December 17, 2007

நட்பா?.....காதலா??

பி.காம் முடித்துவிட்டு 'சத்தியபாமா' கல்லூரியில் எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. புதிய சென்னை வாசம், ஹாஸ்டல் வாழ்க்கை, தனிமையுணர்வு எல்லாவற்றிற்க்கும் மருந்தாக எனக்கு கிடைத்தது என்னுடன் படிக்கும் ஹேமாவின் நட்பு.

எளிதில் நட்புடன் பழகக்கூடிய திறனுடையவள் ஹேமா, அதனால் இருவரும் ஒரு சில மாதங்களிலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். அவ்வப்போது அவள் என் ஹாஸ்டல் அறைக்கு வந்து லூட்டி அடிப்பதும், வாரயிறுதிகளில் நான் அவள் வீட்டிற்க்கு சென்று அரட்டையடிப்பதும் வாடிக்கையானது.
"நிஷா நீயும் எனக்கொரு மகள்" என்று ஹேமாவின் அம்மா சொல்லுமளவுக்கு அவள் குடும்பத்தோடும் பழகிவிட்டேன்.

இன்று க்ளாஸ் முடிந்து, நான் மட்டும் லைப்ரரிக்குச் சென்றுவிட்டு ஹாஸ்டல் ரூமிற்க்கு வந்தால், அங்கு ஹேமா கலங்கிய கண்களுடன் சோகமாக...

நிஷா: ஹே ஹெமா என்னடி ஆச்சு, இங்க வந்து இப்படி சோகமா சீன் போட்டுட்டிருக்க, எக்ஸாம் ரிசல்ட் கூட வரலியே அப்புறமென்ன கண்ணில் நீர் , முகத்தில் சோகம்???

ஹேமா: ஒன்னுமில்ல நிஷா.

நிஷா: நீ ஒன்னுமில்லன்னு சொல்லிட்டேயிருப்ப, நான் கெஞ்சிக் கூத்தாடி உன்னை பேசவைக்கனும் , அதெல்லாம் வேணாம், நேரா மேட்டருக்கு வா,[இல்லீனா பதிவு நீளமாகிடும்], சரி என்ன ஆச்சுன்னு சொல்லு ஹேமா...


ஹேமா: நிஷா என் ஃப்ரெண்ட் விகாஷ் இருக்கானில்ல.......அவன் என்கிட்ட.......ப்ரோபோஸ் பண்ணிட்டான்..

நிஷா: அட்ரா! அட்ரா சக்கை!! அப்படிபோடு! கங்கிராட்ஸ் ஹேமா!! எப்போடி சொன்னான், எப்படிடி ப்ரோபோஸ் பண்ணினான்.......ஹெ சொல்லு........ப்ளீஸ்....சொல்லு!!

ஹேமா: வெறுப்பேத்தாதே நிஷா, நானே நொந்துப்போய் இருக்கிறேன்.

நிஷா: ஏண்டா......நொந்துப்போகிற அளவுக்கு என்னாச்சு, ஒத்த ரூபா 'ரெட் ரோஸ்' மட்டும் கொடுத்து ரொம்ப சீப்பா ப்ரோபோஸ் பண்ணிடான்னேன்னு ஃபீல் பண்றியா??

ஹேமா: நிறுத்து நிஷா, என்னோட வேதனை உனக்கு புரியல.......

நிஷா: ஓ.கே ஃபைன், உனக்கு இந்த ப்ரோபோஸ்ல என்ன ப்ராப்ளம்ன்னு சொல்லு.

ஹேமா: நிஷா, நான் அவனை என் ஃபரண்டா நினைச்சு தான் பேசினேன், இப்போ வந்து காதலிக்கிறேன் , நீயும் யோசின்றான், இவன் இப்படி வந்து கேட்பான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை..

நிஷா: இப்போ எதுக்கு அவனைத் திட்டுர, அவனோட பெஸ்ட் ஃப்ரண்ட் நீ, உன் மேல அவனுக்கு காதல் வந்தது தப்பா?

ஹேமா: என்னடி நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற,

நிஷா: இதுல சப்போர்ட் பண்ண என்னயிருக்கு, ஃப்ரண்டா நினைச்ச ஒருத்தன் ப்ரோபோஸ் பண்ணிட்டான்னே அப்படின்னு சொன்னியே , அதுக்கு தான் , அது என்ன பெரிய தப்பான்னு கேட்டேன்!. சரி என் கேள்விக்கு பதில் சொல்லு.........டு யு லவ் ஹிம்??

ஹேமா: நோ , நோ......அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோதான். அவன் மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல, நான் அவனை லவ்வெல்லாம் பண்ணல.

நிஷா: ஒ.கே ஃபைன், எவ்வளவு வருஷமா அவனை உனக்குத் தெரியும்.

ஹேமா: பி.பி.ஏ படிக்கும் போதிலிருந்தே தெரியும்......ஒரு நாலு வருஷம்.

நிஷா: சரி, இத்தனை வருஷம் ஃப்ரண்டா இருந்தவனுக்கு, உன்கிட்ட திடீர்ன்னு காதல் வந்திருக்காது. ரொம்ப நாளாகவோ, இல்ல ரொம்ப வருஷமாகவோ அவனுக்கு உன் மேல காதல் இருந்திருக்கும், இப்போதான் வெளிப்படுத்தியிருக்கிறான்.
ஹேமா: எப்படி நிஷா அவன் ரொம்ப நாளா லவ் பண்ணிட்டே தான் என்கிட்ட ஃப்ரண்டா பழகிட்டு இருந்தான்னு சொல்ற, அதெப்படி எனக்கு இவ்வளவு நாள் அவன்கிட்ட பேசியும் புரியாம போச்சு.
நான் அவனை இம்ப்ரஸ் பண்ற மாதிரி எதுவுமே பண்ணினதில்ல, பின்ன எப்படி என்னை அவன் லவ் பண்ணினான், சதா எனக்கும் அவனுக்கும் சண்டையும், வாக்குவாதமும் தான் வரும், என்னால நம்பவே முடியல நிஷா........

நிஷா:என்னடி ஹேமா இப்படி வெகுளியாயிருக்க,
இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,

உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?

இப்படி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க,

அழகாயில்லையேன்னு கவலைப்பட்டு இனிமே பொண்ணுங்க எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கும், பியூட்டி பார்லருக்கும் காசு தண்டம் அழ வேண்டாம்.
அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!

இப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,

ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,

ஹேமா: இப்போ எதுக்கு நீ கவிதை, கதைன்னு வளவளக்குற, என்னோட பிரச்சனைப் பத்தி மட்டும் பேசு, இல்லீனா என்னை தனியா விடு.....

நிஷா: ஒகே கூல் ........உன்னோட மேட்டருக்கு வருவோம், விகாஷ் இவ்வளவு நாள் இருந்த நட்பலையையும் தாண்டி காதலிக்க ஆரம்பிச்சு, அதை கண்டிப்பா உனக்கு கோடிட்டு காட்டியிருப்பான், உனக்குத் தான் புரியாம டூயுப் லைட்டாயிருந்திருப்ப, நீ ஒரு மண்டு....

ஹேமா: சரி நான் மண்டுன்னே வைச்சுக்கோ ! எப்படிடி, நாம ஃப்ரெண்டா நினைக்கிறவன் நம்மல லவ் பண்றான்னு புரிஞ்சுக்கிறது.

நிஷா: சொல்றேன் கேட்டுக்கோ,
நான் சொல்றத வைச்சுட்டு, நண்பனா பழகுகிற எல்லாரும் இப்படி பேசினா , காதலிக்கிறாங்கன்னு அர்த்தம் இல்ல, ஒரு உதாரணத்திற்க்குத் தான் இதெல்லாம் சொல்றேன் ஒகே வா?

ஹேமா: சரி ......சரி..........நீ சொல்லும்மா தாயே!

நிஷா: அதுக்கு முன்னாடி நான் கேட்கிற சில கேள்விகளுக்கு பதில் சொல்லு.
நீ விகாஷ் கிட்ட, எல்லா ஃப்ரெண்ட்ஸும் கூட இருக்கிறப்போ மட்டும் தான் பேசுவியா, இல்ல தனியா அவன் கூட மட்டும் அதிக நேரம் செலவழிப்பியா?

ஹேமா: எல்லாரும் சேர்ந்து தான் காஃபி ஷாப், ஐஸ்கிரீம் பார்லர் போவோம், ஃபோன்ல மட்டும் நானும் அவனும் தனியா பேசிப்போம்.

நிஷா: ஒஹோ, அப்படி... அப்படி....போகுதா கதை.சரி நீங்க அப்படி ரெண்டு பேரும் மட்டும் ஃபோன்ல பேசுறதுக்கும், எல்லார் கூடவும் நீ இருக்கும்போது அவன் உன் கிட்ட பேசுறதுக்கும் ஏதும் வித்தியாசம் இருந்ததா??

ஹேமா: வித்தியாசம்னா............நீ எதை வித்தியாசம்னு சொல்ற??

நிஷா: எல்லாத்தையும் உனக்கு விம் பார் போட்டு விளக்கி சொன்னாத்தான் புரியும், இந்த சாட், ஃபோன் இதுலெல்லாம் பேசுறப்போ சில விஷயம் கவனிக்கனும்,
உதாரணத்துக்கு, நீ வழக்கமா ஃபோன் பண்ற நேரத்துக்கு ஃபோன் பண்ணதப்போ, இல்ல ஃபோண் பண்றதுக்கு லேட்டானா, ரொம்ப டென்ஷனாகி அப்சட் ஆவானா??

ஹேமா: ஆமாம், செம டென்ஷன் ஆவான்,
ஆனா எல்லாரும் தான் சொன்ன நேரத்துக்கு ஃபோன் பண்ணலீன்னா டென்ஷன் ஆவாங்க, இதை வைச்சு எப்படி சொல்ல முடியும்?

நிஷா: எல்லாரும் படுற டென்ஷனுக்கும் , இதுக்கும் நிறைய வித்தியாசமிருக்குங்க அம்மணி!! சரி அதெல்லாம் பேசுற டோன் வைச்சு புரிஞ்சுக்கனும், அந்த அளவுக்கு உனக்கு விபரம் பத்தாது, சரி விடு.
ஃபோன் பேசிட்டு வைக்கும் போது, இல்லை ஒரு ரெண்டு மூணு நாள் நீ ஃபோன் பண்ணமுடியாம போச்சுன்னா, ' ரொம்ப மிஸ் பண்றேன்' அப்படின்னு சொல்வானா??

ஹேமா: ஆமா...........ஆமாம்...........சொல்லுவான்.

நிஷா: அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும். இதை 'மிஸ்' பன்ணிட்டா அப்புறம் இப்படி தான் அழுதுக்கிட்டு,
' நான் ஃப்ரெண்டா தானே பேசினேன், இப்படி லவ் பண்றேன்னு சொல்லிட்டான்னேன்னு ' புலம்ப வேண்டியது தான்.

ஹேமா: நீ சொல்றதெல்லாம் வைச்சுப் பார்த்தா, அவன் ரொம்ப நாளாகவே லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்கான். எனக்குத் தான் புரியல.

நிஷா: அவன் அப்பப்போ கோடு போட்டு காட்டியிருப்பான், நீ ஒரு பேக்கு, புரியாம இருந்ததும், இது சரிப்பட்டு வராது, இந்த டூயுப் லைட்டுக்கு நேரடி தாக்குதல் தான் சரின்னு முடிவு பண்ணி, ப்ரோபோஸ் பண்ணிட்டான்.

ஹேமா: நான் இப்போ என்னடி பண்றது????

நிஷா: ஹும்.........ஹேமா, உனக்கு அவனை பிடிச்சிருந்தா, அவன் மேல இருக்கிற நட்பு காதல்னு நீயும் உணர்ந்தா , ஒத்துக்கோ இந்த ஃப்ரோபோஸல,
ஒரு பெண்ணின் வாழ்க்கைத்துணை, அவளை ஒரு நண்பனைப் போல் நேசித்தால், மணவாழ்க்கை நல்லாத்தானே இருக்கும்!!

ஹேமா: ஆனா எனக்கு அவன் மேல அந்த மாதிரி எந்த ஈர்ப்பும், ஈடுபாடும், உணர்வுமில்லை. ஒரு நல்ல நண்பனா அவனை மதிக்கிறேன், நேசிக்கிறேன், ஆனா நிச்சயம் அது காதல் இல்ல. ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா நினைச்சு அவன் மேல நான் காட்டின தனிப்பட்ட அக்கறை அவனுக்கு என் மேல இப்படி ஒரு எண்ணம் வர காரணமாயிருந்திருக்குன்னு நினைக்கிறப்போ, கஷ்டமாயிருக்கு.
அவனைப் பார்த்தா பாவமாயிருக்கு நிஷா.

நிஷா: ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்"

என்னிடம் பேசி முடித்துவிட்டு, தெளிந்த முகத்தோடு ஹேமா என் ரூமிலிருந்து வெளியேறியப் பின், என் மேஜையில் உள்ள பேப்பரில் அவள் கிறுக்கியிருந்த கவிதை...

நட்போடு......நண்பனாகவேயிரு!!!
நட்பை தந்தாய்
அன்பை தந்தாய்
பாசம் காட்டினாய்
பரிவு காட்டினாய்
அறிவுரை அள்ளித்தந்தாய்
வாழ ஊக்கமளித்தாய்
என்
கவிதை கூட உன்னால்தான்..
எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!






December 12, 2007

மீனா...



நாங்கள் திருமணமாகி இந்த வீட்டின் மேல்மாடியில் குடிவந்து ஒரு வருடமாகிறது. கீழ் போர்ஷனில் வீட்டின் உரிமையாளர் குடியிருக்கிறார்கள்,

அவர்களுக்கு 17 வயதில் ஒரே ஒரு மகள், பெயர் மீனாட்ச்சி. சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சாலை விபத்தில் அவளது தலையில் அடிபட்டு புத்தி பேதலித்த பெண் அவள்.
அந்த 17 வயதுக்கே உரித்தான வாலிப பொலிவுடன் பார்க்க மிகவும் அழகாயிருப்பாள் மீனா.அவளது குழந்தைத்தனமான நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினரின் கேலிக்குக் காரணமாக இருப்பதாலும், மீனா தனியாக வெளியில் சென்று விடக்கூடாது என்பதாலும் மீனாவின் அம்மா அவளை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பார்.எப்போதாவது டி.வி பார்பதற்க்காக மட்டும் முன் அறைக்கு வர அனுமதிப்பார்.

என் கணவர் அலுவலகம் சென்றபின், அவ்வப்போது நான் அவர்கள் வீட்டிற்க்குச் சென்று மீனாவுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன், நான் பேசுவது புரிந்தது போல் தலையாட்டிக்கொண்டிருப்பாள், அவள் வெகுளித் தனத்தை ரசிப்பேன்.

என் பெயரை 'காஞ்சனா' என்று முழுவதுமாக உச்சரிக்காமல், 'காஞ்சு' என்று அழைப்பாள். என் கணவரை ஒருமையில் "ஹே ரமணா, எப்படி இருக்க" என்று பேசுவாள். மரியாதையுடன் பேசுமாறு மீனாவின் அம்மா அவளை அதட்டுவார்.

சில சமயங்களில் முன் அறையின் கதவு திறந்திருந்தால்,மீனா அவள் அம்மாவிற்கு தெரியாமல் வெளியில் ஓடிவிடுவாள்.பின் நானும் , மீனாவின் அம்மாவும் அவளை தேடிப் போய் அழைத்து வருவோம்.

வீடு சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால், ஆள்நடமாட்டம் அதிகமிராது எங்கள் தெருவில், அடுத்த தெருவிலிருக்கும் கோயில் மண்டபத்தில் சிறுவர்கள் விளையாடிகொண்டிருபார்கள் மாலை வேளைகளில். அதனைக் காண தான் மீனா அங்கே ஓடுவாள். இரவிலும் சில நேரம் மீனா அங்கே ஓடிவிடுவாள். நானும் மீனாவின் அம்மாவிற்கு துணையாக செல்வேன்.

" காஞ்சனா,மாசமாயிருக்கிற பொண்ணுமா நீ, என் கூட இப்படி இருட்டிலே வர்ரியேம்மா, உனக்கு ரொம்ப கஷ்டம்மா" என்று புலம்பிக்கொண்டே வருவார்.

என் பிரசவகாலம் நெருங்கியதும், பிரசவத்திற்க்காக நான் என் பிறந்தகம் சென்றுவிட்டேன். 3 மாதம் கழித்து குழந்தையுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். என்னை அன்போடு ஆரத்தி எடுத்து வரவேற்றார் மீனாவின் அம்மா. என் பெற்றோருக்கு அவரின் அன்பினைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்.

என் பெற்றோர் ஊருக்கு திரும்பியதும், நான் என் குழந்தையை மீனா பார்க்கவில்லையே என்று அவளிடம் காட்டுவதற்க்காக, குழந்தையுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.
மீனாவின் அம்மா என்னைப் பார்த்ததும் அழ தொடங்கினார்.

" ஏன்மா அழுறீங்க, மீனா எங்கே? நான் வந்ததிலிருந்து அவளை பார்க்கவேயில்லை, என் குழந்தையைப் பார்த்தா மீனா ரொம்ப சந்தோஷப்படுவா, அவளை கூப்பிடுங்கமா" என்றேன்.

"காஞ்சனா" என்று குரல் உடைந்து வந்தது, பின் மறுபடியும் அழ ஆரம்பித்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, மீனாவிற்க்கு என்னவாயிற்று என்று என்னால் யுகிக்க முடியாமல், நெஞ்சு படபடத்தது.

மீனாவின் அம்மா அழுகையை சிறிது நிறுத்திவிட்டு பேச தொடங்கினார்.

" காஞ்சனா, நீ உன் குழந்தையை அவ கிட்ட காட்ட வந்திருக்க, இன்னும் எட்டு மாசத்துல அவ உன்கிட்ட அவ குழந்தையை காட்டப் போறா" மீண்டும் அழுதார் மீனாவின் அம்மா.

"என்ன............என்னமா........இது"

" ஆமா காஞ்சனா, அவ மாசமாயிருக்கா......."

"எப்படிம்மா............அவ எப்படிம்மா........."

" அதுதான் காஞ்சனா எனக்கும் புரியல, யாரு இதுக்கு காரணம், எப்போ எங்கேன்னு எதுவுமே சொல்ல தெரியலியேம்மா இவளுக்கு" என்று தன் சேலை முந்தானையில் முகம் புதைத்து மீண்டும் கதற ஆரம்பித்தார்.

எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் தினறினேன். பின் அவரை ஆசுவாசப்படுத்தி, டாக்டரிடம் ஆலோசனைக் கேட்கலாம் என்று தைரியம் கூறிவிட்டு என் வீட்டிற்கு வந்தேன்.
அன்று முழுவதும் மனசே சரியில்லை எனக்கு. இரவு என் கணவரும் லேட்டாக வீட்டிற்கு வருவதாக ஃபோன் செய்தார். குழந்தையும் நானும் தனியாக இருந்தோம். நினைப்பு முழுவதும் மீனாவின் மேல்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சிந்தனை கலைத்தேன், குழந்தை தூங்கிக் கொண்டிருந்தான். வேகமாக சென்றுக் கதவை திறந்தேன்.கண்களில் கண்ணீரோடும், பதைபதைப்போடும் மீனாவின் அம்மா.

"காஞ்சனா, மீனா வெளியில ஓடிட்டாமா, இரண்டு நாளா நான் சரியா சாப்பிடல, என்னால நடக்க கூட முடியல.........நீ.......கொஞ்சம்........"

"சரிம்மா, நான் போய் கூட்டிட்டு வரேன், அவ கோயிலுக்கு தான் போயிருப்பா, நீங்க குழந்தையைப் பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு தெருவில் வேகமாக நடந்தேன், தெருமுனையில் மீனா திரும்புவது தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்தது. என் நடையை வேகமாக்கினேன். அவள் அந்த கோயில் மண்டபத்துக்குத்தான் சென்றாள்.

மீனாவின் கரம்பிடித்து ," மீனா வாமா வீட்டுக்கு போலாம்" என்றேன்.
வழக்கம்போல் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாள்

நான் அவள் கரம் பிடித்து இழுக்க முயல, அவள் முரண்பிடிக்க , கல் தடுக்கி கீழே விழுந்தாள் மீனா.அவளை தரையிலிருந்து தூக்கிவிட நான் அவளின் கரம் பற்றுகையில், அவளது துப்பட்டா என் கைகளில் வந்தது,

உடனே அலற ஆரம்பித்தாள் மீனா,
"என்ன விட்ரு ரமணா, என்ன விட்ரு......என் ட்ரஸ் கழட்டாதே ரமணா,..........ரமணா என்னை ஒன்னும் பண்ணிடாதே"

எனக்கு தலை சுற்றியது,

பேதை பெண் மீனா தொடர்ந்து அலறிய வார்த்தைகளும், நான் ஊரில் இல்லாத நாட்களில் மீனா இரவில் ஓடிய போது சில சமயங்களில் என் கணவரின் உதவியை மீனாவின் அம்மா நாடியதாக கூறியதும், என்ன நடந்திருக்கும் என எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.....

அப்போ மீனாவின்.......கர்ப்பத்திற்க்கு காரணம்..............ரமணா.............என் கணவரா???????

என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்.

[நச்சுன்னு ஒரு கதை போட்டிக்காக]

December 10, 2007

தாய்மை



வழக்கம்போல் அன்றும் எனக்கு என் அண்ணா அண்ணியிடமிருந்து அர்ச்சனை ஆரம்பம் ஆனது. இந்தக் ' காட்சி' கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது எங்கள் வீட்டில் அரங்கேறும். முதலில் கெஞ்சலுடன் ஆரம்பிக்கும் அண்ணி, என் பிடிவாதம் இறுக இறுக அண்ணனுடன் சேர்ந்து அர்ச்சிக்க ஆரம்பிப்பார். எதற்கு தான் என்னை இப்படி திட்டுகிறார்கள் என்று பாருங்கள்....

" இங்க பாரு யமுனா, இதுவரைக்கும் வந்த எல்லா வரனையும் தட்டி கழிச்சுட்டே, காலேஜ் படிச்சு முடிச்சு இரண்டு வருஷம் ஆச்சு, இனிமேலயேயும் உன் கல்யாணத்தை நாங்க தள்ளி போட முடியாது" இது என் அண்ணி சுமதி.

" அம்மா இல்லாத பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்தது தப்பா போச்சு. MBBS படி, நம்ம க்ளீனிக்கை பார்த்துக்கலாம்னு சொன்னப்போ ' எனக்கு இரத்தம் பார்த்தாலே பயம், குடும்பமே பரம்பரை டாக்டர்களாக இருக்கனுமா? நீயும் அப்பாவும் டாக்டராயிருக்கிறது போதும்'னு சொல்லி இஞ்சினியரிங் சேர்ந்தா, சரி அவ இஷ்டம்னு விட்டோம். இப்ப பாரு எத்தனை வரன் விரும்பி வராங்க, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு, அதே சொல்லிட்டு இருக்கா" இது என் அண்ணன் பிராபகர்.........ஸாரி டாக்டர் பிராபகர்.

" யாரையும் காதலிக்கிறியா , அதான் கல்யாணம் வேணாம்னு அடம்பிடிக்கிறியான்னு கேட்டா, அதுவும் இல்லன்றா. இவ போடுற அந்த ஒரு கண்டிஷனை கேட்டா மாப்பிளளை வீட்டுக்காரங்க எல்லாம் நம்மல ஒரு மாதிரி பாக்குறாங்க, கல்யாணம் வேணாம்னு வம்புக்குன்னு இவ இந்த கண்டிஷன் போடுறான்னு நினக்க்கிறேன், இதுக்கு மேலயும் என்னால இவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க முடியாது, நீங்களாச்சு உங்க தங்கச்சியாச்சு" என்று சலிப்புடன் அண்ணி சமயலைறைக்குள் செல்ல, அப்பா க்ளினிக்கிலிருந்து வீட்டிற்க்கு வந்தார்.

தன் ஒரே செல்லக்குட்டி யமனாவிற்கு நன்றாக அர்ச்சனை நடந்திருக்கிறது என்று என் முகத்தைப் பார்த்து தெரிந்துக் கொண்டார்.

என்னிடம் சீறிக்கொண்டிருந்த அண்ணன் இப்போது என் அப்பாவிடம் திருமணத்திற்கு என்னை சம்மதிக்க சொல்லுமாறு வற்புறுத்த ஆரம்பித்தான்.

அப்பா எதுவும் பேசாமல், கெஞ்சும் பார்வையுடன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த என்னைக். கணிவுடன் பார்த்தார். பிடிவாததிற்கு மறுபெயரான தன் மகளின் மனம் விரும்பும்படி மணமகன்........மருமகன் கிடைப்பானா என்ற ஏக்கம் அவர் கண்களில்.

அப்படி என்னதான் என்னோட கண்டிஷன், எதிர்பார்ப்பு என்னை கட்டிகிறவனிடம்? சொல்கிறேன் கேளுங்கள்.......


என்னை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்கிறவன்[ர்] நான் ஒரு அநாதைப் பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் வளரும் ஒரு பெண்ணின் மனவேதனையை தினமும் அனுபவித்தவள் நான். தாய் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு தாயாக எனக்கு அனுமதி வேண்டும். கல்யாணம் பண்ணினா தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் என குழந்தைகள் காப்பகத்தில் விசாரித்தபோது சொல்லிவிட்டார்கள். அதனால் என்னுடைய இந்த ஆசைக்கு சம்மதம் சொல்கிற ஒரு ஆண் கிடைப்பான்னு பார்த்தா, இந்த கண்டிஷன் கேட்டதும் வந்த வரன் எல்லாம் வந்த ஸ்பீடிலேயே போய் விடுகிறது.

அப்பா மட்டும் என் மனதை புரிந்துக் கொண்டார் [ வேறு வழியில்லை அப்பாவிற்கு!] என் மீது பாசம் அதிகம் அப்பாவிற்கு, அதனால் என் எதிர்பார்ப்பிற்கு மதிப்பு கொடுத்தார்.

-------------------------- *------------------------------------------

சர்வீஸிற்கு விட்டிருந்த என் கார் வருவதற்கு தாமதமானதால் , என் அண்ணியின் கார் எனக்குத் தேவைப்பட்டது. க்ளினிக்கிலிருந்த அண்ணியிடம் ஃபோனில் கேட்க, அவரும் க்ளினிற்க்கிற்கு வந்து கார் சாவி வாங்கிக் கொள்ளும்படி சொன்னார். என் திருமண விஷயத்தில் மட்டும் தான் எனக்கும் என் அண்ணிக்கும் மோதலே தவிர, மற்றபடி அவர் எனக்கு ஒரு நல்ல தோழி!

என் அப்பாவின் க்ளினிக்கில் தான் என் அண்ணா Cardiologist ஆகவும், என் அண்ணி குழந்தை நல மருத்துவராகவும் [pediatrician] பணி புரிகின்றனர். அண்ணி அவரது கன்ஸல்டேஷன் ரூமில் பேஷண்டை பார்த்துக்கொண்டிருந்ததால், நர்ஸிடம் என் வரவை குறித்து சொல்லியனுப்பி விட்டு வெயிட்டிங் ரூமில் அமர்ந்தேன்.


அப்போதுதான் ஏதேச்சையாக கவனித்தேன், அழுகையும் சிணுங்கலுமாக இருந்த சிறு குழந்தையை தோழில் போட்டபடி ஒருவர் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு, குழந்தையின் அழுகையை நிறுத்த[ குறைக்க] முயன்றுக் கொண்டிருந்தார்.


இது............இவர்.................தினேஷ்!! என் கல்லூரி சீனியர் தினேஷ்! ஆம் அவரேதான்..............


கல்லூரியில் நான் முதலாம் ஆண்டில் படித்தப்போது நான்காம் ஆண்டில் படித்தவர் தினேஷ். அப்பொது மீசையில்லை, இப்போது மீசையுடன் சிறிது தாடியும்.


வேகமாக தினேஷின் அருகில் சென்றேன்.


"தினேஷ்"


புருவம் உயர்த்தி ஆச்சரிய பார்வையுடன் என்னை பார்த்த தினேஷ்,


"நீங்க......நீ.......யமுனா தானே?"


" ஆமாம் தினேஷ், நானே தான், பரவாயில்லையே 5 வருஷம் கழிச்சுப் பார்த்தும் ஞாபகமிருக்கிதே!"


" நல்லா ஞாபகமிருக்கு யமுனா"


"குழந்தைக்கு உடம்பு சரியில்லையா? என்ன செய்து உடம்புக்கு உங்க குழந்தைதானே, எப்போ கல்யாணம் ஆச்சு, எனக்கெல்லாம் இன்விடேஷன் இல்லியா உங்க வெட்டிங்கிற்கு? சரி உங்க வொய்ஃப் எங்கே?" என்று படபடவென கேள்விகளை நான் அடுக்கி கொண்டே போக,


தினேஷ் தன் குழந்தையை டாக்டரிடம்[ என் அண்ணி] காட்டும் முறை வந்து, அவரது டோக்கன் எண்ணை நர்ஸ் அழைத்தார்.


"நீங்க குழந்தையை காட்டிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன் தினேஷ்"


"சரி யமுனா"


தினேஷ் குழந்தையுடன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, 5 வருடத்திற்கு முன் கல்லூரியில் பார்த்த தினேஷ் ஞாபகத்திற்கு வந்தார்.
கல்லூரியில் மிகவும் பிரிசித்தம் ஆன மாணவர்களில் முக்கியமானவன் தினேஷ்.


விளையட்டு, கல்வி, கலை என எல்லாத்துறையிலும் ஜொலிக்கும் நட்ச்சத்திரம் தினேஷ்.


கலகலப்பான பேச்சும், காந்தப்பார்வையும், வசீகரமான புன்னகையும் மாணவிகளை அவன் வசம் திருப்பும் தோற்றமும் கொண்டவன் தினேஷ்.
இத்தனை திறமைகளும், ஆண்/பெண் என பெரிய நண்பர்கள் வட்டம் அவனை சுற்றியிருந்தாலும், எல்லாரிடமும் பண்போடும் நடந்துக் கொள்வான்.
எனக்கு தினேஷின் அறிமுகம் கிடைத்தது, எங்கள் டிபார்ட்மெண்ட் ராக்கிங்கில்.


"யமுனை ஆற்றிலே, ஈரக் காற்றிலே" என்று என்னை பாட சொல்லி கலாட்டா செய்ததில் நான் மிரண்டு போய்[?] அழ ஆரம்பித்துவிட, அதன் பின் என்னை கல்லூரியில் எங்கு பார்த்தாலும் " ஹேய் அழுமூஞ்சி, எப்படி இருக்கிற" என்று விசாரிப்பதுமாக எனக்கு தினேஷ் என்ற சீனியரைத் தெரியும்.


தினேஷ் கல்லூரி படிப்பை முடித்து போனபின் அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. இன்று அவரை குழந்தையுடன் பார்த்ததும் மனதில் எல்லையில்லா சந்தோஷம். ஆனால் ஏனொ தினேஷின் முகத்தில் முன்பு நான் பார்த்த அந்த கலையும், புன்சிரிப்பும் இல்லை. கண்களில் ஏதோ ஒரு பயம், ஏக்கம், துக்கம் என பலவற்றை என்னால் உணர முடிந்தது.



அழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த என்னை,
"யமுனா" என்று தினேஷின் குரல் சிந்தனை கலைத்தது.




ஊசிப் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது குழந்தைக்கு, குழந்தை தேம்பி தேம்பி மூச்சு விடாமல் அழுதுக் கொண்டிருந்தாள்.


குழந்தையை தினேஷிடமிருந்து வாங்கி, என் தோளில் சாய்த்து முதுகில் வருடிக் கொடுத்தேன். அழுகையை நிறுத்தி விட்டு, சிறிது விம்மலுடன் என் முகத்தை பார்த்தாள் குழந்தை, உதட்டோரத்தில் ஒரு செல்ல புன்னகையை சிந்திவிட்டு மீண்டும் என் தோளில் சாய்ந்து, என்னை இறுக பிடித்துக் கொண்டது குழந்தை.



என் அடிவயிற்றில் ஏதோ ஒரு புதுமையான உணர்வு. இனம் புரியாத அந்த உணர்வினில் ஒரு கணம் என்னையே மறந்தேன்.



தன் குழந்தை என்னிடம் ஒட்டிக்கொண்டதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தினேஷிடம்,



"குழந்தையின் பேரு என்ன?" என்றேன்.


"ஸ்வேதா"


"வாவ், அழகான பெயர்"


"யமுனா, நீ எங்கே இங்க.........க்ளினிக்கில்?"


நான் விபரம் கூற, மீண்டும் குழந்தை சிணுங்கியதால், நாங்கள் எங்கள் செல் ஃபோன் நம்பரை பரிமாறிக்கொண்டு விடை பெற்றொம்.


மறுநாள் தினேஷின் செல்ஃபோனுக்கு அழைத்து ஸ்வேதாவின் உடல் நிலையை விசாரித்தேன். அலுவலகத்திலிருந்ததால் இருவராலும் அதற்கு மேல் விரிவாக பேச முடியவில்லை. சாயந்திரம் வீட்டிற்கு வந்து ஸ்வேதாவை பார்க்கலாமா என்று தினேஷிடம் கேட்டு, அவரது முகவரியை பெற்றுக்கொண்டேன்.



குழந்தை ஸ்வேதாவிற்காக அழகிய டெடிபியர், 6 மாத குழந்தைக்கான ஒரு பின்க் டிரஸ், தினெஷின் மனைவிக்கு மல்லிகை பூ , ஸ்வீட்ஸ் என்று வாங்கிக்கொண்டு சாயந்திரம் தினேஷின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.


ஒரு வயதான அம்மா கதவை திறந்தார்கள். தினேஷின் சாயல் அந்த அம்மாவிடம் இருந்ததால் அவர் தினேஷின் அம்மா என்று என்னால் எளிதாக யுகிக்க முடிந்தது. என் பெயரை சொன்னதும் அன்பான ஒரு புன்னகையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.


தினேஷ் ஆஃபிசிலிருந்து வந்து 5 நிமிடம் தான் ஆவதாகவும், உடைமாற்றிக் கொண்டு வருவார் எனவும், குழந்தை உள்ளே உறங்குவதாகவும் என்னிடம் தெரிவித்து விட்டு, முன் அறையில் என்னை அமரச் சொல்லி உபசரித்தார் தினேஷின் அம்மா.


சிறிது நேரத்தில் தினேஷ் வந்துவிட, அவரது அம்மா எங்களுக்கு காஃபி எடுத்துவர உள்ளே சென்றார்.



பரஸ்பரம் எங்கு வேலைப் பார்க்கிறோம் என்று பேசிக்கொண்ட பின்,
"எங்கே உங்க வொய்ஃப் தினேஷ், கண்ணுல காட்ட மாடென்றீங்க?"


"யமுனா......"


"என்ன தினேஷ், உங்க வொய்ஃப் உள்ளே ஸ்வேதாவ தூங்க வைச்சுட்டு இருக்காங்களா?"


"யமுனா.......அவ கலையாத தூக்கம் தூங்கியே போய்ட்டா" குரல் உடைந்து வார்த்தைகள் வெளி வந்தன தினேஷிடமிருந்து.


"வாட்.........தினேஷ் என்ன சொல்றீங்க" அதிர்ச்சியும் துக்கமும் கலந்து என் குரல் கம்ம,


தினேஷ் தன் கல்லூரி வாழககை முடிந்ததும் புனேயில் வேலைப்பார்ர்கும் போது உடன் பணிபுரிந்த பெங்காளிபெண் டானியாவை காதலித்து, இரு வீட்டின் எதிர்ப்புக்கும் நடுவில் திருமணம் புரிந்ததாகவும,. பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் தன் காதல் மனைவி தன்னைவிட்டு மறைந்துப் போனதையும் தழுத்தழுத்தக் குரலில் சொல்லி முடித்தான்.



புனே வாழ்க்கை மனைவியின் நினைவுகளை அதிக படுத்துவதால், குழந்தையின் நலனுக்காகவும் துக்கத்தில் இருந்து வெளிவரவும் சென்னைக்கு மாறுதலாகி வந்து, தினெஷ் தன் குழந்தையுடன் தன்னுடனே வாழ்வதாகவும் அவர் அம்மா கூறினார்.



துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் நீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. ஆசையுடன் நான் வாங்கி வந்த மல்லிகை பூவை தேவதையாக காட்சிதந்த தினெஷின் மனைவி டானியாவின் புகைப்படத்தில் சூடினேன்.


குழந்தை ஸ்வேதா தூக்கத்திலிருந்து விழித்தாள். என்னை பார்த்ததும் அதே மழலை சிரிப்புடன் தினேஷிடிமிருந்து என்னிடம் தாவி வந்தாள்.



என் கழுத்தை இறுக கட்டிகொண்ட அந்த பிஞ்சு கரங்களின் ஸ்பரிசம் மீண்டும் எனக்குள் ஒரு இனம் புரியா கிளர்ச்சியையும், சிலிர்ப்பையும் உருவாக்கியது!



இது தான் தாய்மையின் உணர்வோ?





என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

December 03, 2007

தாயா? தாரமா??




பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து , இருவருக்கும் நடுநிலையில் அன்பை பகிர்ந்தளிக்க தடுமாறும் ஆண்களுக்கு பயன் படக்கூடிய சில டிப்ஸ்.....

அம்மாவிடம்......
-------------------
1.உங்கள் தாயின் சமையல் தான் சிறந்தது என்று உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் முன் உயர்த்தி பேசாதிருங்கள். உங்கள் தாயின் மனதை அதை குளிர்விக்கும் அதே நேரத்தில், உங்கள் மனைவியின் மேல் ஒரு இளக்காரமான எண்ணம் உங்கள் தாயின் மனதில் உருவாக்கும்.

2. தனிமையில் உங்கள் அம்மாவிடம் பேசும்போது, " அம்மா எனக்கு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்திருக்கிறீர்கள்" என்று உங்கள் தாயின் தேடுதலில் கிடைத்த உங்கள் மனைவியின் நல்ல குணங்களையும் , பண்புகளையும் கோடிட்டு காட்டுங்கள். உங்கள் மனைவியை எவ்விதத்தில் உங்கள் அன்னைக்கு நீங்கள் வெளிக்காட்டுகிறீர்களோ அவ்விதத்தில்தான் அவளை அவர் உணர்வார், மதிப்பார்.

[ அதற்கென்று மனைவியை 'ஆஹோ, ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளி சொதப்பிவிடாதிருங்கள். ஓவரா புகழ்ந்தா உங்கள் அம்மாவிற்கு உங்கள் ம்னைவியின் மீது பொறாமை கலந்த எரிச்சலும் வரலாம்]

3.நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால், உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அப்போதுதான் தன் மகனுக்கு தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின் மீதிருந்து அகற்ற அது உதவும்.

4. நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ, புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன் தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள். உங்கள் மனைவியின் மீது மதிப்பையும், நேசத்தையும் அது ஏற்படுத்தும்.

மனைவியிடம்....
------------------
உங்கள் தாய் , உடன் பிறந்தோர் இவர்களைப் பற்றி புகார் மனுவை உங்கள் மனைவி தனிமையில் உங்களிடம் தொடுக்கும் நேரத்தில், நிதானத்துடன் அவர் கூறுவதை கேட்டுக்கொள்ளுங்கள். எதிர்த்து தர்க்கிக்கவோ, " நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப்போ " என்று அதிகாரம் செலுத்தவோ அதுவல்ல தருணம்.
அப்படி நீங்கள் எதிர்மறைக் கருத்துக்களையும், உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினால் அது உங்கள் மனைவியின் உள்ளக் குமறலை அதிகரிக்கும். உங்கள் மனைவியின் மீது தவறு இருந்தாலும், பொறுமையுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்.

" மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.

2.மற்றவர்களின் முன், முக்கியமாக உங்கள் தாயின் முன் உங்கள் மனைவியை குறை கூறுவதோ, கோபப்படுவதோ கூடவே கூடாது. இவ்விதமான உங்கள் நடக்கை உங்கள் மனைவியின் உணர்வுகளை நொறுக்குவதோடு, அதன் விளைவாக தன் ஆற்றாமையை உங்கள் தாயிடம் கோபமாக, மரியாதை குறைவாக வெளிப்படுத்த வைக்கும்.

3. மனைவியின் பெற்றோர், உறவினர்களை அவமதிப்புடன் நடத்தாதிருங்கள். இதுவும் உங்கள் மனைவியை பழிவாங்கும் உணர்வுடன் உங்கள் தாய் மற்றும் உங்கள் உடன் பிறந்தோரை அவமதிக்க செய்யும்.

4.உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் விருப்பு, வெறுப்புகளையும், உங்கள் திருமணத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட ஆர்வத்தையும், சிரத்தையையும், பொறுப்புகளையும் எடுத்துக் கூறி உணர வையுங்கள்.

5.சிறு வயதில் நீங்கள் செய்த குறும்புகளுக்காகவும், தவறுகளுக்காகவும் உங்களை கண்டிக்கும் வகையில் உங்கள் அம்மா திட்டியது, அடித்தது எல்லாம் உளறிக்கொட்டி உங்கள் மனைவிக்கு உங்கள் தாயின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடாதிருங்கள்.