதை ஒரு மனைவி திருமணம் ஆகி 8 அல்லது 10 வருடங்கள் கழித்து, அதாவது குழந்தைகளை பெற்று வளர்த்து முழுநேர பள்ளிக்கு அனுப்பிய போதுதான் உணர்கிறாள்.
அதுவரை தன் குழந்தைகள், தன் குடும்பம் என்று இருந்தவளுக்கு இந்த தனிமையுணர்வு அப்போதுதான் தலைத்தூக்குகிறது.

கேள்வி:தனிமையுணர்வு பெரும்பாலும் அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் கடந்து வரும் ஒன்று, அவ்வுணர்வு மட்டுமே காரணமாக இருக்க முடியுமா?

மருத்துவர்: பெரும்பான்மையான பெண்கள் இந்த தனிமை உணர்வுகளின் தாக்கத்துக்குள்ளாகும் போது முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள்ளிருப்பார்கள்,
எப்படி 15 வயதில் ஒரு பெண்ணிற்க்கு ஒத்த வயது பையனின் பார்வை கிரங்கடித்ததோ...
எப்படி 20 வயதில் காதலும், தொடுதலும் அவளுக்கு கிளர்ச்சியை கொடுத்ததோ..
அப்படி இந்த 30 -40 வயதிலும் ஒரு ஆண் துணையின் கரிசனமான வார்த்தையும், அரவணைப்பும் ஒரு இன்பத்தை கொடுக்கிறது.
ஆனால் அந்த அரவனைப்பு அவளுக்கு தன் கணாவனிடிமிருந்து கிடைக்காத பட்சத்தில் அவளுடன் அன்போடு பேசும் மற்றொரு ஆணிடம் வசியப்படுத்துகிறது.

கேள்வி:கணவனின் கவனக் குறைவும், அக்கரையின்மையும் இதற்கு காரணமா?

மருத்துவர்: ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணம். தன் மனைவி தன் அன்பிற்காக ஏங்குகிறாள் என்று உணராமல் போவதற்கு காரணம்.......தாயான பின் பெரும்பான்மையான பெண்கள் தன் கணவனிடம் அதிக நேரத்தை செலவழிப்பதில்லை. கணவனுக்கும் வருடங்கள் செல்ல செல்ல , இனி இதுதான் குடும்ப வாழ்க்கை போலிருக்கிறது என்று, தன் தொழில், அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்து விடுகிறான்.
பத்து வருடம் தன் கணவனுக்கு, தன் குழந்தைகளுக்கும் சமைப்பதும், உழைப்பதும் மட்டுமே கடமை என்று இருந்த மனைவிக்கு, காலம் தாழ்த்தி கணவன் மேல வரும் காதலை வெளிக்காட்ட தெரிவதில்லை.
சில விஷயங்கள் ஆண்களுக்கு வெளிப்படையாக சொன்னால் மட்டுமே புரியும், அச்சில விஷயங்களை பெண்கள் வெளிப்படுத்த தவறுவதுதான் அடிப்படை காரணம்.

கேள்வி: படுக்கை அறை விரிசல் இதற்கு முக்கிய காரணமென்று சொல்கிறீர்களா?

மருத்துவர்: அதுவும் ஒரு காரணம், ஆனால் அது மட்டுமே காரணமில்லை. சக ஆண்களிடம் பேசி பழகும் இக்காலக்கட்டத்தில், ஒரு பெண் ' அந்த ' உறவுக்காக என்ற எண்ணத்தோடு பழகுவதில்லை. இயல்பான நட்பே நாளடைவில் அரவனைப்பாக, ஆறுதலாக, இதமாக மாறும்போது தான், ஒரு பெண் எல்லை மீறுகிறாள், தன் உணர்வுகளுக்கு அடிபணிகிறாள். ஆண் நட்பில் அவளது முதல் நோக்கம் இதுவல்ல.

கேள்வி: தாம்பத்திய வாழ்வில் நாளடைவில் ஏற்படும் தொய்வினை போக்க ஏதேனும் அறிவுரைகள் தர இயலுமா??

மருத்துவர்: மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமே மனம்விட்டு பேசுவதும், அதிக நேரம் தனித்து செலவழிப்பதும் தான்.

'மோகம் முப்பது நாள், காதல் அறுபது நாள்' என்பது "மோகம் முப்பது வருஷம் , காதல் அறுபது வருஷம்' என இருக்க இதோ சில டிப்ஸ்..

1. 'தேன் நிலவில்' எப்படி ஒரு தனிமை தம்பதியர்க்கு புரிதலையும், இன்பத்தையும் அளித்ததோ, அதே மாதிரியான ஒரு தனிமையை திருமணமாகி பல வருடங்கள் சென்றபின்பும் ஏற்படுத்திக் கொள்வது கணவன் மனைவிக்கு ஒரு புது உற்ச்சாகத்தையும், அந்நியோனத்தையும் அளிக்கும்.
[குழந்தைகளை உங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு விட்டு, ஒரு இரண்டு நாள் சுற்றுலா{ இரண்டாம் தேன்நிலவு} போகலாம்]

2.மேற்சொன்ன டிப்ஸ் சாத்தியமில்லையெனில், கணவன் - மனைவி இருவரும் ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு, உங்கள் வீட்டிலேயே குழந்தைகள் ஸ்கூல் சென்றபின் தனித்து நேரம் செலவழிக்கலாம்.[ மதியம் லஞ்சுக்கு இருவர் மட்டும் ஜோடியாக செல்லலாம்]

3.முப்பது வயதில் உங்கள் மனைவிக்கு தன் அழகும், இளமையும் மறைந்துப்போனதோ என்ற உணர்வு மேலோங்கி இருக்கும், அதனால் அடிக்கடி அவர்களை வர்னிக்கவும், பாராட்டவும், உற்ச்சாகப்படுத்தவும் தவற வேண்டாம்.
["எப்படிடா செல்லம், நான் உன்னை பொண்ணுபார்க்க வந்தபோ/ காதலிச்சப்போ இருந்ததைவிட இன்னும் அழகா, நசுன்னு இருக்கிற? உன்னைப்பார்த்தா இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மாதிரியா இருக்கு, காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான்டா இருக்கிற" - இப்படி அள்ளி விடுங்க ]

---------------------*------------------------------*---------------

[மேற்சொன்ன டிப்ஸில் ப்ராகட்டில் இருப்பது என் கருத்துக்கள்,
இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.]

January 24, 2008

மதுமிதா - 3

மதுமிதா -1
மதுமிதா - 2

எதிர்பாராமல் கால் தடுக்கி விழயிருந்த மது,
சுதாரித்துக்கொண்டு மாடிபடியின் கைப்பிடியினை பிடித்துக்கொண்டு தன்நிலைக்கு வந்தாள்.

கீழே ஹாலிலுள்ள சோஃபா , மாடி படியின் திருப்பத்திலிருந்து இறங்கும் போதே நன்குத் தெரியும்.

சோஃபாவில் சுரேஷ் அண்ணா............பக்கத்தில்........பக்கத்தில்......அருண்!!!!!!!!!!!!!


மதுவின் இதயமே வெடித்துவிடும்போல் வேகமாக படபடத்தது.
காண்பது கணவா? இல்ல நினைவா????

திகைப்புடன் சிலையாக மாடிப் படிகளில் நின்ற தன் மகளிடம் மதுவின் அம்மா,

" மது, சுபாவோட தம்பி அருண் வந்துருக்காப்ல, அமெரிக்காவிலிருந்து வாங்கிட்டு வந்த ஸ்வீட்ஸ் நமக்கு கொடுக்கனும்னு ஆசைப்பட்டதால சுரேஷ் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்"

அம்மா சொன்னது அரைகுறையாக காதில் விழுந்தது மதுவிற்க்கு.

"கைல புக்கோட வந்து, நீ எக்ஸாமுக்கு ரொம்ப படிக்கிறாப்ல ஸீன் போடுறியாக்கும்??" என சுரேஷ் அண்ணா கிண்டல் அடித்தான்.

மதுவுக்கு இன்னும் உடலில் நடுக்கம் குறையவில்லை.

" இங்கே வந்து உட்காருடா" அப்பாவின் வழக்கமான கணிவான குரல்.

நடந்தாளா , மிதந்தாளா என தெரியாமல் நடந்துச் சென்று அப்பாவின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள் மது.

"இது மதுமிதா, என்னோட பொண்ணு" என்று அப்பா அறிமுகம் செய்தார் அருணிடம்.

"ஹாய்" என்றான் அருண் பவ்யமாக.

ஃபோனில் செவிவழியாக தனக்குள் சென்று தன் உயிரோடு கலந்துவிட்ட குரல் .......
இன்று நேரிடையாக தனக்குள் தாக்கிய தாக்கம் தகதகப்பை உண்டாக்கியது மதுவிற்க்கு!

வாய் திறந்து பதிலுக்கு 'ஹாய்' சொன்னால், தன் குரலை கண்டுப்பிடித்து விடுவானோ? என்று தடுமாறி,
பரவாயில்லை 'ஹாய்' சொல்லுவோம் என்று நினைத்து வாய் திறந்து 'ஹாய்' சொன்னாள் மது.
வெறும் காத்து தான் வந்தது!!

/ 'அடப்பாவமே, மது என்னாச்சு உனக்கு' என்று மதுவின் மனதிற்க்குள் குரல் கேட்டது/

" பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்" என்று அம்மா சமையலறைக்குச் செல்ல,

" சித்தி, எனக்கு காஃபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேணும்" என்று கூறிக்கொண்டே சுரேஷ் அண்ணா அம்மாவின் பின்னால் சமையலறைக்குச் செல்ல,

அப்பாவின் செல் ஃபோன் அந்நேரம் அழைத்தது," எக்ஸ்கூஸ் மீ" என்று அப்பாவும் ஃபோனுடன் நழுவ,

இப்போது மதுவும், அருணும் மட்டும் ஹாலில்.

அருண் சொன்ன ஹாய்க்கு பதில் ஹாய் இப்போ ஒழுங்கா சொல்லிடலாம் என்று மது அருணைப்பார்த்து, புன்னகையுடன் மறுபடியும் 'ஹாய்' என்று சொல்ல ட்ரை பண்ண, அப்போழுதும் காத்து மட்டுமே வந்தது.

குறும்பு புன்னகையுடன் " என்ன பாட்டி வெறும் காத்துதான் வருதா??? ஃபோன்ல மட்டும் தான் பேச்சு வருமோ???" என்றான் அருண்.

அடப்பாவி..............உனக்கு என் 'பாட்டி' டிராமா எல்லாம் தெரியுமா??? என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே,

"என்ன.............என்ன...........சொல்றீங்க, புரியல எனக்கு" என்று தன் நடிப்பு திறனை ஒன்று திரட்ட முற்பட்டு தோற்றாள் மது.

"ஹலோ பாட்டி, ரொம்ப கஷ்டப்படாதீங்க, கூல்......கூல்" சிரித்துக்கொண்டே அருண் கூறினான்.

"எப்படி............எப்போ..........தெரியும் உங்களுக்கு" அசடு வழிந்தாள் மது

"ஹா ........ஹா........முதல் நாள் பாட்டி டிராமாவை காட்டிக்கொடுக்க கூடாதுன்னு நீ சொன்னதால சுபா என்கிட்ட சொல்லாம மறைசுட்டா, ஆனா எனக்கு டவுட்டா தான் இருந்தது, இ-மெயிலில் கேட்டேன் அவ கிட்ட, பதில் மெயிலில் எல்லாத்தையும் சொல்லிட்டா சுபா.
என் கிட்டவே வாலாட்ட நினைக்கிற லூட்டி 'நாய்குட்டி' யாருன்னு விபரம் சுபா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
உன் டிராமாவை எனக்கு தெரியாத மாதிரியே நானும் , அக்காவும் தொடர்ந்தோம்."

" ஹைய்யோ ரொம்ப ஸாரி........ஏதும் நான் தப்பா.......ரொம்ப ஒவரா.........குறும்பு பண்ணிட்டேனோ...........ஐ அம் ஸாரி" கெஞ்சலுடன் ஸாரி கேட்கவும் நா வரண்டது மதுவிற்க்கு.

"ஹா.......ஹா..........எல்லா வால் தனமும் பண்ணிட்டு இப்ப ஸாரியா?"

சிறிது மெளனத்திற்க்கு பின் , மீண்டும் தொடர்ந்தான் அருண்,

" உன் குறும்பை ரசிக்க ஆரம்பித்தேன், என் மேல பாட்டி காரெக்டரா நீ காட்டின கரிசனை, பாசம் எல்லாம் எனனை கவர்ந்தது. 'பாட்டி' ஃபோட்டோவை அனுப்பினா சுபா இ-மெயிலில், ................'பார்த்தேன், ரசித்தேன்'னு ஒரே வரியில சொல்லிட முடியாது"

இதுவரை தலைகுனிந்திருந்த மது, பேச்சை நிறுத்திய அருணை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"பார்த்தேன்.........மயங்கினேன்" என்று கண் சிமிட்டினான் அருண்.

சினிமாவில் பெண்கள் வெட்கப்படுபடுவதாக காட்டும் போது, கால் விரல் தரையில் கோலமிடுவதை கிண்டலடிக்கும் மதுவின் கால்விரல்கள் இப்பொழுது
அவள் வீட்டு பளிங்குத் தரையில் கோலமிட்டுக் கொண்டிருந்தது.

" என்ன பாட்டி, பேச்சே வரலியா?............வெட்கமோ???"

"நிஜம்மா.........உங்களுக்கு என்னை.........பிடிச்சிருக்கா?"

"இவ்வளவு நேரம் அதைத்தான மூச்சு விடாம சொல்லிட்டிருந்தேன், அப்புறம் என்ன கேள்வி, இப்படி கேட்கிறதுல
பொண்ணுங்களுக்கே ஒரு அலாதி இன்பம் போலிருக்கு.
உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப........பிடிச்சிருக்கு,
எத்தனை தடவை சொல்லனும்னு சொல்லு , சொல்லிடலாம்!!"

"இல்ல...........அது வந்து.........."

"நீ ஏன் இவ்வளவு டவுட்ஃபுல்லா கேட்கிறேன்னு எனக்கு புரியுது மது.
என் வாழ்க்கையில இன்னொரு பொண்ணுக்கு இனிமே இடமே இல்லைன்னு தான் நானும் வைராக்கியமாயிருந்தேன்,
ஆனா , என்ன மாயமோ தெரில, என் நெஞ்சுக்குள்ள நீ சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்ட ,..... நேர்ல பார்க்காமலே!"

வெட்கப் புன்னகையுடன் அருணைப்பார்த்துவிட்டு ,மீண்டும் தலை குனிந்தாள் மது.


"என் மனசுல உள்ளதை என் வீட்ல சொன்னேன், எங்க வீட்டுல எல்லாருக்கும் முழு விருப்பம். உன் அப்பா அம்மா வும் முழு சம்மதத்தை சொல்லிட்டாங்க. எல்லாத்தையும் 'பாட்டி'க்கு தெரியாம சீக்ரெட்டா வைக்க முடிவு பண்ணினேன்,
நான் உன்னை உன் வீட்டுல வந்து பார்த்து, 'பாட்டி'க்கு ஒரு இன்ப அதிர்ச்சிக் கொடுக்க ஆசைப்பட்டேன்,
இப்போ புரியுதா உன் அம்மா ஏன் 'தடா' போட்டாங்கன்னு"

முழுக்குடும்பமும் இதுக்கு ஒத்தாசையா? சே! இது தெரியாம அப்பா அம்மாகிட்ட ரொம்ப கோபப்பட்டுடேனோ,
"ஸாரிம்மா, ஸாரிப்பா" என்று கொஞ்சலுடன் தனக்குள்ளே மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள் மது.

தனக்கு மிக அருகாமையிலிருந்து வந்த Park Avenue After Shave லோஷனின் கிரங்கடிக்கும் வாசனை, மதுவை சிந்தனையிலிருந்து விடுபட வைத்தது .
அப்போதுதான் உணர்ந்தாள் மது, தனக்கு மிக அருகில், சோஃபாவில் அடுத்த இருக்கையில், தன் அப்பா அமர்ந்திருந்த அந்த இடத்தில் இப்போது அருண்.

இருவரது கண்களும் மொழியின்றி பேசிக்கொண்டன. தன் உருவத்தை அவன் கருவிழியில் கண்ட மதுவின் கண்ணம் சிவந்தது நாணத்தில்.
'ரோஜா வண்ண கன்னங்கள் ' என்று கவிதையில் எழுதும் கற்பனை வரிகள், மெய்யாகுவதை நேரில் கண்டு ரசித்தான் அருண்.

" 'பாட்டியின்' முகத்திரையை நானே திறந்து 'என் மதுவை' பார்க்க ஆசைப்பட்டேன், கோபமா??" என்றான் கெஞ்சலுடன்.


இல்லை என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாள் மது.

"பாட்டிக்கு.......ஸாரி என் 'மது'வுக்கு ஒரு சின்ன கிஃப்ட்" என்று சிறு மோதிர பெட்டியை திறந்து, அமெரிக்காவிலிருந்து மதுவிற்காக தான் வாங்கி வந்திருந்த ,மிடுக்குடன் மின்னிய மோதிரத்தை காட்டி,

"வில் யூ marry மி டியர்" என்றான் அருண்.

\ 'கிரங்கியது போதும் மது! வேக் அப் மது! முழிச்சுக்கோ' என்றது மதுவுக்குள் ஒரு குரல்/

தொண்டையை செருமி சரி செய்துக் கொண்டு,
"என்னப்பா ராசா, இப்படி கேட்டுட்டே???
இத...........இத ..........தான் எதிர்பார்த்தேன்!
இந்த வார்த்தை கேட்க 'பாட்டி' வேஷம் போட்டு திரிந்தேன்!!
உன் மனதில் இடம் பிடிக்க
தவமாய் தவமிருந்தேன்.............ராசா!!!!"

என்று கண் சிமிட்டி தன் மோதிர விரல் நீட்டிய மதுவின்
குறும்பு கொப்பளிக்கும் கண்களில்
காதலையும் கண்டு களித்தான் அருண்.

மதுவின் மனதில்.....

இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....

இதயத் துடிப்பு முன்பைவிட
வேகமாக துடிக்கின்றதே
அவனின் அழகிய குறும்பைக்
கடைகண் கொண்டு நோக்கையில்...


மோதிரத்தை அணிவிக்கையில்........மதுவின் மடியிலிருந்த புஸ்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தது, அதில் மது எழுதியிருந்த 'மதுமிதா அருண்குமார்' அவர்கள் இருவரையும் மேலும் பரவசப்படுத்தி வெட்கப்பட வைத்தது.

[முற்றும்.]



January 23, 2008

மனம் திறந்து பேசுகிறேன்...!!!




உன்னிடம் சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் மறைத்திருந்தேன்...
உன்னிடம் சொல்ல இதுவரை
ஏனோ ஒரு தயக்கம்
இன்று ...
தகர்த்தெரிந்தேன் தடைகளை!!



அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக...
என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!

நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;




நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?

கோபத்தில் சிதறடிக்கும் கனல் வார்த்தைகளையும்
பொருட்படுத்தாமல் புன்னகையுடன் என் தவறினை புரியவைப்பாய்!


சாதனையாக நான் கருதும் அற்ப காரியங்களுக்கு கூட
புகழ் மாலை சூடி உற்சாகமளிப்பாய்!


உன் சோகத்தை
உனக்குள் புதைத்து
இருள் விரட்டும் ஒளியாய்
என் சோகத்தை விரட்டி
என் மகிழ்ச்சியில்
நீ இன்பம் கொள்கின்றாய்!


உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..


அதனால் கல்வியில் கூட
உன் பாடப்பிரிவே எனதுமானது!


கிடைப்பதற்கரிய பொக்கிஷம்
உன் அன்பெனக்கு
ஆயுள்வரை காத்திடுவேன்
என் உயிர் கொண்டு!


நீ உதித்த கருவறையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?


ஐ லவ் யூ அண்ணா!!


[ என் அன்பு அண்ணனுக்கு இக்கவிதை சமர்பணம்]

January 22, 2008

லவ் பண்றீங்களா???



[படித்ததில் பிடித்திருந்தது......இங்கே பெண்களின் பார்வைக்கு!]

நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?

நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?

காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்.

நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.

அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள். இயல்பாகவே இருங்கள்.


உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும், ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.

தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.

மதுமிதா - 2

மதுமிதா -1

ஃபோனில் 'பாட்டியிடம்' தான் இந்தியா வர இருப்பதை தெரிவித்தான் அருண்.

"யப்பா ராசா, இப்பத்தான் உனக்கு இந்தியாவுக்கு வரணும்னு தோனிச்சா? உன் அக்கா குழந்தையை கூட நீ இன்னும் பார்க்கவேயில்லை, தாய்மாமன் நீ வந்துதான் பிள்ளைக்கு காது குத்தனும்னு உன் அக்கா இம்புட்டு நாளா பிள்ளைக்கு காது குத்தாம உனக்காக காத்துக்கிட்டு இருக்கு, சீக்கிரம் பத்திரமா வந்து சேரப்பா ராசா"



[நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது]

"சரிங்க பாட்டி, நீங்க அக்காவுக்கு பண்ற உதவி எல்லாம் அக்கா சொன்னா, அக்காவையும் குழந்தையையும் நல்லா பார்த்துக்கோங்க.
பாட்டி, அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் வாங்கிட்டு வரேன் உங்களுக்கு"

"பல் போன வயசுல நான் என்னத்த கேட்க போறேன்ப்பா, நீ என்ன வேணும்னு கேட்டதே போதும்பா ராசா, கடவுள் புண்ணியத்துல நீ பத்திரமா வந்து சேரு , அது போதும் எனக்கு"
என்று 'சென்டி டச்' போட்டாள் மது.


அருண் இந்தியா வரும் நாளும் வந்தது!
அருணை வரவேற்க அவன் பெற்றோர் திருச்சியிலிருந்து சென்னைக்கு சுபாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

சனிக்கிழமை மாலை மீனம்பாக்கம் வந்திறங்குகிறான் அருண். மதுவுக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. அண்ணியின் வீட்டிற்கு சனிக்கிழமை காலையிலேயே புறப்பட தயாரான மதுவை அவள் அம்மா தடுத்தாள்,

" அங்கே சுரேஷோட மாமனார், மாமியார் மத்த சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க, நீ இன்னிக்கு அங்கே போய் 'ஈ'ன்னு பல்லு காட்டிக்கிட்டு நிக்காதே, ஒழுங்கா வீட்டிலிருந்து திங்கட்கிழமை எக்ஸாமுக்கு படி"


அம்மா போட்ட 'தடா' மதுவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அம்மாவிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தாள், கெஞ்சிக் கூத்தாடியும் பார்த்தாள், ஆனால் ஏனோ அம்மா அன்று தன் பிடியிலிருந்து இறங்கவேயில்லை.அப்பாவிடம் போட்ட கொஞ்சல் ஜாலங்களும் அன்று பலனற்றுப் போனது.

கோபத்தில் தன் அறைக்கு வந்து கதவை சாத்திக்கொண்டு பாட புஸ்தகத்துடன் தன் படுக்கையில் சாய்ந்தாள் மது. கையிலிருந்த பென்சிலால் புக்கில் 'மதுமிதா அருண்குமார்' என்று எழுதி ரசித்த மதுவிற்க்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

கண்ணீரால் தன் தலையணையை ஈரமாக்கி விசும்பிக் கொண்டிருந்த மதுவின் செல் ஃபோன் சிணுங்கியது..........

தன் செல்ஃபோனை எடுத்தாள் மது, அண்ணி சுபாவின் எண்கள் பளிச்சிட்டது.

"ஹலோ அண்ணி"

"ஹே லூசு, ஏன் வீட்டுப் பக்கமே வரல"

"சும்மா தான் அண்ணி"

" ஏன்டி குரல் என்னவோ மாதிரி இருக்கு, தூங்கு மூஞ்சி, இப்பத்தான் தூங்கி எழுந்தியா? என்ன பண்ணிட்டு இருக்கிற வீட்டுல, சீக்கிரம் இங்க வா"

சுபா தன் தம்பி 3 வருஷம் கழித்து இந்தியா வரும் சந்தோஷத்தில் உற்ச்சாகத்துடன் பேசினாள்.
அவளிடம் எப்படி தன் அம்மா போட்ட 'தடா'வை சொல்வது என்று தடுமாறிய மது..

" அண்ணி எனக்கு மன்டே எக்ஸாம் இருக்கு, படிச்சுட்டு இருக்கிறேன், நாளிக்கு வரேனே..."

"சரிடா படி"

"அண்.....ணி...."

"என்னடா மது "

" உங்க ....தம்பி.....உங்க வீட்டூக்கு வந்ததும்,வீட்டுல வேலை செய்ற பாட்டி எங்கன்னு கேட்டா, அவங்க 3 நாள் லீவு போடுட்டு சொந்த கிராமத்துக்கு போய்ட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுங்க....ப்ளீஸ்"

"ஹா..ஹா...அடிப்பாவி, நீ சொல்ற பொய்க்கெல்லாம் என்னையும் உடந்தை ஆக்குறியா, அதெப்படி மது உனக்கு மட்டும் இப்படி ஐடியா எல்லாம் வருது?
சான்ஸே இல்ல, கலக்குறே போ"


அண்ணியின் கிண்டலை ரசிக்க முடியாமல் மதுவின் தொண்டையில் ஏதோ அடைத்தது. சனிக்கிழமை இரவு சென்னை வரும் அருண், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிக்கு ரயில் ஏறிடுவான், அதுக்கு முன் அவனை சந்திக்க முடியாமல் போய்விடுமே என்று ஒரு ஏக்கம், தவிப்பு மதுவுக்கு.

ஒவ்வொரு மணித்துளியும் யுகமாக செல்ல,
தவிப்புடனும், ஏக்கத்துடனும் அந்த நாள் நகர்ந்துக் கொண்டிருந்தது.


இரவு சாப்பிடும் வேளையில், தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே , சாப்பிட மனமில்லாமல் இருந்த மதுவின் காதுகளில், அவள் அப்பா அம்மாவின் உரையாடல் மூலம் , அருண் பத்திரமாக இந்தியா வந்துவிட்டான் என்ற வார்த்தைகள் தேன் போல் இனித்தது.


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு,

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, இன்று ஒரு நாள் தான் இருக்கிறது அருணை நேரில் பார்க்க,
வாய்ப்பு கிடைக்குமா?
அம்மா இன்னிக்கும் 'தடா' போட்டா?
அப்பா என் கெஞ்சலுக்கு மசியலீனா?
என்று ஆயிரம் கேள்விகளுடன் தன் எண்ணெய் குளியலை முடித்துவிட்டு வந்தவளிடம் அவள் அம்மா,

" நல்லதா டிரஸ் பன்ணிட்டு வா, நாளிக்கு உனக்கு பரீட்ச்சை இருக்கு, அதனால உன் பேர்ல அர்ச்சனை பண்ண போறேன் கோயிலுக்கு, நீயும் என் கூட வா" என்று கட்டளை போட்டு விட்டு இவள் பதிலுக்கு காத்திராமல் அம்மா மாடி படி இறங்கினாள்.

என்னிக்கும் இல்லாம இன்னிக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா எனக்காக அர்ச்சனை, நான் அண்ணி வீட்டிற்க்கு போக கூடாதுன்னு வேணும்னே அம்மா இப்படி பண்றாங்களோ? என்று அம்மாவின் மேல் செம கோபம் வந்தது மதுவிற்கு.

வேண்டா வெறுப்பாக தன் ஃபேவரைட் லாவண்டர் நிற சுடிதாரை அணிந்துக்கொண்டு, துப்பட்டாவை மாலையாக கழுத்தில் அணிந்துக் கொண்டு , [ அம்மாவுடன் வெளியில் செல்லும் போது துப்பட்டாவை ஒழுங்கா போடலீன்னா, திட்டு விழுமே!] அம்மா தன் அறையில் வைத்து விட்ட சென்ற மல்லிகைப் பூவை சூடிக்கொள்ள கண்ணாடி முன் வந்த மதுவிற்க்கு , பின்னலிடாத தன் நீண்ட கூந்தல் காற்றில் அசைய, லாவண்டர் கலர் அவளது சிவந்த மேனிக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்ட, சோகத்தின் மத்தியிலும் ஏதோ ஒரு கூடுதல் அழகு தன்னிடம் இருப்பதாக தோன்றியது.

தன் அழகை தானே ரசித்துக்கொண்டிருந்த மதுவுக்கு தன் அப்பா அழைக்கும் சத்தம் கேட்டது,

" மது கொஞ்சம் கீழே வாம்மா"

அப்பாவின் அன்பான குரல் கூட அன்று மதுவிற்க்கு ஏனோ எரிச்சலாக எரிந்தது.

அருணை பார்க்கவிடாமல் எல்லாரும் சதி செய்வதாக அவளுக்கு ஒரு பிரம்மை.

தன் துள்ளல் நடையை மறந்தவளாக, சுரத்தியற்ற நடையுடன் தன் அறையிலிருந்து மாடி படி இறங்கினாள் மது.

மாடிப்படியின் திருப்பத்தில் நொடி பொழுது கவனக்குறைவால், கால் தடுமாற........மது..........

['பாட்டி' மதுவிற்கு என்னவாயிற்று??
அருணை மது சந்தித்தாளா?? .........அடுத்த பகுதியில்]



மதுமிதா - 3

January 21, 2008

புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!

நீங்க ...
புதிதாக திருமணமான மணப்பெண்ணா?
விரைவில் மனவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் பெண்ணா?
இதோ உங்களுக்கான சில குறிப்புகள்..

*புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.

அதனால், என்ன சமையல் செய்தாலும் முதலிலேயே சமையல் குறிப்பை மனப்பாடம் செய்துடுங்க.
உதாரணத்திற்க்கு, சாம்பார் செய்யனும்னா, அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா?
[காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் பாடம் புரிஞ்சாப் பாடிச்சோம், மாங்கு மாங்குன்னு மனனம் செய்திட்டு எக்ஸாம் பேப்பர்ல கொட்டிட்டு, பாஸ் ஆகிடலியா - அது மாதிரிதான்]
சமையல் உங்களுக்கு அத்துப்பிடின்னு ஆக்ட் விடனும்னா இப்படி மனப்பாடம் செய்துட்டு சமையலறையில் கலக்குங்க.
உங்கள் கணவரும்," எவ்வளவு சுறுசுறுப்பா சமையல் புக் எதுவும் பார்க்காம சமைக்கிறா, நல்லா சமைப்பா போலிருக்கு" அப்படின்னு நினைச்சுட்டே சாப்பிட உட்காருவாரு. அப்போ உங்க சமையல் சொதப்பலா இருந்தாலும் ரொம்ப பாதிக்காது.
அப்படியே கொஞ்சம் புளி , உப்பு, காரம் ஏதாவது குறை சொன்னா, " ஸாரிங்க, 'எப்பவுமே' இந்த சாம்பார்ல உப்பு மட்டும் எனக்கு தகராராவே இருக்கு" அப்படின்னு 'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.

*உங்கள் கணவருக்கு ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு இருந்தால், நீங்களும் அவர் விரும்பும் விளையாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லீனா அவரோட விருப்பமான ஸ்போர்ட்ஸ் பத்தி அவரு உங்ககிட்ட பேசினா, 'பே'ன்னு நீங்க முழிச்சுக்கிட்டு இருக்கனும். கொஞ்சம் அது பத்தி தெரிஞ்சு வைச்சுக்கிட்டா 'நல்லா' தெரிஞ்ச மாதிரி ஆக்ட் விட்டுக்க வசதியாயிருக்கும்.

*கணவனுக்கு எது பிடிக்கும், அவருடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதை செய்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்றெல்லாம் மட்டும் தெரிந்து வைத்திருப்பது போதாது.
அவருக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷய்ங்களை வெறுக்கிறார், எதை செய்யும் போது அவருடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயம்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*திருமணம் ஆனவுடனே, உங்கள் கணவர் தன் நண்பர்களை விட்டு முழுவதுமாய் பிரிந்துவிட வேண்டும் என் எதிர்பார்க்கக் கூடாது. பேச்சுலர் லைஃபிலிருந்து அவர் மனநிலை புதிய திருமண பந்ததிற்க்கு வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
அவருடைய நண்பர்களை பற்றி அவர் உங்களிடம் பேசினால், அலட்ச்சியப்படுத்தாமல் கேளுங்கள். அவர் நண்பர்களும் அவருடைய வாழ்க்கையின் ஒரு பங்குதான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதில் நீங்கள் தன்னலத்துடன் நடக்க முயற்ச்சிக்க கூடாது, அதே வேளையில் உங்கள் இடத்தையும் விட்டுதரக் கூடாது.

*உங்களுடன் ஷாப்பிங் செல்வதற்க்கு உங்கள் கணவருக்குச் சலிப்பு ஏற்படுகின்றதென்றால், உங்கள் தோழிகளுடன் ஷாப்பிங் சென்று நீங்களே உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!

*நீங்க ரொம்ப 'சென்டிமென்டல்' டைப்பாக இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயற்ச்சியுங்கள், முடியவில்லையென்றால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமலாவது இருங்கள்.
ஏனென்றால், 'சென்டி','எமோஷனல்' அழுமூஞ்சி மனைவியினால் கணவனின் மனதை கொள்ளையடிப்பது கடினம்.
உணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* சொன்ன நேரத்திற்க்கு வீட்டிற்க்கு வந்து, அவரால் உங்களை வெளியில் அழைத்துச்செல்ல முடியவில்லையென்றாலோ, உங்கள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களை நினைவில் வைத்துக்கொள்ள அவர் தவறினாலோ, கத்தி ஆர்பாட்டம் பண்ணாமல் அமைதியாக பொறுமையுடன் இருங்கள்.
நீங்கள் சண்டைபோட்டு, அமர்க்களம் பண்ணினாலும் அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பது சாத்தியமில்லை.
'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.

வீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்!

சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்!

* அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.
உங்கள் கணவரிடம் அவருடைய அம்மா, மற்றும் குடும்பத்தாரை அவ்வப்போது மனதார பாராட்டுங்கள்,
பாராட்டுக்களுக்கு நடுவே உங்கள் புகார்களை தொடுத்தால், தாக்கம் அதிகமில்லாமல் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்புண்டு.

* எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,

'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'

மதுமிதா -1



'மது' என்று செல்லமாக அழைக்கப்படும் 'மதுமிதா' சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி,காம் இறுதியாண்டு படிக்கும் சுட்டிப்பெண். +2 வில் அறிவியல் பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் தன்னையும் தன் அண்ணன் சுந்தரைப் போல் சாஃப்ட்வேர் இஞ்சினியராக்கி கம்பியூட்டர் முன்னாடியே காலம் தள்ள வைச்சிருவாங்க என்று முன்னெச்சரிக்கையுடன் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்தாள் மது.

வாழ்க்கையை அதன் போக்கில் ஜாலியாக அனுபவிக்க நினைக்கும் ஓர் இளஞ்சிட்டு மது.

மதுவின் பெரியம்மா மகன் சுரேஷ் ஹைதரபாத்திலிருந்து வேலை மாறுதலாகி சென்னைக்கு தன் மனைவி சுபாஷினி, இரண்டு வயது குழந்தை அனுவுடன் வந்தான். மதுவின் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த அபார்ட்மெண்டில் குடியேறினார்கள் சுரேஷின் குடும்பம்.

சுபாஷினி என்ற 'சுபா' மதுவைப்போன்றே மிகவும் கலகலப்பான ஜாலி டைப். அவளும் பி.காம் பட்டதாரி என்பதால், மது அவளிடம் பாட சம்பந்தமாக டவுட் கேட்கப்போவதாக தன் அம்மாவிடம் டூப் விட்டு விட்டு, சுபாவுடன் அரட்டை அடிக்கச் செலவாள்.ஒத்த அலைவரிசையிலிருந்த அண்ணி சுபாவுடன் மிக எளிதாக பழகிவிட்டாள் மது.

சுரேஷ்-சுபா வின் திருமணம் சுபாவின் ஊரான திருச்சியில் நடைபெற்றபோது மதுவிற்க்கு ஸ்கூல் எக்ஸாம் இருந்ததால் அவள் செல்ல முடியவில்லை. சுபாவை சந்திக்க அதன்பின் மதுவிற்க்கு சந்தர்ப்பமே கிட்டவில்லை. இப்போதுதான் மதுவிற்க்கு சுபாவின் அறிமுகம், பழக்கம் எல்லாம், அதனால் அவர்களது திருமண ஆல்பத்தை பார்க்கவேண்டும் என நச்சரித்து சுபாவை அந்த கணமான ஆல்பத்தை மேல் அலமாரியிலிருந்து எடுக்க வைத்தாள் மது.

சுபா சமையலறையில் வேலையாக இருந்ததால், ஆல்பத்தில் புகைபடங்களிலிருந்த சுபாவின் சொந்தங்களை விவரித்து சொல்ல இயலவில்லை. மது தன் குடும்பத்தினரை மட்டும் புகைப்படங்களில் அடையாளம் கண்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த வயதிற்கே உரிய ஆர்வத்தில், 'எவனாவது பார்க்கிற மாதிரி நச்சுன்னு இருப்பானா கல்யாண கும்மலில்' என்று கண்களை அலைபாய விட்டாள்.

'பளிச்சென்று' அவன் முகம்...............சாதாரனமாக சைட் அடிக்கும் எண்ணத்துடன் புகைப்படங்களை துலாவிய கண்களில் அவன் பிம்பம் பட்டதும், ஏன் இந்த உணர்வு என்னுள் என வியந்தவளாக, சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
' சே, எல்லாம் வயசுக் கோளாறு' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு, அடுத்த பக்கத்தை புரட்டினாள், அங்கும் அவன் ஃபோட்டோ...........இதில் அழகானதொரு சிரிப்புடன்.



அவனைவிட்டு கண்கள் விலக மறுத்தது.
ஆண்களின் சராசரி உயரத்திற்கும் சற்று கூடுதலான உயரம்,
உயரத்திற்க்கு ஏற்ற உடல் எடை,
பரந்து விரிந்த தோள்கள் ஒரு கம்பீரத்தை கொடுத்தது,
மாநிறமான சருமம்,
தீர்க்கமான கண்களில் ஒரு காந்தம்,
புன்னகைக்கும் உதடுகள் ' புகைத்ததில்லை நான்' என சான்று தந்தது,
ஆணின் ஆசைகளின் அளவு கோலான 'மீசை' அளவான அளவுடன்....
மதுவின் ரசனையில் ஃபோட்டோவில் இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான் 'அவன்'.


"ஏய் மது , யாரடி அப்படி சைட் அடிக்கிற" கேட்டுக்கொண்டே சுபா வந்தாள்.

"அண்...ணி, இது ..........யாரு?" அவனை சுட்டிக்காட்டிக்கொண்டே, அவன் படத்திலிருந்து கண்களை விலக்காமல் கேட்டாள் மது.

சுபாவின் குரல் கம்மியது, முகம் மாறியது...

"அது என் தம்பி......அருண்"

"உங்க தம்பியா, நம்பவே முடியல அண்ணி, எப்படி உங்க தம்பியாயிருந்துட்டு அவரு மட்டும் இவ்வளவு அழகாயிருக்காரு?" என்று கண் சிமிட்டி கிண்டலடித்தாள் மது.

ஆனால் அண்ணி அதை ரசிக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது மதுவுக்கு என்னவோ மாதிரி இருந்தது.

" என்னாச்சு அண்ணி........ஏன் ஒருமாதிரி ஆகிட்டீங்க?"

பாணுப்பிரியாவின் சாயல், அவளது அதே பெரிய அழகு விழிகள் சுபாவிற்கு, அவ்விழிகளில் நீர் துளிகள் தெரித்தன.

ஆல்பத்தை மூடி வைத்துவிட்டு அண்ணியின் கரம்பிடித்து,

"ஆழாதீங்க அண்ணி, என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க.......அழாதீங்க ப்ளீஸ், யாராச்சும் அழுதா கூட சேர்ந்து அழத்தான் எனக்கு தெரியும், ஆறுதல் படுத்த தெரியாது......" என்று தன் அப்பாவியான குழந்தைத்தனத்துடன் கேட்க்கும் 'புன்னகை பூ' மதுவின் புன்னகையற்ற முகத்தைப் பார்க்க சுபாவிற்கு பரிதாபமாக இருந்தது.

தன் தம்பி அருணுக்கும், தன் தாய்மாமன் மகள் பவித்திராவுக்கும் வீட்டில் பெரியவர்களால் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்ததையும்,
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பியதையும்,
சுபாவின் தலை தீபாவளியன்று அருணும், பவித்திராவும் பைக்கில் செல்லும்போது விபத்தில் பவித்திரா பலியானதும்,
சில மாதங்கள் அருண் பித்தம் பிடித்தவன்போல் தன்னை மறந்து இருந்ததையும்,
குணமான பின் பெங்களூரில் அவன் வேலைப்பார்த்த கம்பெனியின் மூலம் அமெரிக்கா சென்று மூன்று வருடங்களாகியும் இந்தியா வர மறுப்பதையும் சொல்லி முடித்தாள் சுபா.

மதுவின் கன்னங்களில் நீர்தாரைகள் வழிந்தது. லூட்டி அடிக்கும் சிட்டிற்கு மனம் கணமானது.
கற்பனையில் கருவாக உருவான கனவு ஒன்று மறைந்து போகவா? வேண்டாமா? என்று தடுமாறியது மதுவின் நெஞ்சுக்குள்.

ஆல்பத்தில் பவித்திராவின் புகைப்படத்தை அண்ணி காண்பித்துக்கொடுக்க கண்டாள் மது...
கருப்பு ரோஜா..
கவர்ச்சி கண்கள்..
கட்டுடல் மேனி..
கிரங்கடிக்கும் புன்னகை
என்று பட்டுப் புடவையில் பளிச்சென்று 'இன்னுமொருமுறை திரும்பிப்பார்' என பார்க்கதூண்டும் அழகுடன் இருந்தாள் பவித்திரா.

-----------*----------*--------------*----------------

மதுவுக்கு செம்ஸ்டர் எக்ஸாம், வீட்டில் அப்பா அம்மா சொந்த ஊருக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் மது சுரேஷ் அண்ணா வீட்டில் தங்கினாள்.

" அவளோட சேர்ந்து நீயும் ஆட்டம்போடாம , அவளை ஒழுங்கா எக்ஸாமுக்கு படிக்கவை" என்று அண்ணிக்கு கட்டளையிட்டு விட்டு அண்ணன் ஆஃபீஸிற்க்கு சென்றான்.

அண்ணி குழந்தையை குளிப்பாட்ட பாத்ரூம் சென்று விட்டாள்.
சிறிது நேரத்தில் ஃபோன் மணி அடித்தது.

"அண்ணி, ஃபோன்..........கார்ட்லஸ் எடுத்துட்டு வரவா??" என்று கேட்டாள் மது.

" வேண்டாம் மது, அனு ரொம்ப அழறா, என்னால இப்போ பேச முடியாது, நீயே யாருன்னு ஃபோன்லன்னு கேளு" என்றாள் சுபா.

ரீசிவரை எடுத்த மது,
" ஹலோ " என்றாள்

"ஹலோ" ஆணின் அடிக்குரல்.......

"ஹலோ"

"ஹலோ, யார் இது"

"ஹலோ, ஃபோன் பண்ணினது நீங்க,யாருன்னு நீங்கதான் சொல்லனும்"

"ஹலோ, நான்........நீங்க யாருங்க" ஆண்குரலில் சிறிது எரிச்சல் இப்போது.

"ஹலோ, நீங்க யாரு, யாருகிட்ட பேசனும்னு சொல்லுங்க, நீங்க ஃபோன் பண்ணிட்டு , என்னை யாரு யாருன்னு கேட்டா என்ன அர்த்தம்?" பொரிந்தாள் மது..

"நான் .....என் அக்காகிட்ட பேசனும்"

"அக்காகிட்டனா, அவங்களுக்கு பேரு எல்லாம் இல்லியா? உங்களுக்காச்சும் பேரு இருக்கா, என்ன பேரு சொல்லுங்க???"


"யாருங்க நீங்க, கேள்வி மேல கேள்வி கேட்குறீங்க, என் அக்கா சுபாகிட்ட ஃபோன் கொடுங்க, நான் அருண் பேசுறேன்னு கூப்பிடுங்க அவளை" என்று படபடத்தான்.

ஆஹா...........இது அருண்.............அமெரிக்காவிலிருந்து!! எரிச்சலும் கோபமும் கலந்து பேசினாலும் நல்லாத்தான் இருக்கு அவன் வாய்ஸ். சரி நம்ம கலாட்டாவை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தவளாக,

"சுபாவோட தம்பி அருணாப்பா நீ, எப்படிப்பா இருக்க, அமெரிக்கா நல்லாயிருக்காப்பா?"

"ஹலோ நீங்க யாரு, நான் அமெரிக்காவுல இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்"

"உன் அக்கா சுபாதான் சொல்லிச்சுப்பா, நீ நல்லாயிருக்கியா ராசா??"

"நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க ப்ளீஸ்"

**இப்பத்தான் பையனோட குரல் 'ப்ளீஸ்' அப்படின்னு கொஞ்சம் இறங்கி வந்திருக்கு, விடாதே மது கண்டினியு** என்றது மதுவிற்க்குள் ஒரு குரல்!

"யப்பா அருணு, நான் இங்க உன் அக்கா வீட்டுல வேலை செய்யுற பாட்டி ராசா, அக்கா உள்ள குழந்தையை குளிப்பாட்டிட்டு இருக்கு, அதான் நான் ஃபோன் எடுத்தேன். அக்காகிட்ட ஏதாச்சும் சொல்லனும்னா என்கிட்ட சொல்லுப்பா, நான் சொல்லிடுறேன்"

"நீங்க.............நிஜம்மா..........வயசான பாட்டியா? உங்க பேச்சு கேட்டா அப்படி தெரியலியே?"

" என்னய்யா பண்றது, காலம் செல்ல செல்ல என் இளமையை மறைய வைச்சு முதுமை கொடுத்த கடவுள் என் குரலிலுள்ள இளமையை மட்டும் எடுத்துக்க மறந்துட்டான்பா"

"ஒஹோ...சரிங்க, நான் அப்புறமா பேசுறேன்னு அக்காகிட்ட சொல்லிடுங்க"

"சரிப்பா ராசா, உடம்ப பார்த்துக்க, நேரத்துக்கு சாப்பிடுப்பா சரியா?"

"சரிங்க"

"ஒரு நிமிசம் இருப்பா, உன் அக்கா வந்தாச்சு..........."

யாரு ஃபோன்ல என்று சைகையிலியே கேட்டப்படி அங்கு சுபா குழந்தையுடன் வர, ரீசிவரை கை வைத்து பொத்திக்கொண்டு தன் 'பாட்டி' டிராமாவை அருணிடம் காட்டிக்கொடுக்க வேண்டாமென கெஞ்சியபடி ஃபோனை சுபாவிடம் தந்தாள் மது.

மதுவின் குறும்பை ரசித்தபடியே, சுபா தன் தம்பி அருணிடம் ' பாட்டி' டிராமாவை காட்டிக்கொடுக்காமல், வீட்டில் வேலை செய்கிற பாட்டிதான் ஃபோன் பேசியதாக சொல்லி சமாளித்தாள்.

அதன்பின் மது, அருண் எப்போதெல்லாம் ஃபோன் பண்ணுவான் என்று நச்சரிக்க அரம்பித்தாள் சுபாவை. மதுவின் தொல்லை தாங்காமல் சுபாவும் அருணின் ஃபோனை முதலில் ' பாட்டி' எடுக்கவும் , பின் தான் பேசுவதுமாக வழக்கமாக்கிக் கொண்டாள்.



இவ்வாறாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அன்று ஒரு நாள் 'பாட்டி' ஃபோனில் தன் பாசத்தை பொழிந்தபோது அருண் ......
[தொடரும்]

மதுமிதா-2
மதுமிதா-3

January 20, 2008

அறிமுகம்...

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவராக ஜனவரி 21 முதல் ஜனவரி 27 வரை என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகத்திற்கு நன்றி!
நட்சத்திர பதிவுகளை தொடங்கும் முன், என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.......


கோயம்பத்தூரில் பிறந்து,வளர்ந்து, பொறியியல் பட்டப்படிப்பை முடித்தபின், அமெரிக்காவில் பட்டமேற்படிப்பை தொடர்ந்து வருகிறேன்.


அயல்நாடு பரிசளித்த தனிமையும், வெறுமையும், தமிழ்மீதிருந்த நாட்டமும் தமிழ் வலைதளங்களை படிக்க வைத்தது. என்னை வியப்படைய செய்த வலைப்பதிவர்களின் எழுத்தும், வலையுலக நண்பர்கள் தந்த ஆலோசனையும், என்னையும் ஒரு வலைதளம் தொடங்க உந்தியது.


சிறு வயதிலிருந்தே என் அப்பாவிடம் கதை கேட்கும் பழக்கம் எனது வழக்கம். கேட்ட கதைகளை பள்ளியில் தோழிகளிடம், மதிய உணவு இடைவேளையில் பகிர்ந்துக்கொள்ளும் போது, " எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த கதைகளை கூட , நீ சொல்லும்போது கேட்க நல்லாயிருக்கு, ஏன் நீயே கதை எழுத கூடாது?" என்று என் நெருங்கிய தோழி கூறியபோது நகைப்பாகயிருந்தது!


ஆனால், வலைத்தளம் ஆரம்பித்தபோது, பள்ளியில் அவள் கூறிய கருத்து என்னை ' ஏன் கதை எழுத முயற்சிக்க கூடாது' என சிந்திக்க வைத்தது, அதன் விளைவே எனது வலைத்தளத்தில் கதைகள் எழுதும் சிறுமுயற்சி.


இவ்வாரத்தில் நான் பதிவிடும் பதிவுகளை அவசியம் படியுங்கள், உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நிச்சயம் பின்னூட்டமிடுவீர்கள் என நம்புகிறேன்.



நட்புடன்,

திவ்யா.

January 17, 2008

அவள் வருவாளா??? - பகுதி 4



பகுதி -1 பகுதி -2 பகுதி -3


ராஹினியை நோக்கி வந்த ராஜா, அவளிடம்..

"என்னாச்சு?"

"அது.....வந்து..."-ராஹினி

"ஹும், ப்ரிபர்டா இல்லியா?" - ராஜா.

"ஹும்" - ராஹினி.

"சரி, ஆடிடோரியம் பின்னால இருக்கிற கேர்ள்ஸ் பாத்ரூம் பக்கம் வெயிட் பண்ணு, 5 மினிட்ஸ்ல வாங்கிட்டு வந்துடுறேன்" - ராஜா.


ராஹினிக்கு வியப்பாக இருந்தது, பெண்களின் 'அந்த நாட்கள்' அவள் எதிர்பாராத வேளையில் அவளை சந்திக்க, உடன் நடனமாடும் பெண்களிடம் உதவி கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் தினறிய தனது தவிப்பை, இவன் எப்படி கண்டுபிடித்தான்? சிந்தனையுடன் காத்திருந்தாள் ராஹினி.

பைக்கில் இருந்தபடியே ராஹினியிடம் 'பார்சலை' கொடுத்துவிட்டு சென்றான் ராஜா.

தன் 'வேலைகளை' முடித்துவிட்டு டான்ஸ் ஹாலுக்கு ராஹினி வந்தபோது, அங்கே டான்ஸ் குரூப்பில் உள்ள அனைவரும் கேன்டினிலிருந்து திரும்பி வந்திருந்தனர். ராஜாவிடம் நன்றி சொல்ல தருணம் கிடைக்கவில்லை ராஹினிக்கு.

'கரெக்ட் நேரத்துக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கிறான், ஒரு தாங்க்ஸ் சொல்லிடனும்' என்று நினைத்தவளாக டான்ஸ் ப்ராக்டிஸ் முடிந்ததும் ராஜாவை தேடினாள்.
பைக் ஸ்டாண்டில் அவன் மட்டும் இருந்தது வசதியாக போனது ராஹினிக்கு, தன் நன்றியை தெரிவிக்க.

பைக்கில் அமர்ந்திருந்த அவன் முன் போய் நின்றாள்,
"ராஜா.." - ராஹினி.

"ஹும்" - ராஜா.

"ரொம்ப.......தாங்க்ஸ்" - ராஹினி.

"ஹும்" - ராஜா.

ராஜா 'ஹும்' தவிர வேற எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாத்து ராஹினிக்கு ஏமாற்றமாக இருந்தது. 'செய்த ஹெல்புக்கு தாங்க்ஸ் சொல்லியாச்சு, அவ்வளவுதான்'என்று தன் வீம்புக்கு திரும்பியவளாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

"ராஹினி.......ஒரு நிமிஷம்" - ராஜா.

ராஜா அழைத்ததும், நின்று அவனைத் திரும்பி பார்த்தாள்...

" உனக்கு இன்னிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அன்னிக்கு ஸ்கூல்ல கல்பனாவுக்கு ஏற்பட்டது. அவ ஸ்கூல் யுனிபார்மும் ஸ்பாயில் ஆகிடுச்சு, க்ளாஸ்ல கேர்ள்ஸ் யாரும் அந்நேரம் இல்ல, அதான் என் பேண்ட் கொடுத்து ஹெல்ப் பண்ணினேன்.
உன்கிட்ட இது சொல்ல எவ்வளவோ ட்ரை பண்ணினேன், நீ கேட்கல.
இப்பவும் சொல்லிருக்க மாட்டேன், கல்பனாவை பத்தி உன் மனசுல இருக்கிற தப்பான எண்ணமாச்சும் மாறட்டும், உனக்கு வந்த நிலமை இன்னொரு பொண்ணுக்கு வந்ததை புரிஞ்சுப்பேன்னு தான் சொன்னேன்,................ குட் பை!" - ராஜா.

ராஹினியின் பதிலுக்கு காத்திராமல் மின்னலென பறந்தான் பைக்கில்.


'கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்!'


என்பது சுரீரென ராஹினிக்கு உறைத்தது. தன் அவசர முடிவினால் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம் என உணர்ந்த ராஹினிக்கு " என்னை மன்னிச்சிடு ராஜா" என்று கத்த வேண்டும் போல் இருந்தது.


ராஜாவின் பைக் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த அவளது கண்களில் நீர் தழும்பி வழிந்தது. கண்ணிரைத் துடைத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்த ராஹினியை உரசிக்கொண்டு பைக்கை நிறுத்தினான் ராஜா.

சன் க்ளாஸை கழட்டிவிட்டு, தலை முடியை கோதிவிட்டபடி, ராஹினியை பார்த்தான்.
மீண்டும் கண்களில் துளிர்த்த நீரைக் கட்டுபடுத்த முடியாமல் திணறிய ராஹினியிடம்,

"ஹலோ.......நோ அழுகாச்சி ப்ளீஸ்! என் பைக் மிரரில் பார்த்தேன் நீ கண்ணீர் துடைச்சிக்கிறதை, பொண்ணு ஃபீல் பண்றான்னு தெரிஞ்சதும் உடனே U turn போட்டு வந்துட்டேன்........ராகு..........ஸாரி ராஹினி" - ராஜா.

"ஹே........ராகுனே கூப்பிடு...........ஸாரி.............ஸோ..........ஸாரி..........ப்ளீஸ் மன்னிச்சிடு" - கெஞ்சலுடன் ராஹினி.

ராஹினியின் கெஞ்சல் குரல் கிரங்கடிக்க, காதலும் குறும்பும் கலந்த அவன் பார்வையே அவளது மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை உணர்த்தியது.




காற்றின் மொழியே..
ஒலியா..இசையா..
பூவின் மொழி...
நிறமா...மணமா..

கடலின் மொழி..
அலையா...நுரையா..
காதல் மொழி...
விழியா...இதழா..

இயற்க்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை,
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதருக்கு மொழியே தேவை இல்லை.




கண் அசைவிலேயே தன் பைக்கின் பின் இருக்கையை ராஜா சுட்டிக்காட்ட, வெட்கப்புன்னகையுடன் அவனது பைக்கில் ஏறினாள் ராஹினி.
காதல் பயணம் ஆரம்பமானது........!!!



[முற்றும்]

January 15, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!

'ஒன்றே ஒன்று' - பதிவுகளில் பிடித்தது 'தொடர் ஓட்டத்தில்'இணைத்த வினையூகிக்கு என் நன்றி!

2007 ல் நான் எழுதிய பதிவுகளில், நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு 'தாய்மை'.

இப்பதிவினை பற்றி ஒரு சில கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்....




குழந்தை 'தத்தெடுப்பு' பற்றி என் ஆழ்மனதிலுள்ள எண்ணம்!

அநாதை குழந்தைகளை பார்க்கும் போது மனதில் ஏற்படும் கணம்!

அம்மா அருகில் இருந்தபோது அம்மாவின் அருமை தெரியாமல் அல்லல் மறந்து இருந்துவிட்டு,அந்நிய மண்ணில் தினம் அம்மாவை நினைந்து என் கண்கள் பனிக்கும்போது ஏற்படும் ரணம்!

தாயின் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண் குழந்தையின் மனநிலையை உணரவைத்தது!

இவ்வுணர்வுகளின் சங்கமம் கொடுத்த கருவில் உருவானது தான் இந்த கதை. என் கற்பனையில், என் எண்ணங்களுக்கு உருகொடுத்து உருவாக்கும் போது, கவிதை எழுதும் எண்ணம் இல்லவே இல்லை.......என்னையுமறியாமல் கதையின் முடிவில் நான் எழுதிய அக்கவிதை, நான் இதுவரை எழுதிய எழுத்துக்களில் மிகவும் பிடித்த ஒன்று.


அதனால் 'தாய்மை' எனது பதிவுகளில் சிறந்த ஒரு பதிவாக கருதுகிறேன்.

நான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்பும் பதிவர்கள்..

1.கவிஞர் நவீன் ப்ரகாஷ்.
2.ஜொள்ளு பாண்டி.
3.நாகை சிவா.
4.சதீஷ்.
5.சச்சின் கோப்ஸ்.

January 14, 2008

அவள் வருவாளா??? - பகுதி 3



பகுதி -1

பகுதி -2
பெண்கள் பாத்ரூம் கதவை திறந்து வெளியில் வந்தது 'ராஜா',
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தாள் ராஹினி, அவனும் திகைப்புடன் முழித்துக்கொண்டிருக்க, அவனை தொடர்ந்து அவன் பின்னாலிருந்து அவனுடன் படிக்கும் கல்பனா வெளிவந்தாள்.இருவரையும் கண்கொட்டாமல் பார்த்து மேலும் அதிர்ந்தாள் ராஹினி.

கல்பனா அணிந்திருந்தது ராஜாவின் ஊனிஃபார்ம் பேண்ட், ராஜா அவனது ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸில், இது ராஹினியின் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் பல மடங்கு அதிகரித்தது.
கல்பனாவும் ராஜாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற,
"சீ" என்று அருவருப்புடன் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து ஒடிவிட்டாள் ராஹினி, ராஜா கூப்பிட்டும் அவள் நிற்கவில்லை.

ராஹினி வீட்டில் அனைவரிடமும் என்ன உளறி வைக்கப்போகிறாளோ, இவள் போட்டுக்கொடுக்கும் முன் இவளை தடுக்க வேண்டும் என விரைவாக ராஹினியின் வீட்டிற்கு சென்றான் ராஜா.

"அத்தை........ராகு.....எங்கே?" -ராஜா.

"ஸ்கூல்ல இருந்து பேய் அரைஞ்சாப்பல மிரண்டு போய் வந்தா, ரூம்ல போய் கதவு சாத்தினவதான், இன்னும் டிபன் சாப்பிட கூட வெளில வரலபா ராஜா, நீ போய் என்னாச்சுன்னு கேட்டு, அவளை கூப்பிட்டுட்டு வா, நீயும் இங்கேயே டிபன் சாப்பிடலாம், நான் ரெடி பண்றேன்" - ராஹினியின் அம்மா.

வெகு நேரம் கதவை தட்டின பிறகு ராஹினி ரூம் கதவு திறந்தாள்.

"இப்ப எதுக்கு..........இங்க வந்த நீ....." - ராஹினி

"ராகு , நான் சொல்றத கேளு....ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா......." - ராஜா

"சீ......பேசாதே, உன்னை பார்க்க கூட எனக்கு பிடிக்கல" - ராஹினி.

"ப்ளீஸ் ராகு, ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றத கேளு, அப்புறம் கத்து" - ராஜா.

"அதான் நானே கண்ணாலே பார்த்தேனே....சீ.......நினைக்கவே அருவருப்பாயிருக்கு, ஏன் உனக்கு இப்படி போகுது புத்தி........ஸ்கூல்லயே இதெல்லாம்.....சே" - ராஹினி.

"என்னைப்பத்தி நீயே எப்படி இப்படி நினைச்சுட்டே ராகு " - ராஜா.

"யாராச்சும் இப்படிப்பட்டவன் ராஜான்னு என்கிட்ட சொல்லிருந்தா,'என் ராஜா' அப்படிபட்டவன் இல்லன்னு அடிச்சு சொல்லிருப்பேன், ஆனா நானே பார்த்துட்டேன் .....சே.........எப்படி...........எப்படி ராஜா..........நீ இப்படி, என்கிட்ட ஒருநாள் கூட நீ அத்துமீறி நடந்துக்கிட்டதில்லையே........அப்ப........அதெல்லாம் வேஷமா???" - ராஹினி.

"ராகு, என்ன நடந்ததுன்னு ஃபர்ஸ்ட் கேளு........நீயே எதாச்சும் உளறாதே" -ராஜா
"இதுக்கு மேல நீ பண்ண கன்றாவிய விளக்கமா என்கிட்ட சொல்லவேற போறியா, ஒன்னும் தேவை இல்ல போ" - ராஹினி.

"அங்க என்ன சண்டை, எதுக்கு ரெண்டு பேரும் கத்திட்டு இருக்கிறீங்க?" - ராஹினியின் அம்மா கிட்சனிலிருந்து.

"ராகு......நீயா.....ஏதோ நினைச்சுட்டு வீட்ல அம்மாகிட்ட உளறி வைக்காதே....ப்ளீஸ்" - ராஜா.

"ஒன்னும் கவலைப்படாதே....நீ பண்ணின அசிங்கத்தை என் வாயால யார்கிட்டவும் சொல்ல மாட்டேன். தெரியாத்தனமா உன் மேல இத்தனை வருஷம் வைச்ச அன்புக்காக.......இதையாச்சும் பண்ணி தொலைக்கிறேன்" - ராஹினி.

"தாங்க்ஸ் ராகு.........." - ராஜா.

"ஹலோ, இந்த ராகுன்னு கூப்பிடுறத இத்தோடு விட்டுரு, இனிமெ உனக்கும் எனக்கும் எதுவும் கிடையாது. நானும் உன்கிட்ட பேச போறதில்ல.................நீயும் என்கிட்ட பேச ட்ரை பண்ணாதே" - ராஹினி.

"ராகு...........ஸாரி.......ராஹினி,ஒரு மினிட் என்ன சொல்றேன்னு......." - ராஜா.
"தட்ஸ் இட்.......எண்ட் ஆஃப் அவர் ஸ்டோரி" - ராஹினி.

அன்றோடு ராஜா - ராஹினிக்குள் விரிசல் விழுந்தது.

கல்பனா ராஹினியிடம் தனியாக பேச முயற்ச்சித்த போதும் ராஹினி காச்சு மூச்சென்று கத்தி கலபனாவை அலட்ச்சியப்படுத்தினாள்.

இரண்டு வருட பிரிவுக்குப்பின் இப்போது கல்லூரி நடனப்போட்டியில் அவனுடன் சேர்ந்து ஆட மனம் ஒப்பாத ராஹினி கல்லூரியில் வகுப்பிலிருக்கையில், டிபார்ட்மெண்ட் H.O.D அழைப்பதாக தெரிவித்தார் லெக்ச்சுரர்.

H.O.D யை பார்க்க அவர் அறையினுள் நுழைந்தாள் ராஹினி. அங்கு அவளுக்கு முன்பாகவே ராஜா நின்றுக்கொண்டிருந்தான் பவ்யமாக. H.O.D பேச ஆரம்பித்தார்..

"ஸோ யு ஆர் ராஹினி ஃப்ரம் ஃப்ர்ஸ்ட் இயர்?"

"யெஸ் ஸார்" - ராஹினி

" நீ ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவேன்னு ஸ்டுடன்ஸ் சொன்னாங்க. நெக்ஸ்ட் மன்த் நடக்கப்போற கல்ச்சுரல் காம்பிடேஷன் ல நீ டான்ஸ் இவண்ட்ல பார்டிஸிபேட் பண்ணு.
This is Raja from 3rd year, very good dancer. Join him in the dance group. Hope you both will do your level best and bring honour to our department, Good luck, you may go to your classes now" - H.O.D

H.O.D யை எதிர்த்து மறுப்பேதும் சொல்ல முடியாமல் " யெஸ் சார்" என்று ஆமோதித்துவிட்டு, இருவரும் அவ்வறையை விட்டு வெளியேறினர். வெளியில் வராண்டாவில் கைக்கட்டியபடி வெற்றிப்புன்னகையுடன் கவிதா,



"கவி, பெருசா எதையோ சாதிச்சுட்டதா நினைப்பா, இதுவும் உன் வேலைதானா?" - ராஹினி.

"Shhh........ஹலோ மேடம் இது H.O.D ரூம், மெதுவா பேசு" - கவிதா.

"ஒ.கே ஃபைன், நான் டான்ஸ் ஆட ஒத்துக்கிறேன். ஆனா இந்த ஒரு தடவை மட்டும் தான். இந்த டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ற டைம்ல என்கிட்ட எந்த வம்பும் வைச்சுக்க வேணாம்னு சொல்லிவை அவன்கிட்ட" - ராஹினி.

ப்ராக்டீஸ் நடக்கிற ஒரு மாத டைம் எனக்கு போதும் உனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்க என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே.....

"டான்ஸ்ல ஜோடியே தவிர வேற எந்த சம்பந்தமும் அவ கூட வைச்சுக்க போறதில்லைன்னு சொல்லு கவி" - ராஜா.

ஹப்பா, ஒரு வழியா ரெண்டு பேரையும் சம்மதிக்க வச்சாச்சு என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கவிதா.

டான்ஸ் ப்ராக்டீஸ் படு ஸ்பீடாக நடந்தது. ராஜா- ராஹினி இருவரின் நடனத்திறமையைப் பார்த்து டான்ஸ் மாஸ்டர் மோஹன் அசந்துப்போனார்.

ராஜாவின் இளமை துள்ளும் ஆடலும்,
ராஹினியின் அழகிய முகபாவனைகளும்,
இருவருக்குள்ளும் மறைந்திருக்கும் 'கெமிஸ்டிரி'யின் வெளிப்பாடும் அவர்களது நடனத்தை, குழுவில் உள்ள அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது.

நடனப்போட்டிக்கு முன்பே இந்த ஜோடியின் நடனம் பற்றி ஒரு பரபரப்பு கல்லூரியில் பரவ ஆரம்பித்தது.

"இந்த ஆண்டு 'டேலண்ட்ஸ் நைட்' மற்றும் 'ஹார்மனி' கலைநிகழ்ச்சியிலும் இந்த ஜோடிதான் தூள் கிளப்ப போகுது என்று மாணவர்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

இவ்வாறு பெரும் பரபரப்பை உருவாக்கிக்கொண்டு நடனப்போட்டிக்காக் பயிற்ச்சி மேற்கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் ராஹினியினால் ராஜாவுக்கு ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை. அவளுக்கே உரித்தான நளினமும், வேகமும் அவளது நடனத்தில் தவறியது அன்று, ராஜாவும் அதனை கவனித்தான்.

அனைவரும் கேன்டீனுக்குச் சென்று டீ குடித்துவிட்டு வந்து, பின் நடனப்பயிற்ச்சியை தொடரலாம் என மாஸ்டர் அறிவிக்க்க, அனைவரும் மாஸ்டருடன் டான்ஸ் ஹாலிலிருந்து வெளியேறினர்.

ராஹினி மட்டும், தான் கேன்டீனுக்கு வர விரும்பவில்லை என கூறிவிட்டாள்.
அனைவரும் ஹாலிலிருந்து சென்ற சிறிது நேரத்தில், ராஹினி தன் ஹாண்ட் பேக்கில் ' எதையோ' தேடிக்கொண்டிருந்தாள்,

டான்ஸ் ஹாலின் கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு திரும்பிய ராஹினி அங்கு ராஜாவைப் பார்த்து திடுக்கிட்டாள்.

டான்ஸ் ஹாலில் ராஹினியும் ராஜாவும் மட்டும்..........திகைப்பும் சிறிது பயமும் நிறைந்தவளாய் ராஹினி விழிக்க,

ராஜா ராஹினியை நோக்கி வந்தான்.....


[தொடரும்]

பகுதி - 4

January 10, 2008

அவள் வருவாளா??? - பகுதி 2




பகுதி -1

ராஹினியை டான்ஸ் ஆட சம்மதிக்க வைக்க வேண்டுமென்றால், அவள் அம்மாவிடம் 'ஐஸ்'போட்டு தாஜா பண்ணிட வேண்டியது தான், ராஜாவுடன் சேர்ந்து ஆடப்போகிறாள் என்பதை இப்போதிக்கு சொல்லாமல் அவளை சம்மதிக்க வைச்சு, முதல் நாள் ப்ராக்டிஸுக்கு மட்டும் அவளை வரவைச்சுட்டா போதும் , அப்புறம் அப்படியே மாட்டி விட்டுடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டே ராஹினியின் வீட்டை அடைந்தாள் கவிதா.

"ஆன்டி ,ஆன்டி, எங்க டிபார்ட்மென்ட் கல்ச்சுரல் காம்பிடேஷன்ல வின் பண்றதே இந்த டான்ஸலதான் இருக்கு, ஸ்கூல்ல எவ்ளோ பெரிய டான்ஸர் இவ, ப்ளீஸ் ஆன்டி இந்த ஒருதடவை எங்க டிபார்ட்பெண்டுக்காக இவளை டான்ஸ் ஆட சொல்லுங்க ஆண்டி. சீனியர்ஸ் இருக்காங்களே, பசங்க ரவுசு பண்ணுவாங்களேன்னு எல்லாம் கவலை பட வேணாம் ஆன்டி, நானும் அந்த டான்ஸ் குரூப்ல இருக்கிறேன், பொண்ணுங்க மட்டும் தான் ஆடுறோம் ஆன்டி, எல்லாரும் என்னோட ஃப்ரண்ட்ஸ் தான் ஆன்டி, ப்ளீஸ் ஆன்டி, அவளை நாளிக்கு ப்ராக்டிஸூக்கு வர சொல்லுங்க ஆன்டி!" ஒரு ஆயிரம் 'ஆன்டி'யும்,'ப்ளீஸ்' என்று கெஞசலும் போட்டு ஆன்டியை கவுத்தி, ஒருவழியாக ராஹினியை சம்மதிக்க வைத்தாள் கவிதா.

மறுநாள் ஈவினிங் க்ளாஸ் முடிந்ததும், கவிதா சொன்னபடி ஆடிடோரியத்துக்கு பின்னால் இருக்கும் டான்ஸ் ஹாலுக்கு வந்தாள் ராஹினி.

ராஜா அங்கு இருப்பான், அவனுடன் தான் சேர்ந்து தான் டான்ஸ் ஆட போகிறோம் என்றும் சற்றும் தெரியாமல் மெதுவாக டான்ஸ் ஹால் கதவை திறந்தாள் ராஹினி.

அவளுக்கு முன்பே அங்கு வந்து சேர்ந்திருந்த சீனியர்ஸ் அனைவரும், கவிதா செய்திருந்த ஏற்பாட்டின்படி பலத்த வரவேற்பு கொடுத்தனர் ராஹினிக்கு. அவர்கள் அன்பில் திக்கு முக்காடி போன ராஹினியின் கண்களில், எதையும் கண்டுக்கொள்ளாமல் தள்ளி நின்ற ராஜா தென்பட்டான்.


இவன் எதுக்கு இங்க வந்திருக்கிறான்? சே, இவன் மூஞ்சியை பார்த்துட்டேதான் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணனுமா? என்று ராஹினி யோசித்துக்கொண்டிருந்த போது, கோபாலின் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் மோஹன் தன் இரு சகாக்களுடன் அங்கு நடனப்பயிற்சி அளிப்பதற்காக வந்தார். அனவரின் கவனமும் அவர் மேல் திரும்பியது.

எந்த பாட்டிற்க்கு நடனம் ஆடலாம், யார் யார் எல்லாம் ஆடப்போகிறார்கள், தினமும் எந்த நேரத்தில் ப்ராக்டீஸ் ஆரம்பிக்கும் ,எவ்வளவு நேரம் பயிற்ச்சி நடக்கும் என்று டான்ஸ் மாஸ்டர் அடிக்கிக் கொண்டே போனப்போதுதான் ராஹினிக்கு தெரிந்தது தான் ராஜாவுடன் செர்ந்து ஆடப்போகிறோம் என்று, அதிர்ந்தாள்.

அனைவரின் முன்பும் தன் மறுப்பை தெரிவிக்க முடியாமல் தினறியவள், கவிதா தான் இதுக்கெல்லாம் காரணம், எங்கே அவ என்று தேடினாள், அவள் யார் பின்பாகவோ மறைந்துக்கொண்டாள்.

ஒருவழியாக டான்ஸ் இன்ஸ்டரக்ஷனோடு முதல் நாள் ப்ராக்டீஸ் முடிந்தது. அனைவரும் கலைந்துச் சென்றனர். கவிதாவை தேடி அவசரமாக வெளியில் வந்தாள் ராஹினி, தன் ஸ்கூட்டியில் எஸ்கேப் ஆக பைக் ஸ்டாண்டில் ரெடியாக இருந்த கவிதாவிடம் சென்றாள் ராஹினி.

ராஹினி கத்தி தீர்க்க போகிறாள் என திட்டவட்டமாக உணர்த்தியது அவளது வேகநடையும், கோபத்தில் சிவந்திருந்த அவளது முகமும். 'கடவுளே! காப்பாத்து' என்று கவிதா வேண்டி முடிப்பதற்குள் ராஜாவும் கவிதாவை தேடி அங்கு வந்து சேர்ந்தான்.
"ஐயோ! கடவுளே , இரண்டு பேருகிட்டவும் ஒரே நேரத்தில் மாட்டிக்கிட்டேனா!!" என்று மிரண்டு விழித்தாள் கவி.

"ஹே கவி, என்ன கொழுப்பா உனக்கு, நீயும் அவனும் சேர்ந்து டிராமா போடுறீங்களா? பொண்ணுங்க மட்டும் ஆடுற டான்ஸ்ன்னு பீலா விட்டே நேத்து, இங்க பார்த்தா கண்டவனும் டான்ஸ் ஆட வந்திருக்கான்" - ராஹினி.

"ஹலோ, மைண்ட் யுவர் வர்ட்ஸ்" என்று ராஹினியிடம் கூறிவிட்டு,
" கவிதா, நான் ஃப்ர்ஸ்டே சொன்னேன் இதெல்லாம் ஒத்துவராதுன்னு, அப்புறம் எதுக்கு நீ சாமி ஆடுறவள எல்லாம் டான்ஸ் ஆட கூப்பிட்டுட்டு வரே?" - ராஜா.

"இவன் பெரிய 'நடனப் புயல்'ன்னு நினைப்பு, இவன் சங்காத்தமே வேணாம்னு நான் ஸ்கூல்லயே ஒதுங்கிட்டேன், திரும்பவும் வம்பு பண்ண வேணாம்னு சொல்லிவை கவி" - ராஹினி.

"இவகிட்ட வம்பு பண்ணனும்னு இங்க யாரும் அலையல, எல்லாம் உன்னால வந்தது கவி" - ராஜா சீறினான் கவியிடம்.

"ஹெ, ரெண்டு பேரும் ஏன் இப்படி கத்துறீங்க, கூல் டவுன் ப்ளீஸ்! ஒரு நிமிஷம் ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க ரெண்டு பெரும், டான்ஸ் மாஸ்டர்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன், இதோ வந்துடுறேன்" என்று நைஸாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள் கவி.


"ஹே, லிஸன், கவிகிட்ட நான் ஆல்ரெடி சொல்லிட்டேன் என்னால உன்கூட ஆட முடியாதுன்னு. ஸோ நான் ஏதோ டிராமா போட்டேன்னு நினைச்சுட்டு குதிக்காதே" - ராஜா.

"நீ டிராமா போட்டாலும் சரி, டால்டா போட்டாலும் சரி, நான் உன்கூட ஆடமாட்டேன், நீ ஸ்கூல்ல பண்ணின கன்றாவியெல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சியா, சீ......உன்னைப்பார்த்தாவே அருவருப்பா இருக்கு எனக்கு" - ராஹினி.

"இதான்.....இந்த அவசர புத்தி தான் எல்லாத்துக்கும் காரணம். உன் திமிரு, வாயாடிதனம், கோபம் எல்லாம் எப்போ உன்னைவிட்டு போகுதோ, அப்பதான் நீ உருப்படுவ, அதுவரைக்கும் உன்கிட்ட நான் என்ன எக்ஸ்ப்ளேன் பண்ணினாலும் உன் மரமணடைல ஏறாது" - ராஜா.

"என்னைப்பத்தி, என் புத்தியை பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உன் வேலை பார்த்துட்டு போடா" - ராஹினி.

" ஏய்....'டா' போட்டு பேசினா, மூஞ்சியப் பேத்துருவேன் , ஜாக்கிரதை" - ராஜா.

"என்ன ஓவரா மிரட்டுர? போடா.......பொறுக்கி" - ராஹினி.

"என்னடி சொன்ன..........??" - ராஜா.

"ஏன் நான் இன்னொருவாட்டி சொல்லிக்கேட்கனும் ஆசையா?................பொறுக்கி.........பொம்பளை பொறுக்கி!!" - ராஹினி.

"ஷட் யுவர் பிளடி மவுத், சீ.........நீ திருந்தவே இல்ல, திருந்தவும் மாட்டே.........உன்னை பார்த்தாலே வெறுப்பாயிருக்கு" - ராஹினி சொன்ன கணல் வார்த்தைகள் அவன் நெஞ்சை சுட, அவளை 'பளார்' என அரைய துடித்த கரங்களை கட்டுப்படுத்திக்கொண்டு தன் பைக்கில் வேகமாக பறந்தான் ராஜா.

சீறிக்கொண்டு புறப்பட்ட அவன் பைக் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்த ராஹினிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் ஸ்கூல்லில் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது...

ராஹினி ராஜாவின் மாமா மகள், இருவரது வீடும் சில தெருக்கள் தள்ளி அருகாமையில் இருந்தது. சிறு வயதிலிருந்தே தங்கள் மனதில் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் பிரியத்தை தங்கள் கிண்டல் , கேலி, சண்டைகள் மூலம் பரிமாறிக்கொண்டனரே தவிர வெளிப்படையாக இருவரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. எப்படியும் இவர்களது திருமணத்திற்கு பிற்காலத்தில் இருவரது வீட்டிலும் நிச்சயம் 'க்ரீன் சிக்னல்' தான் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

ராஹினி, 10வது படிக்கும் போது ராஜா அதே பள்ளியில் 12 வது படித்தான். இருவருக்கும் அவ்வருடம் அரசு தேர்வு இருந்ததால், சாயங்காலம் அவ்வப்போது ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கும்.
அவ்வாறு ஒரு நாள் ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து ராஹின் தன் வீட்டிற்கு திரும்பும் முன் பெண்கள் பாத்ரூமிற்கு தனியாக சென்றாள். யாருமற்ற வராண்டாவில் தன்க்கு பிடித்த பாடல் ஒன்றை சத்தமாக முனுமுனுத்தப்படி சென்றாள்.
பெண்கள் பாத்ரூமின் மெயின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பது தெரியாமல், கதவை முழுபலத்தோடு திறக்க முயன்றாள் ராஹினி.
அதே வேளையில், உள்ளிருந்து யாரோ கதவை திறந்து வெளியில் வந்தார்கள், அப்போது...........


[தொடரும்]

அவள் வருவாளா?? - பகுதி 3

அவள் வருவாளா??? - பகுதி 4

January 07, 2008

அவள் வருவாளா??? - பகுதி 1





கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரி வளாகம், கணினி துறை கட்டிடத்தின் படிகளில், அத்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சிலர், வகுப்புகள் முடிந்ததும் சாய்ங்கால வேலையில் குழுமியிருந்தனர்.

"ஹே மச்சி, இந்த வருஷ இன்டர் காலேஜ் கல்ச்சுரல் காம்பிடேஷன் அடுத்த மாசம் 22 ஆம் தேதிடா" - விக்ரம்

"ஆமாம்டா, நோட்டீஸ் போர்ட்ல பார்த்தேன்டா. இந்த இயரும் நம்ம டிபார்ட்மெண்ட்தான் ஷீல்ட் வின் பண்ணனும்டா" - கோபால்.

"நம்ம ராஜா இருக்கிறான்டா கலக்குறதுக்கு! டான்ஸ், பாட்டு போட்டி, ஸ்கிட்[குறு நாடகம்] எல்லாத்திலேயும் புகுந்து திறமை காட்டி வின்பண்ணிடுவான்டா, ஸோ, நோ வொரீஸ்! போன வருஷம் போட்ட மாதிரி ஒரு டான்ஸ் போட்டு தூள் பண்ணிடலாம்டா மச்சிஸ்" - பிரதீப்.

"ராஜாவை பத்தி நாம பேசுறப்போ அவனே கரெக்ட்டா வந்துட்டான் பாருடா, எப்புவும் போல கூட ரெண்டு ஃபிகரு கூட கடலை வருத்துட்டே வர்ரான்டா மாப்பிள்ளை" - விகரம்.

ராஜா தன்னுடன் வந்த உடன் படிக்கும் பெண்களுக்கு விடை கொடுத்துவிட்டு, தன் நண்பர்களை நோக்கி வந்தான்.

"ஹாய்டா மச்சிஸ், என்னடா பேசிட்டு இருக்கிறீங்க" - ராஜா.

"வாடா மச்சான், நம்ம காலேஜ் 'இன்டர் காலேஜ் கல்சுரல் காம்பிடேஷன்' பத்திதான்டா பேசிட்டு இருந்தோம். போன வருஷம் மாதிரி இந்த இயரும் நீயும் பூஜாவும் ஜோடி சேர்ந்து, நாம ஒரு குரூப் டான்ஸ் போட்றலாம்டா ராஜா" - விக்ரம்.

"ஓ! ஷூயுர், நோ ப்ராப்ளம்! பூஜாகிட்ட இது பத்தி கேட்டீங்களா?" - ராஜா.

"நம்ம பஞ்சாபிக் குதிரை பூஜா மாட்டேன்னா சொல்லிட போறா! ஆனாலும் உனக்கு மச்சம்டா மாப்பிள்ளை, நம்ம காலேஜ் சூப்பரு ஃபிகர் பூஜாதான், அவ கூட இந்த இயரும் சேர்ந்து ஆட போறேடா" - கோபால்.

"அதுல மட்டுமாடா ராஜா மச்சக்காரன், நாம ஒருத்தியாவது லுக்கு விடமாட்டாளான்னு ஹோப்ஸ் காலேஜ் ரோட்ல ஜொள்ளுவிட்டுகிட்டு தான் திரிய முடியுது, ஆனா ராஜா கூட எப்பவும் இரண்டு மூனு பொண்ணுங்க கடலை போட்டுக்கிட்டே தான் அவன் வலம் வர்ரான், அதெப்படி மாப்பிள்ளை உனக்கு மட்டும் சிட்டுகள் சிக்குது" - பிரதீப்.

"ஏன்டா இப்படி பொருமுறீங்க, பொண்ணுங்கிட்ட 'ஜொள்ளு லுக்கு' விடாம ஃப்ரெண்டிலியா பேசிப்பாருங்கடா, நல்லா பேசுவாங்க, அதுதான் என் டெக்னிக்" - ராஜா.

அந்நேரம் அவர்கள் வகுப்பில் படிக்கும் பூஜா, மற்றும் ஹரினி, சங்கிதா அங்கு வந்துவிட...

"வாம்மா எங்க செல்ல பஞ்சாபிக் குதிரை, உன்னைத்தான் தேடிட்டு இருந்தோம்" - கோபால்.

"ஹாய் guys! செல்லம் சொல்லாதெ சொல்லுச்சு, செல்லம் சொன்னா அடிக்கும் நான். என்னை எதுக்கு தேடுச்சு நீங்க" - பூஜா.

"அம்மா தாயே, உன்னை செல்லம்னு சொல்லல போதுமா. ஆனா அந்த நமீதா மாதிரி 'கொஞ்சும் தமிழ்' பேசி எங்களை கொல்லாதே தாயே" - கோபால்.

"ஹே பூஜா, as last year, this year too we are gona have 'inter college cultural competition', are you willing to participate as my pair in the dance event" - ராஜா.

"Oh No!! Sorry Raja.....will be going to Mumbai next month, to attend my sister's wedding, so I wont be able to praticipate, sorry guys!!" -பூஜா.

"ஹே! என்ன பூஜா இப்படி டிமிக்கு கொடுக்கிற" - அனைவரும் அதிர்ச்சி ரியாக்க்ஷன் கொடுக்கும் நேரத்தில் பூஜாவின் செல் ஃபோன் அழைக்க, அவள் 'எக்ஸ்கூஸ்மீ' என் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.





"ஏன் பூஜா கூட மட்டும் தான் ராஜா டான்ஸ் ஆடுவானா? வேற யாரு கூடவும் ஆடமாட்டானா?" - கவிதா.

"ஆஹா.......கவி! உனக்கு உள் மனசுல ராஜா கூட சேர்ந்து ஆடனும்னு ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே ஆசை......நீயும் ராஜாவும் ஸ்கூல் டேய்ஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே, அப்போ நிறைவேறாத ஆசை இப்போ பூஜா நழுவியதால் நிறைவேறுதா??" - பிரதீப்.

"அட சீ, வாய் மூடு! நான் அவன் கூட சேர்ந்து ஆடுறதுக்காக சொல்லல, நம்ம டிபார்ட்மெண்ட தான ரெப்ரஸண்ட் பண்றோம், ஏன் நம்ம ஜூனியர் பொண்ணுங்க யாராச்சும் ஆடக்கூடாது??" - சொல்லிக்கொண்டே ஒரக்கண்ணால் ராஜாவை பார்த்தாள் கவிதா.

அவள் யாரை சொல்லவருகிறாள் என புரிந்தவனாக கோபப்பார்வை பார்த்தான் ராஜா.

"ஓ! தாரளாமா நம்ம ஜூனியர் பொண்ணு ஆடலாமே" - கோபால்.

"நம்ம ஸ்கண்ட் இயர் வனிதா மேல ஆல்ரெடி ராஜாக்கு ஒரு கண்ணு, ஸோ அவளை இவனோட கோர்த்து விட்டுரலாம்டா, என்ன சொல்றே ராஜா?" - பிரதீப்.

" ஏன் ஸ்கண்ட் இயர்ஸ் மட்டும் தான் நமக்கு ஜூனியர்ஸா?, ஃபர்ஸ்ட் இயர்ஸ் இருக்கிறாங்களே!!" - கவிதா.

கவி இப்படி சொன்னதும், ராஜாவின் முகம் கோபத்தில் அதிகம் சிவந்தது!

"ஹே கவி, ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுங்க பத்தி ஒரு விபரமும் தெரியாதே, அவங்க காலேஜ்க்கு வந்தே ஒரு மாதம் தான் ஆகுது, எந்த பொண்னு நல்லா ஆடும்னு தெரிலியே, உனக்கு யாராச்சும் தெரியுமா கவி?" - விக்ரம்

" ஆமாம் விக்கி, என்னோட ஸ்கூல் ஜூனியர், நம்ம ராஜாவோட கசின் ராஹினி நம்ம டிபார்ட்மென்ட் ஃப்ர்ஸ்ட் இயர்ல ஜாயின் பண்ணியிருக்கா, சூப்பர் குட் டான்ஸர் அவ , ஸ்கூல்ல அவளோட டான்ஸ் ரொம்ப பாப்புலர்! பரதம், வெஸ்டர்ன், குச்சுபிடி எல்லாம் அவளுக்கு அத்துபிடி!! உங்க பஞ்சாபிக்குதிரை எல்லாம் பிச்சை வாங்கனும் அவ டான்ஸுக்கு" - கவி.

ராஜா எதையும் கவனிக்காததுபோல், கவிதாவை ஒரு முறை முறைத்துவிட்டு,அவ்விடம் விட்டு நகர ஆரம்பித்தான்.

" கவி, ராஜாவோட கசின் நம்ம காலேஜ்ல படிக்கிறாளா?? சொல்லவே இல்லடா ராஜா...........ஆமா கவி, கசின்ன்னா என்ன முறை அவ இவனுக்கு?" - கோபால்.

"கோபாலு........ராஹினி நம்ம ராஜாவோட மாமா பொண்ணு, அப்போ என்ன முறைன்னு நீயே புரிஞ்சுக்கோ" - கவி.

"அப்படி போடு.........அட்ரா சக்கை! மாப்பிள்ளை உன் முறைப்பொண்ணு இங்கன நம்ம டிபார்ட்மெண்டல்யே படிக்கிறா, சொல்லாம்லயே மறைச்சுட்டியே ராசா, நியாயமாடா இது?" - அனைவரும் ராஜாவை கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

" கவி எதுக்கு இப்படி மாட்டிவிட்டு வேடிக்கை பாக்குற, அவ கூட எல்லாம் என்னால ஆட முடியாது, அந்த ராங்கி பிடிச்சவ ஒத்துக்கவும் மாட்டா, ஸ்கூல்லோட முடிஞ்ச வம்பை இங்கயும் தொடர வைச்சுடாதே, இந்த பேச்சை இத்தோட மறந்திடு, அவளை பத்தி பேசி என் கோபத்தை கிளப்பாதே" -
கோபத்தில் சீறி விட்டு , தன் பைக்கை நோக்கிப் போகும் தங்கள் நண்பன் ராஜாவை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்...

[ராஜா ஏன் ராஹினியின் மேல் வெறுப்பில் இருக்கிறான்?,
அவர்களுக்குள் என்ன பிரச்சனை?........
இருவரும் சேர்ந்து ஆடுவார்களா கல்லூரி நடனப் போட்டியில்?............


வரும் பகுதிகளில்!!!]

பகுதி -2

January 03, 2008

எனக்கொரு வரம்கொடு....

[படித்ததில் பிடித்தது, சில மாற்றங்களுடன் இவ்வருட முதல் பதிவாக இங்கே...]

"விஜய்... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகணுமா...?"

"ஆமா சந்தியா...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி"
"ஹும்,சரி விஜய், ஆனா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்" கண்களில் எட்டிப்பார்த்த கண்ணிரை மறைக்க முயன்றேன்.
"சந்தியா...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான் ஆகணும்."

விஜய்...என்னோடு வேலை செய்யும் அன்பு நண்பன்.
அறிவு, அழகு, திறமை, தைரியம் அனைத்திற்க்கும் சொந்தக்காரன். எல்லாம் இருந்தும் தன்னடக்கத்தின் தளபதி இவன்..

என்னை போன்ற ஒருவளுக்கு கிடைத்த அபூர்வ தோழன், உண்மைதான்.
விஜயைப் பற்றி எதைச் சொல்வது, என் கதைகளின் எழுத்துக்களை அதிகம் நேசிப்பதை சொல்வதா..?
இல்லை என் மன வருத்தத்திற்கு நம்பிக்கை வார்த்தைகளை மருந்தாய் கொடுத்ததை சொல்வதா..?

என்னோடு வேலை செய்யும் நண்பர்களின் கேலியான பார்வைக்கும், பேச்சுக்கும் கொதித்தெழுந்து சாட்டையடி கொடுத்ததை சொல்வதா..?
இல்லை...வண்டியில் செல்லும்போது விபத்து ஒன்றில் அடிபட்டு கிடக்கும்போது, ஓடோடி வந்து இரத்தம் கொடுக்க ஆளாய் பறந்ததைச் சொல்வதா..?

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் இதயத்தில் படமாய் ஓடியது. ஆனால் இன்று தன் தந்தையின் சுமை இறக்க வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை.
நினைவுகள் என்னுள் ஓடிக்கொண்டிருக்க இடமறித்தார் விஜய்.


"சந்தியா...என்னோட சித்தப்பா வெளிநாட்டில் இருக்கிறார். எல்லாம் அவருடைய ஏற்பாடுதான். அப்புறம் ஒரு விசயம்..."

விஜயை கூர்ந்து கவனித்தேன் ..

"சந்தியா...நீ மனச தளர விடக்கூடாது. எப்பவும் தைரியமா இருக்கணும். ஆபிசுல யார் என்ன சொன்னாலும் அதைப் பத்தி கவலைப் படாதே. நிறைய எழுது. நீ பெரிய ஆளா வரணும். என்னோட ஆசை அதுதான். திரும்பவும் நாம் சீக்கிரம் சந்திக்கலாம்"

விஜய் சொல்லச் சொல்ல கண்ணீர் பெருக்கெடுக்க எனக்கு காட்சிகள் மங்கலாய் போக...

"ப்ளிஸ்! அழாதே..." எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியாது தடுமாறினார் விஜய் கண்ணீரோடு.

நிறைய...நிறைய பேச வேண்டுமென துடித்தேன். ஆனால், ஏதோ ஒரு பாரம் என்னுள் அழுத்தியது. பிரியாவிடை கொடுக்க மனமில்லாமல் விடை கொடுத்துவிட்டு வந்தேன்.

என் அறைக்குள் வந்ததும் ஒரு தாளை எடுத்து எழுதத் துவங்கினேன்.

"இனி
உன் காலடிச் சுவடுகளைக் கூட
நான் காண இயலாது."

இதயத்தில் அழுத்திய எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே போனேன். முற்றுப் புள்ளி வைத்துத்தானே ஆக வேண்டும். இறுதியாய்...

"அன்புத் தோழனே...
இனியொரு பிறப்பு உண்டெனில்
நீ உருவெடுக்கும் கருவறையில்
எனக்கோர் இடம் கொடு.
ஊனமில்லாமல் பிறக்க..."

இரண்டரை வயதில் தாக்கிய போலியோவால் நடக்க முடியாமல் சுருங்கிய கால்களோடு, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் துளிகள் எனது எழுத்துக்களை அவசரமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.