February 29, 2008

மாமாவின் மனசுல...[பகுதி -1]

"இங்க பாருங்க மாமா, இனிமே 'சொந்தம் விட்டு போக கூடாது, பந்தம் பிரிஞ்சுடக்கூடாதுன்னு' டயலாக் பேசிட்டு உங்க பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வர்ர வேலை வைச்சுக்காதீங்க, சொல்லிட்டேன்"

"என்னமா ராஜி கண்ணு, இப்படி பேசுறே, பாட்டி சாகுற வரைக்கும் உனக்கும் என் பையன் ரவிக்கும் கல்யாணம் முடிக்கனும்னு ஆசைப்பட்டுடே இருந்தாங்களேம்மா"

"பாட்டி அந்தக்காலத்து ஆளு, அப்படித்தான் சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுவாங்க, scientific ஆ இப்படி சொந்தத்துல கட்டிக்கிறதெல்லாம் நல்லதில்ல, பொறக்குற குழந்தைக்கு குறைகள் இருக்க வாய்ப்பு நிறைய இருக்காம், தெரிஞ்சுக்கோங்க மாமா"

"என்னடி இது, மாமான்னு ஒரு மரியாதை கூட இல்லாம எதிர்த்து எதிர்த்து பேசுறே. என் அண்ணன் பையன் ரவிக்கு என்னடி குறைச்சல், அவனை கட்டிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறே"

"ஆமாம்மா, உன் அண்ணன் பையனுக்கு எதுவுமே குறைச்சல் கிடையாது, எல்லாமே ஜாஸ்தி..........திமிரு ஜாஸ்தி, கோபம் ஜாஸ்தி, தலைக்கணம் ஜாஸ்தி, உயரம் ஜாஸ்தி"

"பாருங்கண்ண உங்க முன்னாடியே ரவியை எப்படி பேசுறான்னு, எல்லாம் இவ அப்பா கொடுக்கிற செல்லம்"

"விடும்மா மரகதம், சின்ன புள்ள வெகுளியா பேசுது. எல்லாம் கல்யாணம் ஆகி எங்கவீட்டுக்கு வந்துட்டா சரியாகிடும்"

"என்ன மாமா, விளையாடுறீங்களா? நான் இங்கே கல்யாணம் வேணாம்னு கத்திட்டு இருக்கிறேன், நீங்க என்னடான்னா உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்தா சரியாகிடும்ன்றீங்க. கேட்டுக்கோங்க மாமா, நான் மட்டும் உங்க பையனை கட்டிக்கிட்டேன்னு வைங்க, உங்களுக்கு சோறு போடாமா மூலையில உக்கார வைச்சு கஞ்சிதான் ஊத்துவேன்"


"அடிப்பாவி, எங்கண்ணனுக்கு கஞ்சிதான் ஊத்துவேன்னு என் முன்னாலேயே சொல்றே, உனக்கு வர வர வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சுடி"

"குழந்தையை திட்டாதேமா மரகதம், மாமான்ற உரிமையோட பேசுறா, நிச்சயத்துக்கு நல்ல நாள் பார்க்கனும், மாப்பிள்ளைக்கிட்ட கேட்டு சொல்லு மரகதம்"

" மாமா உங்களுக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா? நான் இவ்வளவு சொல்லியும் நிச்சயத்துக்கு நாள் குறின்னு உங்க தங்கச்சிக்கு மந்திரம் ஓதுறீங்க! ' என் பையன் கம்பியூட்டர் இஞ்சினியர்'ன்னு பெருசா பீத்திப்பாங்களே அத்தை, அவங்களையே கம்பியூட்டர் இஞ்சினியர் பொண்ணா, கொஞ்சம் உயரமான பொண்ணா பார்க்க சொல்லுங்க உங்க பையனுக்கு, நான் எல்லாம் வெரும் பிகாம் தான், குட்டச்சி குட்டச்சின்னு என்னை கிண்டல் அடிப்பான் உங்க பையன், ஸோ அவனுக்கு 'நெட்டச்சி'யா ஒரு பொண்ணை பாருங்க, என்னை ஆள விடுங்க மாமா"

பட படவென ராஜி பொரிந்துத் தள்ளிக்கொண்டிருக்க, ராஜியின் அப்பா வீட்டிற்குள் வந்தார்.

அனைவரும் எதுவுமே நடவாதது போல் கப்சிப்பென்று அமைதலானார்கள்.

சிறிது நேரம் பேசியிருந்து விட்டு மாமா ஆலந்துரையில் உள்ள தன் வீட்டிற்கு புறப்பட்டார். புறப்படும் முன் சமயலறையில் தன் தஙகையிடம் ராஜி-ரவி திருமண ஏற்பாடு பற்றி பேசிவிட்டு சென்றார்.

மாமா கணேசன் ஆடிட்டராக இருந்தவர், தன் அப்பா அம்மாவின் மறைவுக்கு பின் , 4 வருஷத்திற்கு முன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவையை அடுத்த ஆலந்துரையில் பண்ணை வீட்டிலேயே செட்டிலாகி, விவசாய நிலன்களை கவனித்துக் கொள்கிறார்.



தன் ஒரே தங்கை மரகதத்தின் மூத்த மகள் ராஜியை தன் மகன் ரவிக்கு மணமுடிக்க வேண்டுமென மனம் நிறைய ஆசை கணேசனுக்கு.

'இந்த ராஜி பொண்ணு இப்படி அடம் பிடிக்கிறாளே, எப்படி சம்மதிக்க வைக்க போறா என் தங்கச்சி, மாப்பிள்ளை என்ன பதில் சொல்லுவாரோ? என சிந்தனையுடன் தன் வீட்டிற்குள் நுழைந்தவர், வாசலில் இருந்த Nike Shoe வை பார்த்ததும் தன் மகன் ரவி Bangalore லிருந்து வந்திருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டார்.

'இவன் அடுத்த சனி-ஞாயிறு தானே ஊருக்கு வரேன்னு சொன்னான், இந்த வாரமே வந்திருக்கான், என்னவா இருக்கும்?' யோசனையுடன் உள் நுழைய இருந்தவரின் காதில் , உள்ளே அவர் மனைவி கல்யாணியும், மகனும் உரத்த சத்தமாய் பேசுவது காதில் விழுந்தது.

"ஏன்மா அப்பாவுக்கு வேற வேளையே இல்லியா, பொண்ணு கொடு , பொண்ணு கொடுன்னு எதுக்கு அந்த வீட்டுக்கு போய் நிக்கிறாரு"

"அதானடா, நான் சொன்ன எங்கே கேட்கிறார், சீக்கிரம் கல்யாணத்தை நிச்சயம் பண்ணனும், அவ ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சதும்னு ஒத்தக் காலுல நிக்கிறாரு, அதான் ஃபோனை போட்டு இந்த வாரமே உன்னை இங்க வரவைச்சேன்"

"அவ படிச்சு முடிச்சா என்ன , முடிக்காட்டி எனகென்ன, அந்த வாயாடியை எவன் கட்டிப்பான். என் தலையில கட்டிவிட பாக்குறார் அப்பா"

"அப்பா வந்ததும், கட் அண்ட் ரைட்டா சொல்லிடு ரவி. அவ வேற ஆளு பார்க்க வெள்ளையும் சொள்ளையுமா அழகா இருக்கிறாளேன்னு உன் மனசுலயும் முறைப்பொண்ணு அவ மேல ஒரு ஆசை இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்டா. அந்த திமிரு பிடிச்சவளை மட்டும் நீ கட்டிக்கிடா என்னை அண்ட விடமாட்டா, வந்துப்பார்னு வரிஞ்சுக்கட்டிகிட்டு நிப்பா"


"ஆமாம்மா, நம்ம ருக்மணி கல்யாணத்துக்கு அவகுடும்பம் ஊருக்கு வந்திருந்தபோ, அவளும் அவ தங்கச்சியும் சேர்ந்து என்னா அலிச்சாட்டியம் பண்ணினாங்க தெரியுமா. நம்ம வரதனை உண்டு இல்லைன்னு பண்ணிடாளுங்க , ராட்சஸிங்க!"

"ஆமாம்டா, இவரு தங்கச்சி பெத்த இரண்டு பொண்ணும் அடங்காபிடறிங்கடா, அதுலயும் இந்த இரண்டாவதுகாரி அட்டகாசம் தாங்கலின்னு அவ அப்பா ஹாஸ்டல சேர்த்துட்டாராம்டா"

"இவளுங்களை எல்லாம் ஹாஸ்டல்ல சேர்க்க கூடாதும்மா, ஜெயில்ல போடனும், அப்பாவுக்கு தான் அவரோட தங்கச்சி பொண்ணுங்க மேல எப்பவுமே ஒரு தனி பாசம், திருந்தவே மாட்டாருமா"


"கரெக்ட்டுடா அவரு மனசு ஃபுல்லா இப்ப உனக்கும் ராஜிக்கும் கல்யாணம் பண்றதை பத்திதான் அடிச்சுக்குதுடா"

"பாட்டி திதிக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்திருந்தபோ, ராட்சஸி சூடா காப்பிய ஈளிச்சுக்கிட்டு என் கைல கொடுத்து போட்டு, நல்ல செமத்தியா ஒரு அரை வாங்கி கட்டிகிட்டா. அது இன்னமும் அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ரோஷக்காரி, கோபத்துல சொன்ன மாதிரியே அதுக்கப்புறம் அத்தை நம்ம வீட்டுக்கு வந்தாலும் இவ வரமாட்டா பார்த்தியாம்மா"

"அப்படியே ரோஷத்தோட இருந்துட்டு போட்டும்டா"

"ஆமாம்மா"

தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்க கணேசன் ஹாலுக்குள் நுழைந்தார்.

"என்னப்பா ரவி எப்ப வந்த?"

"இப்ப.......இப்பதான்பா"

"அடுத்த சனி-ஞாயிறு தான் வருவேன்னு சொன்ன"

"ஆ.......ஆமாம்.....அம்மாவை பார்க்கனும் போல இருந்தது, அதான்........"

"சரிப்பா, சாப்பிட்டியா?"

"இல்ல.......இனிமேதான்"

"சரி, கல்யாணி இனிப்பா ஏதும் கொண்டுவாம்மா, நல்ல செய்தி சொல்லனும்"

"என்ன.........என்னங்க செய்தி"

"என் தங்கச்சி மக ராஜிக்கும் நம்ம ரவிக்கும் நிச்சயத்துக்கு நாள் குறிச்சேட்டேம்மா"

"ராஜி....அவ...ஒத்துக்கிட்டாளா"

"கல்யாணம்னு சொன்னதும் வெகுளி பொண்ணுக்கு அவ்ளோ வெட்கம், மாமா மாமான்னு என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டா இப்போவே"

அம்மாவும் மகனும் அதிர்ச்சியில் விழித்தனர்.

"அப்பா......."

"என்னப்பா ரவி"

"அப்பா.....எனக்கு இந்த கல்யாணத்துல இஷடம் இல்ல"

"என்னப்பா சொல்ற.....ஏன்?"

"இஷ்டம் இல்ல.......வேண்டாம், அவ்ளவுதான்"

"அதான் ஏன்னு கேட்குறேன்பா ரவி"

"நான்......நான் Banglore ல ஒரு பொண்ணை விரும்புறேன்பா"

'அடப்பாவி ராஜியை கட்டிக்க மாட்டேன்னு அப்பாகிட்ட சொல்லுன்னு வீட்டுக்கு வரவழைச்சா, 'யரையோ' காதலிக்கிறேன்னு குண்டு தூக்கி போடுறியே' என ரவியின் அம்மா குழப்பத்துடன் மகனை நோக்கினாள்.

"ரவி......என்ன.......சொல்ற....."

நெஞ்சை பிடித்துக்கொண்டு கணேஷன் சோஃபாவில் சாய்ந்து, தன் நிலை மறந்தார்.
மூர்ச்சையடைந்து விழுந்த அப்பாவை கைத்தாங்களாக பிடித்து,

"அப்பா........அப்பா.......என்னாச்சுப்பா.....கண்ணைத்திறங்கபா" என ரவி கதற,

என்னங்க...........என்னங்க" என்று கல்யாணி அரற்ற.......

[தொடரும்]

மாமாவின் மனசுல - பகுதி 2

மாமாவின் மனசுல - பகுதி 3

மாமாவின் மனசுல - பகுதி 4


February 26, 2008

நிலவே என்னிடம் நெருங்காதே....!



காதலை சொல்வதை விட ,நம்மிடம் வெளிப்படுத்தப்பட்ட காதலை ஏற்க முடியாத நிலையை, காதலை வெளிபடுத்திய நபரிடம் அவரது மனம் புண்படாமல் எடுத்துரைப்புது மிகவும் கஷ்டம்

பெரும்பாலும் பெண்கள் தங்களிடம் காதலை வெளிபடுத்தும் ஆணிடம் தனக்கு காதல் இல்லையெனில், நேரடியாக தங்கள் எண்ணத்தை, முடிவை தெரிவித்து விடுவார்கள். பயமும், வெறுப்பும் கலந்த அந்த உணர்வை ஆணிடம் சற்று கடுமையாக கூட வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதில்லை.

தனக்கு வந்த லவ் லெட்டரை ஸ்கூல் பிரின்சிபலிடம் கொடுத்து பையனை மாட்டி விட்டு அவமான படுத்துவது, ஆபிஸ்ல மேலதிகாரி கிட்ட போய் தன்னிடம் propose செய்த பையன போட்டு கொடுக்கிறது. இப்படி பல immatured செயல்கள் எல்லாம் பெண்கள் கோபத்தில் செய்வது, பயத்தினால் அந்த காதலை உதறி தள்ளும் வழி தெரியாமல் செய்வதாகும்.

ஆண்கள் அனைவரும் காதலுக்காக ஏங்குவது போலவும், கையில் ரோஜாபூவுடன் ஜொள்ளு விட்டுகொண்டு திரிவதாகவும், "காதலில் உருகி மருகி" கவிதைகள் எழுதுவது போல் தோன்றினாலும், தற்காலத்தில், பெண்களிடம் நட்புடன் பழகும் ஆண்கள் எத்தனையோ பேர் தங்களிடம் ஒரு பெண் வெளிப்படுத்தும் காதலை எப்படி மறுப்பது, தன் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்பதை அப்பெண்ணின் மனம் வருந்தாமல், நட்பு உடையாமல் எப்படி உணர்த்துவது என தெரியாமல் தவிப்பது நிஜம்.

காதலை வெளிபடுத்த தயங்கும் பெண்ணே தன் மனதின் ஆசையை வெளிபடுத்தி, அதனை ஒரு ஆண் ஏற்காமல் மறுப்பதைவிட, அவள் அந்த எண்ணத்துடன் இருக்கிறாள் என முன்னமே சரியாக யூகித்தால், அந்த ஆணுக்கும் அந்த பெண்ணின் மீது துளி கூட காதல் இல்லை எனும் பட்சத்தில் பெண்ணின் மனதில் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் வளர்க்கும் வண்ணம் நட்பை கொண்டு செல்லாமல் நாசூக்காக நட்பிற்கும் பெண்ணின் மனதிற்கும் சேதமில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பெண்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது, எனினும், பெண் ஆனவள் தன்னிடம் நன்கு பேசி பழகிய, தெரிந்த ஆணிடம் மட்டுமே தன் காதலை வெளிபடுத்துவாள், அதுவும் அவன் வேறு எந்த பெண்ணிடமும் காதல் வயபடவில்லை எனும் பட்சத்தில் மட்டுமே.

அதனால்,
* உங்கள் தோழி உங்கள் மேல் காதல் கொண்டு இருக்கிறாள் என நீங்கள் உணர்ந்தால் மெல்ல மெல்ல நட்பை குறைத்து கொள்ளுங்கள்.
தனிமை நேரங்களை தவிர்ப்பது நல்லது!

*நீங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து கொண்டுஇருந்தால், இந்த தோழியிடம் இலை மறை காயாகவாவது அதனை உணர்த்துங்கள். அதன் பின் நிச்சயம் உங்கள் மீது கற்பனை வளர்த்து கொள்ள மாட்டாள் அந்த பெண்

* சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை.

*வெளிப்படையாக பேசிப் பழகும் பெண், தன் காதலையும் வெளிப்படையாக பெரும்பாலும் வெளிப்படுத்துவாள், ஆனால் அமைதியான பெண்கள் தங்கள் காதலை தான் விரும்பும் ஆண் தன் செய்கைகளினால் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்பாள், உணர்ந்து கொள்ளவில்லையெனில், பொதுவான நண்பர்கள் மூலம் தன் விருப்பத்தை அவனுக்கு வெளிப்படுத்தலாம்,
அங்கனம் ஒரு பெண் தன் காதலை ஒரு பொது நபர் மூலமாகவோ, தன் தோழியின் மூலமாகவோ உங்களிடம் தெரிவித்தால், நீங்கள் அந்த காதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், நேரிடையாக அப்பெண்ணிடம் புரிந்துக்கொள்ளும் விதத்தில் உங்கள் கருத்தை, முடிவை தெரிவிப்பது நல்லது.
உங்கள் மறுப்பை பொது நபர் மூலம் தெரிவிப்பது, அப்பெண்ணின் உணர்வுகளை பாதிக்கும், சங்கோஜப்படுத்தும்.

* உங்களிடம் ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்தி , நீங்கள் அதனை நிராகரித்த பின், அந்த பெண்ணைப்பற்றியோ, அவள் வெளிப்படுத்திய காதலை பற்றியோ, உங்கள் முடிவினைப் பற்றியோ, மற்ற நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்ல, அது ஆபத்தானதும் கூட!

*எந்த வித அறிகுறிகளும் நீங்கள் உணர்ந்து கொள்ளும் முன்பே, உங்களிடம் ஒரு பெண் தன் காதலை வெளிபடுத்தினால், தெளிவாக தயக்கமில்லாமல் உங்கள் கருத்துகளையும் மறுப்பையும் கூறி விடுங்கள்.

பெண் வடிக்கும் கண்ணீரும், தோய்ந்து போன முக வாட்டமும் உங்களை கலங்கடிக்கும். ஆனால் அப்பெண் தன் மனதை வெளிகாட்டிய பின்பும் உங்கள் எண்ணத்தை ,முடிவை தெரிவிக்காவிட்டால், பின்னால் சிக்கலாகி போகும்.

February 22, 2008

காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை....!!!


இன்று என் சித்திமகள் சுமதிக்கு திருமணம்.
சில வருடங்களுக்கு முன் சித்தப்பா தவறிவிட்டார், சித்திக்கு இரண்டு மகள்கள் மட்டுமே.

அதனால் சுமதியின் கல்யாண வேலைகள் அனைத்தையும் நானும் என் அண்ணனும் கவனித்துக்கொண்டோம்.

வேலைநிமித்தமாக சிங்கப்பூரில் ஒரு வருடம் இருந்துவிட்டு, 2 மாதங்களுக்கு முன்பு பெங்களுர் திரும்பியிருந்ததால் என்னால் முடிந்த உதவிகளை சித்தி குடும்பத்திற்கு கல்யாண நேரத்தில் செய்ய முடிந்ததை நினைத்து எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம்.

சிறுவயதிலிருந்தே "ராஜேசு அண்ணா" என்று பாசத்துடன் அழைக்கும் தங்கை சுமதி, ஒழுங்கான தன் திருமணத்தைக் கூட நான் இந்தியா திரும்பின பிறகு தான் நடத்த வேண்டும் என பிடிவாதமாக தள்ளிப்போட்டாள், அத்தனை அன்பு என்மீது!!

சிங்கப்பூர் முஸ்தஃபா Jewellers ல் நான் சுமதிக்காக வாங்கி வந்திருந்த செயினை, அனைவரிடமும் 'என் ராஜேசு அண்ணா சிங்கப்பூர்ல இருந்து எனக்கு வாங்கிட்டு வந்தது' என பெருமிதத்துடன் காண்பித்து அழகுபார்ததை ரசித்தேன்!!

இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்தம், தலைக்கு மேல் வேலை இருக்கிறது, வெளியூரிலிருந்து வந்த உறவினர்களுக்கு காலை சாப்பாடு சரியாக பரிமாறப்படுகிறதா என் கவனிக்கு வேகமாக திருமண மண்டபத்தின் மேல் தளத்தில் இருந்த 'டைனிங் ஹாலுக்கு' செல்ல மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன், அப்போது......

"எக்ஸ்கூஸ் மீ சார்!"

சத்தம் கேட்டு திரும்பினால், கீழ்படியில் ஓர் அழகான தேவதை......


மிரண்ட மான் விழிகள்,


செதுக்கிய நாசி...


புன்னகை சிந்தும் செவ்விதழ்...


ஹிந்தி பட நாயகிகள் அணியும் ஜமுக்கி தகதகக்கும் புடவையில் ,


அழகின் மொத்த உருவமாய் அவள்...
மலைத்துப்போய் நான் விழிக்க,


"ஹலோ சார், உங்களைத்தான் சார்"

"எ...என்ன"

"சார், உங்க பையன் கிழே விழுந்துட்டான் சார்"

அடிப்பாவி நான் இன்னும் முழுசா உன்னை சைட் கூட அடிச்சு முடிக்கல, அதுக்குள்ளே கல்யாணம் ஆகாத எனக்கு ' பையன்'ன்னு இப்படி ஒரு குண்டு தூக்கி போடுறியே! அதிர்ந்தேன்!!

"என்ன....என்ன சொல்றீங்க"

"ஆமா சார், உங்க பையன் முன்னாடி மண்டபத்து கேட் கிட்ட விழுந்துட்டான் சார். ரொம்ப அழுறான், அம்மாகிட்ட போனும்னு அழுதான், ஆனா அவன் அம்மா யாருன்னு எனக்குத் தெரியல, ஆனா அவன் அப்பா உங்களை அப்போ கேட்கிட்ட அவனை கொஞ்சிட்டு நீங்க இருந்தப்போ பார்த்தேன், அதான் உங்க பையனை என் தாத்தாவை பார்த்துக்க சொல்லிட்டு, மாடிப்படில ஏறிட்டு இருந்த உங்களை கூப்பிட வேகமா வந்தேன் சார்"

மூச்சு விடாமல் பேசி முடித்தாள், ஆஹா!இவ்வளவு வேகமாக கூட பேச முடியுமா........படபடக்கும் விழிகளும், பேசும் வார்த்தைகளுக்கு ஏற்ப அவள் முக பாவனைகள் மாறுவதும் வெகு அழகாக இருந்தது!!!

இவ்வளவு அழகா இருக்கான்னு பார்த்தா கொஞ்சம் லூசா இருப்பாபோலிருக்கே, சம்மதமே இல்லாம என் பையன் கீழே விழுந்துட்டான்னு கூப்பிடுறா??

அழகை அள்ளி கொடுத்துட்டு,
அறிவு கொடுக்க மறந்துட்டியே, ஆண்டவா!!!


பதிலேதும் சொல்லாமல் நான் விழிக்க, அவள் தொடர்ந்தாள்.....

"சார், வாங்க சார், ரொம்ப அழுறான் சார் உங்க பையன்"

ஸ்கூல் வாத்தியார் பொண்ணா இருப்பாளோ??? இத்தனை 'சார்' போடுறா, முதல்ல இவ என்னதான் சொல்றான்னு போய் பார்ப்போம்.

கல்யாணம் ஆகாத கட்டழகன் எனக்கு, 5 நிமிஷத்துல கல்யாணமாகி ஒரு பையனுக்கு அப்பாவாக்கி பொறிஞ்சு தள்ளிட்டாளே!!

அவளை பின் தொடர்ந்தேன், அவள் தாத்தாவின் கையில் அழுதுக்கொண்டிருந்தான் என் அண்ணாவின் பையன் நரேன்.

என்னைப்பார்த்ததும், என்னை கைகாட்டி அழ ஆரம்பித்தான்,
"ஹைய்யோ, அழாதே , இதோ உங்க அப்பா வந்துட்டாரு பாரு" அவனை சமாதானப்படுத்தினாள் 'அவள்'.

"சித்தப்பா.........சித்தப்...பா" என்று என்னிடம் தாவி வந்து என் கழுத்தை இறுக்கி கோண்டான் நரேன்.

"சித்தப்பாவா?????.........நீங்க இவன் சித்தப்பாவா???"

"ஆமா, அப்பாவின் தம்பியை எங்க ஊர்ல எல்லாம் சித்தப்பான்னு தான் கூப்பிடுவாங்க" என்றேன்.



"ஐயோ, ஸாரி சார்.........பையனுக்கு உங்க சாயல் இருந்ததா, நீங்க அப்போ கேட் கிட்ட இவனை கொஞ்சிட்டு வேற இருந்தீங்களா........ஸோ........உங்களை அவனோட அப்பான்னு நினைச்சுட்டேன் சார், ஸாரி சார்"

சின்ன குழந்தைகளை கல்யாண வீட்டில், பொது இடங்களில் கொஞ்சினா....நம்ம புள்ளைன்னு நினைச்சுக்குவாங்களா??
இப்படி நினைச்சுட்டா, யார் எனக்கு பொண்ணு கொடுப்பான்!!

"பரவாயில்லீங்க.............எனிவே......தாங்க்ஸ்" என்றேன்.

தோளை குலுக்கி அழகாக உதடு சுளித்து புன்னகைத்து விட்டு தன் தாத்தாவுடன் சென்றுவிட்டாள்.

தொடர்ந்து எனக்கு பந்தி பரிமாறும் இடத்தில் மேற்பார்வை இடவேண்டியிருந்ததால், 'தேவதையை' பார்க்க முடியவில்லை.
ஆனால் மனசுக்குள் ஆயிரம் கேள்விகள்...

"அவள் யாராக இருக்கும்?,
மாப்பிள்ளையின் உறவுகாரப் பெண்ணாக இருப்பாளோ?,
சுமதிக்கு இப்படி ஒரு ஃப்ரண்ட் இருக்கிறாப்ல அவ காலேஜ் ஆல்பத்துல பார்த்த ஞாபகம் இல்லியே?
யாராக இருப்பா இவ?,
மீண்டும் 'அவளை' பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா?"


யோசனையோடு வாழை இலையில் சிறிது துவண்ட ஒரங்களை அங்கிருந்த ஒரு கத்தியால் நான் வெட்டும் போது, தவறுதலாக என் கைவிரலில் பட்டு இரத்தம் வந்தது,

"ஸ்ஸ்ஸ் ஆஆஆ......" என்று சத்ததுடன் கைவிரலை பிடித்துக்கொண்டு என்ன செய்வது என நான் முழிக்க...

"ஐயோ.....!! இரத்தம் சார்..........பார்த்து வெட்டக்கூடாதா சார், கையை இப்படி கொடுங்க"

தன் கைக்குட்டையால் என் விரலை இறுக்கி கட்டினாள் 'அவள்'.


இவ எதுக்கு சமையற் கட்டு பக்கம் வந்தாள் என நான் வியக்க...


"சார், காப்பிதூள் போட்டா இரத்தம் கசியரது டக்குன்னு நின்னிடும், சமையற்காரர் கிட்ட கேட்கலாம் வாங்க"

படபடத்தாள் என்னை 'கொள்ள கொண்ட கள்ளி'!!

என் கைக்கு இவள் கட்டு போடுவதையும், கரிசனமாக பேசுவதையும் ஒரக்கண்ணால் பார்த்தபடி, சமையல் வேலையில் இருந்தவர்கள் கேலிப்பார்வை பார்க்க ஆரம்பித்தனர்.

" சரி நான் அப்புறம் போட்டுக்கிறேன் காப்பி தூள், நீங்க இங்க என்ன பண்றீங்க???"

"தாத்தாக்கு சுடு தண்ணீ கேட்டு வாங்கிட்டு போக வந்தேன் சார்"

"சுடு தண்ணீ வாங்கித்தரேன், ஆனா முதல்ல இந்த சார் , சார்ன்னு கூப்பிடுறதை நிறுத்துங்க ப்ளீஸ்"

"சரிங்க சார்........ஸாரி.....சரிங்க, நீங்களும் 'வாங்க போங்கன்னு' கூப்பிடாம 'வா, போ'ன்னே கூப்பிடலாமே!!!"

சுடு தண்ணியுடன் வேகமாக சென்றவளை,

"ஒரு நிமிஷம்" என இடமறித்தேன்....

என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தாள்,

"உன் பேரு என்ன.............நீ மாப்பிள்ளை வீட்டு சொந்தமா??"

களுக்கென்று மீண்டும் தோளை குலுக்கி, உதடுகள் சுளிக்க சிரித்து முழுவதுமாய் என்னை கொள்ளை அடித்தாள்!!!

"ஏன் சொல்லமாட்டியா??"

"உங்க பேரு, நீங்க யாருன்னு நான் கண்டுப்பிடிச்சுட்டேன், அதுமாதிரி நீஙளும் கண்டுபிடிங்க" என்றாள் வெடுக்கென்று.

"என்ன..........என்ன பத்தி என்ன தெரியும்" அவள் கண்களை விரித்து, எக்ஸ்பிரஷனோடு பேசும் அழகை காணவே, கேள்வி கேட்டு பேச்சு வளர்த்தேன்.


"உங்க பேரு ராஜேஷ், சுமதி அக்காவின் பெரியம்மா மகன். பெங்களுரில் வேலைப்பார்க்கிறீங்க, சிங்கப்பூரில் 1 வருஷம் இருந்துட்டு 2 மாசத்துக்கு முன்னாடி தான் இந்தியாவிற்கு திரும்பி வந்தீங்க, மீண்டும் எப்போ வெளிநாட்டு ப்ரோஜக்ட் கிடைக்கும்னு காத்துட்டு இருக்கிறீங்க.
'வாழை இலை' கூட வெட்டத்தெரியாத.........eligible bachelor "

ஒரு கேள்வி கேட்டா, பத்து பதில் சொல்லும் அவளது வெகுளித்தனமான பேச்சு இன்னும் அதிகம் என்னை கவர்ந்தது.


சுமதியை அக்கா என்று இவள் அழைப்பதை பார்த்தா, அவளுக்கு தெரிந்த பொண்ணாகத்தான் இருக்கும், எப்படி கண்டுபிடிக்கிறது இவளின் டிடேய்ல்ஸை, யாரிடம் கேட்பது.........???

நல்லபடியாக திருமணம் முடிந்து, கடைசிப் பந்தியில் மணப்பெண்-மாப்பிள்ளை, மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மட்டும் உணவருந்த நானும் சாப்பிட உட்கார்ந்தேன்.

"சுமதிக்கா, உங்களுக்கும் உங்க கிட்ட மாட்டிக்கிட்டவருக்கும் நானே பரிமாறேன்" என்று பரிமாற ஆரம்பித்தாள் 'அவள்'.

எனக்கு அவளே பரிமாற வேண்டுமென்பதற்காகவே வழிய வந்து பரிமாறுவது போல் தோன்றியது எனக்கு.

பரிமாறும்போது என்னிடம் அடிக்குரலில் கேட்டாள்," கைவிரல் அடிப்பட்டது வலிக்குதா?? ஊட்டி விடனுமா???" கண் சிமிட்டினாள்!!
பதில் சொல்ல முடியாமல் பாழாய்ப்போன வெட்கம் வேற எனக்கு அப்போ வந்து தொலைந்தது!!

அடுத்த முறை எனக்கு பரிமாற என்னருகில் அவள் வந்தபோது,
"நீ சாப்பிட்டியா" என்றேன்.

"ரொம்ப்பத்தான் அக்கறை, இப்பத்தான் கேட்க்கனும்னு தோனிச்சா! சாப்பிட்டாச்சு........சாப்பிட்டாச்சு!" என்று படபடவென்று பொரிந்தாள்.

சிறிது நேரத்தில் அவள் தாத்தா அவளை அழைக்க அவள் சென்று விட்டாள்.
சுமதியின் ஃபிரண்ட் வாணி மட்டும் எனக்கு சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கம், அவளிடம் 'இவளை' பற்றி விசாரித்த போது , விபரம் அறிந்துக்கொண்டேன்.


பெயர் பூர்ணிமா, சொந்த ஊர் சென்னை, சுமதியின் க்ளாஸ் மேட் கிருத்திகாவின் தங்கை, கிருத்திகா சமீபத்தில் திருமணமாகி US சென்றுவிட்டதால், அக்காவின் சார்பாக இவள் மதுரையிலிருக்கும் தன் உறவுக்கார தாத்தாவுடன் சுமதியின் திருமணத்திற்கு வந்திருக்கிறாள் ;
படிப்பது பி.இ இறுதியாண்டு, கோவில்பட்டி National Engineering Colllege.

சுமதியும் மாப்பிள்ளையும் செல்ல வேண்டிய அலங்கரிக்கப்பட்ட கார் தயாராக இருக்கிறதா எனப்பார்க்க மண்டபத்துக்கு வெளியில் வந்தேன், வாயிலுக்கு அருகே சுமதியுடன் வேலைப்பார்க்கும் மற்றும் அவளுடன் படித்த பையன்கள் சிலர் அங்கு நின்றுக்கொண்டிருக்க, அவர்களிடம் அபிநயத்துடன், கண்களை உருட்டி, சிரித்து சிரித்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் பூர்ணிமா.
எனக்கு உள்ளுக்குள் ஏனோ குறு குறுவென்று இருந்தது!!

அவள் மற்ற பையன்களிடம் பேசினால் எனக்கு ஏன் எரிச்சல் வருது?,
அவ யார்கிட்ட பேசினா எனக்கென்ன என்று ஏன் என்னால் இருக்க முடியவில்லை?....
ஏன் இந்த உணர்வு எனக்குள்??!!!

மணமக்களை அனுப்பிவைத்துவிட்டு, மண்டபத்துக்குள் வந்தேன்.
திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்று, மண்டபமே வெறிச்சென்று இருந்தது.

சேர்களை மடக்கி வைத்து மண்டபத்தை துப்பரவு செய்ய ஆரம்பித்திருந்தனர்.
மனதில் எனோ ஒரு கணம்,
மாடிப்படிகளில் ஏறினேன்,

"எக்ஸ்கூஸ் மீ சார்' என்று பூர்ணிமா முதன் முதலில் என்னை அழைத்தது நினைவுக்கு வந்தது.


ஏதோ ஒரு இனம்புரியா இறுக்கம் நெஞ்சில்.
டைனிங்ஹால் சுத்தம் செய்துவிட்டார்களா என அறிய மேலும் படிகளில் நான் ஏற...
"எக்ஸ்கூஸ் மீ"
பூர்ணிமாவின் குரல்...........பிரம்மிப்புடன் திரும்பினேன்,


'அட.......அவளே தான்!!'


எல்லாரும் போய்ட்டாங்க , இவ மட்டும் எப்படி...........இங்கே??

"ஹலோ சார், எக்ஸ்கூஸ் மீன்னு கூப்பிட்டாலே இப்படிதான் பேந்த பேந்த முழிப்பீங்களா, ரியாக்ஷனை கொஞ்சம் மாத்துங்க சார்"



"ஹே......பூர்ணிமா........நீ இங்க என்ன பண்ற"

"ப்ரவாயில்லையே என் பேரு எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்க போலிருக்கு"

"ஆமாம்...........நீ இன்னும் போகலியா???'

"ஹும், எல்லார் கூடவும் நானும் அப்போவே போய்ட்டேன்.........ஆனா......."

"ஆனா.........என்ன?"

"யாரோ ஒருத்தர், நான் முதல் முதலில் பேசின மாடிப்படியில நின்னுட்டு கணவு காண்றாங்கன்னு பட்சி சொல்லிச்சு, அதான் ' ஹாஸ்டல் ரூம் கீ' இங்கே மண்டபத்துல மிஸ் பண்ணிட்டேன், எடுத்துட்டு வந்துடுறேன்னு கப்சா விட்டுட்டு இங்கே வந்தேன்"

"ரியலி??"

"எக்ஸாக்ட்லி சார்...........நம்புங்க"

"எப்படி என் மனசுல உள்ளது உனக்கு புரிஞ்சுது பூர்ணிமா?"

" நானும் நீங்க சாதாரணமா என்னை சைட் அடிக்கிற லுக்குதான் விடுறீங்கன்னு நினைச்சேன்.........ஆனா......."

"ஆனா......."

" நான் மண்டபத்துக்கு வெளில அக்கா கூட படிச்ச பசங்க கிட்ட பேசிட்டு இருந்தப்போ, அதை பார்த்து உங்க முகம் போன போக்கு சொல்லிச்சு உங்க மன்சுல இருக்கிறதை"

"அடிக்கள்ளி"

சிறிது நேரம் மாடிப்படிகளில் பேசிக்கொண்டிருந்தோம், அங்கு வேலை செய்கிறவர்கள் எங்களை ஒரு மாதிரி பார்க்க,
எனக்குத்தான்' என் ஆளை' யாரும் லுக் விட்டா காதுல புகை வருமே, அதனால்.....

"சரி வா நான் உன்னை உன் தாத்தா வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன் " என்று என் காரை நோக்கி நடந்தேன்.




"ஹும் சரி, ஆனா அதுக்கு முன்னாடி கல்யாண மண்டபத்தோட மனேஜரை பார்த்துட்டு போகலாம்" என்றாள்.


"எதுக்கு"

"ஆறு மாசம் கழிச்சு, நல்ல முகூர்த்த நாள் எதுன்னு அவர் ரூம் காலெண்டரைப் பார்த்து மண்டபம் புக் பண்ணத்தான்'

"அடிப்பாவி..........செம ஸ்பீடா இருக்க"

"பின்ன எவ்வளவு நாள் தான் காதுல புகை விட்டுட்டு இருப்பீங்க பாவம்! ஃபைனல் செமஸ்டர் முடிய இன்னும் 6 மாதம் இருக்கு எனக்கு,
நீங்களும் வாழை இலை மட்டுமில்ல, காய்கறி நறுக்கவும் கொஞ்சம் கத்துக்க வேண்டாமா சார், ஸோ அதுவரைக்கும்......"

"அதுவரைக்கும்........??'

என் காதில் 'இரகசியம்' சொல்லி முகம் சிவந்தாள் என் பூர்ணிமா!!!




February 13, 2008

Eligible Bachelors....



Me and my friend were talking about the current 'Eligible Bachelors ' in the blog world,
as we were listing them out, thought of posting the list as a special post for Valentines day!!

Wish, these beloved bloggers wud be in either 'commited' or 'married' status in 2009 Valentines day!
Some of the persons listed out here, may or maynot be in 'single status' by the time I publish this post or I may not be aware of it, if so kindly excuse me!!

If by chance, I have not mentioned any 'eligible bachelors' you know,
please do mention it in your comments!!

Here goes the list............


மொக்கை மன்னன்,
அரட்டை நாயகன்..
இவர் நூறு வார்த்தை சொல்லுவார்
ஒரு வார்த்தைக்காக!!

இவரது பதிவுகளும், பின்னூட்டங்களும்,
நகைச்சுவை, கிண்டல் கேலிக்கு
பஞ்சம் இல்லாதவை!!

சின்ன சின்ன கார்கள் சேகரித்து "பத்திரப்படுத்துவது" இவரது பொழுதுபோக்கு.

ஆர்குட்டை ஜிடாக்காக பயன்படுத்துவார் இவர்.
profile படத்தில் அடிக்கடி தரிசன pictureஐ மாத்துவார்.

சிவந்த மேனியும், பூனை கண்களும் இவரது வசீகரங்கள்.
சொந்த ஊர் திருச்சி. தற்போது இருப்பது Kuwait ல்்.

கில்ஸ்

தங்கிலீஷ் தமிழர்.
'.', ','[full stop & coma]
இவரது கீபோர்டில் இல்லை.
கட்டுரையாக கதை எழுதும் அபூர்வ எழுத்தாளர்!!

தன் வருங்கால மனைவியிடம் இவர் எதிர்பார்ப்பதை
பட்டியலிட்டு இருக்கிறார். தகவல்கள் இங்கே!

பெண்களிடம் அதிக மரியாதை இவருக்கு. நட்பிற்கு
மரியாதை தரும் நல்ல நண்பர்!

நாலு ஸ்கேரேப் செய்தால், பதிலுக்கு ஒரு ஸ்கேரேப் என அளவுகோளுடன்
ஆர்குட்டில் ஸ்க்ரேப் செய்வார்.
சிங்கார சென்னையில் இருக்கிறார்.

அருண்குமார்

அலட்டல் இல்லாத
அமைதியான பேச்சு,
அழகிருந்தும்
தலைகனம் இல்லாத அருமை நண்பர்!!

பதிவெழுதி பல நெஞ்சங்களை கொள்ளை அடித்து விட்டு
இன்று அமைதி காக்கும் வித்தகர்.

ஆர்குட்டில், தன் நண்பர்களின் குரூப் போட்டோவில், நடுவில்,
புன்னகை மாறாமல் பளிச்சென்று நிற்பார்.

சமையலில் ஆர்வம் மட்டும் இல்லாது, நன்கு சமைக்கவும்
தெரிந்து இருப்பது இவரது ப்ளஸ் பாய்ன்ட்!!

அமெரிக்காவில், சின்சினாட்டியில், software engineer ஆக பணிபுரிகிறார்.
பேச்சில் மதுரை தமிழ் தாண்டவம் ஆடவில்லை என்றாலும்
அக்மார்க் மதுரைகாரர்.

நவீன் பிரகாஷ்

கொஞ்சும் தமிழில்
கெஞ்சும் கவிதைகளுக்கு
மிஞ்சும் காதலை
நெஞ்சத்தில் பதிக்கும் கவிஞர்!!

தன் காந்த கவி வரிகளால்
பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை அடிக்கும்
வலையுலக தபூ ஷங்கர்!!

ஆர்குட்டில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் இல்லாதவர்.
புன்சிரிப்பு மாறாத புன்னகை மன்னன்!!

மற்றவர்களின் சோர்வான மனநிலையையும்
தன் நகைச்சுவை பேச்சாலும், கரிசன வார்த்தையாலும்
மாற்றும் வித்தை அறிந்தவர்.

சொந்த ஊர் கரூர்.
தற்போது மென்பொருளாளராக பணிபுரிவது சென்னையில்.



மண்மனம் மாறாத
மதுரை தமிழில்
மிக அழகாக பதிவிடும் இன்முகம்
மாறாத இனிய நண்பர்!

ஆர்குட்டில் ஸ்பெஷல் எஃப்க்ட்டில் தன் படங்களை வலமிடுவார்!நண்பர்களுக்கு நேசக்கரம் நீட்ட தயங்காதவர்,
அசர வைக்கும் இவரது எளிமை !!

கள்ளமில்லா பேச்சும் - முகத்தில்
குழந்தை சிரிப்பும் இவரது ப்ளஸ் பாயிண்ட்ஸ்!

இவரது நினைவு முழுவதும் மதுரைமேல் இருந்தாலும், பணிபுரிவது பெங்களுரில்!!

சதீஷ்

தனிமையில் இனிமை காணும்
தன்னிகரற்ற கவிஞர்.
தனக்கு பின்னூட்டமிடும் பதிவர்களின் பதிவுகளில்,
தவறாமல் பின்னூட்டமிடும் நன்றியுள்ள நண்பர்!!

ஆர்குட்டிலும், சேட்டிலும், ஆர்ப்பாட்டமில்லாமல்,
அமைதி காப்பார்!!
பெண்களிடம் சகஜமாக பேச
ரொம்ப கூச்சபடுவார்.

இவரது எழுத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும்
தோற்றத்தில் எளிமையான, அழகான இளைஞன்.

சொந்த ஊர் தென் தமிழ் நாட்டில், நாகர்கோவில்.
தற்பொழுது பணி புரிவது அமெரிக்காவில்.

டிரீம்ஸ்
கனவு கவிஞன்!
தேவதைகளின் ரசிகன்!
புரியாத தத்தூவங்களின் மேதை,
பின்னூட்ட நாயகன்!!

பதிவுகளை
படித்தும் படிக்காமலும்,
ரசித்தாலும் ரசிக்ககவிட்டாலும்,
பின்னூட்டமிட்டு பதிவர்களை ஊக்கமளிக்கும் நல்மனசுகாரர்!!

ஆர்குட்டில், அதிக ஈடுபாடு காட்டா விட்டாலும், ஜிடாக்கில்,
பிஸி ஸ்டேடஸில் 24/7 அரட்டை அடிக்கும் அருமை நண்பர்.

இவரது பேச்சில்,
கலகலப்புக்கு குறைச்சல் இல்லை,
தத்துவத்திற்கு நிறுத்தம் இல்லை,
புரிதலுக்கு பஞ்சம் இல்லை!!

நெல்லைக்கு சொந்த காரர்.
தற்போது வசிப்பது கனடாவில்.

ஜியா

நெல்லை ஜில்லாவின்
அழகிய பில்லா!!
கதைகளின் உரையாடலில்
கதாபாத்திரங்களோடு ஒன்றி போக வைக்கும்
கலக்கல் கதாசிரியர்!!

ஆர்குட்டிலும், ஜிடாக்கிலும்,
பின்னிரவுகளில் வலம் வருபவர்.


ஆர்குட் ஆல்பத்தில்
குறுந்தாடியுடன், அசப்பில் அஜீத் சாயலில்
விதவிதமாக போஸ் கொடுப்பார்!!


திருநெல்வேலி சொந்த ஊர்.
தற்பொழுது பணிப்புரிவது அமெரிக்காவில்.

நாகை சிவா
சுட்டெரிக்கும் சூடானில்,
சீரும் புலியாக கர்ஜித்து விட்டு,
இந்தியாவில் உல்லாச பயணத்தில்
ஆயாசம் ஆகிவிட்டார்!

பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசி பழகுவார்.
பின்னூட்டத்தில் தன் கருத்தை ஆணித்தரமாக பதிப்பார்.
சர்ச்சைகள் நடந்தால் தவறாமல் ஆஜர் ஆகி விடுவார்.
புகைபட கலையில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அயல்நாட்டு உல்லாச பயண குறிப்புகளுக்கு சிறந்த 'guide' இவர்!!

சூடானில் பனி புரிந்து விட்டு, தற்போது, சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு
விஜயம் செய்துள்ளார்.

உதய குமார்

சவுண்ட் பார்ட்டி,
சத்தமில்லாமல் நிசப்தமானது விந்தையே!

பழக்கத்தில் இனிய நண்பர். மறதிக்கு சொந்தகாரர்.
ஆர்குட்டிக்கு தற்செயலாக அவ்வபொழுது வருவார்.
ஜிமெயிலுக்கு ரிப்ளை பட்டன் இருப்பதை அறியாத அப்பாவி!

தற்போது இந்தியா சென்றுள்ளார்,
தை பிறந்தால் வழி பிறக்கும், என நம்பி சென்றுள்ளார்!

ஒரு வேளை இந்நேரத்தில் commited ஸ்டேடஸுக்கு மாறி இருக்க வாய்ப்பு அதிகம்.

ரவி ஷங்கர்

பக்தி பரவசத்தில்
மாதவிக்கு பந்தலிடும் பக்தர்!
கடவுள் பக்தி ஜாஸ்தி.
பின்னூட்டத்தில் கும்மியடிக்கும்
கலகலப்பு நண்பர்!

ஆர்குட்டில் புல்தரையில் குழந்தை சிரிப்புடன் ஃபோட்டோ போட்டிருக்கும் இளம் வாலிபர்!
தற்போது வசிப்பது நியூயார்க்கில்!!

ரசிகன்

வெள்ளையுள்ளம்,
கள்ளம் இல்லா நட்பு,
மனம்திறந்து பாராட்டும் நல்ல மனசு!

அவரது ரசனைகளை பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்!

ஆர்குட்டில் எல்லாரும் இருக்கிறார்களே என்று வருகை தந்தார்,
அத்தோடு காணாமல் போய்விட்டார்!

தமிழ் பற்று ஜாஸ்தி, ஜிடாக்கில் தமிழில் தான் டைப் செய்வார்!
தற்போது பணிபுரிவது டோஹாவில்!!


CVR

காதல் இளவரசன்:
புகைபட நிபுனர்,
ஆராய்ச்சியாளர்..
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்
அசத்தும் இவரது எழுத்திறன்!!

சாதுவான தோற்றம்!
எச்சரிக்கையுணர்வுடன் பெண்களிடம் 'சகோதர'கரம் நீட்டும் சாமர்த்தியசாலி!!

ஆர்குட்டில் பெண் விசிறிகள் அதிகம்,
ஆனால் அனைவரிடமும் நட்பலை பாராட்டும் பண்பாளர்!!
உதவி என யார் கேட்டாலும் , முகம் சுளிக்காமல் , முழுமனதுடன் உதவிடுவார்!!

சிங்காரச்சென்னை சொந்த ஊர்,
தற்போது பணிபுரிவது அமெரிக்காவில்!!



மெருகேறிய எழுத்துக்களுடன்
அதிர வைக்கும் படைப்புகளுடன்
அனைவரையும் அசத்தி வருகிறார்!

இவரது பின்னூட்ட பாணி மிகவும் அழகானது,
பாராட்டோடு சேர்த்து தன் விமர்சனத்தையும் பின்னூட்டமிடுவார்.

வலைச்சரத்தில் தொடர் 'சரம்' தொடுத்து சாதனை புரிந்தவர்.
மரியாதையுடன் பழகும் பண்புள்ள நண்பர்!

ஆர்குட்டில் அறிமுகமில்லை!
சாட்டில் சந்தித்ததில்லை!!

தற்போது பணிபுரிவது துபாயில்.

முருக பக்தர்..
பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும்
ஆண் சிங்கம்!
பதிவுலகில் இவரது எழுத்துக்கென்று
தனி மரியாதை உண்டு!

கதை எழுதும் பாணியில்
வியக்காத உள்ளங்கள் இல்லை!

குளிரும் காதல் கதையில்
சூடான உரையாடல்கள் எழுதி
திக்குமுக்காட வைத்தார்!

பிஸியாக இருந்தாலும், ஆர்குட் ஸ்கிராபிற்கும், ஜி-மெயிலுக்கும் உடன் பதில் அனுப்பும் பண்புள்ளவர்.

தற்போது பணிபுரிவது நெதர்லேண்ட்ஸில்.

திரைவிமர்சன வித்தகர்,
அக்கு வேரு ஆணிவேராக
அலசி ஆராய்ந்து விமர்சிப்பார்,
இவரது பயணக் கட்டுரைகள்
படிப்பவரையும் பயண உணர்வு அடைய செய்யும்.
சங்கத்து சிங்கம்!

பெண்களிடம் பேசிப் பழக கூச்சமோ? அச்சமோ?? தெரியவில்லை!
வித்தியாசமான அனுகுமுறையில் கதைகள் எழுதுவார்.

ஆர்குட்டில் 'கருப்பு/வெள்ளை' புகைப்படத்தில், பால் வடியும் முகத்துடன் புன்னகைப்பார்!
ஆண்கள் காதுகளில் 'புகை'வர வைக்கும் இவரதும் இளம் அழகு தோற்றம்,
பெண்கள் மனதில்........????

காஞ்சிபுரம் சொந்த ஊர்,தற்போது 'ஜாவா பிஸ்துவாக'பணிபுரிவது அமெரிக்காவில்!

மங்களுர் சிவா

வாரநாட்களில் விட்ட/விட முடியாத
ஜொள்ளுகளை எல்லாம்
வாரயிறுதியில் சேர்த்து வைத்து ரசிப்பார்!

பங்கு சந்தை விபரங்கள்
இவருக்கு அத்துப்பிடி.

ஆங்காங்கே இவரது 'ரீப்பிட்டே' பின்னூட்டமும்,
'அவ்வ்வ்வ்வ்வ்' பின்னூட்டமும் பிரபலம்.

'சின்ன பையன்' என்று அடிக்கடி ஞாபகப்ப்டுத்துவார்!

மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது இவரது ப்ளஸ் பாயிண்ட்,
சமூக அக்கறையும் , பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதும் இவரது நல் இயல்பு!

ஆர்குட்டில் 'அலெர்ட்டாக' இருக்கும் சின்ன பையன்,
ஜி-டாக்கில் பெர்சனல் டிய்டெய்ல்ஸ் எதையும் துருவி துருவி கேட்காத நல்ல நண்பர்.

தற்போது மங்களூரில் பணிபுரிகின்றார்!

பேய்கதைகள் எழுதி
பயமுறுத்தும் எழுத்தாளர்,
கார்த்தி-ஜெனி ஜோடிக்கு
காப்பி ரைட்ஸ் வைத்திருக்கும்
கதாசிரியர்!
கிரிக்கெட் விசிறிகளுக்காக
பதிவெழுதும் பதிவர்!

விடாமுயற்ச்சியும், தன்னலமற்ற பேச்சும் இவரது நல் இயல்பு!
தன் ஆதகங்களை ஆங்காங்கே தன் கதைகளில் வெளிப்படுத்த தவற மாட்டார்!

பழக்கத்திற்கு இனிய நண்பர்.
பாசமுள்ள தோழர்!!

ஆர்குட்டில் ரெகுலராக அனைத்து நண்பர்களையும் நலன் விசாரிப்பார்,

ஜி-டாக் இவருக்கு ஆர்குட்,
ஆர்குட் இவருக்கு ஜி-டாக்!!

தற்போது பணிபுரிவது சென்னையில்!

கொஞ்சும் கொழும்பு தமிழில்
கதைக்கும் கான குயில்!
அறியாத மெட்டில்லை,
பாடாத ராகமில்லை!!

பதிவகர்களின் பாசத்தைபெற்றவர்!!

அம்சமான முக வடிவம்,
பெண்கள் விரும்பும் தோற்றம்,

தற்போது வானொலியில்
மெட்டுக் கெட்டி வருகிறார்!

வசிப்பது சிட்னி, ஆஸ்திரேலியா!!

February 11, 2008

அப்பாவின் நினைவில்...



படைக்கும் கடவுளின் முகமாக- என்னைப்
படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன்

மென்மையாய் பேசுபவனே
பணிவினைக் கற்பித்தவனே

அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து
என் நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று

நேரம் தவறாமை
கடுஞ்சொல் கூறாமை
இறைவனை இகழாமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!

உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை

பள்ளிக்கு பின்பே பல்கலை கழகம் செல்வார்கள்
பல்கலை கழகமே உன்னிடம் பயின்றபின் தான் நான் பள்ளிக்குச் சென்றேன்!

ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???

என்னை உலகிற்களித்தவனே
இன்று உன் பிரிவால் - நான்
சிந்தும் கண்ணீருடன்
உன்னிடம் வரம் ஒன்று யாசிக்கிறேன்

என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!

February 03, 2008

என் அப்பாவின் அன்பைத் தேடி....

புவனாவின் அப்பா இறந்து இரண்டு வருஷமாகிறது. மனதில் அப்பா இன்னும் பசுமையாக நினைவிருந்தார்.


சைக்கிளில் கடைவீதிக்கு அழைத்துச்செல்லும் அப்பா...
குச்சி ஐஸ் வாங்கித்தரும் அப்பா...
அம்மா கண்டிக்கையில் கருணையுடன் அரவனைக்கும் அப்பா...
நடைபழகுவது முதல் மிதிவண்டிவரை கற்றுத்தந்த அப்பா..
முதல் நாள் பள்ளிக்குச்செல்ல அழுதபோது உடன் அழுத அப்பா...
இரவில் கதை கூறி உறங்கவைக்கும் அப்பா..


அப்பா திடீரென்று ஒருநாள் ஜீரத்தில் படுத்தார். இரண்டே நாளில் அது மூளைக்காய்ச்சலாக விஸ்வரூபம் எடுக்க நாலாவது நாளே அப்பாவின் கதை முடிந்தது.

அப்போது புவனாவிற்கு வயது 8. தன்னை அணைத்துக்கொண்டு கதறிய பாட்டியிடம் கேட்ட கேள்வி இப்போதும் புவனாவிற்கு நினைவிருக்கிறது.
' ஏன் பாட்டி, மனுசா ரொம்ப வயசானால் செத்துப் போய் சுவாமிக்கிட்ட போவா என்று தானே சொன்னேள், இப்போ நீங்க , தாத்தா எல்லாரும் இருக்கேள்.எஙகப்பா சின்னவர்தானே, ஏன் இப்பவே சாமிக்கிட்டப் போகனும்?' என்று கேட்க , பாட்டி இன்னும் அழுதாள்.

அப்பா போனபின் அடுத்த இரண்டு வருடங்கள் ஏதோ ஓடின.
அம்மா அகிலா வெறுமையை மறக்க......மறைக்க.. அடுப்படி வேலையிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாள்.
புவனா பாதிநாள் இரண்டு தெரு தள்ளியிருந்த பாட்டி-தாத்தா வீட்டிலேயே கழித்தாள்.



அப்பா அதிகம் பேசுபவர் அல்ல.
அம்மாதான் இருவருக்கும் சேர்த்து வாய் மூடாமல் பேசுவாள்.இப்போது அம்மாவின் அமைதியான சோகமுகம் புவனாவை மிகவும் வருத்தியது. அம்மாவுக்கு தன்னை பிடிக்காமல் போய்விட்டதாக கற்பனை செய்துக் கொண்டாள்.

இந்த சமயத்தில்தான் தாத்தாவும் பாட்டியும், அம்மாவை மறுமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்த ஆரம்பித்தனர்.
அம்மாவுக்கு 18 வயதிலேயே திருமணம் ஆகியிருந்தால், அவள் 29 வயதில் ஒரு இளம் விதவையாக நிற்பது, அப்பாவின் பெற்றோருக்கே மனம் கேட்காமல், அவளுக்கு மணம் முடிக்க தீவிரமாக முயன்றனர்.

அப்பாவின் பால்ய நண்பர் நடராஜன், துபாயில் வேலைசெய்துக்கொண்டிருந்தவர். 3 தஙகைகளின் திருமணம், வயதான பெற்றொரின் மருத்துவச் செலவுகள் என பொறுப்புகள் இவர் மேல் இருந்ததால், 35 வயதாகியும் பிரம்மச்சாரியம் காக்க வேண்டிய கட்டாயம்.
இன்று கடமைகள் அனைத்தையும் முடித்தவராய் இந்தியாவிற்கே திரும்பியவர், அப்பாவின் மறைவுக்காக துக்கம் விசாரிக்க வந்திருந்தார்.
தாத்தா பாட்டி அவரிடம் ,அம்மாவின் மறுமணம் பற்றி பேச்செடுக்க, அவரும் முழுமனதுடன், தன் நண்பனின் இளம் விதவை மனைவிக்கு வாழ்வு தர முன் வந்தார்.
அம்மா லேசில் ஒப்புக்கொள்ளவில்லை. தாத்தாவும் பாட்டியும் ஏகப்பட்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு அவரைச் சம்மதிக்க வைத்தார்கள்.

'புவனாம்மா, நடராஜ் அங்கிள் தான் இனிமே உனக்கு அப்பா. சமர்த்தாக படுத்தாமல் சொன்னதை கேட்டு நடக்கணும்' பாட்டி பேசி முடிக்கும்முன் புவனா மூர்க்கத்தனமாக கத்தினாள்.
"இது ஒண்ணும் எங்க அப்பா இல்லை.எங்கப்பா எப்பவோ செத்துப்போய்ட்டார், நான் பதிலுக்கு வேறே அப்பா கேட்டேனா உங்களை!"

இதை கேட்ட நடராஜின் முகத்தில் ஏகப்பட்ட கலவரம்.அம்மா சங்கடத்துடன் கைபிசைந்தாள்.

நடராஜை அப்பாவாக ஏற்கவோ, அப்பா என்று அழைக்கவோ அவள் ஒப்புக்கொள்ளவில்லை.
'அங்கிள்' என்று தான் அழைப்பேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

நடராஜனும் புவனாவின் மனதில் இடம்பிடிக்க எவ்வளவோ முயன்றார். தீபாவளிக்கு புவனாவுக்கு நடராஜ் அழகானதொரு பட்டுப்பாவடை வாங்கி வந்திருந்தார்.
'உனக்கு அழகாக இருக்கும் என அங்கிள் தான் செலக்ட் பண்ணினார்' என்று அம்மா கூற........தீபாவளியன்று புவனா அதை உடுத்திக்கொள்ளவேயில்லை.

நடராஜனின் முகம் வாடிபோனது. அவருக்கும் புது உடை உடுத்திக்கொள்ள மனதில்லாமல் போக, முதல் தீபாவளி மனஸ்தாபத்திலேயே கழிந்தது.

நடராஜனின் மனது புவனாவுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவளது ஆழ்மனதில் எங்கோ புதைந்திருந்த தாபம் அவளை ஆட்டிப் படைத்தது.
நடுவில் போய்விட்ட அப்பாவிடம் கோபம்...
மறுபடி மணந்த அம்மாவின் மீது கோபம்..
அப்பாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டதாக நினைத்து நடராஜ் அங்கிள் மீது கோபம்..

தன்னுடன் இருக்க முடியாத தாத்தா பாடியிடம் கோபம்..
ஏன் தன்னிடமே கோபம்...


அவள் மனதில் தேங்கிக் கிடந்த அன்பை வெளிப்படுத்த முடியாமல் தடுத்தது.

இந்தச் சூழ்நிலையில் தான்...அகிலா....கர்ப்பமாகி விட, நடராஜ் ரொம்பவே கவலைப்பட்டார். தன்னையே அப்பாவாக ஏற்காத பெண் வரப்போகும் குழந்தையை வெறுக்ககூடமென்று மிகவும் பயந்தார்.

கவலை பட்டிருக்க தேவையே இருக்கவில்லை. வீட்டில் பிறந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த கணமே புவனாவின் முகத்தில் சந்தோஷம் நிறைய, தன்னைவிட பதினோரு வயது சிறியவனான தம்பி வாசுவை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள்.

பள்ளி நேரம் போக மிகுந்த நேரமெல்லாம் குழந்தையுடனே கழித்தாள்.இரண்டு வருஷத்தில் குமாரும் பிறக்க வீட்டில் நிலவிய இறுக்கமான சூழ்நிலை ஒரளவு தளர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போதும் நடராஜை புவனா முழுமையாக ஏற்கவில்லை என்றாலும், வாசு குமாரின் தந்தையாக அவரது மதிப்பு கூடித்தான் போயிற்று. நேருக்கு நேர் நடராஜ் அங்கிளுடன் மோதுவதை குறைத்துக்கொண்டாள் புவனா.

வாசுவும், குமாரும் புவனாவிடம் மிகவும் ஒட்டிக்கொண்டார்கள்.அவளைப் போலவே அவர்களும் நடராஜை ' அங்கிள் ' என்றே அழைத்தனர். தன்னை ஏற்றுக்கொள்ளாத மகள், தன் மகன்களை ஏற்றுக்கொண்டதே போதுமென கருதி....பெருந்தன்மையாக வாசுவும், குமாரும் தன்னை 'அங்கிள்' என அழைப்பதை மாற்ற மனைவி வற்புறுத்தியும் அவர் முனையவில்லை.

வருடங்கள் ஓட, புவனா யுவதி ஆனாள்.படிப்பு முடிந்ததும் நடராஜ் வரன் வேட்டையில் இறங்கினார். சீக்கிரத்திலேயே அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணமாக, புக்ககம் கிளம்பும் போது சிறுவர்களான குமாரும்,வாசுவும் அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு விட மறுத்தார்கள்.புவனா பிழியப் பிழிய அழுதுக்கொண்டுதான் வண்டியில் ஏறினாள்.

ஹைதரபாத்தில் பிறந்தகமும், செகந்தரபாத்தில் புக்கமும் அமைந்தது புவனாவிற்கு செளகைரியமாக போயிற்று. நினைத்தால் தம்பிகளை பார்க்க முடிந்தது,

வருடங்கள் பறக்க புவனாவின் குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வயதையடைந்தார்கள். இரண்டு வருஷத்திற்கு முன் பாட்டி தாத்தாவின் மரணத்தை தொடர்ந்து அம்மாவும் சுமங்கலியாக போய் சேர்ந்துவிட்டாள்.
அம்மா மறைந்தபின் 'அங்கிள்' நடராஜ் மிகவும் ஆடிப்போனார்.
'அங்கிள்' என்றே தனனை அழைக்கும் தன் மகன்களிடம் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்.
அம்மா சென்ற பின் அவரது உடல் நிலையும் சோர்வடைய ஆரம்பித்தது.

இன்று 'மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்' என்று தம்பிகளிடமிருந்து தகவல் வரவே புவனா, விரைந்து ஆஸ்பத்திரி செல்கிறாள்.

இப்போது 'அங்கிள்' நடராஜனின் அந்திம நேரம். கண்ணில் நீர் வழிய பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த புவனாவின் மனதில் இப்போது தன் குழந்தை பருவம் முதல் 'அங்கிள்' காட்டிய அன்பும் பரிவும் மிகுந்து நின்றது.



அப்பாவின் இடத்தை முழுமையாக நிரப்ப நடராஜ் எடுத்துக்கொண்ட அக்கறை, சிரமம், பிரயத்தனம் எல்லாம் அவளுக்கு புரிந்தது.
மகளின் அன்புக்காக ஏங்கிய நடராஜின் உணர்வுகளை மிகவும் காலந்தாழ்த்தி புவனா புரிந்துக் கொண்டாள்.

மரணப்படுக்கையில் இருக்கும் நடராஜ் திடீரென்று கண்விழித்துப் பார்த்தார். தன் கையைப் பிடித்தவாறு கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்த மகளை பார்த்து புன்னகைக்க முயற்ச்சித்தார்.

"அப்பா..........அப்பா" புவனா முதன் முறையாக நடராஜை அப்பா வென்றழைத்தாள்.

அடுத்த கணம் அந்தச் சிறு புன்னகையுடனே அவரது கடைசி மூச்சு பிரிந்தது.

நடராஜின் கைகளை பிடித்தவாறு ' அப்பா......அப்பா....' என்று அரற்றும் அக்காவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் வாசுவும் குமாரும்.